
மெல்லிசை மன்னர் திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் எண்பத்தி மூன்று வயதிலும் இன்னமும் இன்முகத்துடன் இயங்கி வருகிறார். இவரால் சும்மா இருப்பது என்பதே இயலாத விஷயம். இன்றளவும் வெளிநாடு, உள்ளூர், வெளியூர் கச்சேரிகள், படத்திற்கு இசை யமைப்பு பணிகள், விழாக்களில் தலைமை தாங்குவது, படங்களில் நடிப்பது போன்ற பல செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வரும் உதாரண மனிதர்! உயர்ந்த மனிதர் அவர்.
நம்மைச் சுற்றியுள்ள பல பெரியவர்களிடமிருந்து நிறைய வாழ்க்கைப் பாடங்கள் கிடைக்கின்றன. அந்தப் படிப்பினைகளைப் பின்பற்றி வந்தால் முதுமையிலும் இளமை உணர்வு துள்ளி விளையாடும். வயது ஏற ஏறத்தான் அனுபவங்கள் அதிகமாக கிடைக்கின்றன. அவைகள் நம்மைப் பக்குவப் படுத்துகின்றன. அந்த அனுபவங்கள் நமக்குத் தந்த அறிவுரைகளால்தான் நம் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகி யோருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கும் வாய்ப்பும், தகுதியும், முதுமையில் கிடைக்கின்றது.
'பெருசு... அறிவுரை சொல்லி அறுக்க ஆரம்பிச்சுடுச்சு' இளைய தலைமுறை இவ்விதம் கூறும் பொழுது சங்கடப்படக்கூடாது. சந்தோஷப்பட வேண்டும். 'பெருசு' என்பது பெருமைக்குரிய சொல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அறிவுரை கூறும் பொழுது 'அறுவை' என்றவர்கள் 'பெருசு' கூறியதை 'அருமை' என்று உணரும் சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாகும். அப்போது அவர்கள் பெரியவர்களின் அறிவுரையை நினைத்துப் பார்ப்பது மட்டுமல்ல. கடைப்பிடித்து, அதன் பலனை உணர்ந்தபின் மானசீகமாக அவர்களுக்கு நன்றி கூறுவார்கள்.
அதே சமயம், சதாசர்வமும் 'நைன்ட்டீன் ட்டுவன்ட்டி ஸிக்ஸ்ல (1926) எங்க தாத்தா, எங்க அப்பா..... ' இப்படி ஆரம்பித்து மொக்கை போடவும் கூடாது. ஒரே விஷயத்தை பலரிடமும் திரும்ப திரும்ப கூறுவதால் எந்தப் பயனும் இல்லை. 'அந்தக் காலத்துல நாங்கள்ல்லாம்.......' என்று ஆரம்பித்து ரம்பம் போடக்கூடாது. நம் முன்னோர்கள் காலத்தில் அவர்கள் வாழ்ந்த விதமாகவா நாம் வாழ்கிறோம்? நடை, உடை, பாவனை, பழக்க, வழக்கங்கள் எல்லாமே மாறிவிடவில்லையா? நாம் மாறவில்லையா? எனவே பழங்கால கதை பேசி இளைஞர்களை மட்டம் தட்டக்கூடாது. நீங்களும் இளைஞர்தான்/இளம் பெண்கள்தான் என்று உணரும் விதமாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். தற்கால அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள். இவ்விதம் செய்து கொண்டால் இளசுகள் மத்தியில் பெரிசுகள்தான் வெற்றி பெறுவார்கள்.
காற்று அடிக்கும் திசையை நோக்கி ஓடிச்செல்லும் ஆற்றுத் தண்ணிர் போல காலத்தின் போக்கிற்கு ஏற்றவாறு நம் கருத்துக்களை மாற்றிக் கொள்ளலாம். புதுமையை ஏற்றுக் கொள்ளலாம். வீம்பு, பிடிவாதம் இவற்றை விட்டுவிட்டு இறங்கி வரலாம். இளைய தலைமுறையினரிடம் காணப்படும் பேரறிவைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.
வயது ஒரு வரம்பு அல்ல. முதுமையை ஒரு வரமாகக் கருத வேண்டும். மனதில் இளமை உணர்வுகளை உருவாக்கிக்கொண்டு அவற்றின் மூலம் முதுமையை வெல்லலாம். ஆரோக்கியத்தை அக்கறையோடு கவனித்துக் கொண்டால் ஆயுள் முழுவதும் மனதில் இளமை உணர்வுகள் ஊஞ்சலாடும். ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்க, கட்டுப்பாடான உணவுகள் தேவை. இனிப்பு வகைகள், எண்ணெய் பலகாரங்கள், மஸாலா சேர்த்து சமைத்த உணவு வகைககள் இவற்றைக் கூடிய வரை தவிர்த்து, சரிவிகித உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
தள்ளாத வயது என்றாலும் எதையுமே தள்ளாத விதத்தில் நாவிற்குக் கட்டுப்பாடு விதிக்காமல் கண்ணால் கண்டதை எல்லாம் அள்ளி உண்டால், முதுமை, மேலும் முதுமை அடையுமே தவிர, இளமை உணர்வுடன் முதுமையைக் கொண்டாட முடியாது. திண்டாட வேண்டியதிருக்கும்.
இனிப்பின் மீது ஆசையா? குட்டி ஜிலேபியில் ஒன்றே ஒன்று சாப்பிடலாம், லட்டு என்றால் பாதி சாப்பிடலாம். மிதமான அளவில் நாம் விரும்பும் அனைத்தையும் சாப்பிட்டுக் கொள்ளலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் மேலும் பல பிரச்சனைகள் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை கேட்டு, அவர் கூறிய உணவு வகைகளை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.
பெரும்பாலோர், குறைந்த பட்சம் நாற்பது வயது வரை தங்கள் விரும்பிய உணவு வகைகளை வெளுத்து வாங்கி இருப்பார்கள். 'நாற்பது வயது வரை நாக்குக்கு அடிமையாகி நா ருசிக்க உண்டு அனுபவித்து விட்டோம், இனி கட்டுப்பாடோடு இருப்போம்' என்ற உறுதியை மனதில் மேற்கொண்டால் உடல் நலம் நம்மை விட்டு பிரியாது.
உடல் நலம்தான் முதுமையின் சுகமான வாழ்விற்கு அடிப்படை. உடல் பயிற்சியை தவறாமல் செய்து வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். எனவே சுறுசுறுப்பாக இயங்கலாம். நம்மால் இயன்ற வரை நமது உடல் நலத்தைப் பேணிக் காத்துக் கொண்டால் நம் குடும்பத்தினர்க்கு சிரமம் கொடுக்காமல் சிறப்பான, சீரிய வாழ்வை வாழலாம்.
நமது பாதுகாப்பு கவசங்களை மீறி ஏற்படும் உடல் நலக்குறைவுகளுக்கு நாம் பொறுப்பு அல்ல. அதுவரை நம் உடல்நலன் மீது கவனம் கொள்ளலாமே.
'ஐம்பதிலும் ஆசை வரும்' என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார். அறுபதிலும், இருபதின் இளமை உணர்வுகளை உருவாக்கிக்கொள்ள ஏராளமான வழிகள் இருக்கின்றன. உணர்வுகள் என்பதற்கும், உணர்ச்சிகள் என்பதற்கும் வேறு பாடுகள் உள்ளன. உணர்வுகள் என்பது மனம் சார்ந்தது, உணர்ச்சிகள் என்பது உடல் சார்ந்தது.
மனம் சார்ந்த உணர்வுகளில் ஐக்கியமாகி, முதுமையிலும் சங்கடங்கள் இல்லாமல், சந்தோஷமாக வாழலாம். 'வயசானவரா?' என்று யாராவது குறிப்பிட்டால் அதிர்ச்சி அடையாதீர்கள். பெருமிதமாக நீங்கள் கேளுங்கள் ‘Yes, may I help you? ' என்று.
கட்டுப்பாட்டுடன் கூடிய உடல் நலம், கம்பீரமான நடையைத் தரும். மிடுக்கான தோற்றத்தைத் தரும். வயது பற்றிய எண்ணமே இன்றி, மனம் முழுக்க இளமை உணர்வுகள் எனும் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப்பறக்க என்றும் இளமையுடன், முதுமையை வரவேற்போம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook