Lekha Books

A+ A A-

சரசு - Page 3

sarasu

உனக்காக கஷ்டப்பட்டு நான் ஒரு தியாகம் செய்கிறேன் என்பதைப் போல!

நேற்றுதான் கடிதம் கிடைத்தது.

இந்த வண்டிக்கு சரசு வருகிறாள். போட்ட கணக்குகள் தவறாது. தேர்ந்த திட்டமிடல்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது அவன் முடிவு செய்தான். இனி சரசுவைப் பார்க்கக்கூடாது. கடிதம் எழுதக் கூடாது.

திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் அங்கு போகவில்லை. பார்க்காமலே இருக்க வேண்டும் என்று மனதில் முடிவு பண்ணி இருந்ததே காரணம்.

பெரியவர் இறந்த தந்தி கிடைத்தபோது, மனதில் ஒரு பெரிய போராட்டமே நடந்தது.

அங்கு துக்கத்தின் இருள் வீடெங்கும் படிந்திருக்கும். அவளுக்கு ஆறுதல் தேவைப்படும்.

எச்சரிக்கையுடன் இருக்கும் கண்களை ஏமாற்றுவதற்கு இதுதான் சரியான நேரம்.

ஆனால், பழைய ராஜு அத்தான் இல்லை. இப்போது அவனுக்கு திருமணமாகிவிட்டது. அவன் இப்போது இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத் தலைவன்.

வாதம் செய்யலாம்.

அவள் ஏன் வருத்தப்பட வேண்டும்? கதைப் புத்தகத்தில் வரும் இளம் காதலனைப்போல அவளை முதல் முறையாக தொட்ட நிமிடத்தில், "நான் உன்னைக் காதலிக்கிறேன்... உன்னை... உன்னை மட்டும்' என்று பதறுகிற குரலில் அவன் எதுவும் சொல்லவில்லை.

திருமணம் என்ற வார்த்தையை அவன் எங்கும் உச்சரிக்கவில்லை.

(லாபத்தின் மீது கண்களை வைத்திருக்கும் வியாபாரி அவன். அவனுடைய கணக்கு ஒருமுறை கூட தப்பாக ஆகாது).

இருட்டில் பலம் குறைந்த பலகைகள்மீது அழுத்தமாக மிதிக் காமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு நடந்து, கிறீச்சிடுகிற கதவை மெதுவாகத் தள்ளித் திறந்து அறைக்குள் நுழைந்து, உயரம் குறைவான கட்டிலுக்குக் கீழே முழங்காலிட்டு அமர்ந்து கையை வைத்தபோது அவள் அதிர்ந்து போயிருப்பாள். ஆனால், சரசு அழவில்லை. அவனிடமிருந்து விடுபடு நினைக்கவில்லை; பேசவில்லை.

அப்போது வேறொரு இளம் பெண்ணுடன் கொண்டிருந்த காதலைச் சொல்லி உள்ளேயும் வெளியேயும் பல வகையான பேச்சுகள் உலவிக் கொண்டிருந்தன.

எண்ணெய் ஊற்றப்பட்ட தாழ்ப்பாள் கிறீச்சிடவில்லை. ஏழாவது படியை மிதிக்காமல் எத்தனை முறைகள் வேண்டு மானாலும் அவன் போகலாம் என்றாகிவிட்டது.

அது ஒரு சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் சவால் என்றுகூட சொல்லலாம். திருமணம் முடிந்தவனும் இரண்டு குழந்தைகளின் தந்தையுமான அவனிடமிருந்து அவள் விலகி இருப்பதாக இருந்தால் இருக்கட்டும்.

இழப்பதற்கு எதுவும் இல்லை.

தனு மாதத்தில் மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்த காலமது. சாயங்காலம் ஸ்டேஷனில் வண்டியை விட்டு இறங்கியது முழுமையான விருப்பத்துடன்தான். திரும்பி வரவேண்டுமென்றால் மறுநாள்தான் வண்டி. குடும்பத்தின் சுவர்களுக்குள் நுழைந்து செல்லத்தான் வேண்டும்.

ஸ்டேஷனில் லாந்தர் விளக்குடன் சந்திரனும் வேலைக்காரனும் காத்து நின்றிருந்தார்கள்.

வயல் வரப்பு வழியாக நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு நீரை மிதித்துக்கொண்டு அவர்கள் நடந்தார்கள்.

வாசலில், பதினான்காம் எண் விளக்கு வெளிச்சத்தில் அத்தை குனிந்து உட்கார்ந்திருந்தாள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும் தான்.

“உன்னைப் பார்த்து எவ்வளவு காலமாச்சு?'' அத்தை அழ ஆரம்பித்தாள்.

காக்கி அரைக்கால் சட்டை அணிந்த, கஞ்சா நிரப்பப்பட்ட பீடியைப் புகைத்துக்கொண்டு மாமா சாயங்கால வேளைகளில் படுத்திருக்கும் தோல் உறை போட்ட சாய்வு நாற்காலி யாரும் இல்லாமல் கிடந்தது.

தேநீர் கொண்டு வந்தபோதுதான் சரசுவை அவன் பார்த்தான். சதைப்பிடிப்பான நீளமான முகத்தையும், பெரிய செந்தூரப் பொட்டையும், முழுமையான இளமையையும், நடக்கும்போது மெல்லிய சுள்ளி உடைகிறதோ என்று தோன்றுகிற மாதிரி மென்மையான குரலையும் கொண்டிருக்கும்- நேராக நிற்கும் உயரமான ஒரு பெண்ணின் உருவம்தான் அவனுடைய மனதில் இருந்தது. சதைகளின் தாள லயங்கள் நிறைந்த குளிர்கால இரவு களில் அவன் பார்த்த அந்த அழகி

எங்கே? எங்கே?

ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகச் சொன்னான்:

“சரசு, ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டியே...''

சரசு அதற்கு பதிலெதுவும் கூறவில்லை.

விரிசல் ஏற்பட்டிருந்த சுவரில் அத்தை முகத்தின் நிழல் பயமுறுத்துவதைப்போல தெரிந்தது. தொங்கட்டான் அணிந்து நீட்டப்பட்ட காதுகள் நிழலில் ஆடிக்கொண்டிருந்தன.

அத்தை சொன்னாள்:

“மனசுக்கு சுகம் உண்டானாத்தான் உடம்புக்கும் சுகம் உண்டாகும்.''

“எனக்கும் உடம்புக்கு சரியில்ல. தந்தி கிடைச்சதும் வரணும்னு நினைச்சேன்.''

பிறகு என்ன சுகக்கேடு என்பதைச் சொன்னான்:

“ஆஸ்துமா...''

“அதுக்கு சிகிச்சை எதுவும் செய்யலையா, குழந்தை?''

“குளிர் படாம பார்த்துக்கணும். திறந்த வெளியில படுக்கக் கூடாது. வெயில், மழை எதுவும் பாதிக்காம கட்டுப்பாடா வாழணும்.''

அத்தை அதை கவனமாகக் கேட்டிருக்க வேண்டும். திறந்த வெளியில் படுக்கக் கூடாது!

வாசலில் ஒரு பாய் வராமல் இருக்க அதுதான் வழி!

சரசுதான் முதலில் கேட்டாள்:

“குழந்தைகளுக்கு ஒண்ணுமில்லையே?''

அதைக்கேட்டு அவன் ஒருமாதிரி ஆகிவிட்டான்.

“இல்ல...''

“அக்காவுக்கு?''

“இல்ல...''

பனையோலைமீது மழைத்துளிகள் விழுவதைக் கேட்டவாறு உள்ளே அறையில் அவன் படுத்திருந்தான். மேஜைமீது முட்டை விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

மூடியுள்ள பால் கிண்டியில் நீர் கொண்டு வந்து வைத்தபோது வெளிச்சம் விழுந்த சரசுவின் முகத்தை அவன் பார்த்தான். கன்னம் ஒட்டிப்போயிருந்தது. நெற்றி சற்று பெரிதாகிவிட்டதைப்போல் தோன்றியது.

அவன் எழுந்து அவளை நோக்கி மெதுவாக நடந்தான். அவள் முகத்தைக் குனிய வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். தோளில் கை வைத்தபோது, அவனுக்கு நடுக்கம் உண்டானது. அவள் அசையவில்லை. எதுவும் பேசவில்லை. மேலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளைக் கையால் இழுத்து அருகில் கொண்டு வந்தபோது மனம் அமைதியானது. இல்லை... இழக்கவில்லை.

மரக்கட்டைகள் விற்கும் வியாபாரி அவன். நஷ்டம் எங்கு உண்டானாலும் அவனால் தாங்க முடியாது.

“நீ ரொம்பவும் மெலிஞ்சு போயிருக்கே!''

அவள் பனிக்காத கண்களுடன் கால் விரலைத் தரையில் தேய்த்தவாறு நின்றிருந்தாள்.

முகத்தைப் பார்க்க முடியவில்லை. மங்கலான வெளிச்சத்தில் எதையும் படிக்கவும் முடியவில்லை.

“ஏதாவது டானிக் சாப்பிடணும். உடம்பை நல்லா ஆக்கணும்.''

வெளியே காலடி சத்தம் கேட்டதும், அவள் மெதுவாகத் திரும்பி நடந்தாள்.

சொல்ல முடியவில்லை: "சரசு, நீ வரணும்.'

வீடு உறக்கமானது. தூக்கம் வரவில்லை. கஞ்சாவின் புகைச்சுருள் உண்டாக்கிய வாசனை காற்றில் கலந்திருப்பது தெரிந்தது.

கடைசியில் தூக்கத்தின் அலைகள் கண்களுக்கு முன்னால் தோன்றி வலை நெய்ய ஆரம்பித்தபோது, கட்டிலுக்குப் பக்கத்தில் நிழலைப் போல சரசு வந்து நின்றிருந்தாள்.

அவள் திரும்பிப் போனபிறகு, இருட்டின் முணுமுணுப்பைக் கேட்டவாறு படுத்திருந்தபோது தன்னைத் தானே அவன் குறை கூறிக் கொண்டான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel