
கடல் ஆகாயத்திற்கும் கீழே எதிர்ப்பைக் காட்டியவாறு தலைகீழாக இருண்டு புரண்டுகொண்டிருந்தது.
தன்னுடைய எஜமானன் வருவதை எதிர்பார்த்து பரபரப்புடன் இருந்த கவ்ரில்லா, கடலின் கொடூரமான அமைதியிலும், அதன் அழகிலும் தன்னை இழந்துபோய் உட்கார்ந்திருந்தான். ஷெல்க்காஷ் திரும்பி வரவில்லையென்றால் தன்னுடைய நிலைமை என்ன என்று அவன் சிந்தித்தான். நேரம் மெதுவாக நீங்கிக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த மேகங்களைவிட நேரம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. காத்திருத்தல் என்பது ஒரு அளவைத் தாண்டியதால், அமைதி அதிகமான அச்சத்தை உண்டாக்கக்கூடியதாக இருந்தது. கடைசியில் சுவரின் அந்தப் பக்கத்திலிருந்து நீருக்குள் என்னவோ விழும் சத்தம் கேட்டது. முணுமுணுப்பும் தாழ்வான குரலில் இருந்த பேச்சும் அவனுடைய காதுகளில் விழுந்தன. அடுத்த நிமிடம், தான் பயத்தால் எங்கே இறந்துவிடுவோமோ என்று கவ்ரில்லா நினைக்க ஆரம்பித்தான்.
"என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா? இந்தா.. பிடி, கவனமா பிடிக்கணும்"- செல்க்காஷ் தாழ்வான குரலில் சொன்னான்.
சதுரமாக இருந்த அதிக எடை கொண்ட ஏதோவொன்று கற்சுவருக்கு மேலேயிருந்து கீழே விழுந்தது. கவ்ரில்லா அதை எடுத்துப் படகில் வைத்தான். இன்னொரு கட்டு அதற்குப் பதில் வந்து விழுந்தது. கடைசியில் செல்க்காஷின் மெலிந்து போன உருவம் சுவர் வழியாக உரசியவாறு இறங்கியது. அவனுடன் சேர்ந்து துடுப்புகளும் தெரிந்தன. கவ்ரில்லாவின் மூட்டை அவனுடைய காலுக்குப் பக்கத்தில் விழுந்தது. செல்க்காஷ் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு படகின் ஒரு முனையில் வந்து உட்கார்ந்திருந்தான்.
கவ்ரில்லாவின் முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வித்தியாசமான ஒரு சிரிப்பு மலர்ந்தது.
"களைச்சுப் போயிட்டீங்களா?"- அவன் செல்க்காஷைப் பார்த்துக் கேட்டான்.
"ஆமா... சரி... அது இருக்கட்டும். நீ துடுப்பைப் போடு. எல்லா சக்தியையும் பயன்படுத்தி படகைச் செலுத்து. எது எப்படின்னாலும் உனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். பாதி வேலை முடிஞ்சிடுச்சு. இந்த தந்தையில்லாத கப்பல்கள் வழியா வேகமா வெளியே போகணும். பிறகு பணத்தை வாங்கிட்டு நீ உன் காதலியைத் தேடிப் போகலாம். உனக்கும் ஒரு காதலி இருப்பாள்ல... நான் சொல்றது சரிதானாடா?"
"இல்ல..." கவ்ரில்லா அவனுடைய சகல சக்தியையும் பயன்படுத்தி படகை செலுத்தினான். அவனுடைய சுவாசம் சாதாரண நிலையிலிருந்து தடுமாறி காணப்பட்டாலும் கைகள் இரும்பு ஸ்ப்ரிங்குகுகளைப் போல மிகவும் வேகமாக செயல்பட்டன. படகுக்குக் கீழே கடல்நீர் 'களகளா' என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. படகுக்குக் கீழேயிருந்த நீல ஒளியின் நாடா முன்பு இருந்ததைவிட அகலமாக இப்போது இருந்தது. கவ்ரில்லா வியர்வையில் மூழ்கிப்போயிருந்தான். ஆனால், அவன் துடுப்புகளைக் கைவிடவில்லை. அந்த இரவு நேரத்தில் இரண்டு முறைகள் அவன் சண்டை போட்டான். மூன்றாவதாக ஒரு தடவையும் அவன் சண்டை போட விரும்பவில்லை. அந்த நாசம்பிடித்த வேலையை விட்டெறிந்துவிட்டு அந்த மனிதனிடமிருந்து தப்பித்து எப்படியாவது கரையை அடைந்தால் போதும் என்ற ஒரே விருப்பம்தான் அவனிடம் அப்போது இருந்தது. செல்க்காஷிடம் பேசவோ, எதிர்ப்பைக் காட்டவோ அவன் விரும்பவில்லை. அவன் கூறுவதையெல்லாம் செய்ய வேண்டும் ஆபத்து எதுவும் இல்லாமல் கரையைப் போய் அடைந்தால் அற்புத காரியங்களைச் செய்யும் புனிதரான நிக்கொலஸ் முன்னால் முழங்கால் போட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அமைதியான ஒரு பிரார்த்தனை அவனுடைய உதட்டில் அப்போது இருந்தது. வளைந்த புருவங்களுக்கு இடையில் செல்க்காஷைப் பார்த்தவாறு ஒரு புகைவண்டியைப்போல மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு அவன் தன்னுடைய பிரார்த்தனையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு பறவையைப் போல உடலைக் குனிய வைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான் செல்க்காஷ். முன்னால் இருந்த இருட்டை அவனுடைய கழுகு கண்கள் வெறித்துப் பார்த்தன. கூர்மையான வளைந்த மூக்கு காற்றில் கலந்திருந்த வாசனையை முகர்ந்தது. அவனுடைய ஒரு கை சுக்காவைப் பிடித்திருந்தது. இன்னொரு கையால் அவன் தன் மீசையைத் தடவினான். சிரிப்பதற்காக உதடுகளை விரித்தபோது மீசை எழுந்து நின்றது.
அந்த ஆதாயம் கிடைத்தது குறித்து செல்க்காஷ் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தான். அவனுக்கு தன்மீதும் தான் பயமுறுத்தி அடிமையாக்கிய இளைஞன் மீதும் சந்தோஷம் உண்டானது. கவ்ரில்லாவின் கடின உழைப்பைப் பார்த்தபோது செல்க்காஷுக்கு அவன் மீது இரக்க உணர்ச்சி தோன்றியது. அவன் கவ்ரில்லாவை உற்சாகப்படுத்தினான்.
"ம்... நீ கொஞ்சம் பயந்துட்டேல்ல?" மெல்லிய ஒரு சிரிப்புடன் செல்க்காஷ் அவனிடம் கேட்டான்.
"நல்லா பயந்துட்டேன்"- கவ்ரில்லா மெதுவான குரலில் சொன்னான்.
"இனி பயப்பட வேண்டியது இல்ல. ஆபத்து கடந்துடுச்சு. இன்னொரு இடத்தை நாம தாண்டிப் போகணும். நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ..."
"சரி" என்று கூறியவாறு கவ்ரில்லா துடுப்பு போடுவதை நிறுத்தினான். அவன் துடுப்புகளைப் படகில் போட்டான்.
"மெதுவா துடுப்பைப் போட்டா போதும். நீர்ல சத்தம் உண்டாக்கக் கூடாதுன்றது முக்கியம். ஒரு கஷ்டத்தை நாம இனியும் தாண்ட வேண்டியதிருக்கு. அங்கேயிருக்கிற ஆளுங்க சாதாரணமானவங்க இல்ல. துப்பாக்கியைக் கையில் வச்சிக்கிட்டு அவங்க எப்பவும் எச்சரிக்கையா நின்னுக்கிட்டு இருப்பாங்க. தலையில என்னவோ இடிச்சது மாதிரி இருந்துச்சேன்னு நினைக்கிறதுக்கு முன்னாடி உன் மூளையில் துளை விழுந்திருக்கும்."
எந்த சிறு சத்தமும் உண்டாக்காமல் படகு மெதுவாக நீங்கிக் கொண்டிருந்தது. துடுப்பைச் செலுத்தும்போது அசையும் நீரில் தெறித்து விழும் துளிகளின் சத்தமும், அவற்றின் நீல வண்ணமும்தான் படகு நீங்கிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டும் சான்றுகளாக இருந்தன. இரவின் இருட்டும் சலனமற்ற தன்மையும் வளர்ந்து கொண்டே இருந்தன. ஆகாயத்தைப் பார்த்து ஆர்ப்பரிக்கும் கடலின் வடிவம் அப்போது இல்லை. நீர்ப்பரப்பிற்கு மேலே கறுத்த, அசைவற்ற கரும் போர்வையைப் போல மேகக்கூட்டம் பரந்து கிடந்தது. கடலின் இயற்கையான உப்பு வாசனை முன்பு இருந்ததைவிட பலமாக இருந்தது. கடல் எப்போதும் இருப்பதை விடவும் எல்லையற்று தெரிந்தது.
"மழை பெய்தால் நல்லா இருக்கும்"- செல்க்காஷ் முணுமுணுத்தான். "ஒரு திரைச்சீலையைப் போல அது நம்மை மறைக்கும்."
படகின் இடது பக்கமும் வலது பக்கமும் பெரிய உருவங்கள் உயர்ந்து தெரிந்தன. பாய்மரக்கப்பல்கள் இருண்ட, சோகம் படர்ந்த அசைவற்ற பாய்மரக்கப்பல்கள். அவற்றில் ஒன்றின் மேற்பகுதியில் ஒரு வெளிச்சம் நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு லாந்தர் விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு யாரோ அதன் மேற்பரப்பில் நடந்து கொண்டிருந்தார்கள். அலைகள் பாய்மரக் கப்பலின் அடிப்பகுதியில் மோதிக் கொண்டு சிறிய கெஞ்சல்களை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது, எந்தவிதமான பதிலையும் சொல்லாமலே அவை அமைதியாக இருந்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook