Lekha Books

A+ A A-

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள் - Page 2

Naam vasippadharkku munthiri thoppugal

அவனுடைய முகம் வெளிறிப் போவதை என்னால் பார்க்க முடிந்தது. அவன் உருக்கத்துடன் கையில் ரோஜா மலருடன் விழித்துக்கொண்டு நின்றிருந்தான். ஒரு சிறுமி ஆட்டோக்ராஃப் புத்தகத்துடன் வந்தாள். மற்றவர்கள் சந்தீபனிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்போது உள்ளே இருந்த கதவை சற்று திறந்து ஒரு நர்ஸ் லேடி டாக்டரை அழைத்தாள். டாக்டர் அவளிடம் என்னவோ பேசிவிட்டு சந்தீபனிடம் சொன்னாள்: “சரி... நாம் இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம்...'' மற்றவர்களிடம் சொன்னாள்: “ப்ளீஸ், எக்ஸ்க்யூஸ் அஸ்...'' அங்கிருந்தவர்கள் பிரிந்து சென்றார்கள். லேடி டாக்டர் சந்தீபனின் முதுகைத் தட்டியவாறு சொன்னாள்: “டோண்ட் ஒர்ரி... எல்லாம் சரியாகும். இப்போதெல்லாம் அபார்ஷன் என்பது ஒரு சாதாரண விஷயம்...''

நாங்கள் மூவரும் உள்ளே நுழைந்தோம். அங்கிருந்த குளிர்ந்து காணப்பட்ட ஒரு அறையில், ஒரு நீளமான மேஜையில், ஒன்றிரண்டு ஸ்பாட் லைட்டுகளுக்குக் கீழே, ஒரு தொலைக்காட்சியில் படுத்திருப்பதைப்போல மாதுரி படுத்திருந்தாள். அவள் உலோகத்தால் ஆனதைப் போன்ற ஒரு ஆடையை அணிந்திருந்தாள். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன், மாதுரி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். சந்தீபன் கதவிற்கு அருகிலேயே அசையாமல் நின்றிருந்தான்.

“போங்க... போங்க... பக்கத்துல போங்க. எந்தவொரு பிரச்சினையும் இல்லை.'' டாக்டர் சந்தீபனிடம்
சொன்னாள். ஆபரேஷன் டேபிளின்மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவன் அருகில் செல்லாமல் இருக்கிறான் என்று அவள் நினைத்தாள். சந்தீபன் ஒரு கையால் என்னுடைய தோளைப் பற்றினான். அவனையும் என்னையும் மாதுரியால் சரியாகப் பார்க்க முடியவில்லை. எங்களுக்கு நேராக கூர்ந்து பார்த்துவிட்டு அவள் தேம்பிக்கொண்டே அழைத்தாள்: “சந்தீபா! சந்தீபா!''

அவன் அசைவே இல்லாமல் நின்றிருந்தான். நான் அவனிடம் மெதுவான குரலில் சொன்னேன்: “நீ அருகில் சென்று ஏதாவது சொல்லு...''

“அது யார்? ராதாவா?'' மாதுரி அழுதுகொண்டே கேட்டாள். அவள் என்னை ராதா என்றுதான் அழைப்பாள்.

நகரத்தில் வாழ்பவர்களின் ஒரு நாகரீகம்...

நான் அடி விழுந்ததைப்போல அதிர்ச்சியடைந்து சொன்னேன். “ஆமாம்...'' தொடர்ந்து சந்தீபனை முன்னோக்கித் தள்ளினேன். அவன் பயிற்சியில் ஈடுபடும் பட்டாளத்துக்காரனைப்போல மேஜைக்கு அருகில் நடந்தான். மாதுரியை நோக்கி ஒரு இயந்திரத்தைப்போல கையை நீட்டினான். அவள் அதைப் பற்றினாள். அவன் அவளுடைய கையைக் குலுக்கினான். பிறகு கையை விடுவித்தான். பட்டாளத்தில் நடப்பதைப் போல திரும்பி நடந்து வெளியே வந்தான். நானும் அவனைப் பின்தொடர்ந்தேன். டாக்டர் வெளியே தலையை நீட்டிக்கொண்டே சொன்னாள்: “முடிந்த பிறகு நாங்கள் அழைக்கிறோம்.''

வரவேற்பறை ஆட்கள் யாரும் இல்லாமல் வெறுமனே இருந்தது. நான் ஒரு ஸோஃபாவிலும் சந்தீபன் இன்னொரு ஸோஃபாவிலும் போய் உட்கார்ந்தோம். எனக்கு எதுவும் பேச வேண்டுமென்று தோன்றவில்லை. அவனுடைய சிரமமான சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பேயைப்போல வெறித்த கண்களுடன் அவன் அமர்ந்திருந்தான். ஓரிரண்டு முறை சிகரெட்டை எடுத்தான். அதை புகைக்காமல் திரும்பவும் வைத்தான். உள்ளேயிருந்து சிறிய அழுகைச் சத்தம் கேட்டதைப்போல எனக்கு சந்தேகம் உண்டானது. அவன் என்னைப் பார்த்தான். உடனே தெளிவான ஒரு அழுகைச் சத்தம் வருவதை நாங்கள் கேட்டோம்.

சந்தீபன் எழுந்து நின்றான். நான் அவனுக்கு அருகில் சென்றேன். அவன் சொன்னான்: “ராதாகிருஷ்ணா, நீ இங்கேயே இரு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்.''

“டேய்...'' நான் சொன்னேன். “இப்போது மது அருந்தாமல் இருப்பதுதான் நல்லது. இனியும் மீதி வேலைகள் இருக்கின்றனவே! அது மட்டுமல்ல; உன்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. நீ பயந்து போய், வயிற்றுப் போக்கு உண்டாகி, மது அருந்திவிட்டு எங்காவது இருந்தால்...? நான் இங்கே மாட்டிக்கொள்வேன். அதனால் நீ எங்கேயும் போக வேண்டாம்.''

அவன் ஸோஃபாவில் போய் உட்கார்ந்தான்.

பின்னோக்கிச் சாய்ந்து கண்களை மூடினான். நான் எழுந்து டாக்டரின் கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ அறிவியல் சம்பந்தப்பட்ட நூல்களின் பெயர்களை வாசித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து திரும்பிவந்து பழைய, கிழிந்து போய் காணப்பட்ட ஒரு சினிமா மாத இதழை வாசித்தேன். அதன் இறுதி பக்கத்தை அடைந்தபோது, உள்ளே இருந்த அறையின் கதவு திறந்தது.

டாக்டர் புன்னைகத்துக் கொண்டு, சற்று வியர்வை வழிய வெளியே வந்தாள். சந்தீபன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தான். நான் அவனைத் தொட்டு எழுப்பினேன். டாக்டர் சைகை செய்ததைத் தொடர்ந்து அவன் உள்ளே சென்றான். உள்ளேயிருந்து மீண்டும் தேம்பி அழும் சத்தங்கள்...

சந்தீபன் வெளியே வந்தான். அவன் மிகவும் கவலையில் இருக்கிறான் என்று அந்த முகத்திலேயே எழுதி வைக்கப்பட்டிருந்தது. எனக்கு அருகில் வந்து அவன் கூறினான்: “ராதாகிருஷ்ணா, இன்று நான் ஹாஸ்டலுக்குப் போகமுடியாது என்று மாதுரி கூறுகிறாள்.

இன்றிரவு நான் அவளுடன் இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறாள். என்ன செய்வது? நீ அவளிடம் கொஞ்சம் பேசுகிறாயா?''

“சந்தீபா, நீ நல்ல ஹோட்டலில் அறை எடு. பிறகு இரவில் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, காலையில் ஹாஸ்டலில் கொண்டுபோய் விடு.''

“ஹோட்டல் அறையா?'' அவன் கேட்டான்.

“நீ காதலிப்பதற்கு விருப்பம்போல ஹோட்டலில் அறை எடுப்பாய் அல்லவா? அதேபோல் ஒரு அறையை எடு.''

“டேய்... அதுவல்ல...'' அவன் சொன்னான்: “அவளுடன் இருக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. நீ என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோ.''

“உனக்கென்ன பயமா? உன்னை அவள் ஏதாவது செய்துவிடுவாளோ என்று பயப்படுறியா? இல்லா விட்டால் அந்தக் குழந்தையின் ஆவி வந்து உன்னை பிடிச்சிடப்போகுதோன்னு தோணுதா? பயப்படாதேடா. நீயும் அவளும் கட்டிப் பிடிச்சு தூங்குங்க. கொஞ்சம் கண்ணீர் உன் உடல்மீது விழும். அவ்வளவுதான்...''

அப்போது சந்தீபன் சொன்னான்: “டேய், கட்டிப் பிடிக்கிறது இருக்கட்டும்... அவளைப் பார்க்க வேண்டுமென்றுகூட எனக்குத் தோன்றவில்லை. அவளுடன் சேர்ந்து ஒரு இரவு எப்படி இருக்க முடியும்?''

சந்தீபன் ஒரு கையால் தலையில் அடித்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான்: “நீயும் எங்களுடன் வரணும்.''

“எங்கே?'' நான் கேட்டேன்.

“ஹோட்டல் அறைக்கு. சிறிது நேரம் கழித்து நீ போய் விடு. ஆனால், முதலில் நீ வேண்டும்.''

எனக்கு சத்தம் போட்டு சிரிக்கவேண்டுமென்று தோன்றியது. நான் சொன்னேன்: “டேய் சந்தீபா, இதுவரை நான் ஒரு பெண்ணுடன் சேர்ந்து இரவு நேரத்தில் தூங்கியதில்லை. இப்போது... இதோ... உனக்கும் உன்னுடைய காதலிக்கும் இரவு வேளையில் துணையாக நான்! நான் சிரிக்க வேண்டுமா அழவேண்டுமா என்று நீ சொல்லு.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel