
உணர்ச்சிகள் நிறைந்த முத்தத்தின் சத்தம் அங்கு கேட்பதைப் போல இருந்தது. உடலுறவு ஆசையை வெளிப்படுத்தும் சீட்டியடிக்கும் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அங்கு எதிரில் இருந்த சுவற்றில் எவ்வளவோ இணை சேரல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பின்னால் கோபத்துடன் யாரோ பற்களைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வண்டு பார்கவி அம்மாவின் தலையில் மோதி தடுமாறியவாறு பறந்து சென்றது. குத்து விளக்கின் தீபத் தழல் ஆடி அசைந்து கொண்டிருந்தது. யாருகோ சொந்தமான படுக்கையறைக்குள் அதிகாரமில்லாமல் நுழைந்து வந்து விட்டோமோ என்பதைப் போல ஒரு எண்ணம் பார்கவி அம்மாவிற்கு உண்டானது.
'நீ ஏன் அழுதாய்?'
பரமுபிள்ளை பார்கவி அம்மாவின் தோளில் கையை வைத்தவாறு கேட்டார். அழுததாக பார்கவி அம்மாவிற்கு தோன்றவில்லை. பயந்தோம் என்பது அவளுக்குத் தெரியும்.
பரமுபிள்ளை பார்கவி அம்மாவை அந்த கட்டிலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். அவள் எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக தன் கணவரின் மென்மையான அணுகு முறையில் சிக்கியவாறு அமர்ந்திருந்தாள். ஆனால், புதிய மணப் பெண்ணுக்கே இருக்கக் கூடிய பதைபதைப்பு அவளுக்குள் இருக்கிறதோ என்னவோ... யாருக்குத் தெரியும்?
ஒருவனுக்கு சிறிது கஞ்சித் தண்ணீரைத் தயார் பண்ணி தருவதற்கு ஒருத்தி வேண்டும். அவளுக்கு வாழ்வதற்கான ஒரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டும்- இதுதான் திருமண உறவா? அப்படியென்றால், பரமுபிள்ளைக்கும் பார்கவி அம்மாவிற்குமிடையே உண்டாகியிருக்கும உறவு உண்மையான திருமண உறவுதான். அதையும் தாண்டி என்னவெல்லாமோ இருக்கின்றன. இங்கு பரமுபிள்ளை என்ற மணமகனுக்கு அனுபவங்கள் இருக்கின்றன. நினைவுகள் இருக்கின்றன. சந்தோஷம் உண்டாகியிருக்கிறது. ஒரு மனைவியின் கவனிப்புகள், ஒரு மனைவி தரக் கூடிய ஆனந்தங்கள்- இவை அனைத்தையும் அவர் அனுபவித்திருக்கிறார். இனி ஒருத்தியை இதய அறைக்குள் வைத்து அன்பு செலுத்துவதற்கு அவரால் முடியுமா? இன்னொரு பக்கத்தில் ஒரு இதய அறை நீண்ட காலமாக ஒரு கடவுளை பிரதிஷ்டை செய்வதற்காக தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்ப்புகள் உண்டாகி தங்கி நின்று கொண்டு, ஆரோக்கியமற்ற ஒரு சூழ்நிலை தானாகவே உண்டாக்கப்பட்டிருக்கிறது. அங்கு இன்னொரு பெண்ணைத் தொடாத கடவுள் நுழைந்து சென்றாலும், அந்த கடவுளால் மிகுந்த நாயகத் தன்மையுடன் அங்கு குடி கொண்டிருக்க முடியுமா? யாருக்குத் தெரியும்? அதுவும் சந்தேகம்தான். பொருத்தமற்ற ஒரு உறவு!
* * *
அந்த மனைவி தன் கணவரின் அன்றாடச் செயல்கள், பழக்க வழக்கங்கள் - அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டாள். மிகவும் அதிகாலையிலேயே அவள் எழுந்து போய் விட்டாள். அந்த கணவர் அவளை அந்த அளவிற்கு அதிகாலை வேளையில் போகாமல் இருக்கும் வகையில் கட்டிலுடன் சேர்த்து பிடித்துக் கொண்டிருக்கவில்லை. பொழுது புலர்வதற்கு முன்பே காலையில் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளை அவள் செய்து முடித்தாள். அப்படித்தான் அவருடைய முதல் மனைவி நடந்து கொண்டாள். அவருடைய பிள்ளைகளின் தாய் எப்படி வாழ்ந்தாளோ, அதே போல அவளும் வாழ வேண்டும். பகல் வேளையில் உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்தபோது, அவர் சொன்னார்:
'எது எப்படி இருந்தாலும், என்னுடைய ஜானு வைக்கும் குழம்பின் ருசி வரவில்லை.'
கூறி விட்டு அவர் சற்று சிரித்தார். அவருடன் சேர்ந்து சிரிக்க அவளால் முடியவில்லை. அவளுடைய கணவரின் முதல் மனைவியின் ஆவி அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணைப் பற்றிய நினைவுகளைக் கொண்டிருக்கும் மனிதரின் மனைவி, அந்த வகையில் சில ஆவிகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பார்கவி அம்மாவின் கண்கள் ஈரமாயின. ஆனால், அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவமானத்திற்குள்ளான மனைவி அன்று இரவு நீண்ட நேரம் அழுதாள். அந்த அழுகைக்கான காரணம் என்ன என்று கணவர் கேட்கவில்லை. அவர் உறங்கிக் கொண்டிருந்தார். உணவு சாப்பிட்டு முடித்து விட்டு, சுகமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் தேவையாக இருந்தது. ஒருவேளை- அழுது அழுது பார்கவி அம்மா கண் அயர்ந்திருக்கலாம். இரவின் இருள் சுருள்களுக்கு மத்தியிலிருந்து, அந்தப் படுக்கையறையின் கதாநாயகியான பெண்ணின் திருப்தி அடையாத ஆசைகள் ஆழமாக இறங்கி, அவளுக்கு முன்னால் கெட்ட கனவுகளாக நடனமாடிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு தடவைகள் பார்கவி அம்மா சத்தம் போட்டு கத்தினாள். தூக்கத்திலிருந்து கண் விழித்து விஷயம் என்ன என்று பரமுபிள்ளை விசாரித்தார்.
பார்கவி அம்மா பொறுப்புணர்வு கொண்ட ஒரு மனைவியாகத்தான் அங்கு நடந்து கொண்டாள். தன் கணவரை அவள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள். பக்கத்து வீடுகளிலிருக்கும் பெண்களிடமிருந்து இறந்து போன ஜானகி அம்மா எப்படி இருந்தாள் என்பதை அவள் தெரிந்து கொண்டாள். கணவரை கவனமாக பார்த்து, கணவருக்காக வாழ்ந்து மரணமடைந்த ஒரு பெண்ணாக அவள் இருந்திருக்கிறாள். ஒரு மனைவி இல்லாமல் பரமுபிள்ளையால் வாழ முடியாது என்ற நிலையை ஜானகி அம்மா உண்டாக்கி வைத்திருந்தாள். அந்த வாழ்க்கைக்கு ஒரு தொடர்ச்சி தேவைப்பட்டது. அந்தத் தொடர்ச்சியை மிகவும் கவனத்துடன் முன்னோக்கி எடுத்துக் கொண்டு செல்வதுதான் பார்கவி அம்மாவின் கடமையாக இருந்தது. அந்தக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டு செல்வதில் என்ன காரணத்தாலோ தனக்கு ஒரு இயலாமை இருக்கிறது என்று பார்கவி அம்மாவிற்குத் தோன்றியது.
அந்த வீட்டில் சண்டை உண்டாகவில்லை. கிண்டல்கள் உண்டாகவில்லை. போராட்டங்கள் உண்டாகவில்லை. ஒரு நாள் காலையில் ஒரு சுமையுடன் பார்கவி அம்மா பரமுபிள்ளையின் முன்னால் போய் நின்றாள். அவள் புறப்படுவதற்கு அனுமதி கேட்கிறாள். பரமுபிள்ளை கேட்டார்: 'நீ போறியா?'. உணர்ச்சியே இல்லாமல் பார்கவி அம்மா சொன்னாள்: 'ஆமாம்... என்னால் இந்த வாழ்க்கை வாழ முடியாது.'
'வாழ முடியாத அளவிற்கு நான் உனக்கு என்ன செய்தேன்?'
'எதுவும் செய்யல. அதனால்தான் என்னால முடியல.'
பரமுபிள்ளைக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை தான் கூறியதன் அர்த்தம் முழுமையாக பார்கவி அம்மாவிற்கும் தெளிவாக புரியாமலிருந்திருக்கலாம்.
பரமுபிள்ளை கேட்டார்: 'நீ போய் விட்டால், நான் என்ன செய்றது?'
ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் ஒரு கணவருக்காக காத்திருந்த அந்தப் பெண் சொன்னாள்:
'அதை நானும் சிந்திக்கத்தான் செய்யிறேன்.'
அந்தப் பெண் வெடித்தாள்:
'ஓ. இப்படிப்பட்ட ஒரு அனுபவம் உண்டாகியிருக்க வேண்டியதே இல்லை.'
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook