
அவன் கேட்டைத் திறந்து விட்டு ஒதுங்கி நின்றான். கவனத்துடன் படியின்மீது ஏறி நின்ற ஃபாரூக்லாகா சந்தோஷத்தால் திகைத்துப் போய் நின்றாள். உடன் இருக்கும் ஆண்கள் அதைத் தெரிந்து கொள்வதை அவள் விரும்பவில்லை. சரளைக் கற்கள் பரப்பப்பட்ட நடைபாதையின் வழியாக அவள் மெதுவாக நடந்தாள். அவளுடைய கண்கள் பூந்தோட்டம் முழுக்க பயணித்தது.
ஒஸ்தாவரி அங்கு வந்தான். “தேடிக் கொண்டிருந்த விஷயம் இதுதான்! சில சிறிய ரிப்பேர் வேலைகள் செய்ய வேண்டியதிருக்கும்.''
ஃபாரூக்லாகா தலையை ஆட்டினாள். அந்த சரளைக் கற்கள் பரப்பப்பட்டிருந்த பாதை ஒரு வீட்டின் முன்பகுதிக்குச் சென்றது.
அங்கு ஒரு பெரிய குளம் இருந்தது. அதற்கு அருகிலேயே ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது. சுற்றிச் சென்ற பாதை, அந்த வீட்டை நோக்கிச் சென்ற- பல வகையான உருளைக் கற்கள் கொண்டு உண்டாக்கப்பட்ட படிகளில் போய் முடிந்தது. வீடு அந்த அளவிற்கு அழகானதாக இல்லை. விலை குறைவானதைப்போல அது தோன்றியது. ஃபாரூக்லாகாவிற்கு ஒரு நிமிடம் அதிருப்தி தோன்றியது.
“சாயம் தேய்த்து பளபளப்பு ஆக்கினால், புத்தம் புது வீட்டைப் போல இருக்கும்.'' ஒஸ்தாவரி சொன்னான்.
ஃபாரூக்லாகா மனதிற்குள் எண்ணிப் பார்த்தாள். ஐடியா அப்படியொன்றும் மோசமில்லை. எது எப்படி இருந்தாலும் சாளரம் மிகவும் சிறியதாக இருந்தது. அந்த பகுதியில் நிலவிக் கொண்டிருந்த சீதோஷ்ண நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
ஒஸ்தாவரி இன்னொரு சாவியை எடுத்து வீட்டின் கதவைத் திறந்தான். விசாலமான மூன்று அறைகளும் சமையலறையும் குளியலறையும் உள்ள ஒரு தளத்திற்கு அது இட்டுச் சென்றது. அறைகளிலிருந்த சாளரங்கள் பூந்தோட்டத்தை நோக்கித் திறந்தன. சமையலறையின் சாளரமும் குளியலறையின் சாளரமும் வாசலை நோக்கி இருந்தன. ஃபாரூக்லாகா, “சமையலறை பரவாயில்லை... ஒரு குளியலறைதான் இருக்கிறது. மூன்று அறைகள் போதாது. எனக்கு விருந்தாளிகள் நிறைய இருக்கிறார்கள்'' என்றாள்.
“இங்கே பாருங்க...'' ஒஸ்தாவரி சொன்னான். “அது நான் முதலிலேயே சொன்ன விஷயம்தான். நல்ல பலமான தரை. சுவர்களில் இரும்பாலான தூண்கள் இருக்கின்றன. இன்னொரு மாடியும் கட்டலாம். அங்கு செல்லக்கூடிய படிகளை இந்த இடத்தில் உண்டாக்கலாம்.'' அவன் ஒரு மூலையைச் சுட்டிக்காட்டி சொன்னான். "தேவைப்பட்டால் இங்கு ஒரு மரத்தை நடலாம். அது வளர்ந்து இரண்டாவது மாடிக்கும் மேல் கூரைக்கும் செல்லும். அப்போது ஒரு அரண்மனையைப்போல பார்ப்பதற்கு இருக்கும்.''
வாழும் இடத்திற்குள் ஒரு மரத்தை வைத்து வளர்க்கும் விஷயத்தை நினைத்து அவள் ஆச்சரியப்பட்டாள். பெருமையால் ஒஸ்தாவரிக்கு மூச்சுவிட முடியாத நிலை உண்டானது. “அது என்னுடைய ஐடியா...'' அவன் சொன்னான்.
“ஆனால். ஈரமாகி... ஈரமாகி தரை ஒரு வழி ஆகிவிடும்...'' அவள் சொன்னாள்.
வீடு பிடித்திருந்தாலும், ஃபாரூக்லாகா அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஒஸ்தாவரிக்கு முன்னால் அதை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு அவள் படாதபாடு பட்டாள். எனினும், அவள் பகல் கனவு காண ஆரம்பித்தாள். அவள் ஒரு இரண்டாவது மாடியைக் கட்டுவாள் என்பதென்னவோ உறுதி. சமூகரீதியான செயல்கள் பல நிறைந்த சுறுசுறுப்பான வாழ்க்கையே அவளுடைய மனதிற்குள் இருந்தது. டெஹ்ரானில் உள்ள தோழிகள் தன்னை பார்ப்பதற்கு வருவார்கள் என்று அவள் மனதில் நினைத்தாள். அப்படியொன்றும் தோழிகள் அதிகமாக இல்லை. சூடாக இருப்பவனும் தனிமை விரும்பியுமான ஒரு மனிதனுடன் சேர்ந்து வாழ்ந்த முப்பது வருட வாழ்க்கை அவளை பலரிடமிருந்து விலகி இருக்கும்படி செய்து விட்டது. இனி தோழிகளை உண்டாக்கி அழைத்துக் கொண்டு வரவேண்டும். இலக்கிய விஷயங்களில் ஆர்வம் கொண்ட சில நல்ல தோழிகளுடன் பழக வேண்டும். வீட்டை இலக்கிய கூட்டம் நடக்கும் இடமாக மாற்ற வேண்டும். புதினங்களில் ஃபெரஞ்ச் பெண்கள் செய்வதைப்போல...
ஒஸ்தாவரி அவளுக்கு பூந்தோட்டத்தைச் சுற்றிக் காட்டினான். பூந்தோட்டத்தை அக்கறையுடன் கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு தோட்டக்காரனை ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வருட காலம் சரியான கவனிப்பே இல்லாமல் அது கிடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. அவன் அவளுக்கு ஒவ்வொரு மரத்தையும் சுற்றி நடந்து காட்டினான். அவற்றைப் பற்றிய தகவல்களையும் அவளுக்கு விளக்கிக் கூறினான்.
கரஜில் இதைவிட சிறந்த ஒரு பூந்தோட்டத்தைப் பார்க்க முடியாது. அது மட்டும் உறுதி. நல்ல நல்ல தோட்டங்களும் வீடுகளும் இருக்கின்றன. ஆனால், இந்த விலைக்கு இது மிகச் சிறந்தது. சிறிய சிறிய மெருகேற்றும் வேலைகளைச் செய்து முடித்து விட்டால், இது சொர்க்கத்தைப்போல இருக்கும்!
அவன் வெறும் ஒரு விற்பனை செய்யும் மனிதன் என்ற விஷயம் ஃபாரூக்லாகாவிற்கு நன்கு தெரியும். அதனால் அவன் கூறிய எதையும் அவள் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. வீடு, பூந்தோட்டம்- இரண்டுமே ஒரே பார்வையில் அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அவனுடைய விற்பனை சம்பந்தமான தந்திரங்கள் எதுவும் இனிமேல் அவளுக்குத் தேவையில்லை.
இறுதியில் அவர்கள் ஆற்றின் கரைக்கு வந்தார்கள்.
ஒஸ்தாவரி சொன்னான்: “பார்த்தீர்கள் அல்லவா? இந்தப் பக்கம் சுற்றுச்சுவர் இல்லை. ஆறுதான் எல்லை. நன்கு நீர் ஓடிக் கொண்டிருப்பதால், யாராவது வந்து விடுவார்களா என்று பயப்பட வேண்டியதில்லை. பிறகு... இந்த பகுதிகளில் எந்த இடத்திலும் திருடர்களின் தொந்தரவு இல்லை... தெரியுதா?''
“அப்படியா?''
ஃபாரூக்லாகா அங்கு ஒரு மரத்தைப் பார்த்தாள். உண்மையிலேயே இருக்கக் கூடிய மரம்தானா என்று அவளால் உறுதியாகக் கூற முடியவில்லை. ‘அது யார்?' அவள் கேட்டாள்.
அதற்குப் பிறகு கூறி விடுவதுதான் நல்லது என்று ஒஸ்தாவரி தீர்மானித்தான். “அது... உண்மையிலேயே அது ஒரு மனிதன்... வாழ்க்கையில் இதுவரை பார்த்தவர்களிலேயே மிகவும் அமைதியான ஒரு மனிதன்...''
“ஓ! அது அங்கு எதை எடுத்துக் கொண்டிருக்கிறது?''
ஒஸ்தாவரி கூறினான்: “நான் என்ன சொல்வது? இந்த காரணத்தால்தான் அவர்கள் இந்த பூந்தோட்டத்தை குறைவான விலைக்கு விற்கிறார்கள். இந்த விலைக்கு இப்படிப்பட்ட ஒன்று கிடைப்பதென்பது நடக்கக்கூடிய விஷயமல்ல. பிரச்சினையாக இருக்காது என்று நானும் நினைத்தேன். குறிப்பாக கூறுவதாக இருந்தால்- நீங்களும் ஒரு பெண்தானே? பாவம்... இந்த மரம் உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று எனக்குத் தெரியும்.''
ஃபாரூக்லாகா தயங்கித் தயங்கி முன்னோக்கி வந்தாள். “இது மரம் இல்லையே! ஒரு மனிதானாச்சே!''
“சரிதான்... உண்மையாகக் கூறுவதாக இருந்தால் பூந்தோட்டத்தின் முந்தைய உரிமையாளரின் சகோதரிதான் இந்த அப்பிராணி மரம்.''
“ஆச்சரியமாக இருக்கிறது...''
“சரிதான்... மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மரமாகி பூமியில் தன்னைத்தானே நட்டுக் கொண்டாள்.''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook