Lekha Books

A+ A A-

வனராணி - Page 4

vanarani

தாலா மிகவும் செல்லம் கொடுத்து ஒரு மான் குட்டியை வளர்த்துக் கொண்டிருந்தாள். அன்று ஒருநாள் நான் தோட்டத்தில் யானைக்கு பட்டையை வெட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது, "ஊய்யோ! என் மான்குட்டியை நரி கொண்டுபோயிடுச்சே!'' என்றொரு அலறல் சத்தம் காதில் விழுந்தது. நான் ஓடிச் சென்று பார்த்தபோது, மான்குட்டியைத் தூக்கிக் கொண்டு நரி ஓடிக் கொண்டிருந்தது. வீட்டில் வேறு வயதானவர்கள் யாருமில்லை. நான் ஒரே நொடியில் வீட்டின் தெற்குப் பக்க அறையில் குண்டுகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு நரியின் பின்னால் ஓடினேன். பரவிக் கிடந்த ஒரு நிலத்தின் மத்தியில் நரியைக் குறிவைத்து ஒரு குண்டைப் பாயச் செய்தேன். நான் செய்தது ஆபத்து நிறைந்த ஒரு தவறான செயல் என்பதையே பிறகுதான் நான் உணர்ந்தேன். காரணம்- ஒரு இடத்தில் வைத்து நரியைச் சுடுவது என்பது வாழ்க்கைக்கான அபாயத்தைத் தேடி வரவழைத்துக் கொள்வதற்கு நிகரானது. என்னுடைய குண்டு நரியின் வலதுபக்க இடுப்பெலும்பில் காயம் உண்டாக்கிவிட்டுப் பறந்து போய்விட்டது. அவன் உயிர்போன வேதனையுடன் மானைக் கீழே போட்டு விட்டு என்னை நோக்கித் திரும்பினான். அவன் கோபத்துடன் பற்களை இளித்துக் கொண்டே தரையில் ஒட்டியவாறு படுத்தான். வாலை தரையில் அங்குமிங்கும் அடிக்க ஆரம்பித்தான். "மாமாவின் நோக்கம் என்மீது பாய்வதுதான்" என்பதை உடனடியாக நான் புரிந்து கொண்டேன். நான் ஒரே நிமிடத்தில் நரியின் தலையைக் குறிவைத்து இன்னொரு குண்டைப் பாயச் செய்ததும், இருபது அடிகள் தாண்டி இருந்த அடுத்த நிலத்தில் குதித்து "நீளம் தாண்டியதும்" ஒரே நேரத்தில் நடந்தன. அடுத்த நொடியே, என்னுடைய குண்டு நரியின்மீது

சரியாகப்பட்டு, அவன் நான் முன்பு நின்றிருந்த இடத்தில் குதித்துக்கிடந்து, துடித்து, உயிரைவிட்டான். இவை அனைத்தையும் தாலா தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் ஒரு நரியின்மீது குண்டு துளைக்கச் சுடுவது அன்றுதான் முதல் தடவை. அதற்குள் எவ்வளவோ மனிதர்கள் அங்கு ஓடி வந்தார்கள். எல்லாரும் என்னுடைய தைரியத்தையும் திறமையையும் பாராட்டினார்கள். ஆனால், தாலாவின் பாராட்டு என்னை தனிப்பட்ட முறையில் கர்வம் கொண்டவனாக ஆக்கியது. மான்குட்டி உயிருடன் கிடைத்ததால் அவளுக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அன்று முதன்முறையாக அவள் என்னுடன் பேசினாள். நாங்கள் இருவரும் சேர்ந்து காயம்பட்ட மான்குட்டிக்கு மருந்து தடவினோம்.

படிப்படியாக எங்களுக்கு இடையே இருந்த அந்தப் பழக்கம் அதிகமானது. என்னிடம் அவள் நடந்து கொண்ட முறையில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டானது. வேறு யாரிடமும் காட்டாத ஒரு பயத்தையும் அன்பையும் அவள் என்னிடம் காட்டினாள். எனக்கு முன்னால் அந்த நரி ஒரு மான்குட்டியாக மாறியது. எதற்கு அதிகமாகக் கூற வேண்டும்? நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாகவும் அகலமாகவும் காதலித்தோம். அவள் என்னை எல்லையும் எதிர்ப்பும் இல்லாமல் காதலித்தாள். அவளைப் பார்க்காமல் ஒருநாள்கூட இருப்பதற்கு என்னால் முடியவில்லை. மாலை நேரம் கடந்துவிட்டால் நாங்கள் சந்திப்பதற்கு ஒரு பாறை இருந்தது. அங்கு அவள் தினந்தோறும் என்னுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். வீட்டில் தனிப்பட்ட முறையில் ஏதாவது உணவுப் பண்டத்தைத் தயாரித்திருந்தால், அதை அவள் எப்படியாவது எனக்கு கொண்டு வந்து தராமல் இருக்கமாட்டாள்.

அன்பு, மலைவாழ் மக்களுடன் கிழக்கு நோக்கி காட்டு விவசாயத்திற்குச் சென்றுவிட்டால், பிறகு.... எங்களுக்கு முழுமையாக விடுதலை கிடைத்த மாதிரி ஆகிவிடும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளையும் நாங்கள் ஒவ்வொரு பெரிய திருவிழாவைப்போல கொண்டாடுவோம். சில நேரங்களில் அன்பு ஒரு மாத காலத்திற்கு திரும்பிவராமலே இருப்பார். அவர்கள் பகல் வேளைகளில் நிலத்தைக் கொத்திக் கொண்டும், இரவு நேரங்களில் வேட்டையாடிக் கொண்டும் காட்டிலேயே இருந்துவிடுவார்கள். அந்த நாட்களில் தாலாவும் நானும் நரிமலைத் தோட்டத்தின் மேற்பகுதியில் இருக்கும் மலைச் சோலைக்கு அருகிலும் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்களிலும் பாறைகளின் மீதும் புல் வெளிகளிலும் மான்களைப்போல சந்தோஷத்துடன் நடந்து திரிவோம். அவள் எனக்கு அருகில் படுத்துக்கொண்டு, என் முகத்திலிருந்து கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டே கூறுவாள்: "ஹா... இந்தக் காட்டில் வசிக்கக் கூடிய சுதந்திரமும் நீங்களும் கிடைத்துவிட்டால், இறப்பது வரை நான் பிறகு வேறு எதற்கும் ஆசைப்படவேமாட்டேன்.''

ஆனால், நாங்கள் இருவரும் அன்புவை ஒரு எமன் என்பதைப் போல நினைத்து பயந்தோம். ஆனால், அந்த பயத்தை ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ளாமலே இருந்தோம்.

கோடைக் காலம். காட்டுப் புற்கள் காய்ந்து வரண்டு உயரமாக வளர்ந்திருந்தன.

அன்பு, கிழக்கு மலைக்குச் சென்று பதினைந்து நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்று சாயங்கால நேரத்தில், ஒரு மரத்திற்குக் கீழே நான் தாலாவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தேன். அன்று நகரத்திலிருந்து யாரோ அவளுக்கு கொண்டு வந்து கொடுத்த அல்வாவில் ஒரு பகுதியைப் பொட்டலமாகக் கட்டி கையில் வைத்துக் கொண்டு புன்னகையைத் தவழவிட்டவாறு அவள் சீக்கிரமே வந்து

சேர்ந்தாள். அந்தப் பாறைக்கு நடுவில் இருந்த ஒரு சிறிய ஊற்றிலிருந்து வந்த நீரை அள்ளிப் பருகி தாகத்தைத் தணித்தோம். நான் தாலாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தேன்...

திடீரென்று அவள் "ஊயி... மாமா!'' என்று கூறிவிட்டு, வேகமாக எழுந்தாள். நானும் ஒரு அதிர்ச்சியுடன் எழுந்து நின்றேன். எங்களுக்கு முன்னால், சற்று தூரத்தில் ஒரு துப்பாக்கியைத் தோளில் வைத்துக் கொண்டு அன்பு நின்று கொண்டிருந்தார்.

நான் மலையில் இருந்த புற்களுக்குள் ஒரு மரணப் பாய்ச்சல் பாய்ந்தேன். புற்களுக்கு மத்தியில் மறைந்து இருந்து கொண்டு அன்புவைப் பார்த்தேன். அவர் நான் ஒளிந்திருந்த இடத்தை சந்தேகத்துடன் பார்த்தவாறு அதே இடத்தில் நின்றிருந்தார்.

நான் மிகவும் பதைபதைப்புக்குள்ளானேன். நான் சிறிது அசைந்தால், புல்லும் அசையும். அதனால் ஒரு காட்டுக் கோழியைப்போல புற்களுக்கு மத்தியில் மறைந்து படுத்திருந்தேன். நேரம் இருட்டிவிட்டால் தப்பித்துவிடலாம் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனால், அன்பு அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

மாலை நேரம் தாண்டியது, அன்று பௌர்ணமி நாளாக இருந்ததால், நிலவும் சற்று முன்பாகவே உதயமாகி மேலே வந்து கொண்டிருந்தது.

திடீரென்று சுற்றிலும் ஒரு சிவப்பு நிற வெளிச்சம் பரவியது. என்னுடைய வயிறு சற்று எரிந்தது. அன்பு மலைக்கு நெருப்பு வைத்துவிட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel