Lekha Books

A+ A A-

தூண்டில் - Page 2

ஆமை தலையை மேலும் சற்று வெளியே நீட்டி அசிங்கமான கால்களைப் பரப்பி அவனை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது, பயம் தோன்றியவுடன், ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தான், கல் சற்று முன்னால் சேற்றுக்குள் புதைந்தது.

தவளையின் கூப்பாடு மேலும் உரத்தும், இடைவெளி விட்டும் ஒலித்தது. ஒன்றிரண்டு குளக்கோழிகள் வெளியே வந்து சுற்றுப்புறத்தைக் கூர்ந்து கவனித்து விட்டு, புதருக்குள் திரும்பிச் சென்றன.

மிதந்து கொண்டிருந்த மரத்தடியின் மீது மீண்டும் ஒரு அசைவு உண்டானது. அடுத்த மரணம் மீனுக்குத்தான். இந்த முறை அதைப் பிடித்து இழுக்க தோன்றவில்லை. எல்லா அசைவுக்கும் அதை எதிர்பார்த்து இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது.

அவன் மிதக்கும் மரத்தடியை வெட்டி இழுக்கும் போது, ஒரு மீன் துடித்து இறக்கும். அதே நிமிடத்தில் ஒரு தவளையும் இறக்கும். பிறகு... எஞ்சியிருப்பது அவன்தான். ஒரே  நிமிடத்தில் மூன்று மரணங்கள் நடப்பதாக இருந்தால் - அந்த காட்சியை மனதில் கற்பனை பண்ணி பார்த்தான்.

வானத்தில் கோடு உண்டாக்கியவாறு ஒரு பெரிய வரால் கரையில் ...நெஞ்சில் ஒரு மெல்லிய வேதனையை உணர்ந்தபோது, தூண்டில் கையிலிருந்து நழுவி விழுந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அவனுடைய கழுத்தை நோக்கி இன்னொரு தூண்டிலை வீசி எறிகிறது. அவன் நடுங்கி விட்டான்.

மிதந்து கொண்டிருந்த மரக் கட்டையில் மேலும் பலமான கொத்தல்கள்... இறக்கப் போகும் தவளையின் பரிதாபமான கூப்பாடுகள்... ஆமை தன்னுடைய பயங்கரமான பார்வைகளை உயர்த்தி நான்கு பக்கங்களிலும் பார்த்தவாறு புற்காட்டில் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. குளக் கோழிகள் நிலை கொள்ளாமல் சத்தம் எழுப்பியவாறு பறந்து விலகிச் சென்றன.

கண்கள் தானே மூடின, 'தான் இறக்கப் போகிறோமோ?' - கிழவன் நினைத்தான்.

மரணம் இந்த தூண்டில் இழுக்கப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறது. அது புரிந்தபோது, மரணத்தை ஏமாற்றுவதற்கு தன்னால் முடியாமற் போய் விடுமோ என்ற முட்டாள்தனம் நிறைந்த சிந்தனையும் அவனுக்கு உண்டானது, அதனால் அவன் அசையாமல் அமர்ந்திருந்தான்.

இருள் மேலும் அதிகமானது. வாய்க்காலுக்கும் வயலுக்கும் எதிர்கரையிலிருந்த செம்மண் நிறைந்த நிலப் பகுதியும் அங்கு தரையோடு சேர்ந்து நின்று கொண்டிருக்கும் மாமரங்களின் வெண்ணிற தடிகளில் காணப்படும் கோடுகளும் தெரியாமல் போயின. மகளுடைய சந்தோஷமற்ற குரலும், பசியை வெளிப்படுத்திய கண்களும் மனதிற்குள் ஒரு மின்னலைப் போல கடந்து சென்றன.

அத்துடன் சுற்றுப்புறத்தைப் பற்றிய உணர்வு வந்தது. ஒரு நிமிடத்தின் பாதி கூட கடந்து செல்வதற்கு முன்பு, வெட்டி இழுத்தான்.

நீர் முழுமையாக அசைந்தது. நீர்ப்பரப்பிற்குச் சற்று கீழே கண்களை மூடி நின்று கொண்டிருந்த சிறிய மீன்கள் நான்கு திசைகளுக்கும் பயத்துடன் ஓடி விலகிச் சென்றன. புற்காட்டிற்கு மத்தியில் பாதியளவில் மறைந்திருந்த ஆமை, தலையையும், கால்களையும் உள்நோக்கி இழுத்து, தவம் இருக்க ஆரம்பித்தது. குளக் கோழிகள் பேரமைதியில் மூழ்கின. நீர்ப்பரப்பிற்கு மேலே ஒரு கறுத்த வேரைப் போல நீர்ப் பாம்பு நெளிந்து கொண்டு செல்வதைப் பார்த்தான். காயம் உண்டாகியும், தப்பித்துக் கொண்ட தவளை குதித்துக் குதித்து தன்னுடைய பொந்தை விட்டு வெளியே வந்தது.

கிழவன் கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு பார்த்தான்.

எதுவும் இறக்கவில்லை, அவனும்... தூண்டிலின் நுனியில், பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களைக் கொண்ட ஒரு பருமனான வரால் மீன்... இருள் விழுந்து கொண்டிருந்த வயல்களுக்கு மத்தியில், இடது கையில் தூண்டிலையும், வலது கையில் உயிருள்ள வரால் மீனையும் வைத்தவாறு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, தனக்கு உண்டான பயங்களைப் பற்றியும், தன்னுடன் சேர்ந்து பைத்தியம் பிடித்த நிலையில் இருந்த சூழல்களைப் பற்றியும் அவன் நினைக்கவில்லை.

ஒன்று மட்டும் நிம்மதியை அளித்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று கெட்ட வார்த்தைகளைக் கேட்காமல் படுத்து உறங்கலாம்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel