Lekha Books

A+ A A-

இப்படிக்கு, என்றும் இளமையுடன்... முதுமை ! - Page 3

rasikkathane azhagu-ippadikku-endrum-ilamaiyudan-mudumai

"உங்க அம்மாவை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். இயற்கை காற்று அவங்க மீது படணும். அந்த சீரியல் வாழ்க்கை வட்டத்தை விட்டு அவங்க வெளியே வரணும். இப்படி அவங்க, தன்னோட வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் அவங்களோட உடல்நலக் குறைவு  மாறி நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இது ஒரு பரிசோதனைதான். எனது முடிவு அல்ல". என்று மருத்துவர் கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்ட மகன், மருத்துவரையே தன் அம்மாவிடம் இது பற்றி பேசும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

டாக்டரும் அந்த அம்மாவிடம் 'கௌன்ஸலிங்' செய்வது போல ஆறுதலாய், அன்பாய் பேசி விளக்கினார். ஆரம்பத்தில் தயக்கமாய் மறுத்த அந்த அம்மா, டாக்டரின் பொறுமையான விளக்கத் தினாலும், அறிவுரைகளாலும் சற்று மனம் இசைந்தார். அதன்படி வீட்டிற்குப் போனதும் தொலைக்காட்சி பெட்டியைத் தேடாமல் பேரன், பேத்திகளைத் தேடினார். கொஞ்சினார். இரவு உணவை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டார். குறிப்பிட்ட தொடர்களின் குறிப்பிட்ட நேரம் வரும் பொழுது சலனப்படும் தன் மனதை கட்டுப்படுத்தினார்.

உடல் நலம் குன்றியதற்குடாக்டர்கூறியதுபோலதொடர்கள் பார்த்து, அதிலேயே மனம் லயிப்பது ஒரு காரணமோ என்ற பயத்தில் தொடர்கள் பார்ப்பதைத் தவிர்த்தார்.  வீட்டு வேலைகளில்  ஈடுபட்டார். மருமகளுக்கு உதவி செய்தார். வெளிக்காற்று படும்படியாக மகனுடன் நடைப்பயிற்சி செய்தார். மருமகளுடன் கோவிலுக்குச் சென்றார். உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பத்திரிக்கைகள் படித்தார். பேரன், பேத்திகளுக்கு விதம் விதமாய்பலகாரங்கள் செய்துக் கொடுத்தார்.

 'அந்த சீரியலில் அந்த கேரக்டருக்கு என்ன ஆச்சோ, அந்த மாமியார், தன் மருமகளை என்ன செய்தாளோ' என்று அலைபாய்ந்துக் கொண்டிருந்த அவரது மனம் ஒரு நிலையை அடைந்தது. நாளடைவில் குடும்பத்தின், வெளி உலகின் சந்தோஷங்களை இத்தனை காலம் மறந்து, தொலைக்காட்சி தொடர்களில் கவனத்தை செலுத்தி, உடல்நலம் குன்றிய நிலை ஏற்பட்டு விட்டதே' என்று உணர்ந்தார். வருந்தினார்.

தன் அன்றாட வாழ்க்கை முறைகளை குடும்பத்தினருடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். சிறுக சிறுக அவருக்குள் சீரியல்களின் ஆதிக்கம் மறைந்தது. ஆரோக்கியம் அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. ரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்தது. கை நடுக்கம் காணாமலே போனது.

இந்த நல்ல முன்னேற்றங்கள் அவரை தொலைக்காட்சி தொடர்களை மறக்க வைத்தது. மாத்திரைகளின் அளவையும் குறைக்கும் அளவு முன்னேற்றம் அடைந்தார். தனக்கு ஏற்பட்ட ஆரோக்கியக் குறைவு, மனநிலை பாதிப்பினால் ஏற்பட்ட விளைவு என்பதை உணர்ந்து கொண்டார். அவரது குடும்ப டாக்டருக்கு நன்றி கூறி மகிழ்ந்தார். தன் மீது அக்கறை கொண்டு தன்னை டாக்டரிடம் அழைத்துச் சென்று, தேவையானதை செய்த தன் மகனின் பாசத்தை நினைத்துப் பெருமிதப்பட்டார்.

தொடர்கள் பார்ப்பது தவறு இல்லை. ஆனால் அந்தத் தொடர்களின் வரும் சம்பவங்களிலும், அந்த சம்பவங்களில் வரும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளிலும் முழுக்க முழுக்க தங்கள் மனதை ஈடுபடுத்தி, நிமிடம் தவறாமல் அதே சிந்தனையில் உழல்வதுதான்தவறு. 'இது கதை. கற்பனை. தொலைக்காட்சி களில் வரும் பிம்பங்கள் மட்டுமே; உண்மைகள் அல்ல' என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தொடர்களை பார்த்த பிறகு அதை அந்த நிமிடத்தோடு மறந்துவிட்டு நமது இயல்பான வாழ்வுடன் ஒன்றி விட வேண்டும். இதை விடுத்து தொடரில் வரும் கதாபாத்திரங்களை நமது உறவினர்கள் போல நினைத்து அதைப் பற்றி கவலைப்பட்டு நம் உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

கபாலீஸ்வரர் கோயிலில் ஒரு பெண்மணி, 'கோலங்கள்' தொடரின் 'அபி' என்ற (கதாபாத்திரம்) பெண்ணின் பெயருக்கு அர்ச்சனை செய்த காட்சி நான் என் கண்களால் நேரில் கண்ட காட்சி. உடன் இருந்த அவரது தோழி, "உன் வீட்ல 'அபி'ன்னு யாருமே இல்லையே, பின் எதுக்காக அந்தப் பெயரில் அர்ச்சனை செய்கிறாய்?" என்று கேட்க, அர்ச்சனை செய்த அந்தப் பெண்மணியின் பதில் கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.

"கோலங்கள் 'அபி'க்குத்தான் அர்ச்சனை செய்தேன். பாவம். அவ வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப்படறா தெரியுமா? அவளோட கஷ்டமெல்லாம் தீர்ந்து அவ நல்லா இருக்கணும்னுதான் அவ பேருக்கு அர்ச்சனை பண்ணினேன்" என்று அவர் கூறியதும் ஆடிப் போய் விட்டேன். இந்த அளவுக்குத் தொடருடன் ஐக்கியமா? என்று ஆச்சர்யம் பாதி அச்சம் பாதி என்னை ஆட்டி வைத்தது.

முதுமையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது, எந்த நிகழ்ச்சியிலும், குடும்ப நடவடிக்கை களிலும் கலந்து கொள்ளாமலே இருப்பது போன்ற செயல்களை அறவே தவிர்க்க வேண்டும். ' Live every moment' என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு வினாடி நேரமும், நிமிட நேரமும் வாழ்க்கையின் அனைத்தையும் அனுபவித்து வாழ வேண்டும்.

வயது முதிர்ந்து விட்டால் இளமை உணர்வுகள் உதிர்ந்து விடுவதில்லை. அலுவலகத்தில் இளைப்பாறும் (Retirement) காலகட்டம் வந்தபின் வீட்டில் சும்மா  உட்கார்ந்திருப்பது தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது மிக்க சிரமம். நாமும் கஷ்டப்பட்டு, பிறரையும் கஷ்டப்படுத்துவது தாழ்வு மனப்பான்மை.

பணியிலிருந்து இளைப்பாறிய ஆண்கள் / பெண்கள் (Retired Persons) வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது மிகவும் கொடுமையானது. இக்கொடுமையை இனிமையாக மாற்றிக் கொள்வது நம்மிடம், நம் மனதில்தான் உள்ளது. நிம்மதியையும், இனிமையையும் எங்கே எங்கே என்று தேட வேண்டியதில்லை. நமக்கு  நாமே நம் வாழ்நாள் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு விட்டால் அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து விடுபட்டுவிட வேண்டும் என்பதல்ல. நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

இளம் வயதிலிருந்தே அந்தந்த வயதுக்குரிய உணவுப்பழக்க முறைகளையும், முறையான உடல்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியம்தான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம். நாற்பது வயதைக் கடந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை உடல் ஆரோக்கிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். டாக்டரின் அறிவுரைப்படி அவர் பரிந்துரைக்கும் உடல் நலக் குறிப்புகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சத்துணவு நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, அவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். ஏனோதானோ  வென்ற அலட்சியமான உணவு முறையினால் உடல் நலம் பாதிக்கப்படும். உடல்  நலம் நன்றாக இருந்தால் முதுமையின் தளர்ச்சி இன்றி, மலர்ச்சியுடன் வாழலாம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel