
ஃபாரூக்லாகா தோள்களைக் குலுக்கினாள். முனீஸை எப்படி கையாள்வது என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். மனதை வாசிக்கக் கூடிய அவளுடைய திறமையைப் பார்த்து இனிமேல் அவளுக்குப் பயமில்லை. அது அவளுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. அந்தத் திறமையைப் பயன்படுத்துவதற்கு அந்தப் பெண்ணுக்கு தெரியவில்லை. அதனால் வாழ்க்கையில் சிரமங்கள்தான் உண்டாகியிருக்கின்றன.
“நான் இன்று நகரத்திற்குச் செல்கிறேன்...'' ஃபாரூக்லாகா கூறினாள்: “வாடகைக்கு ஒரு வீடு எடுத்திருக்கிறேன். எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும், நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்கலாம். அடுத்த கோடை காலத்தில்தான் நான் திரும்பி வருவேன். சாவியை தோட்டக்காரனிடம் கொடுத்துவிடுங்கள். அவன் என்னிடம் தந்து கொள்வான்...''
மஹ்தொகத்
ஒரு பனிக்காலத்தில்தான் மஹ்தொகத் ஆற்றின் கரையில் மரமாக மாறி தன்னைத்தானே நட்டுக்கொண்டாள். குளிர்காலம் முழுவதும் மிகுந்த துயரத்தை அவள் அனுபவித்தாள். கால்கள் மெதுவாக மண்ணில் ஊன்றின. அணிந்திருந்த ஆடைகள் நார் நாராக கிழிந்தன. கிழிந்த துணியில் பாதி நிர்வாண கோலத்தில் அவள் இருந்தாள். மழைக்காலம் வருவது வரை குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள். பிறகு... மரத்துப் போனாள். கண்கள் நீரைப் பார்த்துக்கொண்டு எப்போதும் திறந்த வண்ணம் இருந்தன. வசந்தத்தின் ஆரம்பத்தில் உடலிலிருந்த பனி உருகியது. விரல்களில் தளிர் இலைகள் முளைப்பதை அவள் உணர்ந்தாள். கால் விரல்களிலிருந்து வேர் இறங்கியது. வசந்த காலத்தில் வேர்கள் பூமியின் சக்தியைப் பிடித்து எடுப்பதையும், அது உடல் முழுவதும் பயணிக்கும்போது உரத்து கேட்கும் சத்தத்தையும் அவள் கேட்டாள். வேர்களின் வளர்ச்சியை இரவு, பகலாக அவள் கவனித்தாள்.
இளவேனிற் காலத்தில் பச்சை நிறத்திலிருந்த நீரைப் பார்த்தாள்.
குளிர்காலத்தைத் தொடர்ந்து, மழைக்காலம் வந்தது. அதற்குப் பிறகு சிரமப்பட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. வேர்கள் அசைவதை நிறுத்திக்கொண்டன. வளர்ச்சி நின்றது.
குளிர்காலத்தில் பனித்துளிகள் உணவாகக் கிடைத்தன. மரத்துப் போயிருந்தாலும், நீரைப் பார்க்க முடிந்தது- நீலம் கலந்த பச்சை காலமாக இருந்தது. அவள் நீர்ப் பாடல்களைக் கற்றாள். பாட முயற்சித்தபோது, இதயத்தில் மெதுவாக சந்தோஷம் வந்து நிறைந்தது. அதை அவள் தளிர் இலைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தாள். இலைகள் பசுமை பிடித்து பசுமை பிடித்து... வளர்ந்தன.
கோடை காலத்தில் நீருக்கு ஒரு நீல நிறம் உண்டாகும். மீன்களைக் காணலாம்.
பனிக்காலத்தில் குளிர் நிலவியது. ஆகாயம் இருட்டானது. இதயம் சந்தோஷத்தில் திளைத்தது. இதயம் மரத்தின் இயற்கைத் தன்மையாக ஆகிவிட்டிருந்தது. அவள் எல்லாவற்றையும் அங்கு மாற்றிவிட்டாள்.
மழைக்காலம் ஆரம்பமானபோது, முலைப்பால் பருகினாள். இன்பத்தின் ஒரு மிகப் பெரிய அனுபவம் நிறைந்து நின்றது. வசந்தம் முடிவடையவில்லை. எனினும், உடலில் பனிக்கட்டிகள் பிளந்து கொண்டு வந்தன. வேதனையாக இருந்தது. வெடித்துச் சிதறி விடுவதைப் போன்ற ஒரு நிலை அவளுக்கு. கண்களை இமைக்காமல் நீரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். இப்போது நீரோட்டம் நின்று விட்டிருக்கிறது. துளித்துளியாக விழுந்து கொண்டிருக்கிறது. துளிகள் அசையும்போது, மஹ்தொகத்திற்கு வேதனை... மஹ்தொகத் நீரில் கலந்துவிட்டிருக்கிறாள். இப்போது ஒவ்வொரு துளியின் இதயத் துடிப்பையும் தன்னுடைய உடலில் அவள் உணர்கிறாள். மூன்று மாத காலமாக அவள் மனிதப் பாலைப் பருகிக்கொண்டிருக்கிறாள்.
வசந்த காலத்திற்கு இடையில் எப்போதோ அவளுக்குள் இருந்த மரம் வெடித்துச் சிதறியது. அந்த வெடிப்பு எதிர்பாராத ஒன்றாக இல்லை. அது சாதாரணமாக நடந்தது. உடலின் ஒவ்வொரு உறுப்புகளும், ஒன்று இன்னொன்றை விட்டுப் பிரிவதைப் போன்ற அனுபவம்... மெதுவாக, கவலையுடன் ஒவ்வொரு உறுப்பும் பிரிந்து சென்றது. நிரந்தரமான உருவம்... கடின வேதனை... பிறவிக்கான நேரம் நெருங்கி விட்டதைப்போல... கண்கள் வெறித்துப் பார்த்தன.... இப்போது நீர், துளியாக அல்ல. கலந்து வரும் பொருட்கள்... அவற்றை மஹ்தொகத்தால் பார்க்க முடிகிறது. நீரில் கலந்திருக்கும் பொருட்களுடன் சேர்ந்து, பிடித்துக்கொண்டு மஹ்தொகத் செல்கிறாள்.
இறுதியில் எல்லாம் முடிந்தது. மரம் முழுமையான வித்துக்களாக... பரிணமித்தது. வித்துக்களின் ஒரு மலை... பலமான காற்று மஹ்தொகத்தின் வித்துக்களை நீரில் கொண்டுபோய் சேர்த்தது.
மஹ்தொகத் நீருடன் சேர்ந்து பயணித்தாள். அவள் அனைத்து உலகத்தையும் சுற்றி வந்தாள்.
ஃபாஇஸா
மழைக்காலத்தில் காற்று மிகவும் சுத்தமானதாகவும் நிர்மலமானதாகவும் இருக்கும். பதினொரு மணிக்கு இருக்கும் அந்த நடை சுவாரசியமாக இருக்கும். ஃபாஇஸாவும் அமீரும் கிட்டத்தட்ட பதினொரு மணி ஆகும்போது, நகரத்தில் நெருக்க நெருக்கமாக இருக்கும் தெருக்களின் வழியாக நடப்பதற்காகச் செல்வார்கள்.
ஃபாஇஸா தினமும் காலையில் கரஜில் இருந்து வருவாள். இருபத்து நான்கு, இஸ்ஃபாந்த் தெருவில் வைத்து இருவரும் ஒன்று சேர்வார்கள். அவன் தன் மனைவியைப் பற்றிய பல குறைகளைக் கூறுவான். அவள் எதுவும் பேசாமல் பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருக்க மட்டும் செய்வாள். உணவு சமைக்கத் தெரியாது. மிகவும் அலட்சிய குணம், குழந்தையை சரிவர கவனித்து பார்க்கக்கூட அவளுக்குத் தெரியவில்லை. இப்படி...
ஃபாஇஸாவிற்கு அவன்மீது பரிதாபம் உண்டு. அவள் அதை அவனிடம் கூறவும் செய்வாள். பிறகு, சில அறிவுரைகளையும் கூறுவாள்.
குளிர்காலத்தில் ஒருநாள் வேலைக்கு வரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி கம்பெனி பதினைந்து நாட்களுக்கான சம்பளத்தை வெட்டிக் குறைத்தது. அமீர் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அதைத் தொடர்ந்து அவன் சந்திப்பதை சாயங்காலம் ஐந்து மணிக்கு ஆக்கினான்.
கரஜில் இருந்து தினமும் அவள் இருபத்து நான்கு, இஸ்ஃபாந்த் தெருவிற்கு வருவாள். பிறகு பேசிக்கொண்டு நடக்கவோ, திரைப்படத்திற்குச் செல்லவோ, ஹோட்டலுக்குள் நுழைந்து சாப்பிடவோ செய்வார்கள். அந்த விஷயம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வாழ்க்கை மிகவும் வெறுப்பைத் தர ஆரம்பித்தது.
அவர்களுக்குள் இனிமேல் கூறுவதற்கு எதுவுமில்லை என்ற நிலை உண்டானது.
ஒருநாள் அமீர் அவளிடம் சொன்னான்: “கூறக் கூடாதது என்று தெரியும்... தினமும் நீ கரஜில் இருந்து இந்த மாதிரி வந்து போவது அவ்வளவு நல்லதல்ல. ஏதாவது நடந்து விடுமோ என்பதுதான் என்னுடைய பயமே... கரஜுக்கு பெண்கள் சாலை வழியே பயணிப்பது அந்த அளவிற்கு நல்லது அல்ல...''
“பிறகு, என்ன செய்ய வேண்டும்?''
“தங்குமிடத்தை டெஹ்ரானுக்கு மாற்றிவிட வேண்டும்.''
“யாருடைய வீட்டில்?''
“பாட்டியின் வீட்டில்...''
“அவங்க அனுமதிப்பாங்கன்னு தோன்றுகிறதா? நம்முடைய இப்போதைய வாழ்க்கை முறை எதுவும் கூறினால்கூட அவர்களுக்குப் புரியாது. நான் ஏதோ கெட்டுப்போய்விட்டேன் என்று அவங்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் நடவடிக்கை முன்பு இருந்ததைவிட மோசமாக இருக்கும்.''
“உனக்காக ஒரு அறையை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருவது நல்லதாக இருக்கும்.''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook