
நான்கு நாட்களுக்குள் திருமணம் செய்து கொள்ளப் போகிற ஒருவன் இதற்கு தயாராகிறான் என்பதை நினைத்துப் பார்த்தபோது, அவனுக்கு வெட்கமாக இருந்தது. எதிர்கால மனைவிக்குச் செய்யும் துரோகம். ஆனால், இந்த இரவு யாருக்கும் தெரியப் போவதில்லை. ஒவ்வொரு மனிதர்களும் இப்படி எத்தனையெத்தனை தவறுகளையும் குற்றங்களையும் இதயத்தின் இட்டறைக்குள் புதைத்து, மூடி வைத்திருக்கிறார்கள்!
வெளியே காய்ந்த இலைகள் அசைந்தன. அவன் காதுகளைக் கூர்மைப்படுத்தினான். கதவில் ஒரு மெல்லிய சத்தம்.
'ஷ்யாமா.. '
அவன் கூறினான்.
கதவைத் திறந்தான். பதைபதைப்பின் காரணமாக வெளிறிப் போயிருந்த முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைக்க முயற்சித்தவாறு அவள் நின்று கொண்டிருந்தாள். அவள் மேல் மூச்சு, கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
'வா...'
அவள் உள்ளே நுழைந்ததும், அவன் ஓசை உண்டாக்காமல் கதவை அடைத்தான்.
அவள் அறை முழுவதையும் சற்று கண்களைச் செலுத்தி பார்த்தாள்.
'அப்பா உறங்கிட்டாரா?'
'ம்... அப்பாவுக்குத் தெரிஞ்சா...'
அவளுடைய முகத்தில் பயமும் பதைபதைப்பும் வெளிப்பட்டன. அறை முழுவதையும் அவள் மீண்டுமொரு முறை கண்களை ஓட்டி பார்த்தாள். சுவரில் ஃப்ரேம் போட்ட படங்கள் இல்லை. அலமாரியில் புத்தகங்கள் இல்லை.
'என்ன... எல்லாவற்றையும் கட்டி வச்சிருக்கீங்க?'
அவன் ஒரு வெளிறிப் போன சிரிப்புடன் சொன்னான்:
'எனக்கு நாளையில இருந்து விடுமுறை.'
அவள் எதையோ நினைத்துக் கொண்டு கேட்டாள்:
'போறீங்களா? '
'நாளைக்குப் போறேன்.'
அவளுடைய முகம் வாடியது.
'பிறகு வர மாட்டீங்களா?'
'வருவேன். விடுமுறை முடிந்தவுடன் வருவேன்.''
'உண்மையாகவா?'
'உண்மையா...'
அவள் மீண்டும் பேரமைதியைத் தொடர்ந்தாள்.
அவன் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தவாறு பலவீனமான குரலில் சொன்னான்:
'ஷ்யாமா, சிறிது நாட்கள் உன்னைப் பார்க்க முடியாதே! அதனால்தான் இன்னைக்கு வரச் சொன்னேன்.'
'இனி எப்போ வருவீங்க?'
'ஒரு மாதம் விடுமுறை இருக்கு.'
அவள் முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அந்த கண்கள் ஈரமாகியிருக்கின்றனவோ என்று அவன் நினைத்தான்.
'ஊருக்குப் போய் விட்டால், இவற்றையெல்லாம் மறந்திடுவீங்கள்ல?'
கஷாயத்தைக் குடித்து உள்ளே இறக்குவதைப போல அவன் சொன்னான்:
'எந்தச் சமயத்திலும் இல்லை.'
அவள் அவனுடைய விரல்களையும், சுட்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் இறுக பிடித்துக் கொண்டிருந்தாள்.
'ஷ்யாமா, உனக்கு ஏதாவது வேணுமா?'
'ஒண்ணும் வேண்டாம்.'
'எது வேணும்னாலும் வாங்கிக்கோ.'
'எனக்கு... அன்பு மட்டும் போதும்...'
அவனுடைய உள்ளங்கையில் ஒரு துளி கண்ணீர் உதிர்ந்து விழுந்தது.
'நீ இந்த அளவிற்கு முட்டாளா? வெறுமனே எதற்கு அழறே?'
அவன் ஒரு சிறிய குழந்தையைப் போல அவளை அள்ளி தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான்...
...ஷ்யாமா சென்ற பிறகு, அவன் விளக்கைப் பற்ற வைத்தான். சாளரத்தின் சட்டங்களைத் திறந்து விட்டான். நெற்றியிலும் நெஞ்சிலும் அரும்பிய வியர்வையை முத்தமிட்டவாறு ஒரு இளம் காற்று உள்ளே நுழைந்து வந்தது.
சுருங்கி, கலைந்து போய் காணப்பட்ட மெத்தையில் வாடிய சாமந்திப் பூக்கள் கிடக்கின்றன. அவன் அவற்றைப் பொறுக்கியெடுத்து, முகர்ந்து பார்த்தான். வாடிப் போயிருந்தாலும், வாசனை போகவில்லை. அவன் அவை முழுவதையும் கசக்கி தரையில் போட்டான்.
மறுநாள் புலர் காலைப் பொழுதில் சேகரன் வண்டி ஏறினான்...
ஸ்டேஷன்களைத் தாண்டிக் கொண்டு வண்டி வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருந்தபோது, அவன் மிக விரைவில் வர இருக்கும் அந்த நல்ல நாளைப் பற்றி கனவுகள் நெய்து கொண்டிருந்தான். முந்தைய இரவை ஒரு பகல் கனவைப் போல அவன் மறந்து விட்டிருந்தான்.
வாழ்கையிலேயே மிகவும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது... சிந்திக்கக் சிந்திக்க சந்தோஷம் அதிகரித்துக் கொண்டே வந்தது. முதலிரவின்போது இன்பத்தில் திளைக்க வைக்கும் காட்சிகள். படுக்கையறையின் ஒரு மூலையில் ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கும் முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு அவள் நின்றிருப்பாள். உதட்டிலும் மார்பிலும் கன்னங்களிலும் வெட்கத்தைக் கொண்ட அந்த இளம்பெண் எப்படி உரையாடலைத் தொடங்குவாள்? இளமையின் முந்திரிச் சாறு நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் அந்த குவளையை நோக்கி முதலில் எப்படி கையை நீட்டுவது?
வீட்டை அடைந்தான். அங்கும் சந்தோஷம் அலையடித்து உயர்ந்து கொண்டிருந்தது.
நிமிடங்கள் பெரும் பாம்புகளைப் போல ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்தன. இறுதியில் திருமண நாளும் வந்தது. அவனுடைய கனவுகளுக்கு செயல் வடிவம் கிடைக்கப் போகிறது. குருவாயூரப்பனை சாட்சியாக நிறுத்தி வைத்துக் கொண்டு, அவன் பத்மினியின் கழுத்தில் மாலை அணிவித்தான். சாமந்திப் பூக்கள் கொண்டு உண்டாக்கப்பட்ட, ஜரிகைகளை வைத்து அலங்கரிக்கப்பட்ட அழகான மாலை...
முதலிரவு:
நறுமணம் நிறைந்திருந்த காற்றை முழுமையாக சுவாசித்தவாறு அவன் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். வெளியே விருந்தினர்களின் ஆரவாரம் குறைந்து... குறைந்து வந்து கொண்டிருந்தது.
கதவைத் தள்ளித் திறந்து கொண்டு, மணப்பெண் உள்ளே வந்தாள்...
அவன் அப்போதுதான் அவளை முழுமையாக பார்க்கிறான். முகூர்த்த நேரத்தின்போது பார்க்கவில்லை. வெட்கத்தின் காரணமாக முகத்தை உயர்த்த முடியவில்லை. முன்பு இருந்ததை விட பத்மினி அதிகமாக தடித்திருந்தாள். தடித்து வீங்கிய கன்னங்கள் கண்களை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனவோ என்று தோன்றியது. பந்தல் வாழைத் தண்டு போல இருந்த கை, கால்கள்... அவள் மிகவும் பருமனாக ஆகி விட்டிருந்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook