Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

துல்பன்

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

துல்பன் - Tulpan

(கஸாக்ஸ்டான் நாட்டு திரைப்படம்)

2008 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த கஸாக்ஸ்டான் நாட்டு திரைப்படம் 'துல்பன்'.  100 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படம் கஸாக், ரஷ்ய மொழிகளில் எடுக்கப்பட்டது.  2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவிற்கு 'அயல்மொழி திரைப்படம்' என்ற பிரிவின் கீழ் திரையிடப்படுவதற்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது.  இரண்டாவது ஆசியா-பசிபிக் திரைப்பட விழாவில் பங்கு பெற்று இப்படம் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது.

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, அதே ஆண்டில் நடைபெற்ற மான்ட்ரியல் திரைப்பட விழா ஆகிய விழாக்களிலும் 'துல்பன்' சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதைப் பெற்றது.

இப்படத்தின் இயக்குநர் Sergey Dvortsevoy (செர்ஜெய் ட்வார்ட்ஸெவாய்).  இவர் Kazakhstan இல் பிறந்தவர்.  அங்கேயே 28 வருடங்கள் வாழ்ந்தவர்.  ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றியவர்.  அந்நாட்டின் கிராமப் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர்.  'நியூயார்க் திரைப்பட விழா'வில் நடைபெற்ற ஒரு நேர்காணலின்போது, கஸாக்ஸ்டான் பின்புலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்க தான் திட்டமிட்டதைப் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் கூறினார்.  'Hunger Steppe' என்ற வறண்டு போய் காணப்படும் பகுதியில்தான் இப்படத்தின் படப்பிடிப்பை தான் நடத்தியதாக அவர் கூறினார்.  அங்கு ஆட்டு மந்தைகளை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏழை மக்களை மையமாக வைத்து தான் உருவாக்கிய 'துல்பன்' தான் எதிர்பார்த்ததைப் போலவே உலக மக்களிடம் மிகவும் சிறப்பான ஒரு பெயரைப் பெற்றதற்காக, தான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

 அவருக்கு மட்டுமல்ல-படத்தைப் பார்க்கும் நமக்கும் அது ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும்.

'துல்பன்' திரைப்படத்தின் கதை என்ன என்பதைப் பார்ப்போமா?

படத்தின் ஆரம்பத்தில் பரந்து கிடக்கும் ஒரு பாலைவனத்தைப் போன்ற நிலப் பகுதி காட்டப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் தூசிப் படலம் பறந்து கொண்டிருக்கிறது.  சூறாவளிக் காற்று வீசுகிறது.  உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்த செம்மறி ஆடுகள் நூற்றுக் கணக்கில் கும்பல் கும்பலாக அந்த வறண்ட நிலத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.  அந்த பாலைவனப் பகுதியில் ஒரு கூடாரத்தைப் போன்ற வீடு.  அந்த வீட்டிற்கு முன்னால் ஒரு சிறுவன் (நூகா) கையில் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.  அவனை விட மூத்த சிறுவன் பேட்டரியினால் இயங்கக் கூடிய ஒரு ரேடியோவை வைத்து உலக செய்திகளை எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.  அவனை விட சற்று மூத்த சிறுமி அழகாக பாடிக் கொண்டிருக்கிறாள்.  அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள் அந்த குழந்தைகளின் தாயான சமல் (Samal).

அந்த பாலைவனப் பகுதியிலேயே இருக்கக்கூடிய இன்னொரு வீடு, பலகையால் செய்யப்பட்டிருக்கும் அந்த வீட்டிற்குள் கப்பல் படை வீரன் அணிந்திருக்கக் கூடிய உடைகளை அணிந்து அமர்ந்திருக்கிறான் ஆஸா (Asa).  இப்போது அவன் கப்பல் படையில் இல்லை.  முன்பு அவன் அங்கு இருந்தான், அங்கிருந்து அவன் அனுப்பப்பட்டு விட்டான்.  அதற்குப் பிறகு தன் அக்கா சமலைத் தேடி வந்து, அவளுடைய வீட்டில்தான் அவன் தங்கியிருக்கிறான்.  அவனுக்குச் சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்கிறார்கள் சமலும், அவளுடைய கணவன் ஓன்டாஸும் (Ondas).

இப்போது கப்பல் படை வீரனின் ஆடைகளுடன் வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் ஆஸா, எதற்காக அங்கு வந்திருக்கிறான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?  தனக்கேற்ற இளம்பெண் ஒருத்தி அந்த வீட்டில் இருக்கிறாள்.  அவளை தான் திருமணம் செய்வதற்காக, அவன் பெண் கேட்டு வந்திருக்கிறான்.  அவனை அங்கு அழைத்து வந்திருப்பது, அவனுடைய அக்கா சமலின் கணவன் ஓன்டாஸ்.  அவர்களிடம் சற்று பருமனான உடலமைப்பைக் கொண்ட ஆஸாவின் நண்பன் போனியும் (Boni) இருக்கிறான்.

தரையில் அமர்ந்திருக்கும் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மணப் பெண்ணின் தந்தையும், தாயும்.  மணப் பெண்ணின் பெயர் 'துல்பன்'.  அவள் அந்த அறையில் இல்லை.  பக்கத்து அறையில் தொங்கிக் கொண்டிருக்கும் திரைச் சீலைக்குப் பின்னால் இருக்கிறாள்.  அதனால் அவளுடைய முகம் அறையில் அமர்ந்திருப்பவர்களுக்குச் சரியாக தெரியவில்லை.

கப்பல் படையிலிருந்து வெளியேறி வந்து விட்ட ஆஸா, தன் சகோதரி சமலின் கூடாரத்திற்குள் தங்கிக் கொண்டு, ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்.  தன் அக்காவின் கணவன் ஓன்டாஸைப் போல, தனக்கென்று ஏராளமான ஆடுகளைச் சொந்தத்தில் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் ஆஸா.  ஆனால், நூற்றுக் கணக்கான செம்மறி ஆடுகளை தான் ஒரு மனிதன் மட்டும் கவனம் செலுத்தி பார்ப்பது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்கிறான்.  தன் சகோதரி சமல் எப்படி ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்து கொண்டு, ஆட்டுக் கூட்டத்தையும் பார்த்துக் கொள்கிறாளோ, அதே போல தனக்கு வரும் மனைவியும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸா தன் மனதில் நினைக்கிறான்.  பெரிய ஆட்டுக் கூட்டத்திற்குத் தலைவனாக தான் ஆக வேண்டுமென்றால், அதற்கு முதலில் தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வருகிறான்.

அப்படி மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவனுக்கு 'துல்பன்' என்ற அழகான இளம் பெண்ணைப் பற்றிய தகவல் கிடைக்கிறது.  இன்னும் சொல்லப் போனால் -- அந்த பாலைவனப் பகுதியிலேயே திருமண வயதில் இருக்கும் ஒரே இளம் பெண் துல்பன் மட்டுமே.  அவளை எப்படியும் திருமணம் செய்தே ஆவது என்ற தீர்மானத்துடன், துல்பனின் வீட்டில் வந்து அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பெண் கேட்க வந்த இடத்தில், மணமகன் தன்னுடைய பெருமைகளை அள்ளி விட வேண்டாமா?  ஆஸாவும் அதைத்தான் செய்கிறான்.

கப்பல் படையில் இருந்தபோது தான் துணிச்சலாக போர் புரிந்த சம்பவங்களையும், அப்போது நடைபெற்ற சுவையான பல நிகழ்ச்சிகளையும், கடலுக்குள் வாழக் கூடிய உயிரினங்களையும், நினைத்துப் பார்க்க முடியாத ராட்சச வடிவத்தில் இருக்கும் கடல் வாழ் பிராணிகளையும் அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் கூறுகிறான்.  அவன் கூறும் விஷயங்களை மிகுந்த ஆர்வத்துடன் அங்கு இருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அவனுடைய சுய புராணத்தை திரைச் சீலைக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் துல்பனும் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  எனினும், அவளுடைய உருவம் நமக்கு காட்டப்படவில்லை.

ஆஸா கூறும் கடல் குதிரை, ஆக்டோபஸ் ஆகியவை பற்றிய சுவாரசியமான தகவல்களை ஓன்டாஸ், போனி இருவரும் கூட தங்களையே மறந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.  பெண்ணுக்கு வரதட்சணையாக 10 ஆடுகளையும், ஒரு சர விளக்கையும் தருவதாக ஓன்டாஸ் கூறுகிறான்  ஒரு சர விளக்கை கையோடு அங்கு கொண்டும் வந்திருக்கின்றனர்.  'உங்கள் பெண்ணின் முடிவைக் கேட்டு கூறுங்கள்' என்று பெண்ணின் பெற்றோரிடம் கூறுகிறான் ஆஸா.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version