Lekha Books

A+ A A-

ராச்சியம்மா - Page 2

raachiyamma

"டேய் பையா, நீ மலைச் சரிவில வந்து முழிச்சி நின்னுட்டு திரும்பி வந்துட்டேல்ல? இந்தா பால்...''  அவள் எனக்கு நேராகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்: "நாளைக்கு நான் கொண்டு வர மாட்டேன். அது மட்டும் உண்மை. இந்தப் பையனுக்கு அறிவே கிடையாதா?''

பையன் முகத்தை ஒரு மாதிரி கோணலாக வைத்துக் கொண்டான். பால் பாத்திரத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போகும்போது ராச்சியம்மா எனக்கருகில் வந்து சொன்னாள்: "நீங்க மலையாளின்னு பிறகுதான் எனக்கே தெரிஞ்சது...''

"அப்படியா? ராச்சியம்மா, உன்னோட ஊர் எது?''

"மைசூர்...''

ஒரு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவள் இவ்வளவு நன்றாக மலையாளம் பேசுவதைக் கேட்டபோது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

"ராச்சியம்மா, நீ இங்கே வந்து எவ்வளவு காலமாச்சு?''

"நான் இங்க வந்தவ இல்ல...''

"பிறகு?''

"என்னோட அம்மாவோட அம்மாவை இங்கே கொண்டு வந்தாங்க.''

"யாரு?''

ராச்சியம்மாவிற்கு வெட்கம் வந்துவிட்டது. அவளிடமிருந்து நான் அதை எதிர்பார்த்தேன். அவள் சொன்னாள்: "உங்க கேரளத்தைச் சேர்ந்த ஊர்க்காரர் ஒருத்தர் அவங்களைக் கொண்டு வந்துட்டாரு.''

"மலையாளியா?''

"ஆமா...''

"உன் அப்பா?''

"முனியப்பன்...''

மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த ராச்சியம்மாவைப் பார்ப்பதற்கே சுவாரசியமாக இருந்தது. அப்போது பையன் பாத்திரத்தைத் திருப்பிக் கொண்டு வந்தான். பாத்திரத்தை வாங்கிக் கொண்டு காட்டை நோக்கி காலை எடுத்து வைக்கும்போது ராச்சியம்மா சொன்னாள்:

"பையா, நாளைக்கு நீ வரலைன்னா முதலாளி பால் குடிக்க முடியாது...''

மறுநாள் பையன் இடத்தைக் கண்டுபிடித்துப் பால் வாங்கி கொண்டு வந்தான்.

ஒரு வாரத்திற்கு ராச்சியம்மாவைப் பார்க்க முடியவில்லை.

அன்று மாலையில் அலுவலகத்தை விட்டு வரும்போது, பாதையில் ஒரு ஆரவாரம் கேட்டது. அங்கு பார்த்தால், ராச்சியம்மா யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள்: "டேய் தெருப் பொறுக்கி நாயே, துடைப்பக் கட்டையை எடுத்து உன் முகத்துல அடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? பட்டினி கிடந்து பல்லை இளிக்கிறப்போ காசு கடன் தந்தது என் தப்பு. காசு கையில வந்ததும் எனக்குத் திருப்பித் தராம ஏமாத்தப் பாக்குறியா? நான் யாருன்னு உனக்கு இன்னும் சரியா தெரியாது போல இருக்கு.''

ராச்சியம்மாவின் முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞன் "ஷல்கவ்ய"த்தில் இருந்தான். அவன் தயங்கியவாறு சொன்னான்: "நான் நாளைக்கு..."

"இப்பவே நான் கொடுத்த காசு என் கைக்கு வரணும்.''

ராச்சியம்மா அந்த இளைஞனிடமிருந்து பணத்தை எண்ணி வாங்கினாள். அந்த இளைஞன் முகத்தை "உர்" ரென்று வைத்துக் கொண்டு திரும்பிப் போக முயன்றபோது ராச்சியம்மா சொன்னாள் "நில்லு...''

"எதுக்கு?''

"இந்தா, இதை வச்சுக்கோ. வட்டி எதுவும் வேண்டாம். முதலை திருப்பித் தந்துட்டேல்ல. அந்த சந்தோஷம் எனக்கு போதும் மகாராஜா.''

இளைஞன் பணத்தைத் திரும்ப வாங்க விரும்பவில்லை. அவனுடைய கவுரவம் பாதிக்கப்பட்டு விட்டதைப்போல் அவன் உணர்ந்தான். ராச்சியம்மா உரத்த குரலில் கத்தினாள்:

"வாங்கிக்கோ...''

அவன் கையை நீட்டினான். அவள் காசை அவன் கையில் தந்தாள். ராச்சியம்மா கோபத்துடன் அவன் முகத்தையே பார்த்தாள்.

எதையும் பார்க்காததைப்போலவும் எதையும் புரிந்து கொள்ளாததைப்போலவும் பாலத்தின்மீது நின்றிருந்த எனக்கு முன்னால் வந்தபோது ராச்சியம்மா தயங்கிக் கொண்டே சொன்னாள்.

"அந்தப் பையன் பயங்கர போக்கிரி. பணம் வாங்கினா திருப்பிக் கொடுக்குறது இல்ல. இப்போ அதை நான் வாங்கலைன்னா கையில இருக்குற பணம் முழுவதையும் பீர் கடையில கொண்டுபோய் செலவழிச்சிட்டுத்தான் வேற வேலை பார்ப்பான்.''

என்னிடமிருந்து ஒரு பதிலை ராச்சியம்மா எதிர்பார்ப்பது மாதிரி தெரியவில்லை. பிறகு எதற்கு என்னிடம் அந்த விஷயத்தை மன்னிப்புக் கேட்கிற தொனியில் விவரித்துச் சொல்ல வேண்டும்? ராச்சியம்மா கடந்து போனபோது அந்தப் பழைய வரி ஞாபகத்தில் வந்தது- "அவளுக்கு பயந்து யாரும்..."

ராச்சியம்மா இந்த விஷயத்தையெல்லாம் நினைத்துப் பார்ப்பாளா? டார்ச் அடிப்பதைப்போன்ற அந்தச் சிரிப்பு இப்போதும் உதட்டில் மலரத்தான் செய்கிறது. எனினும், அந்தப் புன்சிரிப்பை கவலை ஆக்கிரமித்து விட்டிருக்கிறதோ என்றோரு தோணல்.

கன்னங்களில் பழைய சதைப் பிடிப்பு இப்போதும் இருக்கும் அதே நேரத்தில், சிறிய முல்லைப் பூக்களை தலையில் சூடியிருந்த ராச்சியம்மாவின் செயலை உண்மையிலேயே கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை.

"என்னைத் தெரியுதா?''

"தெரியுது, ராச்சியம்மா.''  நான் மன்னிப்பு கேட்கிற தொனியில் சொன்னேன். அது உண்மையிலேயே பொய்யானது. நன்றி கெட்டவனே என்று என்னை நானே அழைக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றியது.

நான் மலைமீது ஏறும்போதுகூட ராச்சியம்மாவைப் பற்றி நினைக்கவில்லை. ஒன்றின் தோள்மீது இன்னொன்றாக தலையைச் சாய்த்துக் கொண்டு பரந்து கிடக்கும் பச்சை மலைகளையும் காட்டுக்குள்ளிருந்து திடீரென்று தோன்றி குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருக்கும் அருவிகளையும் பார்த்தபோது நான் எதனால் ராச்சியம்மாவை நினைக்கவில்லை?

காலம் என்பது உண்மையிலேயே  ஒரு குரூரமான வினோதம்தான். பச்சை மலைகளுக்கு வெள்ளை நிறத்தில் கரை இடுகின்ற நடைபாதைகள் பல சம்பவங்களையும் மனிதர்களையும் ஞாபகத்தில் கொண்டு வந்தன. கண்ணீரும் குருதியும் பிணங்களும் விழுந்த நடைபாதைகள். அவை தேயிலைச் செடிகளுக்கு உரமாக இருக்கும். ஆரஞ்சு பீக்கோ! காஸ்பியன் கடற்கரையிலோ கிறிஸ்துமஸ் தீவிலோ ஃப்ரெஞ்ச் கேபரேக்களிலோ தேன்நிலவு கொண்டாடும் இளைஞர்களும் இளைஞிகளும் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்! மணமுள்ள இந்தியன் ஆரஞ்சு பீக்கோ!

கண்ணீரில் உப்பும் குருதியும் இனிப்பும் சேர்ந்து மணமாக மாறிய கதையைப் பற்றி நினைத்தபோதுகூட ராச்சியம்மா ஞாபகத்தில் வரவில்லை.

எத்தனையெத்தனை மாற்றங்கள்! பாறையோரத்தில் இருக்கும் கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கக் கூடிய இடங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மருத்துவமனை பெரியதாக மாறியிருக்கிறது. நிறைய கார்களும் லாரிகளும் இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் மனிதர்களின் தலையிலிருக்கும் கம்பளிகளும் கன்னங்களிலிருக்கும் வெளிறிப்போன தன்மையும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தன. நவநாகரீகம் என்பது அடைக்கப்பட்டிருக்கும் வீடுகளின் வெளிச் சுவர்மீது அடிக்கும் வெயிலைப்போல இங்கு வந்திருக்கிறதோ?

நான் பயணம் செய்யும் அரசாங்கத்திற்குச் சொந்தமான பெரிய பஸ்ஸைப் பார்க்கும்போது குழந்தைகளாவது உற்று நோக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவர்கள் அதைப் பார்க்கவேயில்லை. கடைக்கு முன்னால் பஸ் நின்றபோது காதையே துளைக்கக் கூடிய அளவிற்கு ஒரு பையள் உரத்த குரலில் சொன்னது கேட்டது:

"யானை வந்திருச்சு!''

"உன் அப்பா வந்துட்டான்.'' பஸ்ஸிற்குள் இருந்த யாரோ திருப்பி அடித்தார்கள்.

"எங்கப்பா இவ்வளவு பெரிய ஆளா என்ன?'' என்று பையன் ஆச்சரியப்பட்டு நின்றபோது, பஸ்ஸிற்குள் ஒரு பரபரப்பு, முணுமுணுப்பு, ஏசல். அப்போது ஒரு கறுத்த உடம்பையும் சிவந்த பற்களையும் கொண்ட ஒரு பெண் எங்கிருந்தோ பஸ்ஸிற்குள் வந்து, அந்த பையனின் காதைப் பிடித்து அவனை இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணின் அசைவுகள் ஞாபகத்தின் ஏதோ ஒரு மூலையைத் தட்டி விட்டதைப்போல் உணர்ந்தேன்.

ஞாபகத்தின் எந்த மூலை?

ராச்சியம்மாவைப் பற்றி என் மனம் நினைத்துப் பார்த்தது. அவளைப் பற்றிய நினைவுகளில் அது தீவிரமாக ஆழ்ந்து போனது.

இந்தப் பகுதியிலுள்ள என்னுடைய வாழ்க்கை ராச்சியம்மாவுடன் அந்த அளவிற்குத் தொடர்பு கொண்டது. இருப்பினும், மனதில் தெளிவாக அவளுடைய உருவம் தோன்றவில்லை.

ஆனால், பஸ் இரண்டு வளைவுகள் திரும்பியபோது நினைவுகள் திடீரென்று என்னை அதிரச் செய்தன. பல வருடங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. மனது ஏதோ ஒன்றிற்காக தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த காலமது. எப்போது பார்த்தாலும் மனதில் அமைதி என்ற ஒன்று இல்லாமலே இருந்தது. அதனால் எதற்கு என்றே இல்லாமல் வெறுமேன இங்குமங்குமாய் வெளியே அலைந்து கொண்டிருந்தேன். கடைசியில், கால்களும் தும்பிக்கையும் கொண்டு நின்றிருந்த அந்த கறுத்த இருட்டின் முன்னால்போய் நான் நிற்பேனா? ஒரு அடி அதிகமாக எடுத்து வைத்திருந்தால்கூட போதும், என் கதி அவ்வளவுதான். ஆனால் அதே நேரத்தில் பின்னால் திரும்பிவர உடம்பில் சக்தியே இல்லாமல் போய்விட்டது. வெறுமேன என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

அப்போது திடீரென்று ஒரு கை என் கையைப் பிடித்தது. நான் எதற்காக அப்போது உரத்த குரலில் கத்தாமல் இருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. பயந்துபோய் தொண்டை அடைத்துக் கொண்டது காரணமாக இருக்கலாம்.

இயற்கை என்னை அப்படிச் செய்யாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு விஷயம். அந்தக் கைகளுக்குள் நான் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுவிட்டேன் என்பது மட்டும் உள் மனதில் எனக்குப்பட்டது.

எது எப்படியோ, நான் அசையாமல் அப்படியே நின்றுவிட்டேன். நான் காட்டுக்குள் இழுத்துக் கொண்டு போகப்பட்டேன். சிறிது நேரம் சென்ற பிறகுதான் என்னை இழுத்துக் கொண்டு போனது யார் என்பதே எனக்குத் தெரிந்தது.

ராச்சியம்மா!

"அந்த யானையைப் பார்த்து பயப்படலியே.''  பளிங்குக் கற்களை நீரில் எறிந்ததைப்போல் உண்டான அவளுடைய கேலிச் சிரிப்பைக் கேட்டபோது, அவளின் கன்னத்தில் அறைய வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. என் கை அப்போதும் ராச்சியம்மாவின் பிடியில்தான் இருந்தது.

"ராச்சியம்மா, நீ எங்கேயிருந்து வந்தே?''

"நான் இங்கேதானே இருக்கிறேன்!''

இதைச் சொல்லிவிட்டு ராச்சியம்மா விழுந்து விழுந்து சிரித்தாள். இடி, மின்னல்கள் சிதறுவதைப்போல் இருந்தது அந்தச் சிரிப்பு.

காட்டின் ஒற்றையடிப்பாதை வழியாக அவள் என்னை நடத்திக் கொண்டு போனாள். அப்போது என் மனம் ராச்சியம்மாவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது. இருட்டின் கருங்கல் சுவருக்கு நடுவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு நீல வெளிச்சம்.

கடந்த கால நினைவுகள் நனைந்த மண் சுவர்களைப்போல மனதிற்குள் இடிந்து விழுந்து கொண்டிருந்தன. நான் அவற்றின் கற்துண்டுகளையும் சேறு படிந்த மரக் கட்டைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ராச்சியம்மா கேட்டாள்:

"இப்போ எதற்கு வந்தீங்க? இங்கதான் இனிமேல் உங்களுக்கு வேலையா என்ன?''

"இல்ல... நான் மிஸஸ் நாயரைப் பார்க்கறதுக்காக வந்தேன்.''

"அப்படியா? நல்லதாகப் போச்சு... நாமளும் பார்த்த மாதிரி ஆச்சே!''

ராச்சியம்மா என்னைப் பார்க்காமலே தொடர்ந்தாள்: "ஆள் கொஞ்சம் தடித்தது மாதிரி இருக்கே!''

"வயசு கூடுறப்போ தடிமன் வரத்தானே செய்யும்?''

"நான் தடிக்கலையே!''

"ராச்சியம்மா, உனக்கு வயசு கூடல...''

அவள் அதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். இடி மின்னல் துண்டுகள் சிதறி விழுந்தன. அந்த ஒவ்வொரு துண்டும் ஆழமான ஏதோ ஒரு இருள் குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் விழுவதைப்போல் நான் உணர்ந்தேன்.

நான் எதுவும் பேசவில்லை. ராச்சியம்மாவும் எதுவும் பேசவில்லையே என்று தோன்றவுமில்லை. என் மனது அமைதியாக இருந்தது. ராச்சியம்மாவின் மனது எப்படி இருக்கும்?

"ராச்சியம்மா அப்பப்போ இங்கே வந்து உங்களைப் பற்றி விசாரிப்பா...'' மிஸஸ் நாயர் சொன்னார். தொடர்ந்து அவள் சொன்னாள்: "நாங்க எல்லா விஷயத்தையும் விவரமா அவள்கிட்ட சொல்லுவோம்.''

மிஸஸ் நாயர் விழுந்து விழுந்து சிரித்தபோது என்னுடைய இதயத்தில் ஒரு வேதனை உண்டானதைப்போல் நான் உணர்ந்தேன்.

அது அவளின் வரிசையான பற்களின் பிரகாசத்தைப் பார்த்து அல்ல. ராச்சியம்மா அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். எதையாவது நினைத்துப் பார்க்கிறாளோ?  எதைப்பற்றி நினைப்பாள். ராச்சியம்மாவிற்கும் நினைப்பதற்கென்று சில இருக்கத்தானே செய்கின்றன!

அந்த நாட்கள் என் மனதில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று நாட்கள் எனக்கு நல்ல காய்ச்சல். அது அவ்வளவு பிரச்சினைக்குரியதாக எனக்கு இல்லை. லேசான தலைவேதனை இல்லாமலிருந்தால் அந்தக் காய்ச்சல்கூட ஒரு சுவாரசியமான அனுபவமாகவே இருந்திருக்கும்.

மூன்றாவது நாள் காலையில்தான் பார்த்தேன் என் உடம்பெங்கும் கொப்புளங்கள். இளம் வெயில் வந்து கொண்டிருந்த ஜன்னலினருகில் போய் நின்றேன். போர்வையை உடம்பிலிருந்து நீக்கிப் பார்த்தேன். உடம்பெங்கும் பவள மணிகள் காட்சியளித்தன. கண்ணாடியின் அருகில் போய் நின்றேன். முகத்திலும் அவை இருக்கின்றனவா என்று பார்த்தேன். கொஞ்சம் அங்கும் இருந்தன. இனியும் கொப்புளங்கள் தோன்றுமா என்பதைப் பற்றிக் கூற முடியவில்லை.

என்னவோ மனதில் சிந்தித்தவாறு கட்டிலில் வந்து உட்கார்ந்தபோது, சமையல்கார பையன் வந்து கேட்டான்:

"காப்பி கொண்டு வரட்டுமா?''

"வேண்டாம்.''

"தேநீர்?''

"நீ இப்போ போகணும்.''

"எங்கே?''

"உன் வீட்டுக்கு.''

"எதுக்கு சார்?''

"எதுவும் கேள்வி கேட்காதே. ஒரு மாசம் கழிச்சி நீ வந்தா போதும்.'' நான் கூறியதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவன் சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு புறப்பட்டான். சிறிது நேரம் கழித்து ராச்சியம்மாவின் குரல் கேட்டது.

"இங்கே ஆள் இல்லியா?''

"இல்ல...''  நான் படுத்துக் கொண்டே சொன்னேன்.

"அப்ப பதில் சொல்றது யார்? சைத்தானா?''

ஓங்கி கன்னத்தில் அறைய வேண்டும்போல் இருந்தது. வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறாள். மீண்டும் ஒருமுறை அழைத்தாள். ஆனால் நான் பதில் சொல்லவில்லை.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிடம் ராச்சியம்மா எனக்கு முன்னால் நின்றிருந்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel