இரண்டாவது திருமணம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5597
ஒரு பெண் மனைவியாக ஆகியிருக்க வேண்டியதில்லை என்று மனப்பூர்வமாக விருப்பப்படும் நிமிடம் அது. ஒரு பெண்ணாக பிறப்பதே மனைவியாக ஆவதற்குத்தான். ஒரு பெண் குழந்தை தாய்ப்பாலின் மூலமாக படிப்பதே மனைவியாக இருக்கக் கூடிய தர்மத்தைத்தான். அவளுடைய பாரம்பரியமே கணவனை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது எப்படி என்பதுதான். அந்த அப்பிராணிப் பெண்ணுக்கு அது இயலாமற் போய் விட்டது.
பார்கவி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறிச் செல்வதைப் பார்த்தவாறு பரமுபிள்ளை அமர்ந்திருந்தார். அவள் சிறிது தூரம் சென்றதும், திடீரென்று பரமுபிள்ளை ஒரு விஷயத்தை நினைத்துப் பார்த்தார். அவர் பார்கவி அம்மாவை அழைத்தார். பார்கவி அம்மா திரும்பி நின்றாள். அவர் கேட்டார்:
'நீ போறியா? அப்படின்னா... அப்படின்னா... ஒரு விஷயம் இருக்கு.'
* * *
அது என்ன என்ற அர்த்தத்துடன் பார்கவி அம்மா ஈரமான கண்களுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
பரமுபிள்ளை ஒரு தந்தை. சிலரின் தாயின் கணவர்.
'அப்படின்னா... நாம இங்கே விலகி, பிரிந்து விடுவோம்.'
இந்த விஷயத்தில் சிந்தித்துப் பார்ப்பதற்கு பார்கவி அம்மாவிற்கு எதுவுமில்லை. அவள் ஓஹோ என்று சம்மத்தைத் தெரிவிக்கும் வகையில் முனகினாள்.
அது 'உதவி பதிவாளர் நீதிமன்ற'த்திற்குச் செல்லக் கூடிய பயணமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு ஏழாவது நாள் இப்படி ஒரு திருமண உறவு விடுதலை பெற்றது.
* * *
திரும்பவும் தன்னுடைய அக்காமார்களின் வீட்டிற்குத்தான் பார்கவி அம்மா செல்ல வேண்டும். அவள் அங்குதான் சென்றாள். திருமணமாகாத தங்கை என்ற சுமையை இறக்கி வைத்திருந்த அக்காமார்களுக்கு ஒரு சுமையுடன் வந்து நுழைந்த தங்கை ஒரு பிரச்சினையாக இருந்தாள். அவர்கள் நியாயமான சில கேள்விகளைக் கேட்டார்கள்:
'நீ எதற்காக வந்தாய்?'
பதிலுக்காக சிந்திக்க வேண்டிய நிலை பார்கவி அம்மாவிற்கு உண்டாகவில்லை.
'எனக்கு அங்கு இருக்க முடியல.'
அவர்களுடைய அடுத்த கேள்வி மேலும் நியாயம் உள்ளதாக இருந்தது.
'நீ எதற்கு விவாகரத்து செய்தாய்?'
அதற்கும் அந்தப் பெண்ணிடம் உடனடியாக பதில் இருந்தது.
'அந்த திருமணமே எனக்கு தேவையில்லாத ஒன்று.'
அடுத்த கேள்வி சாதாரணமான, தனிப்பட்ட விஷயம் சார்ந்ததாக இருந்தது.
'இனி நீ எப்படி வாழ்வாய்?'
பார்கவி அம்மாவிடம் பதில் இல்லை.
வேண்டியவர்கள் ஒரு வாழ்வதற்கான வழியைக் காட்டினார்கள். அதை விட்டெறிந்து விட்டு, தன்னுடைய விருப்பப்படி அவள் திரும்பி வந்திருக்கிறாள். இனிமேலும் அவளுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
ஓச்சிற கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு நடுத்தர வயதைக் கொண்ட பெண் காவித் துணி அணிந்து துறவிக் கோலத்தில் அமர்ந்திருப்பது தெரிந்தது. அது - பார்கவி அம்மா.
* * *
அதிக நாட்கள் கடக்கவில்லை. இன்னொரு துறவியும் ஓச்சிற கோவிலுக்குச் சொந்தமான இடத்திற்கு வந்தார். அது - பரமுபிள்ளை. அங்கு மீண்டும் அந்த மனைவியும் கணவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். மாறிய சூழ்நிலையில், மாறிய சிந்தனைப் போக்கில் எழுபது வயதான பரமுபிள்ளைக்கு, தன்னை அக்கறையுடன் பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆள் வேண்டும். அது இல்லாமற் போய் விட்டது. அவர் ஓச்சிற கோவிலுக்கு வந்து விட்டார். யாருமே இல்லாத பார்கவி அம்மாவிற்கு பரப்ரம்ம சன்னிதி அபயம் தேடும் இடமாக ஆனது. அங்கு அவர்களுக்கு நடுவில் ஜானகி அம்மா இல்லை பரமுபிள்ளையின் எஞ்சியிருக்கும் சொத்துக்களைப் பற்றிய சிந்தனை இல்லை, படுக்கையறைக்குள் உண்டாகக் கூடிய உணர்ச்சி வசப்படும் வாய்ப்புகள் இல்லை. கவனிப்பும், பாதுகாப்பும் வேண்டும் என்று நினைக்கும் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்தன. முதுமைக் காலத்தின் குடும்ப வாழ்க்கைக்கு அந்த வகையில் பொருத்தமான ஒரு சூழலும் உண்டானது.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,