
இரவு நேரம்.
புது மணமக்களின் படுக்கையறையில் ரத்னமும், நீர் நிரப்பப்பட்ட பாத்திரமும் பாயுமாக துணைக்கு இருக்கும் குஞ்ஞிமாளுவும். கீழே பாயை விரிக்கிறாள் குஞ்ஞிமாளு. ரத்னம் படுக்கையைச் சரி பண்ணுகிறாள்.
ரத்னம்: ஓ... நான் அதைக் கேட்க மறந்துட்டேன். உன் பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு?
குஞ்ஞிமாளு: பரவாயில்ல...
ரத்னம்: சரி... ஏன் மத்தியானமே ஓடிவந்துட்டே?
குஞ்ஞிமாளு: (சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. பிறகு...) அந்த ஆளு பேசுற முறையே எனக்குப் பிடிக்கல. வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுறாப்ல. இதுல நல்லா தண்ணி வேற போட்டிருக்காப்ல.
ரத்னம்: கொஞ்சம் குடிச்சா மட்டும் நல்லதா? தாஸ் அத்தான் இப்போ குடிக்க ஆரம்பிச்சிருக்காரு. என்ன இருந்தாலும் அவன் உன்னோட மாமன் மகனாச்சே!
அதற்கும் குஞ்ஞிமாளு பதில் எதுவும் பேசவில்லை. ரத்னம் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறாள். அப்போது ஒரு புத்தகத்தைப் புரட்டியபோது அதற்குள் ஒரு வாடிய மலர் இருக்கிறது. அதைப் பார்க்கிறாள் ரத்னம்.
ரத்னம்: என்ன இது? என்ன இது? இதுதானே அந்தப் பூ? குஞ்ஞிமாளு ஒன்றுமே பதில் பேசவில்லை.
ரத்னம்: என்ன? தாஸ் அத்தானுக்கும் இதுல நம்பிக்கை வர ஆரம்பிச்சிடுச்சா? தெய்வங்கள்தான் மனிதர்களைக் கெடுக்கிற பெரிய முதலாளிகள்னு பெருசா பேசுவாரே!
குஞ்ஞிமாளு எதுவுமே பேசாமல் படுத்திருக்கிறாள். ரத்னமும் படுக்கிறாள். விளக்கை அணைக்கிறார்கள். படுக்கையறை விளக்கு மட்டும் எரிகிறது.
ரத்னம்: நான் உன்னைக் குறை சொல்லல. விருப்பமில்லாதவங்களை கல்யாணம் பண்றதுன்றது கஷ்டமான ஒரு விஷயம்தான். ஆமா... உனக்கு அந்த ஆளை பிடிக்கலியா?
குஞ்ஞிமாளு எதுவும் பதில் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து-
குஞ்ஞிமாளு: இனி அந்தவீட்டு படியில கால் வச்சா, காலை ஒடிச்சிடுவேன்னு அந்த ஆளு இன்னைக்குச் சொல்றாரு.
ரத்னம்: கோபத்துல அப்படி சொல்லியிருப்பான். யாராவது அப்படிச் செய்வாங்களா? உன்னோட வீடும்தானே அது?
குஞ்ஞிமாளு எதுவுமே பேசவில்லை.
கோவில் குளத்தில் இருந்து கை, கால்களை கழுவி விட்டு வரும் ரத்னமும், குஞ்ஞிமாளுவும். தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் அம்மிணியைப் பார்த்ததும் கொஞ்சம் ரத்னத்தைவிட வேகமாக நடந்துபோன குஞ்ஞிமாளு அவளை அழைக்கிறாள்.
“அம்மிணி... கொஞ்சம் நில்லு...”
அம்மிணி நிற்கிறாள். குஞ்ஞிமாளு அம்மிணியின் அருகில் வருகிறாள். அம்மிணி ஈரத்துணியால் தன்னைப் போர்த்திக் கொண்டிருக்கிறாள்- வயிறு வெளியே தெரியாத விதத்தில்.
குஞ்ஞிமாளு: வெளியே உன்னைப் பார்க்கவே முடியலியே! ஊர்ல இருந்து வந்தவங்கதான் எல்லோரும் போயிட்டாங்கள்ல!
அம்மிணி: எனக்கு உடம்புக்கு சரியில்ல...
குஞ்ஞிமாளு: வீட்டு படி வரை மூணு, நாலு தடவை நான் வந்தேன்.
அம்மிணி: உள்ளே வர வேண்டியதுதானே!
அதற்கு குஞ்ஞிமாளு பதில் எதுவும் சொல்லவில்லை.
அதற்குள் ரத்னம் அங்கு வந்து விடுகிறாள்.
குஞ்ஞிமாளு: (நடந்தவாறு) நாளைக்குப் பார்க்கலாமா?
அம்மிணி: சரி...
குஞ்ஞிமாளு வழக்கமான வழியில் ரத்னத்துடன் நடக்கிறாள்.
அவர்கள் இருவரும் நடக்கும்போது-
ரத்னம்: நாளைக்குச் சீக்கிரமா எந்திரிச்சு கோவில் குளத்துக்கு நாம வரணும்.
குஞ்ஞிமாளு: எதுக்கு?
ரத்னம்: விஷயம் இருக்கு. நானும் படிமேல பணம் வச்சு ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன்.
இலேசாக புன்னகைத்தவாறு-
குஞ்ஞிமாளு: சோதனை செஞ்சு பார்க்குறது நல்லதா?
ரத்னம்: நமக்குத் தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அதை நமக்குத் தெரிய வைக்க கடவுளைத் தவிர யாரால முடியும்?
குஞ்ஞிமாளு அமைதியாக இருக்கிறாள். இருவரும் நடக்கிறார்கள்.
அறையின் உட்பகுதி.
பரப்பி வைக்கப்பட்டிருக்கும் புடவைகள், மற்ற ஆடைகள், ஹரிதாசனும், ரத்னமும் இருக்கிறார்கள்.
ரத்னம்: என்கிட்ட நிறைய பழைய புடவைகள் இருக்கு. அதுல நாலு புடவைகளை அந்தப் பொண்ணுக்குக் கொடுக்கப் போறேன்.
ஹரிதாசன்: யாருக்கு?
ரத்னம்: (அவனைப் பார்க்காமல்) குஞ்ஞிமாளுக்கு. சாயங்காலம் அவளுக்கு ஒரு நல்ல புடவையைக் கட்டி வெளியே என் கூட கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். அழகான பொண்ணு. என்ன... நான் சொல்றது சரிதானே?
ஹரிதாசன்: இதெல்லாம் தேவையா?
ரத்னம்: என்ன இருந்தாலும் பெண்ணாச்சே! அவளுக்கும் ஆசைன்னு ஒண்ணு இருக்காதா?
அவள் பழைய புடவைகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறாள். சமையலறைக்கு அருகில் அம்மாவைப் பார்த்த ரத்னம்-
“குஞ்ஞிமாளுவை எங்கே?”
அம்மா: அவள் பையைத் தச்சிக்கிட்டு இருக்கா.
ரத்னம் குஞ்ஞிமாளுவின் சிறிய அறைக்குள் நுழைகிறாள். அந்தச் சிறிய அறையில் இருக்கும் மரத்தால் ஆன பெட்டியைத் திறக்கிறாள். பிறகு ஒவ்வொன்றாக வெளியே எடுத்து பார்க்கிறாள். கல்லூரி ஆண்டு மலரில் இருந்து கிழித்து வைத்த புகைப்படம் உள்ள பக்கம், தந்தி, தந்தியின் கவர், ஹரிதாசன் அம்மாவின் முகவரிக்கு எழுதிய மூன்று கடிதங்கள், சிகரெட் அட்டைகள், காய்ந்துபோன ஒரு நீல மலர்!
அவள் என்னவோ யோசனையில் ஆழ்ந்து போகிறாள்.
அவள் உடல் இலேசாக நடுங்குகிறது.
பொருட்களை மீண்டும் முன்பு இருந்த மாதிரியே வைத்துவிட்டு, புடவைகளை பெட்டிக்கு வெளியே வைத்த அவள் அறையை விட்டு வெளியேறுகிறாள்.
இரவு நேரம்.
சாப்பாட்டு அறை. ஹரிதாசன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். ரத்னம் அவனுக்குப் பரிமாறுகிறாள். பின்னால் குஞ்ஞிமாளு தூரத்தில் நின்றிருக்கிறாள். சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்கிறாள் அம்மா.
ஹரிதாசன்: வீடு எல்லாம் சரி பண்ணியாச்சு. நாங்க குடி போக வேண்டியதுதான். லீவு எடுக்க வேண்டிய அவசியமே இல்ல...
அம்மா: ஆமா... வேலைக்கு ஆள் வேண்டாமா?
ரத்னம்: குஞ்ஞிமாளுவை அங்கே கூட்டிட்டுப் போயிடலாம்.
ஹரிதாசன்: (அதை விரும்பாமல்) அப்போ இங்கே யார் வேலை செய்யிறது?
ரத்னம்: அம்மாவும் நம்மகூட வந்துடட்டும். அச்சுதன்நாயர் இங்கே இருக்குறதுனால, பேசாம வீட்டைப் பூட்டிட்டே அவுங்க வந்துடலாம். ஒரு பிரச்னையும் இல்ல...
ஹரிதாசன் எதுவுமே பேசாமல் இருக்கிறான்.
வெளியே சமையலறை சுவரில் சாய்ந்தவாறு என்னவோ நகத்தால் வரைந்து கொண்டு ஏதோ சிந்தித்தவாறு நின்றிருக்கும் குஞ்ஞிமாளு-
அதிகாலை நேரம்.
குளித்து முடித்து வரும் குஞ்ஞிமாளுவும், ரத்னமும் கோவிலின் அருகில்.
குஞ்ஞிமாளு: நீங்க சோதனை பண்ணி பார்க்கணும்னு வச்சதாலதான் பூ மலராமப் போச்சு!
ரத்னம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். சில நொடிகளுக்குப் பிறகு-
ரத்னம்: பதில் எனக்குக் கிடைக்காம போயிருக்கலாம். ஒரு வேளை குஞ்ஞிமாளு, உனக்கு அந்த பதில்...
இப்போது குஞ்ஞிமாளு அமைதியாக இருக்கிறாள்.
ரத்னம்: நீ ஏன் கூட வரேல்ல?
குஞ்ஞிமாளு: நீங்க பிரியப்பட்டா...
ரத்னம்: (இலேசாக சிரித்தவாறு) உனக்கு விருப்பமா?
குஞ்ஞிமாளு: அம்மா கூட இருக்குறதுன்னா எனக்கு விருப்பம்தான். உங்க கூட இருக்குறதுன்னா எனக்கு விருப்பம்தான். நீங்க தீர்மானிச்சா சரி...
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook