Lekha Books

A+ A A-

பைத்தியக்காரன் - Page 6

paithiyakkaraan

ஆர்வம்

மூன்று பேர் அறையில் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். ஒரு நெசவு நெய்பவன், ஒரு ஆசாரி, ஒரு கூலிக்காரன்.

நெசவு நெய்பவன் சொன்னான்: ‘பிணத்துக்கு நான் இரண்டு டாலருக்கு புதிய துணி விற்றேன். வாருங்கள் நாம் கொண்டாடுவோம்.’

ஆசாரி: ‘நல்ல விலைக்கு நான் இன்று ஒரு சவப்பெட்டியை விற்றேன். போய் மாமிசம் சாப்பிடுவோம்.’

கூலிக்காரன்: ‘நான் இன்று ஒரு சவக்குழி வெட்டினேன். எனக்கு இரண்டு மடங்கு கூலி கிடைத்தது. அதை வைத்து கொஞ்சம் மீன்களை வாங்குவோம்.’

அன்று இரவு அந்த அறையில் ஒரே கொண்டாட்டம்தான். மது, மாமிசம், மீன் என்று அவர்கள் சந்தோஷத்தில் திளைத்தார்கள்.

அந்த இடத்தின் காவலாளி தன் மனைவியைப் பார்த்து புன்னகை செய்தான்.

‘நம்முடைய இன்றைய விருந்தாளிகள் நன்றாக செலவு செய்கிறார்கள்.’

அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது நிலவு தோன்றியிருந்தது. போகும் வழியில் விளையாடி, சிரித்து, ஆடி, பாடி சாய்ந்து ஒருவரையொருவர் அடித்து போய்க் கொண்டிருந்த அவர்களைப் பார்த்து கடைக்காரனின் மனைவி சொன்னாள்: ‘இவர்கள் எவ்வளவு இரக்க குணமும் தாராள மனமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! இந்த குடிகாரர்கள் எல்லா நாட்களிலும் இங்கு குடிப்பதற்கு வந்திருந்தால், நம் மகன் மது வியாபாரம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. அவன் நல்ல படிப்பு படிக்க போயிருக்கலாம். ஒரு பாதிரியாராக உயர்ந்திருக்கலாம்.’

புதுமையான ஆனந்தம்

நான் நேற்று தெளிவானதும் மிகவும் புதுமையானதுமான ஒரு ஆனந்தத்தை அனுபவித்தேன். முதலில் அதை அனுபவித்தபோது ஒரு கடவுளும் ஒரு அரக்கனும் என் அறையை நோக்கி ஓடி வந்தார்கள். இருவரும் என் அறையின் வாசலில் சந்தித்துக் கொண்டார்கள். என்னுடைய புதிய கண்டுபிடிப்பைப் பற்றி அவர்கள் வாதம் செய்தார்கள்.

முதலாவது ஆள்: இது பாவம்!

இரண்டாவது ஆள்: இது புண்ணியம்!

வேற்று மொழி

பிறந்து மூன்றாவது நாள் நான் பட்டு மெத்தையில் படுத்துக்கொண்டு சுற்றிலும் ஆச்சரியத்துடன் பார்த்தபோது, என் தாய் வேலைக்காரியிடம் கேட்பது காதில் விழுந்தது: ‘என் குழந்தை எப்படி இருக்கிறது.’

வேலைக்காரி பதில் சொன்னாள்: ‘நல்ல குழந்தை. இந்த அளவிற்கு மகிழ்ச்சி நிறைந்த குழந்தையை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை.’

நான் கவலையுடன் சொன்னேன்: ‘இது உண்மை இல்லை அம்மா. என் படுக்கை மிகவும் தடிமனாக இருக்கிறது. பால் குடித்து என் வாயெல்லாம் கசக்கிறது. உங்களின் மார்பின் துர்நாற்றம்... அய்யோ... எனக்கு தலை சுற்றுகிறது. நான் மிகவும் கவலையில் இருக்கிறேன்.

நான் சொன்னது என் தாய்க்கு புரியவில்லை. நான் பேசிய மொழி இந்த உலகத்தில் இருப்பதல்ல.

இருபத்தொன்றாவது நாள் பாதிரியார் வந்தார். அவர் என் தாயிடம் சொன்னார். ‘நீ மிகவும் கொடுத்து வைத்தவள். உன் மகன் பெரிய தர்ம பிரபுவாக ஆவான். அது குறித்து நீ சந்தோஷப்படலாம்.’

அவருடைய மொழிகளைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. நான் அவரிடம் சொன்னேன்: ‘உங்களின் இறந்து போன தாய் அப்போது மிகவும் கவலைப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அந்த அளவிற்கு தர்ம சிந்தனை கொண்டவரில்லையே!’

என் மொழி அவருக்குப் புரியவில்லை.

ஏழு மாதங்கள் கழிந்ததும், ஒரு சோதிடர் வந்து என் தாயிடம் சொன்னார்: ‘உங்களுடைய மகன் ஒரு பெரிய ராஜ தந்திரியாக ஆவான். மற்ற மனிதர்களுக்கு அவன் ஒரு உதாரணமாக இருப்பான்.’

அதைக் கேட்டு எனக்கு கோபம் வந்தது. நான் சொன்னேன்: ‘அவருடைய தீர்க்கதரிசனம் முழுவதும் முட்டாள்தனமாக இருக்கிறது. நான் ஒரு பாடகனாக ஆவேனே தவிர, அதைத் தாண்டி எதுவும் ஆட வாய்ப்பே இல்லை!’

அன்றும் என்னுடைய மொழி யாருக்கும் புரியவில்லை.

இப்போது எனக்கு முப்பது வயது. என் தாய், வேலைக்காரி, பாதிரியார் எல்லாரும் மறைந்து விட்டார்கள். அந்த சோதிடர் மட்டும் உயிருடன் இருக்கிறார். அவரை நேற்று நான் கோவில் வாசலில் பார்த்தேன். பேச்சுக்கு மத்தியில் அவர் சொன்னார்: ‘நீங்கள் ஒரு பாடகனாக வருவீர்கள் என்று அப்போதே நான் கூறினேன்.’

நான் அவர் சொன்னதை கண்களை மூடிக்கொண்டு நம்பினேன். ஏனென்றால் என்னுடைய பழைய மொழி எனக்கு இப்போது அன்னியமாகி விட்டது.

மாதுளம்பழம்

நான் ஒருநாள் மாதுளம்பழத்திற்குள் இருந்தபோது, ஒரு வித்து சொல்வது கேட்டது: ‘ஒரு காலத்தில் நான் ஒரு மரமாக ஆவேன். என் கிளைகளில் வண்டு வீணை மீட்டும். சூரிய கிரணங்கள் இலைகளில் நடனமாடும். நான் கால மாறுதல்களுக்கு ஏற்ப இலைகளில் நடனமாடும். நான் கால மாறுதல்களுக்கு ஏற்ப மகிழ்ச்சியில் திளைத்திருப்பேன்.’

அப்போது மற்றொரு வித்து சொன்னது: ‘நான் உன்னைப்போல இரத்தத் துடிப்பு உள்ள இளைஞனாக இருந்தபோது, இப்படிப்பட்ட சிந்தனைகள் என் மூளையிலும் இருந்தன. எல்லாவற்றையும் குறித்த கொஞ்சம் அறிவு வந்த இன்று, எனக்கு முழுமையாக தெரிகிறது- அவை அனைத்து வீண் என்று.’

மூன்றாவது வித்து: ‘நம்முடைய எதிர்காலத்தில் மிகப்பெரியதாக தோன்றக்கூடிய ஒன்றுகூட உலகத்தில் இல்லை.’

நான்காவது வித்து: ‘அதே நேரத்தில், இலட்சிய நோக்கு கொண்ட ஒரு எதிர்காலத்தைத் தவிர, மற்றவை அனைத்தும் நம்முடைய கற்பனைகள்.’

ஐந்தாவது வித்து: ‘நான் இன்று எதுவோ, அதுதான் என்றும்.’

ஆறாவது வித்து: ‘நாம் என்ன என்பதை அறியாமல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிப் பேசுவது முட்டாள்தனமானது.’

ஏழாவது வித்து: ‘எனக்கு எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றி முழுமையாக அறிய முடிகிறது. ஆனால், அதை வார்த்தைகளால் கூறுவதென்பது முடியாத விஷயம்.’

எட்டாவது வித்து: ‘ஒன்பதாவது வித்தும், பத்தாவது வித்தும் இதோ வந்து விட்டார்கள். ஒரே ஆரவாரம் ஆயிரம் வார்த்தைகளில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. அதனால் நான் அன்று ஒரு மொட்டுக்குள் மறைந்து கொண்டேன். அதிலிருந்த விதைகள் வாதங்கள் புரியாமல் அமைதியாக இருந்ததால், நான் மிகவும் அடங்கி ஒடுங்கி இருந்தேன்.’

இரண்டு கூண்டுகள்

ன் தந்தையின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருக்கின்றன. அதிலொன்றில் தந்தை காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்த சிங்கத்தை அடைத்து வைத்திருக்கிறார். மற்றொரு கூண்டில் அமைதியான ஒரு குயில் இருக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் குயில் சிங்கத்திடம் கூறும்:

‘நண்பனே, உங்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமானதாக இருக்கட்டும்.’

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel