Lekha Books

A+ A A-

பாரம்பரியம் - Page 2

அவர்கள் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். இப்போதும் அந்த குலுங்கல் சிரிப்பு என் செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கும் மாறி வசித்தோம். குடும்பத்திலிருந்தவர்கள் ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவினார்கள். இறுதியில் நானும் ஒரு வயதான சித்தியும் மட்டும் எஞ்சினோம். அவளுடைய மரணத்தின்போது நாக்கை எடுக்க முடியாமலிருந்தபோதும் அவள் கேட்டாள்.'

'இனி என்ன செய்வாய், குழந்தை?'

வாழ்க்கையில் பலமுறை அந்த கேள்வியை நான் என்னிடமே கேட்டுக் கொண்டேன்.

உலகம் பரந்து கிடக்கிறதல்லவா? எனக்கு வாழ்வதற்கான பாதை இல்லாமற் போகுமா? என்னுடைய பெருமைக்குரிய பாரம்பரியம் எனக்கு துணையாக இருக்காதா? அந்த வாளையும் செம்பு பட்டயத்தையும் எடுத்துக் கொண்டு நான் என்னுடைய மரண இடத்தைத் தேடி சாலையில் இறங்கினேன்.

தனியாகக் கிடந்த பாதையின் வழியாக அப்படி நடந்து செல்லும்போது, நான் அந்த போருக்குச் சென்ற மாமாவை நினைத்துப் பார்ப்பேன். அவரை கண்களுக்கு முன்னால் நான் பார்ப்பேன். இடுப்பையும் தலையையும் இறுக வைத்துக் கொண்டு, போர் புரிவதற்குச் செல்லும்  அந்த பயணம்! மிகப் பெரிய போரில் சாய்ந்தும், திரும்பியும், எழுந்து தாவியும், குதித்து பாய்ந்து சண்டை போடும்போது இந்த வாள் மின்னல் கீற்றைப் போல பிரகாசிக்கும்.... நான் சற்று நெகிழ்வேன். நான் அந்த மாமாவின் மருமகன்.

அந்த வகையில் பழைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோதும், அந்த கேள்வி அவ்வப்போது என்னை வெறித்துப் பார்க்கும். 'இனி எப்படி வாழ்வாய்?' ஆனால், உடனடியாக மீண்டும் மனம், சுகமான கனவுகளுக்குள் சாய்ந்து விழும்.

சாலையில் இறங்கிய மூன்றாவது நாள் பசியெடுத்து தாகம் உண்டாகி நான் பாதையின் ஓரத்திலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று, சிறிது குளிர்ந்த நீர் கேட்டேன். சமையலறைக்குள்ளிருந்து கடுகு வறுக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது. ஒரு பெண் சிறிது நீரைக் கொண்டு வந்து விட்டு, என்னை தலையிலிருந்து பாதம் வரை பார்த்தவாறு கேட்டாள்'.

'நீ எங்கேயிருந்துடா வர்றே?'

அந்த கேள்வி எனக்கு பிடிக்கவில்லை. என்னை 'குழந்தை' என்றல்லாமல், யாரும் அழைத்ததில்லை. பெண் தொடர்ந்து கேட்டாள்:

'உனக்கு விறகு வெட்ட தெரியுமா? கூலியும் உணவும் தர்றேன்.'

எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. நான் அங்கிருந்து கிளம்பினேன். அந்த இறந்து போன வெற்றி வீரரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

நாட்கள் கடந்து செல்லச் செல்ல, எப்படி வாழ்வது என்ற கேள்வி மேலும்
பல முறை எனக்குள் எழுந்து பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. வேலை செய்து வாழ்வது என்பது மரியாதைக்குரியது என்ற எண்ணம் எனக்கு உண்டாக ஆரம்பித்தது. ஆனால், என்ன பணி இருக்கிறது?

ஒரு நாள் நான் பாதையின் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்றேன். வயதானவர் வாசலில் அமர்ந்திருந்தார். நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று கேட்டார். நான் தயங்கினேன். நான் போருக்குச் சென்ற மாமாவின் கதையைக் கூற ஆரம்பித்தேன். அதை அவர் முழுமையாக கேட்டார். நான் ஒரு பைத்தியக்காரன் என்று அவர் நினைத்திருப்பாரோ என்னவோ? அவர் கேட்டார்:

'சரி.... நீ எதற்காக இங்கு வந்தாய்?'

'நான் ..... நான் வாழணும்.'

'உனக்கு ஏதாவது வேலை தெரியுமா?'

எதுவுமே தெரியாது என்று நான் கூறினேன். அப்படியென்றால், அங்கிருந்து கிளம்பிச் செல்லும்படி அவர் கட்டளையிட்டார்.

மீண்டும் அந்த வாளைப் பிடித்தவாறு சாலையின் வழியாக நான் பயணித்தேன். பழைய கதைகளின் நினைவில் பசியையும் தாகத்தையும் கொஞ்சம் குழி தோண்டி புதைக்க  முடிந்தது. ஆனால், அதையே தினந்தோறும் செய்து கொண்டிருக்க முடியுமா? நான் வேறு வழியில்லாமல் ஒரு வீட்டிற்குச் சென்று கொஞ்சம் கஞ்சி நீர் கேட்டு வாங்கியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த பாத்திரத்தைக் கழுவி கவிழ்த்து வைக்க வேண்டுமென்று அவர்கள் உறுதியாக கூறினார்கள். எங்களுடைய ஊரிலேயே  மிகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் நான்!

அன்றிலிருந்து நான் ஒரு பிச்சைக்காரனாக ஆனேன். ஆனால், அங்கும் நான் தோற்று விட்டேன். பிச்சையெடுப்பவன் வெற்றி பெற வேண்டுமென்றால், பிச்சை எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு வீட்டிற்குச் சென்றால், எங்கு சென்று அமர வேண்டும் என்று எனக்கு தெரியாது. எப்படி பரிதாபத்தை ஏற்படுத்துவது மாதிரி கேட்பது என்று தெரியாது. எல்லா வீடுகளுக்கும் செல்வதற்கும் பயம். அவர்கள் நாயர்களாக இல்லாமற் போய் விட்டால்........?

இப்படி எதற்கும் லாயக்கு இல்லாமலேயே பதினைந்து நீண்ட வருடங்கள் வயிறு எரிய நான் நடந்து திரிந்தேன். இறுதியில் இந்த சந்திப்பிற்கு வந்து சேர்ந்தேன். இந்த சுமை தாங்கிக் கல்லும் பாதையோர கோவிலும் என்னுடைய குடும்பத்தினரால் உண்டாக்கப்பட்டவை. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இறுதி உறுப்பினர் கிடந்து இறப்பதற்காக உண்டாக்கியிருக்கலாம்.

இந்த சுமை தாங்கிக் கல்லின் மீது சாய்ந்து அமர்ந்தவாறு நான் ஏராளமான விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன். என்னுடைய சிந்தனையின் போக்கு நிறைய மாறியிருக்கிறது. ஆனால், என்னுடைய குணம் மாறவில்லை. மாறவும் செய்யாது.

இந்த வாளையும் செம்பு பட்டயத்தையும் குடும்பத்தில் வைத்து பாதுகாத்திருக்கக் கூடாது. பாதையின் ஓரத்தில் கிடந்து இறக்கும் பிச்சைக்காரனின் கழியை அவனுடன் சேர்த்து புதைப்பதைப் போல, இந்த வாளை அந்த மாமாவுடன் சேர்த்து புதைத்திருக்க வேண்டும். இந்த வாள் பழைய காலத்தின் ஒரு ஆயுதம் என்பதை மட்டும் அறிந்திருந்தால் போதும். அதற்கு மாறாக அதைச் சுற்றி சில கதைகள் வந்து சேர்ந்து உண்மைக்குப் புறம்பான ஒரு மனிதத் தன்மை உண்டாகி விட்டது. என்னுடைய மற்றும் என் மாமாமார்களின் செயல் அதன் மூலம் வழி தவறியது. நூற்றாண்டுகளுக்கு முன்னால் உண்டாக்கப்பட்ட இந்த வாளைப் பிடித்தவாறு நிமிர்ந்து நெளிந்து நாகரீக உலகத்தின் சாலையின் வழியே நடக்கும் என்னுடைய நிலை கிண்டலுக்குரியது. எனினும், இந்த வாளை நான் வழிபடுகிறேன். அதைத்தான் நான் கற்றேன்!

இந்த சுமை தாங்கிக் கல்லின் மீது சாய்ந்து அமர்ந்திருக்கும்போது என்னுடைய பாரம்பரியத்தைப் பற்றி நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. எனக்கென்று சொந்தமான ஒரு அறிவு இப்போது இருக்கிறது. நான் இந்த அளவிற்கு ஏன் கஷ்டப்படுகிறேன்? ஒருவேளை, அந்த மாமாமார்கள் செய்த பாவங்களின் விளைவைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனோ?

பாவங்களா? ஆமாம் .....போர் புரியும் மாமா, போர் முடிந்து திரும்பி வந்தபோது மாணிக்கத்தையும் பொன்னையும் கொண்டு வந்தார் அல்லவா? போர் புரிந்த நாட்டிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்தவையாக இருக்கலாம்! அவரை கொள்ளைக்காரன் என்று குறிப்பிட்டால் என்ன? மந்திரவாதி மாமா - மந்திரவாதம் என்பது தர்மத்திற்குப் புறம்பானதுதானே? கடந்த தலைமுறை தாசில்தார்களைப் பற்றி உங்களுக்குத்
தெரியுமல்லவா?

எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. இந்த வாளையும் செம்பு பட்டயத்தையும் நான் கையில் வைத்துக்கொண்டு நடந்து திரிந்தேன். இதை இனியும் தூக்கிக் கொண்டு திரிவதற்கு யாருமில்லை. இந்த பாதையோர கோவிலிலேயே இதை நினைவுச் சின்னமாக வைத்தால் பரவாயில்லை. எல்லையற்ற பரம்பரைகளுக்கு இனி இதைப் பற்றி - போர் புரிந்த நாயரின் வாளைப் பற்றி - கூறுவதற்கு இருப்பது பரிதாபமான ஒரு கதைதான்.'

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel