Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 13

paathummaavin aadu

என்ன இருந்தாலும் அத்தாரிட்டிகள் பெண்களாயிற்றே! அந்த உண்மையை நான் ஒப்புக் கொள்ளவும் செய்கிறேன். இருந்தாலும்... கர்ப்ப விஷயத்தில் பெண்களுக்குப் பெரிய ஒரு தவறு நேர்ந்திருப்பதென்னவோ உண்மை! எப்போதுமில்லாத மகிழ்ச்சி எனக்கு உண்டானது. என்ன காரணமென்றால் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆட்டிற்கு கர்ப்பம் இல்லை. வயிறு இப்போது ஒட்டிப் போய்க் காணப்பட்டது. ஆடு சாம்ப மரத்திற்குக் கீழே விழுந்து கிடக்கும் சாம்பங்காய்களைத் தின்று கொண்டிருக்கிறது. அருகில் உம்மாவும் இருக்கிறாள். உம்மா சாம்பங்காய்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.

சிவப்பு நிறத்தில் பெரிய பனித்துளிகளைப் போல பச்சை இலைகளுக்கு மத்தியில் சாம்பங்காய்கள் காட்சியளிக்கின்றன. எனக்கு நேராக முன்னால், வாசலுக்கு மிகவும் அருகில், என்னுடைய இரத்தத் துளிகள்!

நான் அப்படி உட்கார்ந்திருக்கும் பொழுது வருகிறாள் பாத்தும்மா! ஆச்சரியம்தான். அவளுடன் ஒரு ஆடும் இருக்கிறது. கதீஜாவும்.விஷயம் என்னவென்றால் பாத்தும்மாவுடன் வரும் ஆட்டிற்குக் கர்ப்பம் இருக்கிறது!

நான் ஆனும்மாவிடம் கேட்டேன்: “இந்த ஆடு யாரோடது?”ஆனும்மா சொன்னாள்:

“இது என்னோட ஆடு. அக்கா கொடுத்தது!”

பாத்தும்மா ஆனும்மாவிற்குத் தந்த ஆடு அது!

உம்மா சொன்னாள்:

“பாத்தும்மா ஆட்டோட மூத்த மகள்.”

அப்படியென்றால் ஆனும்மாவுக்கும் ஒரு ஆடு இருக்கிறது! அது எனக்குப் பக்கத்திலேயே வசிக்கிறது. இருப்பினும் இந்த விஷயம் தெரியாமலே நான் இருந்திருக்கிறேன். இரண்டு ஆடுகளையும் வேறுபடுத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. இரண்டும் தவிட்டு நிறத்தில் ஒரே மாதிரி இருக்கின்றன. பிறகு நான் கூர்மையாகப் பார்த்தபோது பாத்தும்மாவின் ஆட்டின் கண்களைச் சுற்றிலும் ஒரு கறுப்பு அடையாளம் தெரிந்தது.

ஆடு வந்தவுடன் ஓடி வீட்டிற்குள் நுழைந்தது.

பாத்தும்மாவிடம் நான் கேட்டேன்: “என்ன பாத்தும்மா, ஆடும் நீயும் இன்னைக்கு ஏன் இவ்வளவு தாமதம்?”

பாத்தும்மா விஷயத்தை விளக்கினாள். கொச்சுண்ணி வாங்கித் தரும் புல் (இரவு நேரத்திற்கானது) போதவில்லை. ஆடு கர்ப்பமாக இருக்கிறது அல்லவா? அதனால் சில நிலங்களிலும், வயல்களிலும் இருக்கும் புல்லை மற்றவர்கள் அறுப்பதற்கு முன்பு அவள் போய் அறுத்து கொடுத்திருக்கிறாள்.

பாத்தும்மா அந்தப் பக்கம் போய் நாத்தனார்களிடமும் தங்கையிடமும் சண்டை போட்டாள். பாத்தும்மாவின் ஆட்டிற்கு வைத்திருந்த கஞ்சி நீர் போதாது!

“அதை அவள் எடுத்துக்கிட்ட. அவளோட ஆட்டுக்குக் கொடுத்துட்டா. இதை நீங்கள்லாம் பார்க்க வேண்டாமா?” நாத்தனார்களைப் பார்த்து பாத்தும்மா கேட்டாள்.

ஒரு நாத்தனார் சண்டை அங்கு நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நாத்தனார் சண்டையோ, மாமியார் சண்டையோ எதுவும் அங்கு நடக்கவில்லை. உம்மாவின் குரல் மட்டுமே அங்கு கேட்டது. எல்லாரையும் மனம் வந்தபடி அவள் திட்டிக் கொண்டிருந்தாள்.

அப்போது ஆனும்மாவின் குரல் கேட்டது.

“என் ஆட்டுக்குக் கஞ்சித்தண்ணி கொஞ்சம்தான் கொடுத்தேன். கொஞ்சம் நாங்க குடிச்சோம். மீதி அப்படியே இருந்துச்சு.”

நான் தந்த பழத்தோலை ஆனும்மாவின் ஆடுதான் தின்றது என்ற பரம ரகசியத்தை யாரிடமும் இதுவரை நான் சொல்லவில்லை.

“போதும்... போதும். நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” -பாத்தும்மா குறைபட்டாள்: “உம்மாவுக்கும் என்னைப் பிடிக்கல...”

“அடியே...” -உம்மா சொன்னாள்: “கப்பைக் கிழங்கு சாப்பிட்டுட்டு கொஞ்சம் கஞ்சித்தண்ணி குடிக்கணும். நாங்களும் கொஞ்சம்தான் குடிச்சோம். உன் ஆட்டுக்கு முழுசையும் வச்சாச்சு.”

கப்பைக் கிழங்கு தின்றுவிட்டு கஞ்சி நீர் குடிக்க வேண்டும் என்று உம்மா சொன்னாள் அல்லவா? கப்பைக்கிழங்கு எப்போது சாப்பிட்டாள்? விசாரித்துப் பார்த்தபோதுதான் அந்த ரகசியமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது. உம்மா, ஆனும்மா, அய்ஸோம்மா, குஞ்ஞானும்மா எல்லாரும் உண்மையாகச் சொல்லப்போனால் சோறு சாப்பிடுவதில்லை. அதாவது- அவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்று அர்த்தம். ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே சோறு. மீதியுள்ளவர்கள் கப்பைக் கிழங்கு சாப்பிட்டு வாழ்கிறார்கள். பகல் பதினோரு மணிக்கு காயவைத்த கப்பைக் கிழங்கை இடித்து தூள் தூளாக்கி தேங்காய்ப் பூவையும் உப்பையும் கலந்து வேக வைத்து புட்டு செய்து சாப்பிடுவார்கள். கொஞ்சம் தேயிலையை (அதை பெரும்பாலும் சுலைமான்தான் தருவான்) வெந்நீரில் போட்டு சர்க்கரையோ, பாலோ கலக்காமல் குடிப்பார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து வேலைகளில் இறங்கிவிடுவார்கள். எல்லாரும் இப்படியொரு வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆண்கள் சாப்பிடும் நேரத்திற்கு மட்டுமே வருவார்கள். பெண்கள்தான் துன்பங்களை அனுபவிப்பவர்கள். இது என்னுடைய வீட்டில் மட்டும் நடக்கும் கதை அல்ல. பெரும்பாலான எல்லா நடுத்தர மக்களின் வீடுகளிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் மகத்தான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் ஆண்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்?

அப்துல்காதரின் மனைவி குஞ்ஞானும்மாவின் குரல் கேட்டது.

“பாத்தும்மா அண்ணா, ஆடு பிரசவம் ஆகிறப்போ எங்களை மறந்துடாதீங்க. ஸுபைதாவுக்குக் கொஞ்சம் பால் தரணும்.”

ஹனீஃபாவின் மனைவி அய்ஸோம்மா மிடுக்கான குரலில் கேட்டாள்: “என் ரஷீதுக்குப் பால் குடிச்சா இறங்காதா என்ன?”

சுலைமானின் மனைவி ஆனும்மா இலேசான கிண்டல் தொனிக்கச் சொன்னாள்: “ஸையது முஹம்மதும் பால் குடிச்சா பெரிய குறைவு ஒண்ணும் வந்திடாது.”

ஆனும்மா பள்ளிக்கூடத்திற்குப் போயிருக்கிறாள் என்பதைத்தான் முன்பே நான் கூறியிருக்கிறேனே! அவள் ஏதோ சுமாராகப் படித்திருக்கிறாள். பாத்தும்மா தன்னுடைய அக்காவாக இருந்தாலும் அவளுக்குப் படிப்பு குறைவு. அதனால் பாத்தும்மா இலேசான கோபத்துடன் சொன்னாள்: “போதும்... போதும்... உன்னோட பேச்சை நிறுத்து...”

சிறிது நேரம் கழித்து நான் மெதுவாக அறைக்குள் சென்றபோது பாத்தும்மாவின் ஆடு அங்கு நின்றிருந்தது. அது என்னுடைய பெட்டி மீது இருந்த இரண்டு நேந்திரப் பழங்களைத் தின்று தீர்த்திருந்தது. பாத்தும்மாவின் ஆடுதான்! ஆடு கிழக்குப் பக்கம் இருந்த வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறது. அதை அடைக்க ஆனும்மா மறந்துவிட்டிருக்கிறாள்.

நான் அழைத்துச் சொன்னேன்: “ஆனும்மா, பாத்தும்மா, ஓடி வாங்க! உங்களோட ஆடு நேந்திர வாழைப்பழத்தைச் சாப்பிடுது.”

ஆனும்மாவும் பாத்தும்மாவும் ஓடி வந்தார்கள். ஆனும்மாவிற்கு மிகவும் சந்தோஷம். அவள் சொன்னாள்: “இது அக்காவோட ஆடு.”

“சரி... போகட்டும் அண்ணே...” -பாத்தும்மா வருத்தம் கலந்த குரலில் எனக்கு ஆறுதல் கூறும் நோக்கத்தில் சொன்னாள்: “நான் ரெண்டு நேந்திர வாழைப்பழங்களை வாங்கித் தர்றேன். ஆடு ரொம்பவும் பசியா இருந்திருக்கும், அதனாலதான்..”

ஆனும்மா சொன்னாள்: “எதைத் தின்னாலும் அதோட பசி அடங்காது. என் ஆட்டோட புல்லை அது திருடித் தின்னும்..”

பாத்தும்மாவால் அதைச் சகித்துக்கொள்ள முடியுமா? அவள் சொன்னாள்: “போதும்... போதும்... உன் ஆடும் புல்லும்...”

நான் சொன்னேன்:

“பரவாயில்ல... விடுங்க. நீ எல்லா பிள்ளைகளுக்கும் ஆட்டுப்பால் கொடுக்கணும்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

நிராசை

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel