
அபிலாஷின் வீட்டில் சரிதாவை விசாரணை செய்தது போலீஸ். அந்த நடுநிசி நேரம் கயல்விழியின் வீட்டிற்கு அவள் போக நேர்ந்தது பற்றி விளக்கினாள் சரிதா. 'ஃப்ளர்ஷ் பேக்' போல அவள் நினைவில் மோதியது பாவனாவின் இரவு நேர வருகையும், அவளது பேச்சும்.
பேய் மழை பெய்து கொண்டிருக்க, அழைப்பு மணியின் ஓசை கேட்டு 'அபிலாஷாக இருக்கும்' என்று எண்ணியபடியே வீட்டின் வாசல் கதவைத் திறந்தாள் சரிதா.
அங்கே பாவனா ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தாள்.
''உள்ளே வா. என்ன இது? தனியா இந்த நேரத்துல?'' கேள்விகளை அடுக்கியவள், பாவனாவிற்கு துவட்டுவதற்காக துண்டை எடுத்துக் கொடுத்தாள்.
''ஒரு பொண்ணு அதிலயும் உன்னைப் போல வயசுப் பொண்ணு இப்பிடி அர்த்த ராத்திரியில வெளியே வரலாமா? உனக்கு அப்பிடி என்ன பிரச்னை?...''
வாஞ்சையுடன், பரிவுடன், பாசத்துடன் பேசிய சரிதாவின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் பாவனா.
'சுதாகர் சொல்லியது போல சரிதா மேடத்திடம் சொல்லலைன்னா... அவனே நேரல இங்க வந்துடுவானே.... சொல்லவும் முடியல.... சொல்லாம இருக்கவும் முடியலியே' என்று தவித்தபடி பாவனா தடுமாறிக் கொண்டிருக்க, அவளது மொபைல் ஒலித்தது.
''என்ன, அவகிட்ட செல்லிட்டியா? அல்லது நான் அங்கே வரவா?'' மொபைலில் மிரட்டினான் சுதாகர்.
''வேண்டாம் நானே சொல்லிடறேன்'' மொபைலை அடக்கினாள்.
''என்ன பாவனா? யார் மொபைல்ல?''
''அது... அது... வந்து மேடம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதான் இந்த நேரத்துல மழையில ஓடி வந்தேன். க...... க..... கயல்விழி வீட்ல அபிலாஷ் ஸார் இருக்கார் மேடம். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாப்பல கயல்விழி வீட்டுக்குப் போறதை என் கண்ணால பார்த்தேன் மேடம்!''
''என்ன? இந்த நடு ராத்திரி நேரத்துல அவ வீட்டுக்கு போறாரா? அவளும் அவர் கூடவா இருந்தா?...'' அதிர்ச்சியில் தொண்டை அடைக்க... அதையும் மீறி அலறினாள் சரிதா.
அலறியவள் உடனே கார் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டின் கதவைக் கூட பூட்டாமல் வெளியேறி காரினுள் ஏறி கயல்விழியின் வீட்டிற்கு காரை செலுத்தினாள். காருக்கு பின்னாடியே ஓடி வரும் பாவனாவையும் அவள் கண்டு கொள்ளவில்லை.
மழை காரணமாக அவளால் காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. எனினும் கோப வெறியோடு காரை ஓட்டினாள்.
கயல்விழியின் வீட்டருகே காரை நிறுத்தினாள். காரை பூட்டாமல் கயல்விழியின் வீட்டு வாசலுக்கு சென்றாள்.
கதவின் மீது லேஸாக கையை வைத்து தள்ள, அங்கே அபிலாஷ். கயல்விழி இருவரையும் சேர்த்து பார்த்த அவள் கத்தினாள். அதன்பின் அங்கே பாவனா வர, சுதாகரும் வந்துவிட, சுதாகரின் துப்பாக்கி குண்டிற்கும் அவனது துஷ்ட குணத்திற்கும் பலியாகிப் போனாள் பாவனா.
பணத்திற்காக பாவனா விரித்த வலை, அபிலாஷ் மீது சந்தேகத்தை எழுப்புவதற்காக சுதாகரின் இயக்கத்தின்படி பாவனா நடத்திய நாடகம், அதற்கு தானும் பலியாகிவிட்டோமே எனும் தவிப்பு... ஆகிய உணர்வுகளின் கலவைகளோடு போலீஸிடம் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாள் சரிதா. போலீஸார் கிளம்பினர்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook