Lekha Books

A+ A A-

ராச்சியம்மா - Page 4

raachiyamma

"என்ன? போர்வையை மூடிப் படுத்திருக்கீங்க?''

"உடம்புக்கு சுகமில்லை...''

"என்ன உடம்புக்கு?''

"அம்மை போட்டிருக்கு...''

ராச்சியம்மாவை நான் தடுப்பதற்கு முன்பே என்மீது போர்த்தியிருந்த போர்வையை நீக்கினாள். உடம்பில் இருந்த கொப்புளங்களைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

"இது என்ன? அம்மாவோட விளையாட்டுத்தானே?''

அதற்குமேல் அவள் ஒன்றும் பேசவில்லை. வீட்டைச் சுத்தம் செய்து, காப்பி தயாரித்தாள். ஆறிய காப்பியுடன் எனக்கருகில் வந்து சொன்னாள்:

"ஆற வச்ச காப்பிதான் குடிக்கணும்.''

சிறிது நேரம் சென்றதும் எங்கிருந்தோ சில வாழைப் பழங்களைக் கொண்டு வந்தாள்.

"எல்லா பழங்களையும் தின்னணும். இன்னும் காய்ச்சல் அடிக்கும். கொப்புளங்கள் இன்னும் வரவேண்டியதெல்லாம் வரட்டும்.''

ஆறிய கஞ்சி, ஆறிய சோறு, ஆறிய காபி.  ராச்சியம்மாவைத் தவிர எல்லாம் ஆறிப் போனவைதான். சாப்பிடுவதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், ராச்சியம்மா என்னை விடவில்லை.

"சாப்பிடுங்கன்னு சொல்றேன்ல...''

சாப்பிட்டேன். குடித்தேன்.

மறுநாள் முதல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் ஏதோ நீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் ராச்சியம்மா. நான் அதைக் குடிக்க சம்மதிக்கவோ மறுக்கவோ இல்லை. எல்லாம் நடக்கட்டும். காலையில் எனக்கு உணவு தந்து விட்டு ராச்சியம்மா போவாள். மாலையில் மீண்டும் திரும்பி வருவாள்.

நான் சொன்னேன்: "இது தொற்று நோய்...''

"தெரியும்.''

"ராச்சியம்மா, இப்படி நீ வர்றது சரியா?''

"சரிதான்...''

"வேண்டாம் ராச்சியம்மா.''

"பிறகு... நீங்க இங்கேயே கிடந்து சாகப் போறீங்களா? அந்த பையனை விரட்டிவிட்டது மாதிரி, என்னையும் விரட்டலாம்னு பார்க்காதீங்க... நடக்காது...''

அவளுடன் வாதம் செய்து ஒரு பயனுமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

கொப்புளங்கள் அதற்குப் பிறகும் நிறைய வந்தன. உடம்பெங்கும் கொப்புளங்கள். மூக்கின் நுனியிலும், உள்ளேயும், நகத்திற்கு நடுவிலும் பழுத்து வீங்கிக் காணப்பட்டன. இடைவெளியே இல்லாமல் கொப்புளங்கள்.

அழுகை, வேதனை, அரிப்பு...

நான் இப்படியும் அப்படியுமாய் முனகியபடி நெளியும்போது ராச்சியம்மா பக்கத்திலிருந்து வேப்பிலையால் என் உடம்பில் மெதுவாகத் தடவி விட்டாள். அவள் சொன்னாள்: "நாளைக்கு எல்லாம் சரியாயிடும்.''

அவள் சொன்ன சில வார்த்தைகள், நான் தனிமையாய்க் கிடந்த அந்த அறிமுகமே இல்லாத பூமியை நனைத்தன. இருப்பினும், என்னால் அனத்தாமல் இருக்க முடிவில்லை.

ராச்சியம்மா எங்கோ போய் கொஞ்சம் மஞ்சள் பிரசாதம் கொண்டு வந்தாள். அதை என் தலையில் தடவினாள். உடம்பெங்கும் தூவி விட்டாள். பிறகு யாரிடம் என்றில்லாமல் அவள் சொன்னது காதில் விழுந்தது:

"அம்மா, நீ பார்த்தியா?''

பிரார்த்தனையைவிட அதிகம் பயப்படக் கூடியதாக இருந்தது அது. கடன் கொடுத்ததைத் திரும்ப வாங்குவதற்காகப் பயன்படுத்திய அதே குரல்.

அவள் சொன்னது பலித்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அம்மை இறங்கியது. உடலில் இருந்த வலி நின்றது. அரிப்பு குறைந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக உறங்கவும், நிறைய நேரங்களில் கண்ணை மூடிக் கிடக்கவும் செய்தேன். கண்ணை மூடிப் படுத்திருக்கும் எனக்கு முன்னால் அரிசியும் மஞ்சள் பொடியும் தெச்சிப் பூவும் சேர்த்து எறிந்து சைத்தான்மார்களையும் அம்மை போன்ற வியாதிகளையும் விரட்டியடிப்பதற்காக ஊரில் உள்ள "வெளிச்சப்பாடு" வந்தார். இரு பக்கங்களிலும் விரித்துப் போட்டிருக்கும் தலைமுடி, மஞ்சள் குறி, அலரிப் பூவின் மணம், வாளில் பிரகாசம், சிலம்பின் ஒசை... அவர் வாய் திறந்து என்னவோ சொன்னார். ஏராளமான பெயர்கள். ஆனடியான், அத்தரித் தாமரை, சேரவளையன், அகம் தடியன், புறம் தடியன்... இப்படி தொன்னூற்றாறு பெரிய வியாதிகளை ஒன்றுமில்லாமல் செய்ய மகாகாளியை அவர் அழைத்தார். காளி வந்தாள். வெள்ளைப் பட்டாடை அணிந்து, சிங்கத்தின்மீது அமர்ந்து. வாளின் கூர்மை கண்ணிலும் கண்ணின் பிரகாசம் வாளிலும் தெரிந்தன. அப்போது அடியார் சொல்கிறார்: "மழைபோல வந்தது பனியைப்போல போகணும்."

"வலி போயிருச்சா?''

கண் விழித்துப் பார்த்தபோது எனக்கு முன்னால் காளியைப் போல ராச்சியம்மா நின்றிருந்தாள். இடி மின்னலைப்போன்ற சிரிப்புடன் அவள் சொன்னாள்: "எல்லாம் சரியாயிடுச்சு. இனி அனத்தினா நான் அடிதான் கொடுப்பேன்.'' அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தாலும் நான் சிரிக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு அசையாமல் படுத்திருந்தேன். மனதில் ராச்சியம்மாவின் உருவம் மட்டுமே நின்று கொண்டிருந்தது.

"தாரியனின் குருதி குடித்து அலறுகிறாயா அம்மா!  காற்சிலம்பு உரத்துக் குலுங்க ஆடுகிறாயா அம்மா!'' அந்தப் பாட்டு நினைவில் வந்தபோது, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

"சிரிப்பு வந்திருச்சுல்ல. அப்போ எல்லா வலியும் போயிருச்சுன்னு அர்த்தம்...''

கண் விழிக்கவில்லை. இருந்தாலும் அந்தக் கேள்வியில் வேதனை தரக்கூடிய ஏதோ ஒன்று மறைந்திருப்பதைப்போல் நான் உணர்ந்தேன். இப்போதுகூட ராச்சியம்மாவின் கேள்வியைக் கேட்க நேர்ந்தபோது, அதே வேதனைதான் உண்டானது.

"இப்போ பணம் சம்பாதிச்சு நல்ல சுகமா இருக்கீங்கல்ல?''                  என் விழிகள் தரையை நோக்கி கீழே இறங்குவதைப் பார்த்துவிட்டு ராச்சியம்மா சொன்னாள்:

"நீங்க சுகமா இருந்தீங்கன்னா, எனக்கு சந்தோஷம்தான்.''

எதற்கு அவள் சந்தோஷப்பட வேண்டும் என்று நான் கேட்கவில்லை.

மீண்டும் அமைதி. ஆனால் அது தெரியாத விதத்தில் மிஸஸ் நாயர் வாய் வலிக்கப் பேசிக் கொண்டே இருந்தாள். புதிதாக வாங்கியிருக்கும் ஷெவர்லே காரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டிருந்தாள். "ஊட்டிக்கோ பெங்களூருக்கோ ஆன்மிக பிரசங்கங்கள் கேட்கணும்னா, கோவில் தரிசனத்திற்குப் போகணும்னா ஒரு பெரிய கார் கட்டாயம் வேணும். காருக்குள்ளே உட்கார்ந்து கண்களை மூடி கடவுளின் பெயரைச் சொல்லத் தொடங்கிட்டா சேர வேண்டிய இடத்துல சேர்ந்த பிறகுதான் நான் கண்களைக் திறப்பேன். அதற்கிடையில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாது'' என்றாள் மிஸஸ் நாயர்.

"ஒரு சின்ன கார்கூட வாங்கணும்னு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன். பாரசீக வளைகுடாவுல இருந்து மகளும் அவளோட புருஷனும் நாளைக்கு இங்கே வர்றாங்க. அவங்க சுற்றிப் பார்க்குறதுக்கு ஒரு சின்ன கார் வேணும் - ஃபியட்'' மிஸஸ் நாயர் சொன்னாள்.

"எப்போ போறீங்க?'' ராச்சியம்மா இடையில் புகுந்து கேட்டாள்.

"நாளைக்குக் காலையில...'' நான் சொன்னேன்.

"நாம பார்ப்போம்... இப்போ நான் புறப்படட்டுமா? எருமைக்கு தண்ணி வைக்கணும்...''

மிஸஸ் நாயர் அப்போது தன்னுடைய கார்களைப் பற்றியும், ஃபிரிட்ஜ்களைப் பற்றியும், மகளின் குணத்தைப் பற்றியும், பத்ரிநாத் பயணத்தின்போது கிடைத்த ஆன்மிக அனுபவங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

என் மனம் எருமைகளுக்கு நீர் தரப்போன ராச்சியம்மாவுடன் இருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பார்

பார்

February 15, 2012

தோழி

தோழி

August 8, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel