
மிகப் பெரிய நடிப்பு கல்விக் கூடம்
-நடிகர் துல்கர் சல்மான் (மம்மூட்டியின் மகன்)
தமிழில் : சுரா
திலகன் அங்கிளுடன் ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற திரைப் படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானபோது, பயம் எழுந்தது. அங்கிளுடன் வரக் கூடிய எல்லா காம்பினேஷன் காட்சிகளிலும் இருக்கக் கூடிய உரையாடல்களை, தேர்வுக்குப் படிப்பதைப் போல யாருக்கும் தெரியாமல் படித்துவிட்டுத்தான் நான் சென்றேன். சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரை நன்கு தெரியும். என்றாலும், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்போது, பழைய பழக்கமோ வாப்பாவின் முகவரியோ எதுவுமே உதவாது. ஆனால், முதல் நாளிலேயே தன்னுடன் இருந்த எல்லோரையும் அவர் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்றார். எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் தன்னுடன் நடிக்கச் செய்தார். ‘லுக்’ போன்ற விஷயங்களை மிகவும் சரியாக எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஒரு பள்ளிக் கூடத்தில் கற்றுத் தருவதைப் போல அவர் கற்றுத் தந்தார். எங்களுடன் சேர்ந்து அமர்ந்து, தமாஷான விஷயங்களையும் பழைய சம்பவங்களையும் கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் மரியாதையுடன் விலகி நின்று கொண்டிருந்தபோதுகூட, அவர் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதை ரசித்தார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், சில நிமிடங்களுக்குள் நெருங்கி சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ‘உஸ்தாத் ஹோட்ட’லில் திலகன் அங்கிள் கற்றுத் தந்த முதல் பாடமே.
படத்தின் தொடக்க விழா நேரத்தில் நான் ‘சார்’ என்று இரண்டு தடவைகள் அழைத்தபோது, அவர் என்னையே கூர்ந்து பார்த்துவிட்டு, அருகில் வரும்படி அழைத்து தோளைப் பிடித்துக் கொண்டே ‘இங்கே யாரும் ‘சார்’ அல்ல. நீ அங்கிள் என்று கூப்பிடு’ என்றார்.
முன்பு ஏதோ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு மத்தியில் அங்கிள் அந்த கட்டிடத்தில் படுத்து உறங்கியிருக்கிறார். இரவில் எல்லோரும் சென்றபோது, அவர் அங்கு படுத்திருந்த விஷயத்தை மறந்து விட்டார்கள்.
மறுநாள் காலையில்தான் விஷயமே தெரிய வந்திருக்கிறது. என்னுடைய வாப்பா அன்று படப்பிடிப்புத் தளத்தில் உண்டாக்கிய ஆரவாரத்தைப் பற்றி நகைச்சுவையுடன் அங்கிள் நினைத்துப் பார்த்தார். பிறகு... எவ்வளவோ தமாஷான விஷயங்களை அவர் கூறினார். பழைய சிறிய சிறிய விஷயங்களைக் கூட மிகவும் சரியாக ஞாபகத்தில் அவரால் வைத்திருக்க முடிந்தது.
சிறிது காலமாக அவர் திரை அரங்கத்திற்குச் சென்று திரைப் படங்கள் பார்ப்பதில்லை. இந்த திரைப்படத்தை அவர் திரை அரங்கிற்குச் சென்று பார்த்துவிட்டு, எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதற்குப் பிறகு எர்ணாகுளத்திற்கு வரும்போது, தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று கூறவும் செய்தார். ஆனால், அதற்கு முன்பே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். வப்பாவின் வாப்பா மருத்துவமனையில் மரணத்தைத் தழுவியபோது, நான் அமெரிக்காவில் இருந்தேன். உப்பூப்பா (தாத்தா)வை இறுதி நாட்களில் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது.
நேற்று வாப்பா என்னையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரத்திலிருந்த மருத்துவமனைக்குச் சென்றபோது, என்னுடைய உப்பூப்பாவைப் பார்க்காமல் போய் விட்டோமே என்ற கவலையைப் போக்கக் கூடிய செயலைப் போல அது இருந்ததாக எனக்குத் தோன்றியது. மிகவும் அருகில் நெருக்கமாக இருக்கும்படி நிற்க வைக்கும்போது, இந்த அளவிற்கு அன்பும், சந்தோஷமும் உண்டாகக் கூடிய மனிதர்களை நான் அதிகமாக பார்த்ததில்லை. ஒரு திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க முடிந்தது என்ற விஷயம் என்னுடைய அதிர்ஷ்டத்தாலும், வாப்பாவின் நல்ல செயல்களாலும் நடந்திருக்க வேண்டும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook