Lekha Books

A+ A A-

விருந்தாளி - Page 3

virunthali-sakkariya

"ஏன்... ஒண்ணுக்கு இருந்ததைச் சொல்லலியா?'' இன்னொரு ஆள் பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னான்.

"அது இருக்கட்டும்... மூத்திரம் வருதுன்னா யாரால அதை நிறுத்தி வைக்க முடியும்?'' இன்னொரு ஆள் தன் கருத்தைச் சொன்னான்.

வெளியே இருந்து அவர்களைப் பார்ப்பதற்காக வந்திருந்த அந்த புதிய இளைஞன் கேட்டான்: "சார்... தூக்குல மாட்டி தொங்குறப்போ, கயிறோட முடிச்சு சரியா கழுத்தோட எந்தப் பக்கத்துல இருக்கணும்?''

டாக்டர் சொன்னார்: "சரியாச் சொன்னா, முடிச்சு கழுத்தோட வலது பக்கத்துலயோ இல்லாட்டி இடது பக்கத்துலயோதான் இருக்கணும். ஒரு சிகரெட்டை இங்கே எடு... இதைப் பிடிக்காம இருந்து என்ன செய்யப் போறோம்? என்னைக்கு இருந்தாலும், நாம சாகத்தான் போறோம். அது சிகரெட் பிடிச்சதுனாலதான்னு என்ன நிச்சயம்?''

"அந்தக் காலத்துல எந்த ராஜாவை ஒரு பழத்துக்குள்ளே புழுவாக வந்து எமன் பிடிச்சுக்கிட்டுப் போனான்?'' ஜன்னலைத் திறந்து விட்டவாறு ஒருவன் கேட்டான்: "என்னால இந்தப் புகையைத் தாங்க முடியல..''  அவன் சொன்னான்.

"எமன் இல்ல முட்டாள்... தட்சகன்...'' ஒருவன் சொன்னான்.

"ரெண்டும் ஒண்ணுதான்.'' ஜன்னலைத் திறந்த ஆள் சொன்னான்.

"இதுகூடத் தெரியலைன்னா நீ சரியான முட்டாள்தான்! நான் சொல்றேன்!''

புதிதாக வந்திருக்கும் இளைஞன் யாரிடம் கேட்பது என்றில்லாமல் பொதுவாகக் கேட்டான்: "என் அம்மாவோட கழுத்துல முடிச்சு இடது பக்கம் இருந்துச்சு. ஆனா நாக்கு வெளியே தொங்கல...''

அறையில் சில நிமிடங்களுக்கு ஒரே நிசப்தம். ஒருவன் தின்னும் பொருட்கள் இருந்த டப்பாவைத் தன் பக்கம் இழுத்தான்.

டாக்டர் லேசாகச் சிரிக்க முயன்றவாறு சொன்னார்: "சரியா புரியல... அதாவது...''

இளைஞன் சொன்னான்: "என்னோட அம்மா தூக்குல மாட்டித்தான் இறந்தாங்க. ஆனா, நாக்கு வெளியே வரல... இந்த விஷயத்தை யாரோ அன்னைக்கு சொன்னது இப்போ என் ஞாபகத்துல வருது...''

"ஸாரி...'' ஒரு ஆள் எங்கோ இருந்து சொன்னான்.

இளைஞன் அந்த ஆளைப் பார்த்து புன்சிரிப்பைத் தவழ விட்டான்.

"இது எப்போ நடந்துச்சு?'' டாக்டர் கேட்டார்.

"1984-ல...'' இளைஞன் சொன்னான்.

"அம்மாவுக்கு அப்போ என்ன வயது?'' டாக்டர் விசாரித்தார்.

"அம்பத்தொண்ணு.''  இளைஞன் சொன்னான்.

"என் வயது...'' டாக்டர் சொன்னார்.

நான் கேட்டேன்: "அம்மா எதுக்காக தற்கொலை பண்ணிக்கணும்?''

"அவங்க மனசில ஏகப்பட்ட குழப்பங்கள்...பிள்ளைங்க எல்லாம் பிரிஞ்சு தனித்தனியா போயிட்டோம். அவங்க மட்டும் தனியா இருந்தாங்க. அப்பா தற்கொலை பண்ணி மூணு வருஷம் கழிச்சு, அம்மாவும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க...''

அறை மீண்டும் அமைதியில் மூழ்கியது. கட்டிலில் படுத்திருந்த ஆள் நீண்ட பெருமூச்சு விட்டாறு உறங்கிக் கொண்டிருந்தான். டாக்டர் எழுந்து போய் ஜன்னலுக்கு அருகில் நின்று வெளியே பார்த்தார். நான் வேஷ்டி நுனியால் என் கண்களில் இருந்த ஈரத்தைத் துடைத்தேன்.

ஒரு ஆள் குழையும் நாக்குடன் கேட்டான்: "அம்மா... அப்பா... ரெண்டு பேருமே தற்கொலையா பண்ணிக்கிட்டாங்க? இது உண்மைதானா? என்னால நம்பமுடியல...''

இளைஞன் அந்த ஆளைப் பார்த்து லேசாகச் சிரித்தான்.

பத்திரிகைச் சொந்தக்காரர் சொன்னார்: "இது உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்ல... ரவியோட அப்பாவும் அம்மாவும் தற்கொலைதான் பண்ணிக்கிட்டாங்க!''

குழைந்த நாக்குக்காரன் சொன்னான்: "ஸாரி...''

டாக்டர் கேட்டார்: "அப்பாவும் தூக்குல தொங்கித்தான் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரா?''

இளைஞன் சொன்னான்: "ஆமா... நான்தான் அப்பாவோட உடலைக் கிழே இறக்கிவிட்டதே! அவரோட நாக்கும் வெளியே தொங்கல... ஆனால் முகத்துல சாந்தம் தெரியல... அம்மாவோட முகம் ரொம்பவும் சாந்தமா இருந்துச்சு...''

"அப்படி இருக்குறது உண்டுதான்.'' டாக்டர் சொன்னார்: "அவங்களுக்கு நீங்க எத்தனை பிள்ளைங்க?''

"அஞ்சு பேர்.'' இளைஞன் சொன்னான்: "எங்க வீட்லயே நான்தான் கடைசி...''

சாய்வு நாற்காலியில் குழைந்த நாக்குடன் அமர்ந்திருந்த ஆள் சொன்னான்: "எங்க வீட்ல நான்தான் கடைசி. அதுதான் கஷ்டம்!''

இளைஞன் கேட்டான்: "சார்... தற்கொலைன்ற விஷயம் தலைமுறை தலைமுறையா தொடர்றதுக்கு வாய்ப்பு இருக்கா?''

கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஆள் எழுந்து சுற்றிலும் பார்த்தவாறு கேட்டான்: "என்ன விஷயம்? குப்பிகள் காலியாயிருச்சா என்ன... எல்லோரும் சீரியஸா உட்கார்ந்திருக்கீங்க?''

அவன் தன் வலதுகண் பக்கத்தில் சுண்டு விரலை வைத்து, கண்களை உருட்டியவாறு உரத்த குரலில் சத்தமிட்டான்: "ட்டே...!''

யாரும் சிரிக்கவில்லை.

"ஸாரி... தப்பு பண்ணிட்டேன்...'' அவன் சொன்னான். பிறகு சுண்டுவிரலை வாய்க்குள் நுழைத்து, உதடுகளை முழுமையாக மூடிக்கொண்டு "ட்டே...'' என்று சொல்ல முடியாமல் உட்கார்ந்திருந்தான் அவன்.

அப்போது வெளியே இருந்து வந்திருந்த அந்த புதிய இளைஞன், அந்த ஆளுக்கு நேராகத் தன் சுண்டுவிரலைத் துப்பாக்கிபோல நீட்டிக் கொண்டு புன்சிரிப்பு தவழ சொன்னான்: "ட்டே! ட்டே...''

இளைஞன் எல்லாரிடமும் விடைபெற்றான். பிறகு தன் பையை எடுத்துத் தோளில் தொங்கவிட்டவாறு, கதவைத் திறந்து அறையை விட்டு வெளியே போனான். அறை இப்போதும் அமைதியாகவே இருந்தது. விரலை வாயில் வைத்துக்கொண்டிருந்த நண்பன், அதை வெளியே எடுத்து தன் சட்டையில் துடைத்தான்:

"ஹா... ஹா... ஹா....'' அவன் சொன்னான்: "சரி... இப்போ நாம பூசணிக்காயைப் பத்திப் பேசலாமா?''

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கௌரி

கௌரி

January 30, 2013

நிலவு

நிலவு

April 2, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel