
பொறுமை
ஒருமுறை கூட குருதி சிந்தாத
கொலைகாரர்களிடமும்
ஒருமுறை கூட திருடாத
திருடர்களிடமும்
ஒருமுறை கூட பொய் கூறாத
பொய்யர்களிடமும்
நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள் என்றால்
நீங்கள்தான் உண்மையான பொறுமைசாலி.
*****
வேட்டை
இருபது குதிரைகள் மீது ஏறி
இருபது வேட்டை நாய்களும்
இருபது வேட்டைக்காரர்களும்
பின் தொடர,
வேட்டையாடப்பட்ட நரி சிந்தித்தது!
என்னை அவர்கள் கட்டாயம் கொன்றுவிடுவார்கள்.
ஆனால், அவர்கள் எந்த அளவிற்கு
முட்டாள்களாகவும் அப்பிராணிகளாகவும்
இருக்கிறார்கள்.
இருபது கழுதைகள் மீது ஏறி
இருபது நரிகள்
இருபது செந்நாய்களுடன்
ஒரே ஒரு மனிதனை வேட்டையாடிப் பிடிப்பதென்பது
உண்மையாகவே முட்டாள்தனமானது.
*****
மதிப்பு
உன்னால் பேர் சொல்ல முடியாத வரங்களுக்காக
நீ காத்திருக்கும்போதும்
உனக்குக் காரணம் தெரியாமல்
நீ கவலையில் இருக்கும்போதும்
உண்மையாகவே நீ வளர்பவையுடன்
சேர்ந்து வளர்கிறாய்.
உயர்பவையுடன் சேர்ந்து
உன் மதிப்பு மிக்க தனித்துவத்தை
நோக்கி உயர்கிறாய்.
*****
யாரென்று தெரியாதவன்
சிலுவையில் அறையப்பட்டவனே,
நீ என் இதயத்தில் அல்லவா அறையப்பட்டிருக்கிறாய்?
உன்னுடைய உள்ளங்கைகளைத் துளைத்து நுழைந்த ஆணிகள்
என் இதயத்தின் சுவர்களையும் துளைத்து இறங்கின.
நாளை-
ஒரு யாரென்று தெரியாத மனிதன் இந்தக்
காகுல்த்தாவிற்கு
அருகில் கடந்து போகும்போது
இரண்டுபேர் இங்கு இரத்தம் சிந்தியது தெரியாது
அவன் அது ஒரு ஆளின் இரத்தம் மட்டுமே என்று
எண்ணியவாறு நடந்து செல்வான்.
*****
மூடர்கள்
என்னுடைய வினோதமான ஆத்மதிருப்தி இதுதான்:
சில சூழ்நிலைகளில்
துரோகம் செய்யப்படவும்
அநியாயங்களுக்கு இரையாகவும்
நாம் சம்மதிப்பது உண்டு.
எதற்குத் தெரியுமா?
நான் துரோகம் செய்யப்படுவதையும்
என்னிடம் அநியாயம் செய்வதையும்
நான் தெரியாமல் இருக்கிறேன் என்று
எண்ணுபவர்களின் செலவில்
நான்சிரித்து மகிழ நினைக்கிறேன்.
*****
மரணத்தின் குரல்
நான் வாழ்க்கையிடம் கேட்டுக் கொண்டேன்.
நான் மரணம் பேசுவதைக் கேட்க வேண்டும்.
அப்போது வாழ்க்கை, அவளுடைய குரலை
மேலும் சற்று உயர்த்தினாள்.
தொடர்ந்து சொன்னாள்:
நீ இப்போது கேட்கிறாய்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook