
அவள் கதவை பின்னோக்கி சாத்தினாள். சாளரத்தின் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, பயந்து நடுங்கியதைப் போல நின்று கொண்டிருந்த சேகரனின் அருகில் வந்து, அவனுடைய சரீரத்தில், தோளைக் கொண்டு உரசியவாறு அவள் கேட்டாள் :
'தெரியுமா?'
அவனுடைய தொண்டை வறண்டு போய் விட்டது.
'தெ... ரியும்... முன்னாடியே...'
அவள் சிரித்தாள். அவனுடைய செயலில் வெளிப்பட்ட, கற்பனையில் இருந்த... நாணம் நிறைந்த புது மணப் பெண்ணின் இடத்தில் இப்போது பார்ப்பது வேறு யாரையோ...
அவளுடைய கொழுத்து, உருண்டு போய் காணப்பட்ட கைகள் அவனுடைய கழுத்தில் விழுந்தன.
அவள் அவனுடைய முகத்திற்கு அருகில் வருகிறாளோ?... ஒரு முத்தத்திற்காக புது மணப் பெண் கெஞ்சுகிறாளோ?
சேகரன் வியர்வை வழிய நின்று கொண்டிருந்தான்.
அவனுடைய சரீரத்துடன் சேர்ந்து நின்று கொண்டு அவள் சொன்னாள்:
'யூ ஃபீல் ஷை?'
அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
அதற்குப் பிறகும் அவள் என்னவோ கேட்டாள். அவன் என்னவெல்லாமோ பதிலாக கூறினான்.
'டைம் ப்ளீஸ்...'
'பத்து.'
'நாம படுப்போம்.'
அவன் 'உம்' கொட்டினான்.
அவள் விளக்கை அணைத்தாள். அதற்குப் பிறகும் அறையில் மங்கலான வெளிச்சம் இருந்தது. அடர்த்தியான சிவப்பு நிறத்திலிருந்த பட்டுப் புடவையையும், சாட்டின் ஜாக்கெட்டையும் அவள் அவிழ்த்தாள். பார்த்தவுடன் அவன் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து விட்டான். மெல்லிய பாவாடை, மார்புக் கச்சை ஆகியவற்றுடன் அவள் நின்றிருந்தபோது, அவனுடைய நரம்புகள் எழவில்லை. குருதி உஷ்ணமாகவில்லை. உணர்ச்சிகளின் எழுச்சி இதயத்தில் உண்டாகவில்லை.
'வா...'
அவன் ஒரு இயந்திரத்தைப் போல கட்டிலை நெருங்கினான்...
காலையில் எழுந்து கண் விழித்தபோது, பத்மினி எழுந்து போய் விட்டிருந்தாள். ஒரு கெட்ட கனவிலிருந்து திடுக்கிட்டு கண் விழித்ததைப் போல அவன் உணர்ந்தான். கட்டிலின் கால் பகுதியில் முந்தைய நாளின் மாலை கிடந்தது.
மாலையிலிருந்த வாடிய சாமந்திப் பூக்கள் வேதனையுடன் புன்னகைத்துக் கொண்டிருந்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook