Lekha Books

A+ A A-

துல்பன் - Page 2

அடுத்த காட்சி---

பாலைவனத்தில் வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனம், ஒரு ஜீப்பின் வடிவத்தில் இருக்கக் கூடிய அதில் வெள்ளரிக்காய், காய்கறிகள் ஆகியவற்றை அந்த வறண்டு போன நிலப் பகுதியில் வாழ்பவர்களுக்குக் கொண்டு வந்து தரும் வேலையைச் செய்கிறான் போனி.  மேற்கத்திய பழக்க வழக்கங்களிலும், நாகரீகத்திலும், இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன் போனி.  அவன் 'பாப்' பாணியில் ஒரு பாடலை உற்சாகத்துடன் பாடியவாறு, அந்த வாகனத்தை வேகமாக ஓட்ட, மிகுந்த உற்சாகத்துடன் கைகளை ஆட்டியவாறு பயணிக்கிறான் ஆஸா.  'திருமணத்திற்குப் பெண்ணைப் பார்த்தாகி விட்டது.  வரதட்சணையும் என்ன என்பதைக் கூறியாகி விட்டது.  இனி துல்பன் நமக்குக் கிடைத்த மாதிரிதான்...  அவள் வாழ்க்கையில் இணைந்து விட்டால், பிறகு என்ன?  சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும்?  அவளைத் திருமணம் செய்த பிறகு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஒரு பெரிய ஆட்டு மந்தைக்குத் தலைவனாக நாம் ஆகி விட வேண்டும்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கும் ஆஸா, போனியின் மேற்கத்திய பாணி பாடலுக்கு மிகவும் குஷியாக கைகளை ஆட்டி, தன் மனதில் இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறான்.  மனதில் நினைத்த காரியம் நடக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஆஸாவுக்கு...  அவனுடைய நண்பன் போனிக்கும்தான்.

ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.  பாடலின் இறுதியில் ஒரு மிகப் பெரிய குண்டைத்  தூக்கிப் போடுகிறான் ஓன்டாஸ்.  அது--- மணப்பெண் துல்பனுக்கு ஆஸாவைப் பிடிக்கவில்லை என்பதுதான்.  அவனை வேண்டாம் என்று மறுத்ததற்கு அவள் கூறிய காரணம்--- 'ஆஸாவின் காதுகள் மிகவும் பெரியதாக இருக்கின்றன' என்பதுதான்.  அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விடுகிறான் ஆஸா.  தன் மனதில் கட்டி வைத்திருந்த காதல் கோட்டை இவ்வளவு சீக்கிரம் சரிந்து தூள் தூளாகும் என்று அவன் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை,  அதனால் பேசுவதற்கு வார்த்தை இல்லாமல், மவுனமாக இருக்கிறான் அவன்.

இரவு நேரம். சமல் - ஓன்டாஸ் தம்பதிகளின் கூடாரம். அவர்களின் மகன் ரேடியோவில் 'ப்ரேக்கிங் நியூஸ்!' கேட்டுக் கொண்டிருக்கிறான், 'ஜப்பானில் பூகம்பம்! ரிக்டர் ஸ்கேல் 7!' என்று தான் கேட்ட செய்தியை, தன் தந்தையிடமும், தாயிடமும் கூறுகிறான்.  அவனுடைய அக்கா ஒரு நாட்டுப் புறப் பாடலை அழகான குரலில் பாடுகிறாள்.  எல்லோருக்கும் இளைய சிறுவன் ஒரு குச்சியால் அடித்துக் கொண்டே வீட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறான்.  தரையில் மிகவும் தளர்ந்து போய், சோர்வடைந்த கண்களுடன் படுத்திருக்கிறான் ஓன்டாஸ்.  இறுதியாக ஒரு அருமையான கிராமிய பாடலை தன்னுடைய இனிமையான குரலில் பாடுகிறாள் சமல்.  நம் இந்திய கிராமிய பாடலைப் போலவே இருக்கிறது அது!  அந்த இனிமையான பாடலில் அங்கு இருக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல -- நாமும் சொக்கிப் போய் விடுகிறோம் என்பதுதான் உண்மை, பாடலைப் பாடியவாறு, சமல் தன் கணவன் ஓன்டாஸுடன் நெருங்கி படுக்கிறாள். ஓன்டாஸும் அவளை இறுக தழுவுகிறான்.  இப்போது குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் அந்த கூடாரத்திற்குள் தங்களை மறந்து உறங்கிக் கொண்டிருக்கின்றன.  ஆஸா அப்போது வீட்டிற்குள் வருகிறான்.  அவன் வரும் ஓசை கேட்டதும், திரும்பிப் படுக்கிறாள் சமல்.  ஆஸா ஒரு ஓரத்தில் போய் படுக்கிறான்.  ஆடுகளை மேய்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஏழ்மையான குடும்பம் உயிர்ப்புடன் நமக்கு காட்டப்படுகிறது.

கூடாரத்திற்குள் தனியாக இருக்கும்போது இரவு வேளைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை முன்னால் வைத்து, அதில் தன்னுடைய காதுகளைப் பார்க்கிறான் ஆஸா, 'உண்மையிலேயே தன்னுடைய செவிகள் அளவில் பெரியவைதானா?  தனக்கு மணமகளாக வர வேண்டிய துல்பன், காதுகள் பெரிதாக இருப்பதால் தன்னை ஒரேயடியாக நிராகரித்து விட்டாளே!'  என்று அப்போது கவலையுடன் நினைத்துப் பார்க்கிறான் ஆஸா.  தன் மனதிற்குள் இருக்கும் குமுறல்களை வெளிக்காட்ட முடியாமல் அவன் தவிக்கிறான்.

சமலின் கூடாரத்திற்கு வெளியே ஏராளமான செம்மறி ஆடுகள் புழுதியைக் கிளப்பியவாறு குழுமியிருக்கின்றன.  சற்று தள்ளி...  ஒட்டகங்கள், கழுதைகள்...  அவற்றுக்கு மத்தியில் ஆஸாவும், ஓன்டாஸும்.  ஜீப்பைப் போன்ற வாகனத்துடன் அவ்வப்போது புழுதியைக் கிளப்பியவாறு வெள்ளரிக் காய்களுடனுடனும், காய்கறிகளுடனும் வந்து நிற்கிறான் காவிக் கறை படிந்த பற்களுடன் மேற்கத்திய நாகரீகத்தின் மீது மோகம் கொண்ட போனி.

ஆடு பிரசவமாகும் காட்சி காட்டப்படுகிறது.  ஒரு குட்டியைப் பெற்றெடுப்பதற்கு ஆடு எவ்வளவு சிரமப்படுகிறது என்பதை காட்சி மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.  அப்படி பலவித கஷ்டங்களுக்குப் பிறகு பிறக்கும் குட்டி எந்தவித அசைவுமில்லாமல் இருக்கிறது.   ஓன்டாஸ் ஆட்டுக்குட்டியின் வாயின் மீது தன் வாயை வைத்து காற்றை ஊதுகிறான்.  அந்த காற்று பட்ட பிறகாவது, ஆட்டுக்குட்டியின் சரீரத்தில் அசைவு உண்டாகாதா என்ற நினைப்பு அவனுக்கு.  ஆனால், சிறிய அசைவு கூட அதனிடம் உண்டாகவில்லை.  அப்போதுதான் அந்த ஆட்டுக்குட்டி உயிருடன் இல்லை என்பதே ஓன்டாஸுக்குத் தெரிய வருகிறது.  நடந்து கொண்டிருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றையும் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறான் ஆஸா.  சொந்தத்தில் ஆட்டு மந்தையை வைத்திருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் அவன் கட்டாயம் இவற்றையெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமே!

மீண்டும் துல்பனின் வீடு.  அவள் மீது தணியாத மோகத்துடன் வாசற் கதவின் அருகில் போய் நிற்கிறான் ஆஸா.  அவனுடன் அவனுடைய நெருங்கிய நண்பனான போனியும்.  ஆஸாவின் கையில் பத்திரிகையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட ஒரு படம் இருக்கிறது.  அது வேல்ஸ் இளவரசரின் படம்.  ஆஸா கதவைத் தட்டுகிறான்... 'துல்பன்... நான்தான்... ஆஸா.  உன்னை என்னால் மறக்க முடியவில்லை.  நீதான் என் வருங்கால மனைவி என்று எப்போதோ முடிவு செய்து விட்டேன். உன் முகத்தை நான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று அவன் கூறுகிறான்.  அவளுடைய கூந்தல் இருட்டுக்குள் பளபளத்துக் கொண்டிருக்கிறது.   பக்கவாட்டில் அவளுடைய முகத்தைச் சற்று பார்க்க முடிகிறது.  உண்மையிலேயே துல்பன் பேரழகியேதான்....  இப்போது தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக அவளிடம் கூறுகிறான் ஆஸா... 'துல்பன், நீ என் காதுகள் பெரிதாக இருக்கின்றன என்று குறை கூறினாயாம்.  இது ஒரு பெரிய விஷயமா?  இதோ... இந்த படத்தைப் பார்.  இது வேல்ஸ் இளவரசரின் படம்.  அவருடைய காதுகள் என் காதுகளை விட அளவில் பெரியவையாக இருக்கின்றன.  அவரை விரும்பி ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளவில்லையா?  இதை நீ சிறிது சிந்தித்துப் பார்.  என் மீது இரக்கம் காட்டி, என்னை உன் கணவனாக ஏற்றுக் கொள்.  சிந்தித்து முடிவு செய்.  உன் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்' என்கிறான் ஆஸா.  கதவு மூடப்படுகிறது.  அவள் சிந்திக்க வேண்டாமா?  அங்கிருந்து கிளம்புகின்றனர் ஆஸாவும், போனியும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel