
தோல்வி
தோல்வியே, என் தோல்வியே, என் தனிமையே, நீ எனக்கு ஓராயிரம் வெற்றிகளை விட பிரியமானவன்.
என் இதயத்திற்கு இந்த உலக விஷயங்களைவிட இனிமை உண்டு.
தோல்வியே, என் தோல்வியே, என் உள்ளுணர்வே! நீதான் எனக்கு எதிர்சக்திகளுடன் போரிடக்கூடிய சக்தியாக இருக்கிறாய். நீதான் இளமையையும் முன்னோக்கி போவதற்கு கால்களுக்கு சக்தியையும் தருகிறாய். நொடி நேரத்தில் மறைந்து போகும் வெற்றி என்ற மோக வலையில் சிக்காதவனும் நீயே.
சந்தோஷத்தையும், தனிமையையும் நான் உன்னிடமிருந்துதான் தெரிந்திருக்கிறேன்.
மற்றவர்கள் என்னை வெறுப்பதையும், என்னை விட்டுப் போவதையும் ஒரு சந்தோஷமாக நான் கணக்கிடுகிறேன்.
தோல்வியே, என் ஒளிரும் வைரமே, என் உடலைக் காப்பாற்றுகிற கவசமே...
நான் உன் கண்களைப் பார்த்து படித்திருக்கிறேன் – அரச சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது அடிமைத்தனத்தை இறுக தழுவுவதற்காக என்று.
அன்னியர்களுடன் அறிமுகமாவது நெருப்புக்குள் நுழைவதற்கு நிகரானது. அன்னியர்களின் பிடியில் சிக்குவது விரிந்து பரந்த நிலப் பரப்பில் உதிர்ந்து விழும் பழுத்த பழங்களின் செயலுக்கு நிகரானது அது.
தோல்வியே, என் வீர நண்பனே, நீதான் என் இசை. நீதான் என் மூச்சு. நீ என் மவுன கர்ஜனையும் கூட. பறவைகளின் ஒலிகளை உன்னைத் தவிர வேறு யாரும் ஞாபகப்படுத்துவதில்லை. கடலின் பேரோசையைக் கேட்கச் செய்வதில்லை. பிரகாசித்துக் கொண்டிருக்கும் மலைத் தொடர்களைக் காட்டுவதில்லை. என் கல்லும் முள்ளும் நிறைந்த உள்ளத்தில் நீ மட்டுமே சவாரி செய்கிறாய்.
தோல்வியே, நானும் நீயும் சேர்ந்து ஒரு புயலென வீசுவோம். அதில் இறப்பவர்களுக்கு சவக்குழி தோண்டுவோம். காயும் வெயிலில் நாம் அசையாமல் நின்றிருப்போம். நாம் உலகத்திற்கு ஒரு ஆபத்தாக மாறுவோம்.
இரவு
‘கறுத்து இருண்ட நிர்வாண இரவே, நான் உன்னைப் போலத்தான். நான் நீண்ட கனவுகளை விட உயரத்தில் தகிக்கும் பாதை வழியே நடக்கிறேன். என் காலடிகளைப் பிளந்து மண்ணுக்குள்ளிருந்து பெரும் மரங்கள் முளைத்து மேலே வருகின்றன.’
‘நீ என்னைப்போல இல்லையடா, பைத்தியக்காரா! நீ மணலில் பதித்த உன் காலடிச் சுவடுகளின் அளவை பின்னால் திரும்பிப் பார்க்கிறாய்.’
‘இரவே, நான் உன்னைப் போலத்தான். அமைதியானவனும், கம்பீரம் கெண்டவனுமாக இருக்கிறேன். என் தனிமையான இதயத்தின் அடித்தளத்தில் ஒரு இளம் பெண் சிறிய ஒரு கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளுடைய கர்ப்பத்தில் உண்டான குழந்தை சொர்க்கத்தை நரகத்துடன் இணைக்கிறது.’
‘நீ என்னைப் போல இல்லையடா, முழு பைத்தியக்காரா!
துக்கத்தில் மூழ்கும்போது நீ அதிர்ந்து நடுங்குகிறாய். நரகத்தின் இசையைக் கேட்கும்போது பயந்து சாகிறாய்.’
‘இரவே, நான் உன்னைப் போலத்தான். ஆழமானவனாகவும், ஆபத்தானவனாகவும் இருக்கிறேன் தோற்கடிக்கப் பட்டவர்களின் அழுகைகளாலும் அழிக்கப்பட்ட நாடுகளின் மூச்சுக்களாலும் என் காதுகள் செவிடாகி விட்டன!’
‘நீ என்னைப் போல இல்லையடா, பைத்தியக்காரா! உன் பைத்திமான இதயம்தான் உன் நண்பன். மதிப்பு மிக்க நட்பு கொண்டவர்களுடன் உன்னால் நட்புடன் இருக்க முடியவில்லை.’
‘இரவே, நான் உன்னைப் போலத்தான். கொலை செய்பவனும் கொடூரமானவனுமாக இருக்கிறேன். கடலில் தெரியும் கப்பலின் வெளிச்சத்தால் என் இதயம் பிரகாசமானது. கொல்லப்பட்ட வீரர்களின் இரத்தத்தால் நனைந்தன என் உதடுகள்.’
‘நீ என்னைப் போல இல்லையடா, பைத்தியக்காரா! உன் இதயத்தின் உள்ளேயிருக்கும் ஆழமான ஆசையால் உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.’
‘இரவே, நான் உன்னைப் போல தெளிவாகவும், ஆனந்தமாகவும், இருக்கிறேன். என் நிழலில் வாழ்பவன் எங்கோ காணும் இன்பத்தை நினைத்துக் கொண்டிருக்கிறான். என் தோழி சிறிதும் இரக்கமில்லாமல் அவனை ஆட்சி செய்கிறாள்.’
‘பைத்தியக்காரா! நீ என்னைப் போல இல்லையடா. என் ஆத்மா ஒரு திரைச்சீலைகளால் மூடப்பட்டிருக்கிறது. என் மனம் உன் பிடியில் இல்லை.’
‘இரவே, நான் உன்னைப் போலத்தான். சந்தோஷமும், திருப்தியும் கொண்டவன் நான். என் இதயத்தில் ஆயிரமாயிரம் காதலர்கள் முத்தங்கள் பெற்று வாடி, சரிந்து மரணத்தின் போர்வையை அணிந்து மண்ணை விட்டு மறைந்து போய் கிடக்கிறார்கள்.’
‘என்ன? பைத்தியக்காரா... நீ என்னைப் போல இருப்பதாய் கூறுகிறாய்? உண்மையாகவே நீ என்னைப் போலவா இருக்கிறாய்? நீ சவாரி செய்யும் குதிரை புயலா? மின்னல் கீற்று உன் வாளா?’
‘இரவே, நான் உனக்கு நிகரானவன். உன்னை மாதிரியே பலம் கொண்டவன்.... முக்கியமானவன்.... அனாதை தேவதைமார்களின் முதுகுகளின் மீது என் சிம்மாசனம். ஆடைகளின் ஓரத்தைப் பிடித்து முத்தம் தர வரும் பிரகாசமான அதிகாலைகள். என் முகம் பார்க்கக் கூடியது அல்ல!’
‘என்ன? நீ என்னைப் போல இருக்கிறாயா? இருண்ட இதயத்தின் குழந்தையே, உன்னால் என்னுடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா? நீ என்னுடைய புரியாத மொழியைப் பேசுகிறாயா?’
ஆமாம்... இரவே... நாம் சகோதரர்கள்தான். உண்மையாகவே சகோதரர்கள்தான். நீ உலகத்தைப் படைக்கும்போது நான் ஆத்மாவைப் படைப்பதற்கா உள்ளுணர்வைத் திறந்து வைக்கிறேன்.
பலவகைப்பட்ட முகங்கள்
நான் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரக்கணக்கான வேறுபாடுகளைப் பார்த்திருக்கிறேன். ஒரேயொரு வேறுபாடு கொண்ட ஒரு முகத்தையும் பார்த்திருக்கிறேன். கல்லில் கொத்தி உண்டாக்கியதைப் போல உள்ள ஒரு முகத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அதன் பிரகாசத்தின் மூலம் என்னால் அதனுள் இருந்த வேறுபாடுகளைப் பார்க்க முடிந்தது.
நான் மற்றொரு முகத்தைப் பார்த்தேன். அதன் அழகைக் காண பிரகாசமாக இருந்த முகமூடியை நீக்க வேண்டிவந்தது.
நான் ஒரு வயதான முகத்தைப் பார்த்தேன். அது உணர்ச்சிகளை இழந்து, இருண்ட கோடுகளைக் கொண்டிருந்தது.
நான் ஒரு ஒளிரும் முகத்தைப் பார்த்தேன். அதில் அனைத்தின் வெளிப்பாடும் இருந்தது.
நான் எல்லா முகங்களுடனும் பழகினேன். என் கண்களெனும் நெசவுத் தொழிற்சாலையில் நெய்த போர்வை மூலம் பார்த்தபோது என்னால் அவற்றின் முழுமையான வடிவத்தைக் காண முடிந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook