Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நான் நடிகன் ஆன கதை - Page 6

naan nadigan aana kathai

அந்த கஷ்டங்களுக்கு மத்தியில் என் தாய்க்கு திடீரென்று ஒரு தலைவலி வந்தது. அதனால் அவர் தையல் வேலைகளைவிட்டு விட்டார். நாட்கணக்கில் கண்களுக்கு மேலே தேயிலை பேண்டேஜ் கட்டி இருண்ட அறைக்குள் படுத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை என் தாய்க்கு உண்டானது. அந்தச் சமயங்களில் சூப் டிக்கெட்டுகளும் உணவு பொட்டலங்களும் தந்து அருகிலிருந்தவர்கள் எங்களுக்கு உதவினார்கள். பள்ளிக் கூடம் செல்வதற்கு முன்பு நாளிதழ்களை வினியோகம் செய்து சிட்னியும் சிறிய அளவில் ஒரு வருமானத்தைச் சம்பாதித்தான். எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு என்ற ஒன்று கட்டாயம் இருக்கும் அல்லவா? எங்கள் விஷயத்தில் அந்த முடிவு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது.

என் தாயின் உடல் நிலை பரவாயில்லை என்றிருந்த சமயமது. பத்திரிகை விற்பதற்காகச் சென்றிருந்த சிட்னி அன்று உரத்த குரலில் ஆரவாரித்தவாறு திரும்பி வந்தான். ‘எனக்கொரு பர்ஸ் கிடைச்சது’ என்று கத்திக் கொண்டே அவன் வந்தான். பத்திரிகைக் கட்டை படுக்கையின் மீது வீசி எறிந்த அவன் மகிழ்ச்சியுடன் சத்தமிட்டவாறு அந்த பர்ஸை என் தாயின் கையில் தந்தான். என் தாய் அதை மெதுவாக திறந்தார். அதற்குள் நிறைய வெள்ளி நாணயங்களும், செம்பு நாணயங்களும் இருந்தன. அதை மூடிய என் தாய் படுக்கையில் போய் சாய்ந்தார்.

சிட்னி பேருந்துகளுக்குள் நுழைந்து பத்திரிகைகளை விற்பனை செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில்தான் ஒரு பேருந்தின் ஆள் இல்லாத இருக்கையில் அவன் அந்தப் பர்ஸைக் கண்டெடுத்திருக்கிறான். அடுத்த நிமிடம் அவன் அதன்மீது ஒரு பத்திரிகையைப் போட்டு மூடி, பத்திரிகையோடு சேர்த்து பர்ஸை எடுத்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கிவிட்டான். ஆள் யாரும் இல்லாத ஒரு இடத்தில் போய் நின்று பர்ஸைத் திறந்து பார்த்தபோதுதான் இந்த அளவிற்கு பணம் அதற்குள் இருப்பதே அவனுக்கு தெரியவந்திருக்கிறது. மகிழ்ச்சி பொங்க அதை அவன் எண்ணிக்கூட பார்க்காமல் வீட்டிற்கு வேகமாக ஓடி வந்துவிட்டான்.

உடல் நிலை சற்று தேறியவுடன் என் தாய் எழுந்து அந்த பர்ஸிலிருந்த நாணயங்களை படுக்கை மீது கொட்டினார். அப்போதும் பர்ஸின் கனம் குறையவில்லை. அதன் நடுப் பகுதியில் மேலும் ஒரு பாக்கெட் இருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டோம். அதற்குள் ஏழு தங்கக் காசுகள் இருந்தன. கடவுளுக்கு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். பர்ஸில் எந்தவித முகவரியும் இல்லை. அதனால் என் தாயின் தர்ம உணர்விற்குச் சிறிதும் குறைபாடு உண்டாகவில்லை. அந்த பர்ஸின் சொந்தக்காரருக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதை நினைத்து வருத்தப்பட்ட அதே நேரத்தில் அது சொர்க்கத்திலிருந்து கடவுள் எங்களுக்காக அனுப்பி வைத்த பரிசு என்றும் என் தாய் நினைத்தார்.

என் தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டது மன ரீதியாகவா இல்லாவிட்டால் உடல் ரீதியாகவா என்பதைப் பற்றி என்னால் உறுதியாக கூற முடியவில்லை. எது எப்படி இருந்தாலும் ஒரே வாரத்தில் என் தாய் முழுமையாக குணம் அடைந்தார். அவர் எங்களுக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்தார். விடுமுறை நாளைக் கொண்டாடுவதற்காக நாங்கள் செளத் என்ட்டில் இருந்த கடற்கரைக்குச் சென்றோம்.

முதல் தடவையாக கடலைப் பார்த்த மயக்கத்தில் இருந்தேன் நான். உயர்ந்த தெருவிலிருந்து அதை நெருங்கிய போது, அது அசைவே இல்லாமல் இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். பிறகு ஒரு பயங்கரமான உருவத்தைப் போல அது ஆர்ப்பரித்தவாறு என் மீது வந்து பாய்வதைப் போல ஓடி வந்தது. ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு நாங்கள் மூன்று பேரும் நீரில் இறங்கி குளித்தோம். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு மாலை நேரமாக அது இருந்தது. அந்த நாளைப் பற்றிய நினைவு இப்போதுகூட எனக்கு இருக்கவே செய்கிறது.

மணல் கடிகாரத்தில் இருக்கும் மணலைப் போல எங்களின் கையிலிருந்த பணம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து கொண்டிருந்தது. என் தாய் தனக்கு ஏதாவதொரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக முயற்சி செய்தாலும், அது அவருக்குக் கிடைக்கவில்லை. தவணைப் பணத்தை ஒழுங்காக கட்ட முடியாமற் போனபோது, என் தாயின் தையல் இயந்திரத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். என் தந்தையிடமிருந்து கிடைத்துக் கொண்டிருந்த பத்து ஷில்லிங் பணம் முழுமையாக வராமல் நின்றுவிட்டது.

வாழ்வதற்கு எங்களுக்கு ஒரு வழியும் இல்லாமற் போய்விட்டது. கடைசியில் நாங்கள் மூன்று பேரும் லாம்பெத்திலிருந்த அனாதை இல்லத்தைத் தேடிச் சென்றோம்.

அனாதை இல்லத்தில் போய் இருப்பது என்பது வெட்கக் கேடான ஒரு விஷயம் என்றாலும் ஒரே ஒரு அறையில் வாழும் வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதல் வேண்டும் என்று நானும் சிட்னியும் விருப்பப்பட்டோம். அனாதை இல்லத்தின் வெளிக் கதவைத் தாண்டுவது வரையிலும் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி எனக்கு எந்த ஒரு தெளிவும் இல்லை. அங்கு போனவுடன் என் தாயை பெண்கள் பகுதிக்கும் எங்களை சிறுவர்கள் பகுதிக்கும் பிரித்து அனுப்பினார்கள். என் தாயிடமிருந்து உண்டான அந்தப் பிரிதல் என்னை மிகவும் கவலைப்பட வைத்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகுதான் நான் என் தாயைப் பார்த்தேன். அன்று நடந்த அந்த கவலை நிறைந்த காட்சியை இப்போது கூட நான் நினைத்துப் பார்க்கிறேன். பார்வையாளர்கள் அறையில் அனாதை இல்லத்தில் தரப்பட்ட சீருடையை அணிந்து அமர்ந்திருந்த என் தாயைப் பார்த்த நாங்கள் அதிர்ந்து போய் விட்டோம். ஒரே வாரத்தில் என் தாய் வயது அதிகமாகி விட்ட பெண்ணைப் போல ஆகி விட்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அந்த முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. சிட்னியும் நானும் அழுததைப் பார்த்து என் தாயும் தேம்பித் தேம்பி அழுதார். சிறிது நேரம் கழித்து நாங்கள் மூன்று பேரும் அங்கிருந்த சொரசொரப்பான பெஞ்சுகளில் ஒன்றில் போய் அமர்ந்தோம். என் தாயின் மடியில் வைத்திருந்த எங்களின் கைகளை அவர் வருடிக் கொண்டிருந்தார். எங்களின் ஒட்ட நறுக்கப்பட்ட தலை முடியைக் கையால் வருடியவாறு அவர் சிரித்துக் கொண்டே, ‘சீக்கிரம் நாம ஒண்ணா சேர்ந்து வாழுவோம்’ என்று கூறி எங்களைத் தேற்றினார். போவதற்கு முன்பு கொஞ்சம் மிட்டாய்களை எங்களிடம் தந்தார். யாருக்கோ துணி தைத்ததன் மூலம் கிடைத்த காசை வைத்து ஸ்டோரிலிருந்து அவற்றை அவர் வாங்கியிருந்தார். முதுமை வந்து விட்டதைப் போலிருந்த என் தாயின் தோற்றத்தைப் பற்றி பிறகு சிட்னி நீண்ட நேரம் கவலையுடன் கூறிக் கொண்டிருந்தான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version