தடம் பதித்து விடை பெற்ற ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் - Page 3
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4258
அவரிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம் – உட்கார்ந்து பார்க்கவே முடியாத ‘அறுவை’ படத்தைக் கூட அவர் முழுமையாக அமர்ந்து பார்ப்பார். படத்தில் எவ்வளவோ குறைகள் இருந்தாலும், அவற்றைப் பெரிதாக பேசாமல், அவற்றில் இருக்கும் நிறைகளை மட்டுமே குறிப்பிட்டுப் பேசுவார். அந்த படத்தின் இயக்குநரைப் பார்த்து ‘அந்த காட்சியை நன்றாக பண்ணியிருந்தீங்க, சார்... இந்த பாடலை நன்றாக படமாக்கியிருந்தீர்கள், சார்’ என்பார் – அவர்களை உற்சாகப் படுத்தும் விதத்தில். பெரும்பாலும் அவர் யாரையும் மனம் நோக பேச மாட்டார். எவ்வளவு வயது குறைவாக இருந்தவராக இருந்தாலும், ‘சார்’ போட்டுதான் அழைப்பார். மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே அவர் உரிமையாக ‘நீ.. வா.. போ...’ என்று அழைப்பார். பெரும்பாலும் அவர் அழைப்பது ‘வாங்க... போங்க’ என்றுதான். எவ்வளவு பெரிய பண்பு அது!
மூன்று வருடங்களுக்கு முன்பு நானும், பிரபல விளம்பரப் பட இயக்குநருமான திரு. லேகா ரத்னகுமார் அவர்களும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற படவுலக கண்காட்சியில் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனைப் பார்த்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். ‘படவுலகைச் சேர்ந்தவர்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் நான் சிரமப்பட்டு சேர்த்து வைக்கிறேன். அவை தேவைப்படுவோருக்கு கொடுத்து உதவுகிறேன். பலரும் தங்களுடைய முகவரி மாறினாலோ, தொலை பேசி எண் மாறினாலோ எனக்கு தெரியப்படுத்துவது கூட இல்லை’ என்றார் ஆனந்தன் அப்போது வருத்தத்துடன். நியாயமான வருத்தம்தான்! இங்கு இடம் பெற்றிருக்கும் இந்த புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டதுதான்.
இன்று என்னைப் போன்ற பலர் படவுலகில் ‘மக்கள் தொடர்பாளர்கள்’ என்ற பிரிவில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு ஆரம்பகர்த்தாவாக செயல்பட்டவர் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்தான். அவர்தான் இப்படியொரு இலாகா படவுலகில் வருவதற்கே மூல காரணமாக இருந்தவர். அதற்காக மக்கள் தொடர்பாளர்கள் அவருக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
தன் வாழ்க்கை முழுவதும் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் செய்த இந்த நிகரற்ற பணியை இனி யார் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனினும், யாராவது செய்துதான் ஆக வேண்டும். அவரின் இந்த மகத்தான சேவையை, யாராவது தவறாது தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனந்தனும் அதைத்தான் விரும்புவார்.
இந்த மண்ணில் பிறக்கும் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை பயனுள்ளதாகவும், பிறருக்கு பயன்படும் வண்ணமும், சேவை எண்ணத்துடனும், பலரும் சந்தோஷப்படும் வகையிலும் வாழ்ந்து, அழியாத தடத்தை ஆழமாக பதித்து விட்டுச் செல்ல வேண்டும். அதுதான் பிறவிப் பயன் என்பது. அந்த தடத்தை மிகவும் ஆழமாகவே இந்த மண்ணில் பதித்து விட்டுச் செல்கிறார் திரு. ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள். அதை இந்த படவுலகம் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருக்கும். படவுலகம் இருக்கும் காலம் வரை ஆனந்தன் அவர்களின் பெயரும் நிலை பெற்று நின்றிருக்கும் என்பது நிச்சயம்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,