Lekha Books

A+ A A-

மலையாளத்தின் ரத்தம்

malayalathin ratham

கோலாலம்பூருக்கு அருகிலுள்ள உலுகோம்பாக் கிராமத்துக் கடைவீதியின் மூலையிலிருக்கும் முச்சந்திப் பெருவழியில் சாதாரணமாகக்காண முடிகிற அந்த சோற்று வண்டியும், விற்பனை செய்யும் மொய்தீனும் அந்த கிராமத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டிருந்தார்கள். ஆவியையும் புகையையும் பரவ விட்டுக்கொண்டு மொய்தீனின் உந்து வண்டி அந்தத் தெருவின் மூலையை அடையும்போது, மொய்தீன் தயாரித்த "நாசிகோரிங்” கை (வறுத்த மசாலா சாதம்) வாங்கிச் செல்வதற்காக மலேயாக்காரர்களான பாட்டிகளும் பிள்ளைகளும் இளம் பெண்களும் சுற்றிலும் வந்து கூடினார்கள்.

மொய்தீனின் நாசிகோரிங்கிற்கு ஒரு தனிப்பட்ட சுவை இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். கோம்பாக்கில் வசிக்கும் இந்தியக் குடும்பங்களும் சீனரும் மொய்தீனின் மசாலா சாதத்தை ருசி பார்த்து சந்தோஷப்படுவதுண்டு.

மொய்தீன் அண்டத்தோடுக்காரன். அப்படியென்றால் மொய்தீன் பிறந்ததும் குழந்தைப் பருவத்தைச் செலவழித்ததும் பொன்னானி தாலுகாவில் இருக்கும் அந்த கிராமத்தில்தான். அண்டத்தோடில் இருந்து உலுகோம்பாக்கை அடைவதற்கு இடையில் மொய்தீன் வாழ்க்கையின் 21 வருடங்களின் வரலாறு அடங்கியிருக்கிறது. அவனுக்கு மூன்று வயது நடந்தபோது அவனுடைய வாப்பா இறந்துவிட்டார். அதற்குப் பிறகு ஐந்து வருடங்கள் கடந்த பின்னர் ஒரு படகோட்டியான அந்த்ரு அவனுடைய உம்மாவை திருமணம் செய்து கொண்டான். ஏழு வருடங்களில் அவனுடைய உம்மா ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். எல்லாமே ஆண் குழந்தைகள். மொய்தீனுக்கு வீட்டில் இடமில்லை என்றாகிவிட்டது. "கொஞ்சம் பெரியவனா ஆயிட்டேல்லடா... எங்காவது போய் நாலு காசு சம்பாதிக்கப் பாரு...” இளைய வாப்பா எப்போதும் குரைத்துக் கொண்டிருப்பான்.

இறுதியில் ஒருநாள் மொய்தீன் "நாலு காசு சம்பாதிப்பதற்காக” ஊரை விட்டு வெளியேறுவதற்குத் தீர்மானித்தான். பசி எடுக்கும்போது பச்சைத் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிறைத்துக்கொண்டு திரூர் வரை நடந்து சென்றான். இரவில் திரூர் ஆற்றின் கரையில் இருந்த மணலில் படுத்து உறங்கினான். மறுநாள் புலர்காலைப் பொழுதில் புகைவண்டி நிலையத்திலிருந்து வண்டி ஏறினான். எங்கெல்லாமோ தங்கிக் கொண்டும் நடந்து கொண்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவன் பம்பாயை அடைந்தான். தேநீர்க் கடைகளில் "பாகர்வாலா”வாகவும், பானீநாரியல் (இளநீர்) காரனாகவும் சில வருடங்கள் பம்பாயில் வாழ்க்கையை ஓட்டினான். பிறகு ஒரு தங்கல்வாப்பாவுடன் சேர்ந்து ரங்கூனுக்குச் சென்றான். போர் நடைபெறுவதற்குச் சற்று முன்பு மொய்தீன் பர்மாவிலிருந்து மலேயாவிற்குச் சென்று சேர்ந்தான். போர்க்காலம் முழுவதும் அவன் மலேயாவிலேயே இருந்தான். இப்படியே இருபத்தொரு வருடங்கள் வெளிநாடுகளில் இருக்கும் மலையாளி முஸ்லிம் களுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் சமையலறையையும் சாப்பாட்டு மேஜைகளையும் எச்சிலையும் சுற்றிச் சுற்றித் திரிந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த மொய்தீன், ஆறு மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக ஒரு உந்து வண்டி வாங்கி மசாலா சாதம் தயாரித்து விற்கக்கூடிய ஒரு சொந்தத் தொழிலை ஆரம்பித்தான்.

ஹோட்டல்களிலும் தேநீர்க் கடைகளிலும் வேலைக்காரர்களாக சாவக்காட்டைச் சேர்ந்த வேறு நான்கைந்து மலையாளிகள் கோம்பாக்கில் இருந்தார்கள். ஒரு ஹோட்டலுக்கு மிகவும் பின்னால் மரப் பலகைகளால் மறைக்கப்பட்ட ஒரு அறையில் அவர்களுடன் சேர்ந்து மொய்தீன் வசிக்க ஆரம்பித்தான். இரவில் சாப்பிட்டு முடிந்த பிறகு, நள்ளிரவு வரை அவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து "கெஸ்”  பாடிக்கொண்டிருப்பான்.

"நாலு மைல்கள் நடந்து, சிரமப்பட்டு வாடி, அழகைப் பார்க்க உனக்கு முன்னால் வந்து நின்றானே, காதல் கொடியே நீ கொஞ்சம் வருவாயா?'

என்று பாடும்போது, தென்னை மரங்களும் மண் பாதைகளும் கலந்த கனோலி வாய்க்கால் கரையின் வழியாக, அமைதியான இரவு நேரத்தில், நிலவு வெளிச்சத்தில் வேதனையை அனுபவித்த இதயத்துடன் நடந்து செல்லும் காதலன் ஒருவனின் உருவம்தான் மொய்தீனின் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. வெள்ளைநிறச் சட்டையும் தலைத் துணியும் அணிந்து வெற்றிலை போட்டுச் சிவக்க வைத்த உதடுகளுடன் வீடுகளின் வாசல்களில் காற்றையும் நிலவு வெளிச்சத்தையும் அனுபவித்துக்கொண்டு எதிர்பார்த்து நின்றிருக்கும் பாத்தும்மாமார்களின், கதீசாமார்களின் கையில் அணிந்திருக்கும் வளையல்களின் குலுங்கல் சத்தங்கள் மொய்தீனின் காதுகளில் வந்து ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால், அவை அனைத்தும் 21 வருடங்களுக்கு அப்பால் உள்ள நினைவுகள்... காதல் என்றால் என்ன என்றோ பெண்களின் உடல் அழகு என்றால் என்ன என்றோ தெரியத் தொடங்குவதற்கு முன்பே அவன் அந்த காட்சிகள் எல்லாவற்றுடனும் விடை பெற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது.

அவன் கோம்பாக்கில் உள்ள வயல்களை நோக்கி கண்களைச் செலுத்துவான். தாதுப் பொருட்களை எடுப்பதற்காக பள்ளம் தோண்டியிருந்த வெள்ளை நிற நிலங்களின் கரையில் தென்னை மரங்கள் வரிசையாக நின்றிருந்தன. நிலவு கனோலி வாய்க்காலின் கரையில் உள்ள வயல்களையும் தென்னை மரங்களையும் இப்படித்தான் இப்போது தழுவிக் கொண்டிருக்கும். அந்த கனோலி வாய்க்காலின் கரையில் இருந்த தென்னங் கன்றுகள் அனைத்தும் இன்று காய்ந்து, தளர்ந்து வயதாகிப் போன தென்னை மரங்களாக ஆகிவிட்டிருக்கும். அன்றைய குழந்தைகள் இன்று இடுப்பில் குழந்தைகளை வைத்துக்கொண்டு நடக்கும் பெண்களாக மாறிவிட்டிருப்பார்கள். எனினும், கனோலி வாய்க்காலின் கரையில் உள்ள காட்சிகளுக்கும் நிரந்தரமான வாழ்க்கைச் சலனங்களுக்கும் எந்தவொரு மாற்றமும் உண்டாகியிருக்காது. கோம்பாக்கில் உள்ள வயல்களின் நிழல்கள் வழியாக, கனோலி வாய்க்காலில் தேங்காய் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும் படகுகளின் தோற்றங்கள் அவனுக்கு முன்னால் நகர்ந்து வந்து கொண்டிருக்கும்.

அவனுக்கு அடக்கி வைக்கப்பட்டிருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உந்து வண்டியில் நடக்கும் சாத வியாபாரத்தின் மூலம் தினமும் பத்து பதினைந்து டாலர்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. செலவெல்லாம் போக தினமும் பத்து ரூபாய் எஞ்சி நிற்கும். அந்த வகையில் ஒரு வருட சம்பாத்தியத்துடன் அவன் தன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தான். அவனுடைய உம்மாவும் இளைய வாப்பாவும் கடுமையான காய்ச்சல் கண்டு இறந்துபோன தகவலை ஊரிலிருந்து வந்து சேர்ந்த புதிய நண்பர்களிடமிருந்து அவன் கேட்டுத் தெரிந்துகொண்டான். இப்போது ஊரில், உறவினர்கள் என்று கூறிக்கொள்வதற்கு யாரும் இல்லை. எனினும், பிறந்த ஊராயிற்றே! அவன் இப்படி கை நீட்டி அலைந்து வாழ ஆரம்பித்து இருபத்தொரு வருடங்கள் ஆகிவிட்டனவே! அவனுக்கே வெறுப்பாக இருந்தது. கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒரு நிலத்தையும் குடியிருக்க ஒரு இடத்தையும் வாங்கி ஏதாவது வியாபாரமோ ஒப்பந்தமோ நடத்தி கிராமத்திலேயே எஞ்சியிருக்கும் வாழ்நாட்கள் முழுவதும் வாழ வேண்டும். பிறந்த மண்ணிலேயே அவனுடைய இறந்த உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel