Lekha Books

A+ A A-

ஐசுக்குட்டி - Page 3

Icukutty

ஐசுக்குட்டியின் உம்மா பேச்சோடு பேச்சாக தன்னை இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகப் பேசியதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவள் மனதில் கோபம் அக்னி ஜ்வாலையெனப் பற்றி எரிந்தது. எனினும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் உதட்டில் புன்சிரிப்பு தவழ அவள் நின்றிருந்தாள்.

அந்தப் புன்சிரிப்புடன், அஸன்குஞ்னு டாக்டரைக் கொண்டு வரப் போயிருக்கும் செய்தியை எல்லாரிடமும் அவள் சொன்னாள். அங்கிருந்த எல்லாருக்கும் அது ஒரு முக்கிய செய்தி மாதிரி ஆனது. எல்லாரும் அந்தச் செய்தியை அறிந்தார்கள். பெண்கள் இதைக் கேட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“அஸன்குஞ்னு டாக்டரைக் கொண்டு வரப் போயிருக்கான்!”

இந்தச் செய்தி பிரசவ அறைக்குள்ளும் நுழைந்தது. அங்கு போய்ச் சொன்னது ஆஸ்யாம்மாதான். இதைக் கேட்டதும் ஐசுக்குட்டிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனினும் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“உனக்கு மட்டும்தான் டாக்டரைக் கொண்டு வந்து பிரசவம் பார்ப்பாங்களா? எனக்கும் பார்ப்பாங்க தெரியுமா?” -என்ற எண்ணத்துடன் ஐசுக்குட்டி ஆஸ்யாம்மாவைப் பார்த்தாள். ஒரு பெண் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது இன்னொரு பெண்ணுக்கு நன்றா கவே தெரியும். இருந்தாலும் அவர்கள் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆஸ்யாம்மா அந்த இடத்தைவிட்டு அகன்றதும், ஐசுக்குட்டி கண்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள். அதே நேரத்தில், இன்னொரு கவலையும் அவள் மனதில் எழுந்தது. டாக்டர் வருவதற்கு முன்பே தான் பிரசவம் ஆகிவிட்டால்...? நேரம் என்று வந்துவிட்டால், தான் என்னதான் முயற்சி பண்ணினாலும் பிரசவம் ஆவதைத் தன்னால் தடுத்து நிறுத்தத்தான் முடியுமா? அவளுக்கு இப்போது கொஞ்சம் பயம் உண்டானது. அதனாலோ என்னவோ அவள் உடல் வியர்க்கத் தொடங்கியது. வயிற்றில் தாங்க முடியாத வேதனையை அவள் உணர்ந்தாள்.

“கடவுளே... என்னைக் கைவிட்ராதீங்க!” -கைகளை உயர்த்தி அவள் மன்றாடினாள். மறைந்துபோன புண்ணிய ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் தன்னுடைய பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அவர்களின் பெயரை வாயால் உச்சரித்தாள் ஐசுக்குட்டி. “என் மைதீனே! என் பத்ரீங்களே! என் மம்புரத்தவுலியா! என் நாகூர் வீராஸாயுவே! -நான் நாகூருக்கு வந்து பொன்னால காணிக்கை செலுத்துறேன்!”

இவ்வளவும் சொல்லி முடித்த பிறகு, ஐசுக்குட்டிக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. வயிற்றில் கிடக்கிற குழந்தை ஆண் குழந்தை என்பதுதான் அது. பெண் குழந்தையாக இருந்தால் அடங்கி ஒடுங்கிப்போய் ஒரு மூலையில் கிடக்கும். இப்போது உள்ளே இருக்கும் குழந்தை அந்த அளவிற்கு அமைதியாக இல்லை. ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு ஆடுவதைப்போல, வயிற்றுக்குள் அவன் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். சொல்லப்போனால் ஐசுக்குட்டியின் இதயத்தைப் பிடித்து அவன் தொங்கிக் கொண்டிருந்தான். அழுத்தமாக அவன் அதைப் பிடித்திருந்தான். கைகளை அவன் பின்னால் கட்டிக் கொண்டிருக்கிறான். இப்போது அவன் ஐசுக்குட்டியின் பிறப்பு உறுப்பில் தலையால் மோதி தன்னை “பேலன்ஸ்” பண்ணிக் கொண்டிருக் கிறான். அடுத்த நிமிடம் எழுந்து ஐசுக்குட்டியின் இதயத்தை எடுத்து கால்பந்து விளையாடினான். அவளுக்குத் தாங்க முடியாத வேதனை. நெருப்பு உடலுக்குள் நுழைவது மாதிரி உணர்ந்தாள். தலைவலி தாங்க முடியவில்லை. தலைக்குள் இருந்து யாரோ பலமாக அடிப்பதுபோல் இருந்தது. அவளுக்கு. உடம்பு முழுக்க ஒரே வலியும் எரிச்சலுமாய் இருந்தது. அவளால் கண்களையே திறக்க முடியவில்லை. மயக்கம் வருவதுபோல் இருந்தது. இருந்தாலும், சக்தியை வரவழைத்துக் கொண்டு அப்படியே படுத்துக் கிடந்தாள். நிமிடங்கள் மணியாக மாறி ஓடிக் கொண்டிருந்தன. இதயம் “டப் டப்” என்று துடித்துக் கொண்டிருந்தது. தலைக்குள் தாங்க முடியாத அளவிற்கு வேதனை. தான் நிச்சயம் இறக்கப் போவது உறுதி என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டாள். அப்போது ஒரு குரல். அதைத் தொடர்ந்து யாரோ நடந்து வரும் ஒலி கேட்டது. அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து அவள் இருக்கும் வாசல் கதவுக்குப் பக்கத்தில் வந்து “டும்” என்று நின்றது. அதைத் தொடர்ந்து “டாக்டர்” என்று பலரும் உச்சரிப்பது அவள் காதில் விழுந்தது. அவ்வளவு தான் ஐசுக்குட்டிக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அடுத்த நிமிடம் குழந்தையின் தலை வெளியே வந்தது. டாக்டர் உடன் இருந்தவர்களுடன் “கிர் கிர்” சப்தத்துடன் பிரசவ அறைக்குள் நுழைந்தார். ஐசுக்குட்டியின் உடலருகில் குனிந்து அவளைத் தொட்டுப் பார்த்தார். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷத்துடன் ஐசுக்குட்டி பிரசவமானாள்.

பூமிக்கு முதல் தடவையாக வந்திருக்கும் தன்னை இவ்வளவு நேரம் தாமதப்படுத்தியதற்காக அவன் பயங்கரமாக அழுதான். அவன் எங்கே படுக்கையை விட்டு எழுந்து வந்து கோபத்தில் தன்னை அடித்து விடுவா னோ என்றுகூட அவள் பயந்தாள். இருந்தாலும் டாக்டர் வந்த பிறகுதானே தனக்குப் பிரசவம் ஆனது என்ற அள வில் அவளுக்கு மகிழ்ச்சியே.

இப்படி ஐசுக்குட்டி பிடிவாதமாக டாக்டரை வரவழைத்து தன்னுடைய கௌரவத்தைக் காப்பாற்றிய கதையை பிரசவம் பார்க்கும் பெண் தன் கணவனிடம் கூற, அந்த மனிதன் தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களிடம் இந்த விஷயத்தைக் கூற, அவர் கள் ஊர் முழுக்க இந்த கதையைச் சொல்ல- எல்லாருக்குமே நாளடைவில் தெரிந்து போனது ஐசுக்குட்டியின் இந்த சாகசக் கதை. இது ஒருபுறமிருக்க, வாண்டுப் பையன்கள் ஐசுக்குட்டி மாதிரியே அவளின் குரலைப் பின்பற்றி நீட்டி முழக்கி “சீக்கிரம் டாக்டரைக் கொண்டு வாங்க” என்று தெருவில் ஐசுக்குட்டி நடந்து செல்லும்போது, அவளைப் பின்தொடர்ந்து கிண்டல் செய்யும்போதுகூட, ஐசுக்குட்டி கொஞ்சம்கூட கோபப்படவே இல்லை. அப்படியே கோபம் உள்ளே தோன்றினாலும், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. நேரில் பார்க்கும்போது அப்படி யாராவது இதை ஞாபகப்படுத்தி சொன்னால்கூட, உதட்டில் புன்னகை தவழ ஐசுக்குட்டி கூறுவாள்:

“ஓ... என்ன இருந்தாலும் நான் பிரசவம் ஆகுற நேரத்துல டாக்டரைக் கொண்டு வந்துட்டாங்களா இல்லியா?”

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel