Lekha Books

A+ A A-

சரசு - Page 4

sarasu

அவள் வந்திருக்க வேண்டியதில்லை. அவன் ஏன் தன்னைத் தானே குற்றப்படுத்திக் கொள்ள வேண்டும்? அவள் திரும்பவும் வந்தாள்... அவள் மீண்டும் வந்தாள்... "எனக்கு இதுல பங்கே இல்ல.' அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

இனிமே சரசுவை பார்க்கவே கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டுதான் அவன் கண்களையே மூடினான்.

மீண்டும் எங்கிருந்தோ திருமண விஷயமாக ஒரு செய்தி வந்திருக்கிறது என்றவுடன், போன மாதம் அவளுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று அவன் நினைத்தான். ரம்பத்தின் இரைச்சல் சத்தம் கேட்டுக் குலுங்கிக் கொண்டிருந்த அலுவலக அறையில்தான். திருமணம்... அதற்குப் பிறகு எல்லாம் முடிந்த மாதிரிதான். தேவையா? எழுத வேண்டுமா?

இருட்டில் குடும்பத்திற்கு நடுவில் தனித்து இருக்கும்போது ஒன்பது வருடங்களுக்கு முன்பிருந்த சதைப்பிடிப்பான அழகியைப் பார்க்கிறான். ஈரம் மாறாது விரிக்கப்பட்ட படுக்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த மெலிந்துபோன உருவத்தை- மனம் பார்க்கக்கூடாததைப் பார்த்து விட்டதைப்போல அழிக்க நினைக்கிறது.

இதுதான் சரசுவின் ஸ்டேஷன். பாதி உயர்த்தப்பட்ட ஜன்னல் பலகையின் மேற்பகுதி வழியாக அவன் வெளியே பார்த்தான். கிராமத்து மனிதர்கள் கூட்டமாக வண்டியில் ஏறினார்கள். ஐந்து நிமிடங்கள் வண்டி நிற்கும். இறங்கிப் பார்க்க அவனுக்கு தைரியம் வரவில்லை. ஒரு வேளை சந்திரன் இருந்தாலும் இருக்கலாம். இல்லாவிட்டால் கோபி... இல்லாவிட்டால் அவனுக்குத் தெரிந்த வேறு யாராவது இருப்பார்கள். முன்பு எல்லா விடுமுறையின் போதும் இங்கு விருந்து சாப்பிட அவன் வந்து விடுவான்.

பார்க்கவில்லை. அவள் வந்திருக்க மாட்டாள். அவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ள முயன்றான்.

அடுத்த ஸ்டேஷன் ஜங்ஷன். வண்டி நின்றவுடன், வெளியே இறங்கினான். கடைசி ப்ளாட்ஃபாரத்திற்கு அருகில் இருந்ததால் ஆரவாரமோ மக்கள் கூட்டமோ பெரிதாக இல்லை. நரம்புகளைக் கட்டுப்படுத்த இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு நடந்தபோது மக்கள் கூட்டத்திற்கு நடுவில், தோல்பையைக் கையில் பிடித்துக்கொண்டு சரசு அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.

சரசு அல்ல. சரசுவின் உயிரற்ற நினைவு. அவன் சிரிக்க முயன்றான்.

“வா...''

அவள் பின்னால் வருகிறாள் என்ற நம்பிக்கையுடன் அவன் வேகமாக கம்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தான். உட்கார்ந்து, சுவாசத்தை சரிபடுத்திக் கொண்டு சொன்னான்:

“ஸ்டேஷன்ல உன்னைக் காணோம். நான் உன்னைத் தேடினேன்.''

“நான் பார்த்தேன்.''

அவனுக்கு நன்கு தெரிந்த ரெஸ்ட்டாரெண்டில் வேலை பார்க்கும் மனிதனைப் பார்த்ததும், அவனிடம் காப்பி கொண்டு வரச் சொன்னான். அடுத்த நிமிடம் அவனைத் திரும்பவும் அழைத்தான்:

“ஒரு போர்ட்டரை வரச் சொல்லு.''

போர்ட்டரின் கையில் ஒரு டிக்கெட் எடுப்பதற்கான பணத்தைக் கொடுத்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியே வந்தது.

விலை குறைவான புடவையும் வளையல்கள் எதுவும் இல்லாத கைகளும் ஒட்டிப்போன கன்னமுமாக இருந்த சரசு இரண்டு வருடங்களுக்குப் பிறகு மேலும் மாறியிருந்தாள்.

“நீ ரொம்பவும் மாறியிருக்கே. பார்த்தவுடனே எனக்கே அடையாளம் தெரியல.''

குறை சொல்வது மாதிரியான தொனி வராமல் இருக்க அவன் பார்த்துக் கொண்டான்.

“ராஜு அத்தான், நீங்களும்தான் மாறிட்டீங்க.''

இருக்கலாம். முன்பு இருந்ததைவிட அவன் சற்று தடித்திருக்கிறான். சற்று கூடுதலாக தொப்பை விழுந்திருக்கிறது. சற்று அதிகமாக வழுக்கை விழுந்திருக்கிறது.

தெரியாத்தனமாக- விவரம் தெரியாமல் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்ட ஒரு பெண் என்றுதான் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். வண்டி புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறது. கோயம்புத்தூரிலிருந்து வரும் வண்டிக்குச் செல்லும்- டெர்மினஸுக்குப் போகிற பயணிகள் யாராவது வந்து ஏறாமல் இருக்க மாட்டார்கள்.

அறிமுகமே இல்லாதவனைப்போல பயணம் செய்ய முடியாது. பெட்டியைத் திறந்து ரோஸ் நிறத்திலிருந்த டர்க்கிஷ் துவாலை, சோப், பவுடர் டப்பா, சீப்பு ஆகியவற்றை வெளியே எடுத்து வைத்தான்.

“இந்தா... பாத்ரூமுக்குப் போயி, வேணும்னா முகத்தைக் கழுவிக்கோ.''

தன்னுடன் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைப்பதை அவள் புரிந்துகொள்வாளா?

போர்ட்டர் டிக்கெட்டையும், ரெஸ்ட்டாரெண்ட் பணியாள் காப்பியையும் ஒன்றாகவே கொண்டு வந்தார்கள்.

பாத்ரூமிலிருந்து மாய வித்தைபோல பழைய சரசு வெளியே வருவாள் என்று ஒரு நிமிடம் முட்டாளைப்போல அவன் ஆசைப்பட்டான்.

சரசு வெளியே வந்தாள். இல்லை... அப்படியொன்றும் குறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் நடக்கவில்லை. பவுடர் பூசியதால் சற்று வெள்ளை நிறம் முகத்தில் கூடியிருந்தது. தலைமுடியை வாரி ஒழுங்குபடுத்தியதில், நெற்றி மேலும் அகலமாகிவிட்டிருந்தது.

“காப்பி குடி.''

எதிர்பக்க ப்ளாட்ஃபாரத்தில் வண்டி வந்தது. பலரும் வந்து ஏறினார்கள். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அவனுக்கு அறிமுகமானவர்கள் யாருமில்லை.

கம்பார்ட்மெண்ட் நிறைந்ததும், அவன் அவளை நெருங்கி உட்கார்ந்தான். வெளியே கூட்டம் அதிகரித்தது. அடுத்த நிமிடம் வாசலில், நகரத்தில் தனக்குத் தெரிந்த ஒரு முகத்தை அவன் பார்த்தான். பத்திரிகையை எடுத்து விரித்து தன்னுடைய முகத்தை மறைத்துப் பிடித்துக்கொண்டு மிடுக்காக அதை அவன் படிக்க ஆரம்பித்தான்.

மெதுவாக நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சரசும் கீழே இருந்த பத்திரிகையில் ஒரு பக்கத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். வெறுமனே பத்திரிகையை அவள் விரித்து கையில் பிடித்திருக்கிறாள் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அவள் எதையும் வாசிக்கவில்லை.

ஒரு விதத்தில் ஆட்கள் வந்து  ஏறியது நல்லதாகப் போய் விட்டது. தனியாக இருந்திருந்தால் ஏதாவது கட்டாயம் பேச வேண்டியதாகி இருக்கும்.

கடைசியில் வண்டி புறப்பட்டது. வெயில் குறைந்திருந்தது. பேப்பரைக் கீழே வைத்துவிட்டு, எதிர்பக்கம் இருந்த ஜன்னல் வழியாக அவன் வெளியே பார்த்தான்.

தேக்குக் காடுகளையும் அறுவடை முடிந்த வயல்களையும் கடந்து வண்டி போய்க் கொண்டிருந்தது. அடுத்தடுத்து ஸ்டேஷன்கள். குறிப்பாக யாரும் ஏறவும் இல்லை; இறங்கவும் இல்லை. பகல் வேகமாக இருண்டு கொண்டிருந்தது.

மனதில் கணக்குப் போட்டு பார்த்தான். இறங்கும்போது மணி ஆறே முக்கால் ஆகியிருக்கும். நகரம் இருள ஆரம்பித்திருக்கும். மாலை நேரத்தின் முடிவில் நகர வெளிச்சங்களுக்கு மத்தியில் பயணம் செய்யும்போது உடனடியாக ஆளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

அறுவடை முடிந்த வயல்களைத் தாண்டி, மர வீடுகளைத் தாண்டி வானத்தில் அரக்கனின் ரத்த விழிகளைப்போல வானொலி நிலையத்தின் வெளிச்சம் தெரிந்தது. நகரம் அடுத்து வருகிறது. நிம்மதியும் பரபரப்பும் ஒரே நேரத்தில் தோன்றின.

ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, எதிர்பார்த்ததையும் விட இருட்டு அதிகமாகி விட்டிருந்தது.

அவன் சூட்கேஸைக் கையில் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். அவனை நிழல்போல சரசு தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel