Lekha Books

A+ A A-

குஞ்ஞம்மாவும் நண்பர்களும் - Page 26

kunjamavum nanbargalum

"தொழில் மோசம் இல்லை'' - நம்பூதிரி அமைதியான குரலில் கூறினார்: "நம்முடைய காலத்தில் லாபம் தரும் ஒரு தொழில் திருடுவதுதான். அது தனியாகவும் கூட்டத்துடனும் இருக்கலாம். இரண்டும் லாபத்தைத் தரக்கூடியதுதான்.''

கோபாலன் நாயர் சிரித்தார். கோவிந்தக் குறுப்பு அப்போதும் கம்பீரத்தை விடாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தார். பீடியை இழுத்துப் புகையை விட்டுக்கொண்டிருந்தார். புகைச் சுருள்கள் கனவுகளைப் போல காற்று வெளியில் தெளிவற்ற பல உருவங்களை வரைந்து கொண்டும் அழித்துக் கொண்டும் இருந்தன.

"நாங்க ஒரு விஷயத்திற்காகத்தான் வந்தோம்'' - நம்பூதிரி மெதுவான குரலில் ஆரம்பித்தார்.

"என்ன?'' - குறுப்பு கேட்டார்.

"இதோ பாருங்க'' - அச்சுதன் நம்பூதிரி தாளை எடுத்து நீட்டினார். கோவிந்தக் குறுப்பு வாங்கிப் பார்த்தார். சில பிறப்புச் சான்றிதழ்கள். எல்லாவற்றின் மீதும் வைலட் நிற பென்சிலால் "இந்த சொத்தின் எல்லா உரிமைகளும் நங்ஙேலி அந்தர்ஜனத்திற்குச் சொந்தமானவை" என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையிலேயே எல்லா சொத்துகளுக்கும் சொந்தக்காரி நங்ஙேலி அந்தர்ஜனம்தான். எனினும், மனைவியின் பெயர் இப்படி எழுதி வைக்கப்பட்டதற்காக நம்பூதிரி கவலைப்பட்டார். பழைய காலத்தில் நம்பூதிரிகள் தங்களின் மனைவிகளாக இருக்கும் அந்தர்ஜனங்களை ஆவணப் பலகையால் அடித்துக் கொண்டும், காதுகளை இழுத்து காயம் உண்டாக்கிக் கொண்டும், சூடு வைத்து துன்பம் தந்து கொண்டும் இருந்தார்கள். அவற்றையெல்லாம் நினைக்கும்போது அச்சுதன் நம்பூதிரிக்கு இதயத்தில் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக வரும். சான்றிதழ்களின் மீது மேலும் ஒரு விஷயத்தை எழுதுவார். உரிமை "நங்ஙேலி அந்தர்ஜனத்தின் கணவருக்குத்தான்" என்று.

கோவிந்தக்குறுப்பு சான்றிதழ்கள் அனைத்தையும் இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். பிறகு கேட்டார்: "இதெல்லாம் எதற்கு?''

"இந்த சொத்துகளைக் காட்டி, கொஞ்சம் பணம் கடனாகக் கிடைக்க வேண்டும். ஏதாவது வழி இருக்குதா?'' -கோபாலன் நாயர் கேட்டார்.

"போங்க... கேளுங்க...'' -சான்றிதழ்களை மேஜைமீது வைத்துவிட்டு குறுப்பு சொன்னார்.

"யாரிடம்?''

"அப்துல் ரஹிமானிடம். அவனை நீங்கள் எல்லாரும் சேர்ந்து பெரிய பணக்காரனாக ஆக்கிட்டீங்கள்ல! பணக்காரனா ஆக்கியதற்கான விளைவை இப்போ பார்த்தீங்கள்ல!''

"பார்த்தோம்'' - கோபாலன் நாயர்தான் பதில் சொன்னார். "அவனும் அவனுடைய மனைவியும் கஞ்சி குடிக்கலாம்.''

"இருந்தாலும், அந்த கதீஜாவைப் பார்த்தால் பட்டினி போட வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை'' -நம்பூதிரியும் ஒப்புக் கொண்டார். கோவிந்தக் குறுப்பு இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். "இதைப் பேசுறதுக்கு உங்களுக்கே வெட்கமாக இல்லையா? உங்களுக்கு எது இருந்தாலும் சரிதான். எப்படி இருந்தாலும் சரிதான். நான் அப்படிப் பழகவில்லை. இனிமேல் பழகிக்கொள்வதும் கஷ்டம்'' - கோவிந்தக் குறுப்பு வியர்வையில் கரைந்து கொண்டிருந்த சந்தனப் பொட்டை ஒற்றிக்கொண்டே தொடர்ந்து சொன்னார்:

"நம்ம எல்லாரையும் அந்த மடையன் முட்டாள்களா ஆக்கிட்டானே!''

"அவன் என்ன செய்தான்.''

"தொப்பி அணிந்துவிட்டான்.''

"பனி விழாமல் இருக்கலாமே!'' - கோபாலன் நாயர் அமைதியான குரலில் சொன்னார். "மனித சமுதாயம் ஆடைகள் அணிவதில் அவ்வப்போது பல மாறுதல்களையும் உண்டாக்கி இருக்கிறது. இல்லையா, நம்பூதிரி அய்யா?''

"ஆமாம்...''

பச்சிலைகள், மரத்தோல்கள், மிருகங்களின் ரோமம், பருத்தித் துணி, பட்டாடைகள்- இப்படி ஆடைகளில் வந்த மாற்றங்கள், பிறகு முறைகளில் வந்த மாறுதல்கள்- இவற்றைப் பற்றியெல்லாம் பத்து நிமிடங்கள் நீடித்துக் கொண்டிருந்த ஒரு சொற்பொழிவை கோபாலன் நாயர் செய்தார். வெறும் வரலாற்று விவரிப்பு. நம்பூதிரிக்கு மிகவும் பிடித்திருந்தது. புரட்சி வெற்றி பெறட்டும் என்று கூறிவிடலாமா என்றுகூட அவர் சிந்தித்தார். எனினும், கூறவில்லை.

"நீங்கள் இன்றைக்கு என்னை ஒரு வழி பண்ண வேண்டும் என்றே வந்தீர்களா?'' - கோவிந்தக் குறுப்பு கேட்டார்.

"இல்லை'' - நம்பூதிரி சொன்னார்: "எங்கிருந்தாவது கொஞ்சம் பணம் உண்டாக்கணும். வீட்டு வேலை பாதியில் நின்று கொண்டிருக்கிறது. ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுத்துவிடலாம்.''

"அப்துல் ரஹிமானிடம் கேட்க வேண்டும்.''

"அவன் தொப்பி அணிந்தால் நாம என்ன செய்றது?''

"சரி பண்ணணும்'' - கோவிந்தக் குறுப்பு சிறிது அமைதியாக ஆனார். "அவன் கைவசம் இருக்கும் நிலம் நம்பூதிரி அய்யா, உங்களுடைய தாய் வழியில் வந்தது. அதை வாங்கி ஏதாவது இந்துக்களுக்குக் கொடுத்து விட வேண்டும். என்ன?''

"நல்லது'' - கோபாலன் நாயர் மூக்கையும் தாடையையும் தடவினார். "இனி அவனும் தொப்பி அணிந்தால், வேறொரு ஆளுக்கு வாங்கிக் கொடுத்துவிடலாம் அல்லவா? சான்றிதழ்கள் அதிகமாகட்டும்.''

கோவிந்தக் குறுப்பிற்கு அதிகமான கோபம் வந்தது. அதனால் அவர் அமைதியாக இருந்தார். கோபாலன் நாயரும் பேசாமல் இருந்தார். நம்பூதிரியும். ஒன்றோடொன்று கலந்த நிமிடங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன. கோபாலன் நாயர் பாக்கெட்டைத் தடவி பீடியை எடுத்து கோவிந்தக் குறுப்பிற்குக் கொடுத்தார். தானும் ஒன்றைப் புகைத்தார். அப்படியே புகையைவிட்டவாறு எல்லாரும் பிரபஞ்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதும் அது மங்கலாகவே இருந்தது. சில வெள்ளை மேகங்கள் சுருண்டு, மடிந்து, நெளிந்து, நிமிர்ந்து படுத்து மறைந்து கொண்டிருந்தன. மரங்கள் அசையவில்லை. செடிகள் அசையவில்லை. புற்களும் அசையவில்லை. எல்லாம் மிகவும் அமைதியாக இருந்தன.

"குறுப்பு அய்யா'' -வாசலில் இருந்து ஒரு அழைப்பு. அங்கு சாத்தப்பன் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக்கொண்டு நின்றிருந்தான்.

"என்ன சாத்தப்பா?'' - குறுப்பு கேட்டார்.

"பிரசவம்...''

"என்ன?''

"பிரசவம்... குடிசையில் பிரசவம்...''

"ஓஹோ! பெற்று விட்டாளா?''

"இல்லை. நேற்று காலையில் தொடங்கியது. இப்போதும் பிரசவம் ஆகவில்லை.''

"அதற்குப் பிறகு எதுவும் செய்யலையா?''

"மந்திரச் செயல் செய்து பார்த்தாச்சு. குழந்தை உள்ளே நெளிஞ்சுக்கிட்டு இருக்கு.''

"டாக்டரிடம் காட்ட வேண்டியதுதானே?'' -நம்பூதிரி கேட்டார்.

"அவளை இப்போ என்ன செய்யிறது? எனக்கு எதுவும் தெரியாது, குறுப்பு அய்யா.''

காட்சி மாறியது. கோபாலன் நாயரின் முகத்தில் ஒரு மிடுக்கு- குறுப்பின் முகத்திலும். நம்பூதிரியும் திகைத்துப் போய்விட்டார்.

"என்ன செய்யணும், கோபாலன் நாயர்?''

"அதைத்தான் நானும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன் குறுப்பு.''

"ஏதாவது செய்யாமல் இருக்க முடியுமா?'' - நம்பூதிரி.

"இரண்டு நாட்கள் ஆயிடுச்சே!''

"ஒரு காரியம் செய்யட்டுமா, குறுப்பு. மருத்துவமனைக்குக் கொண்டு போனால் என்ன?''

"சரி. சாத்தப்பா. அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போகலாம்.''

"அய்யோ குறுப்பு அய்யா... அவளை சிகிச்சைக்கு கொண்டு போக வேண்டாம்.''

"பிறகு... அவளைக் கொல்லணும்னா நினைக்கிறே?''

"சிகிச்சைக்குப் போனால், அவளை வெட்டி அறுப்பாங்க...''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

நிராசை

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel