Lekha Books

A+ A A-

பைத்தியக்காரன் - Page 11

paithiyakkaraan

மகிழ்ச்சி உண்டான போது

னக்கு மகிழ்ச்சி உண்டானபோது நான் அதை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு, மாளிகை மீது ஏறி பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துச் சொன்னேன்: ‘நண்பர்களே, இங்கே வாருங்கள். என் வீட்டில் மகிழ்ச்சி பிறந்திருக்கிறது. இங்கே கொஞ்சம் பாருங்கள். அது இதோ சூரியனின் ஒளியில் குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறது.’

ஆனால், என் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூட வரவில்லை. அதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டானது.

இப்படியே ஏழு மாதங்கள் மாளிகை மீது ஏறி என்னுடைய மகிழ்ச்சி பிறந்த விஷயத்தை கைகளைத் தட்டி நான் அறிவித்தேன்.

ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. நானும் என்னுடைய மகிழ்ச்சியும் தனித்து இருந்தோம். யாரும் அதைப் பற்றி விசாரிக்கவில்லை. பார்ப்பதற்கு வரவில்லை.

என்னைத் தவிர வேறு யாரும் அதை அனுபவிப்பதற்கு இல்லை என்று ஆனபோது, என் மகிழ்ச்சிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதன் உதடுகளில் ஒருவர் கூட முத்தம் தரவில்லை.

அந்த தனிமை வாழ்க்கையின் ஞாபகச் சின்னத்தைப் போல மகிழ்ச்சி, வாசலைக் கடந்தது.

என்னுடைய இழக்கப்பட்ட மகிழ்ச்சியைப் பற்றி நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மகிழ்ச்சி, நினைவுகளில் மட்டும். எவ்வளவு கஷ்டம்! நொடிப்பொழுது நேரம் காற்றில் அசைந்து முணுமுணுத்துவிட்டு, பிறகு என்றென்றைக்குமாக அமைதியில் மூழ்கிவிடும் இலையுதிர்கால இலைகளே அந்த நினைவுகள்.

முழு உலகம்

வேரற்ற ஆத்மாக்களின் தேவதையே, நீ தேவர்களுக்கு மத்தியில் உன்னை இழந்திருக்கிறாய். நான் கூறுவதைக் கொஞ்சம் கேள்.

பைத்தியக்காரர்களும், அனாதைகளுமான எங்களைக் காப்பாற்றும் நல்லவனான கடவுளே, நான் கூறுவதைக் கேள்.

முழுமையற்ற நான் முழுமையான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனிதத்தன்மையின் எஞ்சிய இழக்கப்பட்ட தத்துவங்களின் தெளிவற்ற கூட்டு நான்தான். நான் முழுமையான உலகத்தின் வழியாக நடக்கிறேன். என் நண்பர்களின் சட்டங்கள் முழுமையற்றவை. நடைமுறைகளின் தெளிவும், எண்ணங்களின் எளிமையும் மகிழ்ச்சி நிறைந்த கனவுகளும், ஒளிரும் முழுமையான காட்சிகளும்...

கடவுளே, நீங்கள் நல்ல செயல்களை எடுத்துக் கொள்வதும் கெட்ட செயல்களை நிராகரிப்பதுமாக இருக்கிறீர்கள். அதற்கும் மேலாக, தூசிக்குள்ளிருந்து பாவ புண்ணியங்கள் சம்பந்தப்பட்டவற்றைப் பகுத்துப் பிரித்தெடுத்து அவற்றைப் பட்டியலிட்டு வைக்கிறீர்கள். இரவையும், பகலையும் செயல் புரிவதற்கான நேரமாக மாற்றுகிறீர்கள். சட்டங்கள் உருவாக்கி ஆட்சி செய்கிறீர்கள்.

தின்பது, குடிப்பது, படுப்பது, தூங்குவது, ஆடுவது, பாடுவது, விளையாடுவது, சிரிப்பது, வேலை செய்வது, ஓய்வு எடுப்பது, ஒரு தனிப்பட்ட முறையில் சிந்தித்து ஒரு எல்லை வரை அனுபவிப்பது –

வானத்தின் விளிம்பில் ஒரு சிறப்பு நட்சத்திரம் தோன்றும்போது இப்படிப்பட்ட சிந்தனைகளின் சிலிர்ப்பிலிருந்து விடுதலை ஆவது.

புன்னகை புரிந்தவாறு பக்கத்து வீட்டுக்காரனிடம் கொள்ளையடித்த பணம் முழுவதையும் கையிலிருந்து தானம் செய்வது-

சாமர்த்தியமாக ஒருவனைப் புகழ்வதும், வேறொருவனை நட்புடன் வெறுப்பதும்- வார்த்தைகளால் ஒருவனைக் கொல்வது, வேறொருவனை வாழ விடுவது-

சட்டப்படி அன்பு செலுத்த வேண்டியது பகல் வேலை முடிந்து கைகளைக் கழுவிய பிறகுதான். மனதில் தீர்மானம் எடுத்து ஆத்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும். கெட்ட ஆவிகளை வணங்கி சாத்தானை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். ஞாபக சக்கதி இல்லாமற் போய் விட்டதைப் போல இறுதியில் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும்.

எண்ணங்களைத் திருப்பி விடுவது ஒரு தனியான தேசத்திற்குப் பின்னால், சிந்தனையின் ஆழம் கொண்டு அதை விடுதலை செய்ய வேண்டும். இனிமையுடன் எப்போதும் இருக்க வேண்டும். நட்புடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இறுதியில் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு, அடுத்த நாள் திரும்பவும் அதை நிரப்பலாம்.

கடவுளே, முதலிலேயே இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். முழுமையான நோக்கத்துடன் தான் நீங்கள் படைத்திருக்கிறீர்கள். மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளப்படுகிறது. சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவாதங்கள் வழி காட்டுகின்றன. ஒரு கடுமையான சட்டம் கொன்று மண்ணுக்குள் மூடிவிடுகிறது. எனினும், அமைதியான கல்லறைகளில் மனித ஆத்மாக்கள் இருக்கின்றன என்று நினைத்து நினைவுக் கம்பங்கள் உண்டாக்கப்படுகின்றன.

முழுமையான உலகம் இதுதான். இது மிகமிக உன்னதமான ஒரு இடம். மகானான குருவின் உலகம்.. தெய்வத்தின் தோட்டத்திலிருந்து விழுந்த பழுத்த பழம்.. உலகத்தின் மிக அழகான வெளிப்பாடு.

ஆனால், நான் எதற்காக இங்கு வந்தேன்? தேவையற்ற ஆசைகளின் பக்குவமற்ற எச்சம். தெற்கு, வடக்கு எதுவும் தெரியாமல் அலைந்து திரிந்த கொடுங்காற்று. எரிந்து ஒளிரும் நட்சத்திர கண்டம். அதுதான் நான்.

வேரற்றுப் போன ஆத்மாக்கள் வணங்கும் தேவதையே, தேவர்கள் மத்தியில் இழக்கப்பட்ட நீ கூறு, நான் எதற்காக இங்கு வந்தேன்?

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel