Lekha Books

A+ A A-

மனசு ஒரு தினுசு - Page 3

rasikkathane azhagu-manasu-oru-thinusu

'நான் மனசு வச்சா அதை சாதிப்பேன், இதை சாதிப்பேன்' என்று பேசுவோம்.

'மனம்  ஒரு குரங்கு -மனித

மனம் ஒரு குரங்கு அதை

தாவ விட்டால், தப்பி ஓடவிட்டால் நம்

பாதையை மாற்றிவிடும், அது பாவத்தில் ஏற்றிவிடும்'

தத்துவார்த்தமான இந்த பாடல் வரிகள் எத்தனை எளிமையாக மனதின் இயல்பை வெளிப்படுத்துகிறது?!

'மனிதன் நினைத்து விட்டான் வாழ்வு நிலைக்கும் என்று....

மனது நினைக்கிறது பாவம் மனிதன் என்று....'

கவியரசு பாடியது, பாடல் வரிகள் மட்டுமல்ல... வாழ்க்கையின் தேடல்கள் வெளிப்படுத்தும் தத்துவங்கள்! அனுபவங்கள் ஏற்படுத்தும் பக்குவங்கள்.

இரு மனம் ஒன்றுபட்டால் திருமணம்! இரண்டு மனங்கள் ஒன்று பட்டு இணைவதால் நிகழும் திருமண வாழ்க்கையில் சந்தோஷம் எனும் நறுமணம் வீசும். ஒன்று படாத உள்ளங்கள், ஒரே இல்லத்தில் சேர்ந்து வாழ்ந்தாலும் அந்த இல்லத்தில் இன்பம் என்பதே இல்லாமல் போகும். அந்த இல்லறம், நல்லறமாக இருக்காது.

சந்தோஷமாக இருக்கும் பொழுது அதன் பிரதிபலிப்பு மனதிற்குள் ஊஞ்சலாடும்.  சந்தோஷம் இல்லாத நிலையில் அதன் விளைவாய் மனம் போராடும். 'மனசுல இருக்கிறதை மறைக்காம சொல்லு' என்று நாம் சில சமயம் கேட்பதுண்டு. மனது ஒரு ரகஸ்ய சுரங்கம். 'நாம் வெளிப்படுத்தக் கூடாது' என்று தீர்மானித்திருக்கும் விஷயங்களை மிக சாமார்த்தியமாக மறைத்து வைத்துக் கொள்ளும் பாதுகாப்புப் பெட்டகம் மனசு.

'திடீர்னு மனசு மாறிட்டான்ப்பா' என்கிறோம். வினாடி நேரத்திற்குள் நம் அறிவு கேட்கும் வினாக்களுக்கு விடை அளிப்பது மனது. 'இப்ப இது வேண்டாம்... சரிதான் ஒப்புக்கொள்' என்று மாற்றி மாற்றி பேச வைக்கும் பேராற்றல் உண்டு மனதிற்கு.

பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் ஆண், அவளது புறத்தோற்றத்தை மட்டுமே பார்க்க முடியும்.  பெண்ணின் மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியாது.  பார்த்த அந்தப் பெண்ணையே மணம் முடித்தபின் அவளிடம் கேட்பான், 'என்னை முதல் முதல்ல பார்த்தப்ப என்ன நினைச்சே?' என்று. சற்று அபத்தமான கேள்வி என்றாலும் கொஞ்சம் ஆபத்தான கேள்வியும் கூட. இந்தக் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்?

அவனை முதன் முதல் பார்த்த பொழுது உண்மையிலேயே அவனைப்பற்றி நல்ல விதமாக நினைத்திருந்தால் பிரச்சனை இல்லை. வேறு ஏதாவது  நினைத்திருந்தால்? அதாவது 'என்னடா, இவன் கறுப்பா இருக்கானே', 'அம்மாவை ஒட்டிக்கிட்டே இருக்கானே 'அம்மாக்கோண்டு'வாக இருப்பானோ' என்றெல்லாம் நினைத்திருந்தால்? அந்த உண்மைகளை மனம் திறந்து மறைக்காமல் அவனிடம் சொல்லமுடியுமா? நம்முடன் கண்ணா மூச்சி விளையாட்டு விளையாடும் இந்த மனசு ஒரு தினுசு.

'மனசாட்சிக்கு விரோதமா எதையும் சொல்லாதே; செய்யாதே...' என்கிறோம். அதென்ன மனசாட்சி? மனதுதான் மனசாட்சி. ஆனால், அது  எதற்குமே சாட்சியாக வெளிவராது. சும்மா பேச்சு வழக்கில் பழக்கப்பட்டு விட்டோம் அப்படி சொல்வதற்கு.

'நிறைஞ்ச மனசோட சொல்றேன்... நீ நல்லா இருப்ப...' மனதிற்குள் என்ன நிறைந்திருக்கிறது? உணர்வுகள்! பிறரை மிக உண்மையான நல்ல எண்ணத்தோடு வாழ்த்துவதை அவ்விதம் கூறுகிறோம். நல்ல எண்ணங்கள் நிறைந்த மனது என்றென்றும் அமைதியுடனும், ஆனந்தத்துடனும் இருக்கும். இப்படிப்பட்ட மனதிற்குள் தேவையற்ற விஷயங்கள் இல்லை. விஷமமான நினைவுகள் இல்லை. விஷம் போன்ற தீய எண்ணங்கள் இல்லை. இப்படிப்பட்ட மனது இருந்தால் மற்றவர்களையும் நலமாக வாழ வைத்து நாமும் நலமாக வாழ்வோம்.

'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை'.... மனது நினைப்பது எல்லாமே நடந்து விடுவதில்லை. அதற்கு மேல் தெய்வம் என்ற ஒன்று இருப்பதை மிக அழகாக தன் வார்த்தைகளில் கவித்துவமாக பாடி விட்டார் கவிஞர்.

'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை....'

இந்த மனதிற்குள் எத்தனை பாரங்களை சுமக்க முடியும்? சுமக்க வேண்டிய அவசியம்தான் என்ன? நடந்து முடிந்தன வற்றையும், கடந்து போனவை பற்றியும் மனதிற்குள்ளேயே வைத்து, புதைத்து, அதையே நினைத்து நம்மை நாமே வதைத்துக் கொண்டிருப்பதால் என்ன நன்மை கிடைக்கும்? என்ன அமைதி கிடைக்கும்?

'நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியதா?...

மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியதா?....'

நினைப்பதும், மறப்பதும், மனம்வசம் இல்லை. நம்வசம்தான் உள்ளது. 'மறந்துவிடு' என்று கட்டளை இட்டு, நம் கட்டுப்பாட்டிற்குள் மனதை  கொண்டு வர வேண்டும். தீயன மறந்து, நல்லன நினைத்து வாழ நம்மை பழக்கிக் கொள்ள வேண்டும். நடந்த சம்பவங்கள் நமக்கு துன்பத்தைக் கொடுக்கக் கூடியதாயின் சதா சர்வமும் அதையே மனமெனும் மேடையில் அரங்கேற்றிய வண்ணம் இருக்கக் கூடாது. அதே சமயம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின், அவற்றை அவ்வப்போது நினைத்துப் பார்த்து ஒரு புத்துணர்வை நமக்குள் உருவாக்கிக் கொள்ளலாம்.

தகுதியில்லாத ஒருவனை மகள் காதலிக்கும் சேதி அறிந்து, 'உன் மனசுல இருந்து அவனைத் தூக்கி எறிந்துவிடு' என்று, அப்பா மிரட்டுவது வழக்கம். தன் மகளுக்குப் பொருத்தம் இல்லாத ஒருவன் என்பதில் தகப்பனுக்கு கவலையும், கோபமும் ஏற்பட்டிருக்கும். மகள் தன் பேச்சைக் கேட்கவில்லையெனில், கெஞ்சிக் கொண்டிருந்த அவர் மிஞ்சுவார். கோபம் தலைக்கேற 'அவனை மறந்துடு' என்பார்.

அவளோ 'அவரை மறந்து வாழ முடியாது. அவரை சுமந்து வாழ்ந்த இந்த மனசுல வேற ஒருத்தருக்கு இடம் தர முடியாது' என்று பிடிவாதம் பிடிப்பாள்.

அதுவரை அன்பு செய்த தகப்பன் அந்த நிமிடத்தில் இருந்து வம்பு வளர்க்கும் வில்லனாகி விடுவார் அவளுக்கு. இது காலம் காலமாய் தொன்று தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வரும் பிரச்சனை. இதற்கு முடிவு? 'நானா?... அவனா?' என்ற அப்பாவின் கேள்விக்கு 'அவன்தான்' என்று தன் மனதில் எடுத்த முடிவை வாய்மொழி வழியாக மகள் கூறுவதுதான் முடிவு. அந்தப் பிரச்சனை இவ்விதம் முடியும் பொழுது 'தன் வாழ்வு துவங்குகிறது' என்று அவளது மனம் தப்புக்கணக்கு போடும். உண்மையிலேயே அவளுக்கு துவங்குவது, வாழ்க்கை பிரச்சனைகளாகும்.

இதுநாள் வரை கவலை என்பதே அறியாமல் துள்ளி விளையாடும் மனதுடன் வானில் பறந்து திரியும் பறவை போல வாழ்ந்தவள், அவளது மனது எடுத்த முடிவிற்குப்பின், சிறகுகள் ஒடிந்து, சிறைப்பறவையைரய் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்பதை அறியாமல் சிறுபிள்ளைத்தனமாய் சந்தோஷத்துடன் சிரித்திருப்பாள். 'காதல் தவறு இல்லை' என்று சிந்தித்திருப்பாள். அவள் மனதில் வரித்தவனின் தோலுரித்துக் காண்பித்த தகப்பனே எதிரியாகத் தோன்றும் அவளது மனதிற்குள்!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel