Lekha Books

A+ A A-

தீர்த்த யாத்திரை - Page 9

theertha yathirai

"நாளைக்குத்தான் அவன் ஊருக்குப் புறப்படுறான். அவன் போன பிறகு நான் போனா போதும். ஃபாதர்...'' அவள் தாழ்ந்த குரலில் அழைத்தாள்.

"என்ன?'' ஃபாதர் கேட்டார்.

"அந்த வயசான பெரியவர் தலையில கையை வச்சு பிரார்த்திக்கச் சொன்னாரு. அப்ப என் உடம்புல துணியே இல்ல. இருந்தாலும் நான் பிரார்த்திச்சேன். நான் செஞ்சது தப்பா ஃபாதர்?'' - அவள் கேட்டாள்.

"இல்ல...'' ஃபாதர் சொன்னார்: "பிரார்த்தனைதான் முக்கியம். போட்டிருக்குற ஆடை இல்ல. ஆமா... நீ என்ன சொல்லி பிரார்த்தனை செஞ்சே?''

அவள் சொன்னாள்: "என் தெய்வமே... எனக்கு பிரார்த்தனை எல்லாம் செய்யத் தெரியாது. நான் இவரோட தலையில கையை வச்சு நின்னுக்கிட்டு இருக்கேன். உடம்புல துணி எதுவும் இல்ல. எங்க ரெண்டு பேரையும் நீ மன்னிக்கணும்னு சொல்லி பிரார்த்திச்சேன்.''

ஃபாதர் சொன்னார்: "அப்படியா? நீ செஞ்ச தப்புக்கு வருத்தப்படுறதுனால, உனக்கு நிச்சயம் பாவ மன்னிப்பு உண்டு. கடவுள் உன்னைக் காப்பாத்துவார். இனிமேல் பாவம் எதுவும் செய்யாமல் பார்த்துக்கணும்.'' பரிகாரமாகச் சொல்ல வேண்டிய பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுத்த ஃபாதர் வலது கையால் அவளுக்கு நேராக சிலுவை அடையாளத்தை வரைந்தவாறு சொன்னார்: "பிதாவின், மகனின், பரிசுத்த ஆத்மாவின் பெயரில்...''

அவள் பாவமன்னிப்பு கூண்டைவிட்டு எழுந்து போனாள். ஃபாதர் கடிகாரத்தைப் பார்த்தவாறு இனி யாராவது பாவமன்னிப்பு கேட்க வந்திருப்பவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காக கூண்டுக்கு வெளியே தலையை நீட்டினார். ஒரு பக்கத்திலிருந்து படமாவன் குஞ்ஞு குற்றவாளிக் கூண்டை நோக்கி நடந்துவந்தான். சிலுவை வரைந்தவாறு படியில் முழங்கால் போட்டு உட்கார்ந்தான்.

3

"அது சரி...'' காசியில் குளிக்கும் இடத்தின் கீழே இருக்கிற படியில் அமர்ந்தவாறு காலின் பெருவிரலை தண்ணீரில் தொட்டு, எந்த அளவிற்கு குளிர்ச்சி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்த படமாவன் குஞ்ஞு தனக்குள் கூறிக்கொண்டான்: "பனி உருகி வர்ற தண்ணி இதுதானா? நான் நினைச்ச அளவுக்கு குளிர்ச்சி இல்ல. இனி பனி இருக்குற இடத்துக்குப் போனா தெரியும் எந்த அளவுக்கு குளிர்ச்சின்னு!" சந்திரிகா சோப் கவரைப்பிரித்து, புதிதாக வாங்கிய சோப்பை எடுத்து குஞ்ஞு படி மேல் வைத்தான். பக்கத்தில் நின்று கையை ஆட்டிய குரங்கைப் பார்த்துச் சொன்னான்: "நஹி மாலும்..." பிறகு முழுங்கால் வரை தண்ணீரில் நனையைச் செய்து பார்த்துவிட்டு, குளிக்க இறங்கினான். ஒருமுறை முழுமையாக நீருக்குள் மூழ்கிவிட்டு, வேகமாக எழுந்து படிமேல் ஏறி நின்று உற்சாகத்துடன் உடம்பில் சோப்பைத் தேய்த்தவாறு குஞ்ஞு பாடினான்: "அக்கரைக்கு யாத்திரை போகும் பயணியே... நதியைப் பார்த்து நீ பயப்பட வேண்டாம்..."

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

பைத்தியம்

March 8, 2012,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

நிராசை

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

நான்

நான்

February 17, 2015

அம்மா

அம்மா

May 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel