
அப்புக்குட்டன்: சரி... நீ எப்போ அங்கே வர்ற? அதைத் தெரிஞ்சிக்கிட்டு வர்றதுக்குத்தான் அப்பாவும் பாட்டியும் என்னை இங்கே அனுப்பி வச்சாங்க.
அவள் பேசாமல் இருக்கிறாள்.
அப்புக்குட்டன்: என்ன... எதுவுமே பேசாமல் நின்னுக்கிட்டு இருக்கே?
குஞ்ஞிமாளு: அம்மாக்கிட்ட கேக்கணும்...
அப்புக்குட்டன்: அவங்களோட சவுகரியத்தைப் பார்த்துக்கிட்டு என் விஷயத்தைத் தீர்மானிக்கிறது அவ்வளவு சரியா இருக்காது. எனக்கு டவுண்ல இருக்குறதுல ஒரு கஷ்டமும் இல்ல... மேலும் அந்த வயசான கிழவி சொல்றப்போ...
வாசலில் ஹரிதாசன்-
“ஸ்... ஸ்... மெதுவா பேசணும். இங்கே மட்டும் கேக்குற மாதிரி பேசினா போதும்...”
இதைக் கேட்டதும் அப்புக்குட்டனின் முகத்தில் கோபத்தின் ரேகைகள் தெரிகின்றன. ஒன்றும் பேசாமல் அவன் எழுந்து நிற்கிறான்.
அப்புக்குட்டன்: வெள்ளிக்கிழமை நீ அங்கே வரணும். நீ அப்படி வரலைன்னா, நான் என் பாட்டுக்குப் போயிடுவேன். அதுக்குப் பிறகு பாட்டி இல்ல யாரு சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.
குஞ்ஞிமாளு: சாயா...
அப்புக்குட்டன்: நான் கடையில போயி குடிச்சிக்கிறேன். வேண்டாம்.
நடக்கிறான். பின்னால் திரும்பி-
அப்புக்குட்டன்: இந்த வெள்ளிக்கிழமை- முடிஞ்சா அதுக்கு முன்னாடியே கூட வரப்பாரு.
நடக்கிறான்.
அவள் சிலையென உறைந்து போய் நிற்கிறாள்.
இரவு நேரம்.
ஹரிதாசனின் அறை. மங்கலான வெளிச்சம். நிழல்கள்.
குஞ்ஞிமாளு: நான் போக மாட்டேன்.
நிசப்தம்.
குஞ்ஞிமாளுவின் குரல்:
“என்னைப் போகச் சொல்லாதீங்க”
ஹரிதாசன்: நான் யாரையும் அனுப்புறதா இல்ல.
குஞ்ஞிமாளு: அதைச் சொன்னா மட்டும் போதாது.
ஹரிதாசன்: உன் வீட்டுக்காரங்க வந்து உன்னைக் கூட்டிட்டுப் போனா, நாங்க என்ன சொல்ல முடியும்?
குஞ்ஞிமாளு: (பெருக்கெடுத்து வரும் அழுகையுடன்) நான்... நான்... நான்... உங்க கூடவும் அம்மா கூடவுமே இருந்துர்றேன்.
ஹரிதாசன் ஒன்றுமே பேசாமல் மவுனமாக இருக்கிறான். அவன் அவளின் தோளில் கையை வைத்து-
“பேசாம படு. நான் பொழுது புலர்ந்த உடனே புறப்படணும். அந்த வண்டியை விட்டுட்டா, இன்டர்வ்யூவுக்குப் போக முடியாப் போயிடும்...”
குஞ்ஞிமாளு: அப்படி எதுவும் நடக்காது. நான் கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன்.
ஹரிதாசன்: திரும்பவும் அந்த நீலப்பூவைப் பற்றிச் சொல்றியா?
குஞ்ஞிமாளு: கடவுள் கண்ல அதைக் காட்டினாரா இல்லியா?
அவன் அவளை படுக்கையின் மேல் சாய்க்கிறான்.
வயல்வெளி.
அதிகமான கவலையுடன் அம்மிணி. அவளுக்கு அருகில் குஞ்ஞிமாளு.
குஞ்ஞிமாளு: பாட்டி அதுக்குப் பிறகும் வந்தாங்க.
அம்மிணி: நீ போறதுதான் நல்லது, குஞ்ஞிமாளு.
குஞ்ஞிமாளு பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறாள்.
அம்மிணி: நாம எல்லோருமே ஒரு வயசுல ஆகாயத்துல இருந்து தேவகுமாரன் இறங்கி வந்து நம்மளைக் கூட்டிட்டுப் போவான்னு நினைச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்போம். ஆனா, அப்படி ஒரு சம்பவமே நடக்கப் போறதில்ல. (யாரிடம் என்றில்லாமல்) தேடி வந்தவனை விட்டுட்டோமேன்னு பின்னாடி நாம கவலைப்பட்டு பிரயோஜனம் இல்ல. என் விஷயத்தையே எடுத்துக்கயேன். வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க எனக்கு விருப்பமே இல்ல. நான் எங்கே போறது?
குஞ்ஞிமாளு எங்கே பார்த்துவிடப் போகிறாளோ என்று அவளுக்குத் தெரியாமல் கண்ணில் வழியும் நீரை அவள் துடைக்கிறாள்.
குஞ்ஞிமாளு அவளையே பார்க்கிறாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் நடக்கிறாள்.
மலைப்பக்கம் போய் நின்று அவள் கிராமத்தைப் பார்க்கிறாள். ராகம் கேட்கிறது.
பரந்து கிடக்கும் கிராமம் பெரிதாகத் தெரிய, தூரத்தில் ஒரு சிறு உருவமாக அவள். அவளின் பார்வையில் ஆற்றின் அக்கரையில் வந்து கொண்டிருக்கும் புகைவண்டி.
ஹரிதாசன் இன்டர்வ்யூ முடிந்து வரும் வண்டி.
வீட்டின் உட்பகுதி.
ஹரிதாசன் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைக்கிறான். படுக்கையை அச்சுதன் நாயர் கட்டுகிறார். அம்மாவும் இருக்கிறாள். தரையில் பல பொருட்கள்- கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
அம்மா: ஊறுகா எங்கே குஞ்ஞிமாளு?
குஞ்ஞிமாளு ஒரு குப்பியில் ஊறுகாயுடன் வருகிறாள்.
குஞ்ஞிமாளு: இந்தா இருக்கு.
ஊறுகாய் குப்பியை அம்மாவிடம் அவள் தருகிறாள்.
அம்மா: இனியும் ஏதாவது தேவைப்பட்டா நீ கடிதத்துல எழுது. அச்சுதன் நாயர் கொண்டு வந்து தருவாரு
ஹரிதாசன்: எர்ணாகுளம் அப்படி ஒண்ணும் அதிக தூரத்துல இல்லியே, அம்மா! அப்பப்போ நானே வருவேன்.
அம்மா: இருந்தாலும்...
குஞ்ஞிமாளு வெளியே செல்கிறாள்.
அவள் சமையலறை வழியாக வெளியே வருகிறாள். பிறகு வாசல் அருகில் நிற்கிறாள்.
வாசலில் அம்மா, அச்சுதன் நாயர் நிற்கிறார்கள். கூலிக்காரனின் தலையில் அச்சுதன் நாயர் பொருட்களை எடுத்து வைக்கிறார். அவன் முன்னால் நடக்கிறான்.
அம்மா வெளியே பார்த்தவாறு அங்கு கன்றுக்குட்டியின் அருகில் நின்று கொண்டிருக்கும் குஞ்ஞிமாளுவைப் பார்த்து அழைக்கிறாள்.
“குஞ்ஞிமாளு... உள்ளே போ. ஹரிதாசன் புறப்படுறான்...”
அம்மா: (மெதுவான குரலில் மகனிடம்) வண்ணாத்தி எதிரில் நிக்கிறது நல்ல சகுனம் கிடையாதுன்னு பொதுவாக சொல்லுவாங்க.
ஹரிதாசன் அதைக் கேட்டு எதுவும் பேசாமல் புறப்படுகிறான்.
ஹரிதாசன்: வேலையில் சேர்ந்துட்டு, உங்களுக்குக் கடிதம் எழுதுறேன்மா.
அம்மா: பத்திரமா பார்த்து நடந்து போ...
அவன் இரண்டு பக்கங்களிலும் பார்க்காமல் நடக்கிறான்.
வாழைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஹரிதாசனும், அச்சுதன்நாயரும் நடந்து போய்க் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்தவாறு குஞ்ஞிமாளு பார்க்கிறாள்.
இன்னொரு நாள்.
குஞ்ஞிமாளு தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறாள்.
சாப்பாட்டுப் பிரியரான குட்டிசங்கரன் அவளின் அருகில் வந்து சிரிக்கிறார்.
“எங்க போற?”
குஞ்ஞிமாளு: எங்கேயும் இல்ல...
குட்டிசங்கரன்: இன்னைக்கு என்ன குழம்பு?
குஞ்ஞிமாளு: (சிரித்தவாறு) வத்தக் குழம்பு...
குட்டிசங்கரன்: ஹரிதாசனுக்கு வேலை கிடைச்சு போயாச்சு. இனி குழம்பு அவ்வளவு நல்லதா இருக்காது... இல்லியா?
அவள் கோவிலை நெருங்குகிறாள். ஷாரத்தெ வீட்டைப் பார்த்ததும், அதன் முன் நிற்கிறாள்.
அங்கே முன்பு ஒரு காட்சியில் பார்த்த இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
குஞ்ஞிமாளு: அம்மிணி எங்கே, தங்கம்?
சிறுமிகள் அவளை கவனிக்கவில்லை. விளையாட்டிலேயே அவர்களின் கவனம் இருக்கிறது.
ஒரு சிறுமி: சித்திக்கு சுகமில்ல... படுத்துக் கெடக்குது.
குஞ்ஞிமாளு: உடம்புக்கு என்ன?
சிறுமி: காய்ச்சல்.
குஞ்ஞிமாளு அங்கேயிருந்து நடக்கிறாள்.
வழியில் எதிரே வந்து கொண்டிருக்கும் அப்புக்குட்டனைப் பார்த்து குஞ்ஞிமாளு தயங்கி நிற்கிறாள். அவனும் நிற்கிறான். முழுமையாக அவன் குடித்திருக்கிறான். பாக்கெட்டில் இருந்து பீடியை எடுத்து பற்ற வைக்கிறான்.
அப்புக்குட்டன்: நீ வரல இல்லே...?
குஞ்ஞிமாளு ஒன்றுமே பேசாமல் நிற்கிறாள்.
அப்புக்குட்டன்: ம்... (மீண்டும் பீடியை இழுத்து புகையை விட்டவாறு) உன்னோட பாட்டி படுத்த படுக்கையா கிடக்குது. அம்மா மட்டும்தான் இப்போ துணி துவைக்கிறது....
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook