Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி போப்’ஸ் டாய்லெட்

The Pope’s Toilet

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

The Pope’s Toilet - தி போப்’ஸ் டாய்லெட்

(ஸ்பேனிஷ் திரைப்படம்)

2007ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ஸ்பேனிஷ் மொழியில் எடுக்கப்பட்ட இந்த உருகுவே நாட்டு திரைப்படத்தை இயக்கியவர்கள் Cesar Charlone, Enrique Fernandez.

1988ஆம் ஆண்டில் போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் பிரேஸில் நாட்டின் எல்லையில் இருக்கும் உருகுவே நாட்டின் ‘மெலோ’ என்ற ஊருக்கு வருகை தந்தார். அப்போதைய சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பேனிஷ் மொழியில் எடுக்கப்படும் படம் என்றாலே யதார்த்தமான கதை, அன்றாடம் நாம் சந்திக்கும் இயல்பான மனிதர்கள், அவர்களின் உண்மையான வாழ்க்கை நிலை, சிரமங்கள் நிறைந்த அவர்களுடைய வாழ்க்கையின் போக்குகள், அவர்களுடைய ஏக்கங்கள், ஆசைகள், அவர்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் வெளியிலிருக்கும் அதிகாரம் படைத்த சக்திகள் - இவை ஒவ்வொன்றும் உயிரோட்டத்துடன் கட்டாயம் இருக்கும்.

அவை இப்படத்திலும் இருக்கின்றன. உருகுவே நாட்டின் ‘மெலோ’வில் வாழும் மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்துவதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றனர், சாதாரண தேவைகளை நிறைவேற்றுவதற்குக் கூட அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை படத்தில் பார்க்கும்போது நம்மையும் மீறி அவர்கள் மீது நமக்கு ஒரு பரிதாப உணர்வும் இரக்கமும் உண்டாகிறது.

வறுமை தாண்டவமாடிக் கொண்டிருக்கும் அந்த ஊருக்கு போப் ஆண்டவர் வருகை தருகிறார். அதனால் என்ன நடக்கிறது?

நினைத்துப் பார்க்க முடியாத அந்த மாறுபட்ட கதை... இதோ:

உருகுவே, பிரேஸில் நாட்டின் எல்லையில் இருக்கும் ஒரு நாடு. அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்கள். பலவகையான சிரமங்களைக் கொண்ட முயற்சிகளிலும் ஈடுபட்டு, அங்குள்ளவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். அந்த நாட்டின் ஒரு குறிப்பிடத்தக்க ஊர் ‘மெலோ’.

மெலோவில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பல வகையான தொழில்களையும் செய்கின்றனர். கஷ்டப்பட்டு உழைத்தால்தான் சாப்பிட முடியும், வாழ முடியும் என்ற நிலைதான் அங்குள்ள எல்லோருக்கும். அந்த ஊரிலேயே சிலர் கடைகள் வைத்து சிறு சிறு வியாபாரங்களைச் செய்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் சிறிய லாபங்களைக் கொண்டு தங்களின் வாழ்க்கையை அவர்கள் நடத்துகின்றனர்.

அப்படிப்பட்ட சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்தான் பெட்டோ. தன் மனைவியுடனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடனும் போராட்டங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை அவன் நடத்திக் கொண்டிருக்கிறான். பல நேரங்களில் மனைவி ஆசைப்பட்டு கேட்கும் பொருட்களை அவனால் வாங்கிக் கொடுக்க முடியாமல் போய் விடுகிறது. அருமை மகள் ஆவலுடன் கேட்கும் சாதாரண பொருட்களைக் கூட சில வேளைகளில் அவனால் வாங்கிக் கொடுக்க முடியாமற் போகிறது. ஆனால், அவர்கள் இருவரின் மீதும் அவன் அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருக்கிறான் என்பதென்னவோ உண்மை.

சிறிய அளவில் கள்ளக் கடத்தல் பண்ணி பிழைப்பதுதான் பெட்டோவின் தொழில். பிரேஸிலில் இருந்து தேயிலை, மாவு, பிராந்தி போன்ற விஷயங்களை தன்னுடைய சைக்கிளில் அவன் திருட்டுத் தனமாக வாங்கி கடத்திக் கொண்டு வருவான். அதை ‘மெலோ’வில் இருக்கும் கடைக்காரர்களுக்கு கை மாற்றி விடுவான். அதில் ஒரு சிறிய ஆதாயம் கிடைக்கும். அதை வைத்து அவன் தன் குடும்பத்தை நடத்துவான்.

அவனைப் போலவே நிறைய ஆண்கள் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியே ஐந்தாறு ஆண்கள் தங்களுடைய சைக்கிள்களில் தாங்கள் பிரேஸிலில் வாங்கிய பொருட்களை பார்சலாக கட்டி ஏற்றிக் கொண்டு மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த சாலைகளிலும், புல் மேடுகளிலும், ஒற்றையடிப் பாதைகளிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக பயணிப்பதுதான்.

இரு நாடுகளும் முடிகிற எல்லைப் பகுதியில் ஒரு சோதனைச் சாலை இருக்கிறது. அதில் அதிகாரிகள் மிகவும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். சைக்கிள்களில் திருட்டுத் தனமான பொருட்களை ‘மெலோ’விற்குக் கடத்திச் செல்லும் மனிதர்கள், சோதனைச் சாலையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் வயல்களுக்கு நடுவில் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் விரைந்து போய்க் கொண்டிருப்பார்கள். சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளே அந்த காட்சியைப் பார்ப்பார்கள். ஆனால், அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள். வேகமாக சென்று சைக்கிளைக் கைப்பற்றுவதோ, பொருட்களைச் சோதிப்பதோ, கடத்தலில் ஈடுபடும் மனிதர்களுக்கு தண்டனை தருவதோ- இவற்றில் எதுவுமே நடக்காது. சோதனைச் சாலையில் நின்று கொண்டு வெறுமனே வேடிக்கை பார்ப்பார்கள். அவ்வளவுதான். பிறகென்ன? கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கொண்டாட்டம்தானே? அவர்கள் தங்களின் விருப்பப்படி பொருட்களை கொண்டு செல்வார்கள்.

இந்த மாதிரி ஒரு வகை அச்சத்தை மனதில் வைத்துக் கொண்டு, பதைபதைப்புடன் புயலென வயல்களுக்கு மத்தியில் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் சைக்கிளில் பொருட்களைத் திருட்டுத் தனமாக கடத்திக் கொண்டு செல்வதை பெட்டோ சிறிதும் விரும்புவதில்லை.

எதற்கு பயந்து கொண்டே சைக்கிளை ஓட்டிச் செல்ல வேண்டும் என்று மிகுந்த தைரியத்துடன் சோதனைச் சாலையின் வழியாகவே வருவான். ஒருநாள் இப்படித்தான் துணிச்சலுடன் அவன் சைக்கிளில் வந்தான். சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரி அவனைத் தடுத்து நிறுத்தினார். ‘சைக்கிளில் என்ன இருக்கிறது?’ என்றார் அதிகார தொனியில். அவன் ‘சமையலுக்குத் தேவையான மாவு பாக்கெட்டுகள் இருக்கின்றன’ என்றான். அவர் அட்டைப் பெட்டியை அவிழ்த்து ஒவ்வொரு பாக்கெட்டையும் கையில் எடுத்து பார்த்தார். ஒரே ஒரு பாக்கெட் மட்டும் மிகவும் கனமாக இருக்கவே, அதை ஊசியால் குத்தினார். மாவு கொட்டியது. மாவுக்கு மத்தியில் இருந்த பேட்டரி ஸெல்கள் கீழே விழுந்தன. தன் வீட்டிலிருக்கும் வானொலி பெட்டிக்காக அவன் வாங்கிச் சென்றவை அவை. அவனுடைய மகள் அவற்றை வாங்கி வரச் சொல்லியிருந்தாள். அதனால் அதை மறக்காமல் அவன் வாங்கி வந்தான். ‘இதை எப்படி நீ கடத்திக் கொண்டு வரலாம்?’ என்று கேட்டார் அதிகாரி. அதற்கு பெட்டோ ‘சற்று தூரத்தில் எவ்வளவு பேர் சைக்கிளில் கடத்தல் பொருட்களுடன் போய்க் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், என் மீது நடவடிக்கை எடுக்கிறீர்களே?’ என்றான். அவனையே வெறித்துப் பார்த்த அதிகாரி கூறினார் - ‘உன்னை பார் இந்தப் பக்கம் வரச் சொன்னது? நீயும் அவர்களைப் போல வயல்களுக்கு மத்தியில் போக வேண்டியதுதானே?’ என்று. அதைக் கேட்டு அந்த மனிதரையே வினோதமாக பார்த்தான் பெட்டோ.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version