
"ஐய்யா.... இவ.... இவ.... இவளுக்கு நான் எந்தக் குறையும் வைக்கலீங்க. ஆனா... ஆனா... இவ எனக்கு துரோகம் செய்யறாள்ங்க. கல்யாணத்துக்கு முன்னால அவளோட மாமன் மகன் குமரேசன் மேல ஆசைப்பட்டிருக்கா. விதிவசத்துல என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட வேண்டியதாயிடுச்சாம். இவளுக்கும் கல்யாணமானப்புறம், துபாய்க்கு ஓடிப்போனான் குமரேசன். மறுபடி இங்கே வந்தவன் கூட இவ தொடர்பு வச்சிருக்காள்ங்க. 'தப்பு நடந்தது நடந்துப் போச்சு. அவனை அடியோட மறந்துடு. நாம பழையபடி சந்தோஷமா வாழ்வோம்’ன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாய்யா... அவனைப் பார்க்கறதும், அவனை சந்திச்சுப் பேசறதுமா இருக்கா. வீட்ல சரியா தங்கறதில்ல... அக்கம் பக்கம் சிரிப்பா சிரிக்கறாங்கய்யா....." ஊர் சிரிப்பதை உள்ளத்திலிருந்து எழுந்த துக்கம் குமுற, அழுதபடி கூறினான் வேலன்.
அவன் கூறியதைக் கேட்டு அதிக சினம் கொண்டார் கனகசபை.
"ஏ பிள்ள... இவன் சொல்றது நிஜந்தானா...?" நாகாவை அதட்டிக் கேட்டார்.நாகா பதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.
"இப்பிடி பேசாம இருந்தீன்னா என்ன அர்த்தம்?"
"நான்... நான்... எனக்கு இவரு கூட வாழ விருப்பம் இல்லீங்கய்யா...." இதைக் கேட்டதும் மேலும் அதிகக் கோபத்திற்கு ஆளானார் கனகசபை.
"என்ன பிள்ள நீ பேசற? உன் மேல உசிரையே வச்சிருக்கற இவன் கூட வாழாம என்ன செய்யப் போற? இவன் சொல்ற மாதிரி உன் மாமன் மகன் விஷயமெல்லாம் நிஜந்தானா?..."
".......அ......ஆ......ஆமாங்கய்யா....." நீண்ட நேரம் மௌனமாக இருந்த நாகா இறுதியில் தட்டுத்தடுமாறி பதில் கூறினாள்.
"அடச்சீ.... நீயெல்லாம் ஒரு பொம்பளையா? பொண்ணாப் பொறந்தவளுக்கு உசிரை விட மானம்தான் பெரிசு. நீ என்னடான்னா புருஷனை பக்கத்துல வச்சுக்கிட்டே வேற எவன் கூடயோ வாழப் போறதா சொல்றியே வெட்கமா இல்ல? ஒருத்தன் கையில தாலி கட்டிக்கிட்டு இப்பிடி வேலி தாண்டிப் போறதா பகிரங்கமா சொல்றியே... ச்ச... இப்பிடி ஒரு வாழ்க்கை வாழறதுக்குப் பதிலா உயிரை விட்டுடலாம்..." என்று அவளிடம் சீறியவர், வேலனிடம் திரும்பினார்.
"ஏ வேலா... இவளுக்கு உன் கூட வாழ விருப்பம் இல்ல. பேசாம அவளை அவ போக்குல விட்டுடு. கூட இருந்தே உன் கழுத்தை அறுக்கற இவ... நீ கட்டின தாலியையும் அறுத்துட்டுப் போட்டும்னு விட்டுட்டு தலை முழுகுடா..." கோபம் மாறாமல் கூறியவர், மற்ற பெரியவர்களிடம் பேசினார்.
"நீங்க எல்லாரும் என்ன சொல்றீங்க?"
"மனசுக்குப் பிடிக்காம சேர்ந்து வாழறதுல அர்த்தமே இல்லை. வேலனுக்கு மன்னிக்கற மனசு இருந்தும் கூட, தப்பு பண்ணின இவ, திருந்தற மாதிரி தெரியலை. நீங்க சொன்ன மாதிரி பிரிஞ்சு போயிடட்டும்…" அவர்களும் கனகசபையின் முடிவை ஆமோதித்தனர். நாகா அங்கிருந்து கிளம்பினாள்.
"ஒரு பொம்பளை இவ்வளவு தைரியமா போறா. நீ ஏண்டா தலை குனிஞ்சுக்கிட்டிருக்க? உன் மேல எந்தத் தப்பும் இல்லை. உன் கூட வாழறதுக்கு அவளுக்குக் குடுப்பினை இல்லை. உன் தலைவிதி அவ்வளவுதான். கிளம்பு" கனகசபை கூறியதும் வேலன் தலைகுனிந்தபடி கிளம்பினான்.
கனகசபை, கடைக்குக் கிளம்ப, அனைவரும் அவரிடம் விடைபெற்று புறப்பட்டனர். ஊர் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு கூறும் கனகசபை, தன் மகளின் வாழ்க்கைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஓர் நாள் வரும் என்பதை அன்று எதிர்பார்க்கவில்லை.
கமலா சொன்னபடி ஹோட்டலில் இருந்து சற்று சீக்கிரமாகவே வந்திருந்தான் தியாகு. ஆனால் அவள் சொன்னபடி, அவன் அர்ச்சனாவை வெளியில் கூட்டிக் கொண்டு போவதற்காக வரவில்லை. தலை வலித்தபடியால் வழக்கத்தை விட விரைவாகக் கிளம்பி வந்திருந்தான்.
வீட்டின் வரவேற்பறையிலிருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான். அவன் வந்ததைப் பார்த்த அர்ச்சனா, அவனருகே சென்றாள். அவளைத் தொடர்ந்து கமலாவும் வந்தாள்.
"காபி" என்று மட்டும் ஒற்றை வரியில் கூறினான் தியாகு.
"'காபின்னு மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? உங்க ரெஸ்டாரண்ட்லதான் காபி தயாரிச்சு விக்கறீங்க. இங்க வீட்லயுமா விக்கறீங்க?" அர்ச்சனா இவ்வாறு கேட்டதும், தலைவலியைக் கூட மறந்து 'விலுக்’ என்று தலையை நிமிர்த்தினான் தியாகு.
"என்ன... வாய்... நீளுது..."
தியாகுவும், அர்ச்சனாவும் கோபமாகப் பேசுவதைப் பார்த்த கமலா, தியாகுவின் அருகே சென்றாள்.
"என்னப்பா.. என்ன ஆச்சு? தலை ரொம்ப வலிச்சா கொஞ்ச நேரம் உன் ரூமுக்குப் போய் படுத்துக்கோயேன்..."
"அத்தை... அவர் காபி கேட்ட விதத்தைப் பார்த்தீங்கள்ல... அதைப்பத்திக் கேக்காம ரூமுக்குப் போய் படுத்துக்கச் சொல்றீங்க?..."
"பாவம்மா தியாகு. ஏதோ டென்ஷன்ல தலைவலியால அவதிப்படறான்..."
"காபின்னு கேட்கத் தெரிஞ்ச அவருக்கு 'காபி குடு அர்ச்சனான்னு’ கேட்கத் தெரியாதா?..."
"அவனோட முகத்தை வச்சே நான் கண்டுபிடிச்சுட்டேன் அவனுக்குத் தலைவலிக்குதுன்னு. தலைவலியினாலதான் அப்பிடி கேட்டிருப்பான். அது மட்டுமில்லம்மா... அவனோட சுபாவமே அப்பிடித்தான். என்னைத் தவிர வேற யாரையும் குறிப்பிட்டு பேச மாட்டான். சில சமயம் என் கிட்டயும் மொட்டையாத்தான் பேசுவான்...."
'கூர்மையான கத்தி போல குத்திப் பேசற இவர் உங்க கிட்ட மொட்டையா பேசுவாரா? அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.
கமலா தொடர்ந்தாள்.
"பாவம்மா. சூடா காபி போட்டுக் குடு. குடிச்சுட்டு கொஞ்ச நேரம் படுத்துக்கட்டும்."
"இவ்வளவு கோபமா பேசின இவ போடற காபி ஒண்ணும் எனக்கு வேணாம்." விருட்டென்று எழுந்து, தன் அறைக்கு சென்று விட்டான் தியாகு.
கமலா, மனத்தாங்கலுடன் அர்ச்சனாவிடம் பேச ஆரம்பித்தாள்.
"என்னம்மா நீ.... கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ள புருஷனை இப்பிடி எதிர்த்துப் பேசறியேம்மா. கட்டின புருஷனைப் புரிஞ்சுக்கிட்டாதாம்மா கோபதாபமில்லாம சந்தோஷமா இருக்க முடியும். பாவம்... தலைவலியோட அவதிப்பட்டு வந்த பையனுக்கு ஒரு காபி கூட கொடுக்காம கோபப்படறியேம்மா...."
"ஐய்யோ அத்தை... அவர்மேல கோபப்பட்டா நான் பேசினேன்? அவர் காபி வேணும்னு கேட்ட விதம் சரியில்லைன்னுதானே சொன்னேன்? இதில என்ன அத்தை தப்பு இருக்கு? அவர்தான் கோபப்பட்டாரே தவிர நான் கோபப்படலியே. என் மனசுல பட்டதைச் சொன்னேன். சின்ன விஷயத்தைப் பெரிசு பண்றீங்க அத்தை... நீங்களும் உங்க மகனும்."
"என் மகன் இப்ப உனக்குப் புருஷன். இத்தனை நாள் நான் அவனை நல்லா கவனிச்சுக்கிட்ட மாதிரி இனிமேல் நீ அவனை கவனிச்சுக்கணும். அவன் கொஞ்சம் அமைதியான சுபாவம் உள்ளவன். நீதான் புரிஞ்சுக்கணும். அவசரப்படக் கூடாது. போகப் போகத்தான் புரியும்...."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook