Lekha Books

A+ A A-

உள்ளம் கொள்ளை போகுதே...

ullam kollai poguthae

"அக்கா... எனக்கு ஸ்கூலுக்கு போய் நல்லா படிக்கணும்னு ஆசைக்கா. ஆனா... எங்க வீட்ல என்னைப் படிக்க வைக்கற அளவுக்கு வசதி இல்லக்கா..."

"அதனால என்ன பண்ணின? சும்மாவா சுத்திக்கிட்டிருக்க?" வழி மறித்து தன்னிடம் வந்து பேசிய சிறுவனிடம் பதற்றத்துடன் கேட்டாள்  ப்ரியா.

ப்ரியா! கல்லூரி மாணவி. மாம்பழச் சாற்றையும், ஐஸ்க்ரீமையும் கலந்து செய்த கலவையின் பளபளப்பான முகம். பளிங்கு போன்ற உடல்வாகு. அளவான உயரம்.

ப்ரியாவின் அப்பா வசதியானவர். சொந்த வீடு, கார் உண்டு என்றாலும் ஆறு தோழியருடன் மூன்று 'பெப்’-ல் கல்லூரிக்கு ஜாலியாக வருவதுதான் அவளுக்குப் பிடித்தமானது.

"இந்த ஏப்ரல் வரைக்கும் ஸ்கூலுக்கு போய்க்கிட்டுதான்க்கா இருந்தேன். இந்த வருஷம்தான் எங்க அம்மா என்னை ஸ்கூலுக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்க. ஏதாவது வேலைக்குப் போய் காசு கொண்டு வரச் சொல்றாங்கக்கா. எனக்கு படிக்கணும்க்கா. ஸ்கூல் ஃபீஸ் கட்டினாதான்க்கா படிக்க முடியும்."

"எவ்வளவுடா கட்டணும்?"

"எண்ணூறு ரூபா கட்டணும்க்கா. மூணு மாசத்துக்கு ஒருக்க கட்டச் சொல்றாங்க."

"மூணு மாசத்துக்கு எண்ணூறு ரூபான்னா ஒரு மாசத்துக்கு முன்னூறுக்கும் குறைச்சல்தானே? இதைக் கூடவா கட்ட முடியலை?"

"நீங்கள்ல்லாம் வசதியானவங்க. உங்களுக்கு இந்தக் கஷ்டமெல்லாம் தெரியாதுக்கா. இந்த ஒரு தடவை பணம் குடுங்கக்கா. ஏதாவது வேலை செஞ்சு சம்பாதிச்சு, அடுத்து பணம் கட்டறதுக்கு சேர்த்துடுவேன்க்கா..."

"பாவம்..." சொல்லியபடியே தன் ஹாண்ட் பேக்கை எடுத்தாள் ப்ரியா. தடுத்தாள் கார்த்திகா.

"ஏ ப்ரியா... அவன் கேட்டா உடனே பணத்தை எடுத்துக் குடுத்துடுவியா? அவன் சொல்றதெல்லாம் பொய். டி.நகர் க்ரௌண்ட்ல, சாயங்காலம் எங்க அம்மாவுக்குத் துணையா வாக்கிங் போகும்போது இவனை அங்கே அடிக்கடி பார்த்திருக்கேன். இப்பிடித்தான்... இதே பொய்யை சொல்லித்தான் போறவங்க வர்றவங்க கிட்டயெல்லாம் பணம் கேட்பான். சரியான சோம்பேறி. ஏமாத்துக்காரன்..."

"ச்சீ.. பாவம்டி. இவனைப் பார்த்தா அப்பிடி ஏமாத்தறவனா தோணலை. நீ வேற யாரையோ பார்த்துட்டு இவன்னு சொல்ற..."

"இல்லை. அவன்தான் இவன். எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. இங்க பாரு ப்ரியா... தர்மம் பண்ணாம இருக்கறதை விட தர்மம் பண்றதைத் தடுக்கறதுதான் பெரிய பாவம்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா அதே பெரியவங்கதான் பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னும் சொல்லியிருக்காங்க. நீ தர்மம் பண்றதை நான் தடுக்கலை. ஆனா பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடு. இவன் ஒரு ஃப்ராடு..."

ப்ரியா அந்தப் பையனைப் பார்த்தாள். அவனது முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவளுக்கு.

"ச்சீ... பாவம்டி... இந்த ஒரு தடவை குடுத்திடறேன். அவன் ஒழுங்கா படிக்கறானான்னு நாம செக் பண்ணிக்கலாம்…"

"ஆமா... நமக்கு வேற வேலையே இல்ல பாரு. இவன் படிக்கறானா கிழிக்கறானான்னு பார்க்கறதுதான் ரொம்ப முக்கியம். எனக்கென்ன வந்துச்சு? குடுக்கணும்னு முடிவு பண்ணிட்ட. குடு."

ப்ரியா, அந்தப் பையனிடம் பணத்தைக் கொடுத்தாள். பணத்தை வாங்கிக் கொண்ட அவன் கார்த்திகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஓடினான்.

மூன்று 'பெப்’ல் அருணா, கார்த்திகா, சத்யா, புவனா, ஷைலா, ப்ரியா ஆகிய ஆறு பேரும் அட்டகாசமாய் கல்லூரியை சென்றடைந்தனர்.

கல்லூரி காம்பவுண்டிற்குள்ளிருந்த இரண்டு சக்கர வண்டிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினர். வகுப்பிற்குப் போகும் வழியிலிருந்த ஒரு மரத்தடியில், நாய்க்குட்டி ஒன்று சுருண்டு படுத்திருந்தது. ப்ரியா அதனருகே சென்றாள். பார்த்தாள். அதன் காலில் காயம். யாரோ கல்லால் எறிந்ததால் அடிபட்ட காயத்தில் லேசாக ரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அடிபட்ட வலியினால் முனகிக் கொண்டிருந்த அதைப் பார்த்து மிகவும் பரிதாபப்பட்டாள் ப்ரியா.

"கொஞ்சம் இருங்கடி" என்றவள், தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஜோசப்பை பார்த்தாள்.

"ஜோசப் அண்ணே... ஜோசப் அண்ணே" ப்ரியா கூப்பிட்டதும் ஜோசப் திரும்பிப் பார்த்தான்.

"என்னம்மா ப்ரியா...?"

ப்ரியா என்று உச்சரிக்கத் தெரியாமல் 'பிரியா’ என்றுதான் அழைப்பான் ஜோசப். அவ்வப்போது ஏற்படும் பணக் கஷ்டத்திற்கு நிதி உதவி செய்து வரும் ப்ரியா மீது அவனுக்கு அதிக அன்பும், நன்றிக்கடனும் உண்டு. ப்ரியாவின் இரக்க சுபாவத்தின் பிரதிபலிப்பாக அவள் செய்யும் பண உதவிக்கு பிரதி உபகாரமாக சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொடுப்பான் ஜோசப்.

"ஜோசப் அண்ணே, ப்ளீஸ் இந்த நாய்க் குட்டியைத் தூக்கிக்கிட்டு 'பெப்’-ல என் பின்னாடி உட்காருங்க. பக்கத்துல இருக்கற வெட்னரி ஹாஸ்பிட்டல் போய் டாக்டர்கிட்ட காண்பிச்சு இதுக்கு மருந்து வாங்கிக் குடுக்கலாம். காயத்துக்குக் கட்டு போட்டுட்டு வரலாம். பாவம் ஜோசப் அண்ணே. ப்ளீஸ்..."

"இதோ வரேம்மா. கொஞ்சம் இரும்மா. இந்த ட்யூப்பை கொண்டு வச்சிட்டு வந்துடறேன்."

"சரி."

நாய்க்குட்டியின் அருகே உட்கார்ந்து விட்ட ப்ரியாவைப் பார்த்து ஒட்டு மொத்தமாக முறைத்தனர் அனைவரும். கார்த்திகா கத்தினாள். "ஏ ப்ரியா... க்ளாசுக்குப் போகணும்ங்கற நினைப்பு இல்லியா உனக்கு? நாய்க்குட்டி கிட்ட உட்கார்ந்துட்ட?... வா... வா... எழுந்திரு..."

"நீங்க போங்கடி. நான் இதைத் தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் போயிட்டுதான் வருவேன். பாவம்…"

"என்னமோ செய். காலங்கார்த்தால க்ளாஸை கட் அடிக்கறதுக்கு எங்களுக்கு பயம்மா இருக்கு..." ஷைலா, க்ளாசுக்கு நகர, மற்ற நான்கு பேரும் அவளைத் தொடர்ந்தனர்.

"இந்த ப்ரியா, எப்பவும் இப்பிடித்தான் பண்றா. க்ளாஸுக்கு கூட வராம அப்பிடியென்ன அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் போணும்னு?..." சத்யா அலுத்துக் கொண்டாள்.

"இதுவாவது பரவாயில்லை. வாய் இல்லாத ஜீவன் வலியில கஷ்டப்படுதேன்னு உதவி செய்றா. ஆனா வாயை வச்சுக்கிட்டு நல்லா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு விட்டு பணம் கேக்கறவங்களுக்கும் இரக்கப்பட்டு பணத்தைத் தூக்கி குடுக்கறா பாரு..." அருணா புலம்பினாள்.

"ஃப்ராடு... நம்பாதேன்னு எடுத்துச் சொல்லியும் அந்தப் பையனுக்கு பணம் குடுத்தாளே..." ஷைலா தன் பங்குக்குப் பேசினாள்.

"இந்த விஷயத்துல ப்ரியாவை திருத்தவே முடியாது. என்னிக்காவது எவன் கிட்டயாவது நல்லா வசம்மா மாட்டிக்கிட்டு ஏமாந்து நிக்கப் போறா..." புவனா கூறியதைக் கேட்ட மற்ற நால்வரும் அதை ஆமோதித்தனர்.

ப்ரியாவின் இரக்க குணத்தைப் பற்றியும், அதனால் அவளது ஏமாளித்தனத்தைப் பற்றியும் பேசி முடிப்பதற்குள் வகுப்பறையை நெருங்கி விட்டனர். எனவே அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

"டேய்... இன்னிக்கு அந்த ப்ரியாகிட்ட பேசறதுக்குத் தயாரா வந்திருக்கேண்டா.." வினய் கூறியதும் அவனது கன்னத்தில் செல்லமாய் அறைந்தான் நரேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel