Lekha Books

A+ A A-

நீல வெளிச்சம் - Page 5

Neela velicham

பார்கவிக் குட்டி... இப்போ எல்லாம் புரிஞ்சிக்கிட்டியா? நாம இங்கே வாழ்றோம். அதாவது... நான் இந்த வீட்லதான் தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நியாயமாகப் பார்த்தால் கிணறு, வீடு எல்லாம் எனக்குத்தான். பரவாயில்ல... நீ கீழே இருக்கிற நாலு அறைகளையும் கிணறையும் பயன்படுத்திக்கோ. சமையலறையையும் குளியலறையையும் நாம ரெண்டு பேரும் சரி பாதியா வச்சிக்குவோம். சம்மதம்தானா?''

இரவு ஆகிவிட்டது. சாப்பாடு முடிந்து, தெர்மோ ஃப்ளாஸ்க்கில் தேநீரை நிரப்பிக்கொண்டு வந்தேன். என் கையில் இருந்த டார்ச் விளக்கை எரியவிட்டவாறு அரிக்கேன் விளக்கை ஏற்றினேன். அறை முழுவதும் மஞ்சள் வெளிச்சத்தில் மூழ்கியது.

டார்ச் விளக்கைக் கையில் பிடித்தவாறு நான் கீழே இறங்கினேன். நல்ல இருட்டு. சில நிமிடங்கள் அசையாமல் அங்கு நின்றேன். தண்ணீர்க் குழாய்களைப் பூட்டி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்தேன். கிணற்றின் அருகில் இருந்த சமையலறைப் பக்கம் போனேன். அப்போது நினைத்தேன்- தண்ணீர்க் குழாய்களைப் பூட்டாமல் விட்டால் என்ன?

வாசல் கதவுகளை அடைத்தேன். தாழ்ப்பாள் போட்டேன். படிகள் வழியே ஏறி மாடிக்கு வந்து எந்தவித பரபரப்பும் இல்லாமல் அமர்ந்து தேநீர் குடித்தேன். பிறகு ஒரு பீடி புகைத்தவாறு சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன். அமர்ந்தவாறே எழுதத் தொடங்கினேன். அப்போது என் மனதில் பட்டது. நான் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னால் பார்கவி நின்று கொண்டிருக்கிறாள்!

நான் சொன்னேன்:

“நான் எழுதறப்போ யாராவது பார்த்தாங்கன்னா எனக்குப் பிடிக்காது.''

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன்... யாரும் இல்லை!

எதனாலோ, தொடர்ந்து என்னால் எழுத முடியவில்லை. நான் ஒரு நாற்காலியை எடுத்து முன்னால் போட்டேன். “பார்கவிக் குட்டி... இதுல உக்காரு!'' நாற்காலி வெறுமையாக இருந்தது. நான் எழுந்துபோய் இரண்டு அறைகளிலும் இப்படியும் அப்படியுமாய் உலாத்தினேன். காற்று சரியாக வரவில்லை. வெளியே மரங்களில் இலைகள் ஆடாமல் அசையாமல் இருந்தன. ஜன்னல் வழியே கீழே பார்த்தேன்.... ஒரு வெளிச்சம்!

நீல வெளிச்சமா... சிவப்பா... மஞ்சளா... எதுவென்று சரிவரப் புரிந்து கொள்ள முடியாத ஒரு வெளிச்சம். ஒரு நிமிட நேரம் மட்டுமே அது தெரிந்தது.

ஒருவேளை இந்தப் பிரகாசம் என் கற்பனையாக இருக்குமோ என்று என்னை நானே சந்தேகப்பட்டேன். நிச்சயம் அந்த வெளிச்சத்தைப் பார்த்தேன் என்று சத்தியம் செய்து என்னால் கூற முடியவில்லை. இருந்தாலும் பார்க்காததைப் பார்த்ததாக எப்படிக் கூற முடியும்? ஒருவேளை ஏதாவது மின்மினிப் பூச்சியாக இருக்குமோ?

நான் நீண்ட நேரம் அங்கேயே நடந்து கொண்டிருந்தேன். நீண்ட நேரம் ஜன்னல் அருகிலேயே நின்றிருந்தேன். பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது படித்துக் கொண்டிருக்கலாமா என்று பார்த்தேன். மனம் ஒரு நிலையில் இல்லை. நாற்காலி தனியே யாரும் அமராமல் இருந்தது.

சீக்கிரம் தூங்கலாமே என்று நினைத்தேன். படுக்கையை விரித்துப் போட்டு விளக்கை அணைத்தேன். அப்போது மனதில் ஒரு எண்ணம் வந்தது- ஒரு இசைத்தட்டை முழங்கச் செய்தால் என்ன?

மீண்டும் விளக்கை ஏற்றினேன். க்ராமஃபோனைத் திறந்து வைத்தேன். ஒரு புதிய ஊசியை எடுத்து சவுண்ட் பாக்ஸில் பொருத்தினேன். அதன் பிறகு க்ராமஃபோனுக்கு சாவி கொடுத்தேன்.

யாருடைய பாட்டைப் போடலாம்? உலகமே மிகவும் அமைதி யாக இருந்தது. ஆனாலும், ஒரே ஒரு ஒலி மட்டும் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. "ஹூ' என்று என் இரண்டு காதுகளிலும் ஒரு ரீங்காரம் தொடர்ந்த ஒலித்துக் கொண்டே இருந்தது. பயம் என்னை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதோ? என்னைச் சுற்றிலும் ஒரே மயான அமைதி. பயங்கரமான அந்த அமைதியை லட்சம் லட்சம் துண்டுகளாக சிதறடிக்க நினைத்தேன் நான். அதற்கு யாருடைய பாட்டைப் பாட வைப்பது? பின்னால் திரும்பி, அமெரிக்காவின் நீக்ரோ பாடகனான பால் ராப்ஸன் பாடிய ஒரு இசைத்தட்டை எடுத்து வைத்தேன். க்ராமஃபோன் பாடத் தொடங்கியது. காற்றில் அவனுடைய இனிய குரல் தவழ்ந்து வந்தது.

“ஓர்ள்ட்ன்ஹ ச்ண்ற் ற்ட்ங் க்ஷஹற்ற்ப்ங் ர்ச் த்ங்ழ்ண்ஸ்ரீர்.''

அது முடிந்தது. அதற்குப் பிறகு பங்கஜ் மல்லிக் பாடிய இசைத்தட்டு.

“து டர்னா சராபி...''

“பார்கவிக் குட்டி... ஒரேயடியா பயந்திடாதே. இப்போ இனிய பெண் குரல்ல ஒரு இசைத்தட்டைப் போடப் போறேன்.'' நான் மெதுவான குரலில் சொன்னேன்.

“காற்றினிலே வரும் கீதம்...''

எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய அந்தப் பாட்டும் முடிந்தது.

இந்த மூன்று பாட்டுகளும் முடிந்தபோது, என் மனம் இலேசானது மாதிரி உணர்ந்தேன். சில நிமிடங்கள் அசையாமல்- ஒன்றுமே செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். பிறகு என்ன நினைத்தேனோ- சைகால் பாடிய ஒரு இசைத்தட்டை எடுத்தேன். அவரின் மென்மையான குரல் காற்றில் மிதந்தது.

“ஸோ ஜா ராஜகுமாரீ...''

ராஜகுமாரியே நீ உறங்கு... இனிமையான கனவுகள் கண்டுகொணடே உறங்கு...

அந்தப் பாட்டும் முடிந்தது.

“அவ்வளவுதான். மீதியை நாளைக்குப் பார்ப்போம்'' என்று சொல்லியவாறு நான் க்ராமஃபோனை மூடி வைத்தேன். ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்துப் புகைத்தேன். விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். பக்கத்திலேயே டார்ச் விளக்கு இருந்தது. கடிகாரம் இருந்தது. அரிவாள் ஒன்று இருந்தது. மிக அருகிலேயே நாற்காலியும்..

போர்டிக்கோவிற்குப் பக்கத்தில் இருந்த வாசல் கதவை நான் அடைத்துவிட்டேன். நேரம் பத்து மணி இருக்கும். காதுகளைத் தீட்டியவாறு படுத்துக்கிடந்தேன்.

கடிகாரத்தின் "டிக் டிக்' சப்தத்தைத் தவிர, வேறு எந்த ஒலியும் கேட்கவில்லை. நிமிடங்கள் மணிகளாகி நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என் மனதில் இப்போது பயமில்லை. இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருந்தேன். எனக்கு இது ஒன்றும் புதிய அனுபவ மில்லை. எவ்வளவோ வருடங்கள்... எத்தனையோ மாநிலங்களில் என்னென்னவோ இடங்களில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தன்னந்தனியே என் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியிருக்கிறேன். அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத பல அனுபவங்களும் பல்வேறு சூழ்நிலைகளில் கிடைத்திருக்கின்றன. அதனால் என் மனம் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் திரும்பத் திரும்பப் போய் வந்து கொண்டிருந்தது. இந்த எண்ண ஓட்டத்திற்கு மத்தியில்... வாசல் கதவை யாராவது தட்டுவார்களா? தண்ணீர்க் குழாயில் இருந்து நீர் ஒழுகும் சப்தம் கேட்குமா? என் கழுத்தை யாராவது நெரிப் பார்களா? இந்த நினைப்புடன் மூன்று மணிவரை தூங்காமலே இருந்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel