
‘‘இதைத் தருவதற்காக நான் வந்தேன்.’’ - அவள் சொன்னாள்.
‘‘பிடிக்கல... அப்படித்தானே?’’ - அவள் சொன்னாள்.
‘‘பிடிக்கலைன்னு யார் சொன்னது? நான் இதைப் படிச்சு முடிச்சிட்டேன்.’’
‘‘இவ்வளவு சீக்கிரமாவா?’’ - அவள் ஆச்சரியபட்டாள்.
‘‘ம்.. இதைப்போல நாவல் வேறு ஏதாவது இருந்தால் தா ரேகா. படிக்கிறதுக்கு சுவாரசியமா இருக்கு.’’
ரேகா, ஷெல்டனின் வேறொரு நாவலை எடுத்துத் தந்தாள். படித்து மகிழட்டும்.
‘சரோஜம் ஆன்ட்டிக்காக நான் ஒரு திருமண விளம்பரம் தயார் பண்ணி வைத்திருக்கிறேன்’ என்று கூறலாமா? அப்படிக் கூறினால், அவளுடைய பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும்?
‘‘சரோஜம்...’’ - திடீரென்று கீழேயிருந்து மாதவன் அண்ணனின் அழைப்புச் சத்தம் கேட்டது.
‘‘மற்ற விஷயம் ஆரம்பமாகுற நேரம் வந்திருச்சு. ஏதாவது தொட்டுக்குறதுக்கு வேணும். அதுக்குத்தான் இந்த அழைப்பு...’’ - சரோஜம் ஆன்ட்டி சொன்னாள்.
அவளுடைய குரலில் வெறுப்பு கலந்திருந்தது. அதற்குமேல் எதுவும் கூறுவதற்கு நிற்காமல் அவள் கீழே இறங்கிச் சென்றாள்.
ரேகா கடிகாரத்தைப் பார்த்தாள். ஏழரை மணி ஆகியிருந்தது. இனி ஒருமணி நேரம் மாதவன் அண்ணனின் தீனியும் குடியும்தான். ஒன்பது ஆவதற்கு முன்னால் அவர் தூங்க ஆரம்பித்துவிடுவார்.
இங்கு அவள் தங்க வந்து நாளையுடன் ஒரு மாதம் ஆகிறது. பேயிங் கெஸ்ட்தான் பணம் கொடுக்க வேண்டும். சரோஜம் ஆன்ட்டியிடம் கேட்டால் பணம் எவ்வளவு என்று கூறுவாள் என்று தோன்றவில்லை.
சிறிது நேரம் சென்றதும் ரேகா கீழே இறங்கிச் சென்றாள். மாதவன் அண்ணன் சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டிருந்தாள். அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். ரம்மின் வாசனை வந்த ஒரு புன்னகை அது.
‘‘ரேகா, வீட்டுக்கு எதுவும் போகலையா?’’- மாதவன் அண்ணன் கேட்டார்.
‘‘என்ன மாதவன் அண்ணா! என்னை வீட்டுக்கு விரட்டணும்னு நினைக்கிறீங்களா?’’ - அவள் விளையாட்டாக கேட்டாள்.
‘‘அப்பாவையும் அம்மாவையும் பார்க்கணும்ன்ற ஆசை இல்லையா’ன்னு கேட்டேன். வந்து இப்போ ஒரு மாதம் ஆயிடுச்சே!’’
அது ஒரு ஞாபகப்படுத்தலைப்போல அவளுக்குத் தோன்றியது. மாதம் ஒன்றாகிவிட்டது.
‘‘மாதவன் அண்ணா உங்கக்கிட்ட ஒரு விஷயத்தைக் கேக்குறதுக்குத்தான் நான் இப்போ வந்தேன். இங்க தங்குறதுக்கு நான் எவ்வளவு ரூபாய் தரணும்?’’ - அவள் கேட்டாள்.
மாதவன் அண்ணன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினார்.
‘‘அதாவது... தனியா தங்குறதுக்கு இந்த மாதிரி ஒரு அறை ஆயிரம் ரூபாய்க்குக்கூட கிடைக்காது. பிறகு உணவு... மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் தந்தால் போதும்.’’
‘‘நாளைக்கு நான் சரோஜம் ஆன்ட்டி கையில கொடுத்திடுறேன்.’’
‘‘வேண்டாம் மகளே இங்கே பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிக்கிறதே நான்தான்’’- மாதவன் அண்ணன் சொன்னார்.
கதவுக்குப் பின்னால் அப்போது சரோஜத்தின் பாதி உருவம் தெரிவதை அவள் பார்த்தாள். கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்பறவை அவள் என்று அப்போது ரேகா நினைத்தாள்.
ரேகாவும் சரோஜமும் சேர்ந்து வழக்கம்போல இரவு உணவு சாப்பிட்டார்கள். மாதவன் அண்ணன் வெறுமனே வாசலில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்.
‘‘சரோஜம் ஆன்ட்டி, கொஞ்ச நேரம் கழிச்சு மாடிக்கு வர்றீங்களா?’’- அவள் கேட்டாள்.
‘‘எதற்கு ரேகா?’’
‘‘ஒரு விஷயத்தைப் பற்றி பேசணும்.’’
அவள் ரேகாவையே பார்த்தாள்.
‘‘வர்றேன்.’’
எந்த விஷயத்தைப் பற்றி பேசப்போகிறாள் என்பதைப் பற்றி யூகிக்க சரோஜத்தால் முடியவில்லை என்பது அவளுடைய முகத்தைப் பார்க்கும்போதே ரேகாவிற்குத் தெரிந்தது.
படிகளில்காலடிச் சத்தம் வந்தபோது அவள் தன் கைவிரல் நகங்களில் சாயத்தைப் பூசிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். சரோஜம் அறைக்குள் நுழைந்து ஆர்வத்துடன் நெய்ல் பாலீஷின் புட்டியை எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
‘‘இந்த வண்ணம் நல்லா இருக்குதா ஆன்ட்டி?’’ - மெரூன் நிறத்திலிருந்த விரல் நகங்களைக் காட்டியவாறு ரேகா கேட்டாள்.
‘‘பரவாயில்ல... எனக்குப் பிடிச்சிருக்கு’’ - அவள் சொன்னாள்.
ரேகா அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு விரல்களையே பார்த்தாள். நல்ல அழகான நீளமான விரல்கள்.
‘‘நான் இந்த விரல்களில் பாலீஷ் போடட்டுமா?’’- அவள் கேட்டாள்.
‘‘அய்யோ வேண்டாம்’’ - உடனடியாக கையைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டாள்.
‘‘சரோஜம் ஆன்ட்டி, உங்களுக்குன்னு இருக்குற அழகை இப்படி வீண் செய்யக்கூடாது மூடிப் புதைச்சு வச்சு நடக்கக்கூடாது. அந்தக் கையை இங்கே தாங்க’’ - அவள் சொன்னாள்.
‘‘வேண்டாம் ரேகா... நான் அழகுபடுத்திக்கொண்டு நடக்குறதை மாதவன் அண்ணன் விரும்பமாட்டார்.’’
‘‘சரோஜம் ஆன்ட்டி, உங்க சம்பளம் முழுவதையும் பறிச்சு வச்சிக்கிட்டு மாதவன் அண்ணன் தண்ணி அடிக்கிறதைப் பற்றி உங்களுக்கு விருப்பமின்மை எதுவும் இல்லையா?’’
அவளை வெறுமனே பார்த்தாளே தவிர, அதற்கு சரோஜம் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘‘அந்தக் கையை இங்கே தாங்க.’’
ரேகா அவளுடைய கையை பலமாகப் பிடித்து, எல்லா நகங்களிலும் பாலீஷ் பூசினாள்.
‘‘ஆன்ட்டி, நான் ஒரு விஷயம் கேட்டா, நீங்க உண்மையைச் சொல்வீங்களா?’’ - அவள் கேட்டாள்.
‘‘என்ன விஷயம்?’’
‘‘இப்படி மாதவன் அண்ணனின் தங்கையாக மட்டும் வாழ்ந்து ஆயுள் முழுவதையும் முடிச்சிர்றதுதான் உங்களோட நோக்கமா ஆன்ட்டி?’’
‘‘புரியல...’’
‘‘திரும்பவும் திருமணம் செய்துக்கணும்னு ஒருமுறைகூட நீங்க ஆசைப்படலையா ஆன்ட்டி?’’ - அவள் கேட்டாள்.
சரோஜம் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
‘‘மாதவன் அண்ணனுக்கு அது பிடிக்காமப் போயிட்டா...? அப்படித்தானே? தங்கையின் சம்பளத்திற்கு வேறொரு ஆள் உரிமை கொண்டாடுறதை மாதவன் அண்ணனால் ஏத்துக்க முடியுமா?’’ -கிண்டலுடன் ரேகா கேட்டாள்.
‘‘அப்படியெல்லாம் சொல்லாதே மாதவன் அண்ணனை விட்டா இந்த உலகத்தில் எனக்குன்னு வேற யார் இருக்காங்க? என்னை நினைச்சு மட்டுமே அண்ணன் பாப்பனம்கோட்டிற்குப் போய் தங்காம இருக்காரு.’’
அப்படின்னா நீங்க மாதவன் அண்ணனுக்கும் அவரோட மனைவிக்கும் பயங்கரமான துரோகச் செயல் செய்துக்கிட்டு இருக்கீங்க ஆன்ட்டி. தன்னுடைய கணவனுடன் இரவு நேரத்தில் உறங்கணுமென்ற விருப்பம் அந்தப் பெண்ணுக்கு இல்லாமப் போயிடுமா? அது நடக்காமப் போனதுக்கு நீங்க மட்டுமே காரணம் ஆன்ட்டி. இது உங்க பேர்ல இருக்கக்கூடிய வீடு. திருமணம் ஆயிட்டா. உங்க கணவனுடன் நீங்க இந்த வீட்டுல இருக்கலாம் ஆன்ட்டி. மாதவன் அண்ணன் பாப்பனம்கோட்டிற்குப் போய்த் தங்கலாம்.’’
‘‘வேண்டாம் ரேகா. அது சரியா வராது’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘சரியாகுதான்னு நாம கொஞ்சம் பார்ப்போமே! ஆன்ட்டி... இதைக் கொஞ்சம் படிங்க.’’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook