
"நாளன்னிக்கு பையன் வரானாம். வந்த மறுநாள் கல்யாணமாம். அதனாலதான் ப்ரியா ரொம்ப பயப்படறா. ப்ரியாவோட கல்யாண வேலைகள் ரொம்ப வேகமா நடந்துக்கிட்டிருக்காம். இன்விடேஷன் கூட ப்ரிண்ட் ஆயிடுச்சாம். கல்யாண பத்திரிகை குடுத்து எல்லாரையும் இன்வைட் பண்றதுக்கு ப்ரியாவோட அம்மா நாளைக்கு காலேஜ்க்கு வரப்போறாங்களாம். அப்போ இந்த விஷயம் வினய்க்கு தெரிஞ்சுடும். அவன் தற்கொலை பண்ணிக்குவானோன்னு பயந்து நடுங்கறா. அதனால இப்ப உடனே வினய்க்கு போன் பண்ணி, அவனை இங்கே வரச் சொல்லுவோம். அவன்கிட்ட நாம பேசலாம். எடுத்துச் சொல்லலாம்..."
"அவனை நல்லா விளாசு விளாசுன்னு விளாசணும்..."
"நோ… நோ.. அவசரப்படாத. ஆத்திரப்படாத. அவன்கிட்ட தன்மையாத்தான் பேசணும். மூர்க்கமா பேசினா முட்டாள்தனமா ஏதாவது பண்ணிடுவான். ஒரு விஷயம் புவனா, எந்த விஷயத்தையுமே ஓப்பனா, வெளிப்படையா, மனம்திறந்து பேசிட்டோம்னா சுலபமா தீர்வு கிடைச்சுடும்னு ஒரு புஸ்தகத்துல படிச்சேன். ப்ராக்டிக்கலா பார்த்தா இது சாத்தியம்தான். இப்பவே வினய்யை கூப்பிட்டுடலாம்..."
கார்த்திகா, தன் மொபைல் போனை எடுத்தாள். வினய்யை அழைத்தாள். ஏன் எதற்கு என்று எதுவும் கூறாமல் 'முக்கியமான விஷயம். உடனே வாங்க’ன்னு மட்டும் கூறினாள்.
முப்பது நிமிடங்களில் வினய் அங்கே வந்தான். கார்த்திகாவையும், புவனாவையும் பார்த்த வினய்யின் கண்கள், ப்ரியாவைத் தேடின.
"என்ன கார்த்திகா? க்ளாசுக்கு வராம இங்கே உட்கார்ந்திருக்கீங்க? என்னையும் க்ளாஸ் நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க…?" ஆச்சர்யமும், திகைப்புமாக கேள்விகளை அடுக்கினான் வினய்.
"உட்காருங்க வினய். என்ன சாப்பிடறீங்க?" வினய் உட்கார்ந்தான்.
"எனக்கு எதுவும் வேணாம்."
"காபி மட்டுமாவது சாப்பிடுங்க" புவனா காபிக்கு ஆர்டர் கொடுத்தாள்.
காபி வந்தது. குடித்து முடித்த வினய் சற்று அமைதியானான். கார்த்திகா பேச ஆரம்பித்தாள்.
"வினய், நம்ம காலேஜ்ல நாங்க பழகற ரொம்ப கொஞ்ச பேர்ல நீங்களும் ஒருத்தர். நீங்க நல்லவர். நாகரீகமானவர். ஆனா உங்களை மாதிரி ஆண்களுக்கு சில சமயம் சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டியிருக்கு."
ஒண்ணும் புரியாமல் விழித்தான் வினய்.
அவனது பிரதிபலிப்பான செய்கைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் கார்த்திகா.
"ஒரு பொண்ணு, தன்னைக் கவனிக்கணும், அவளைக் கவர்ந்திழுக்கணும்ங்கறதுக்காக ஆண்கள் தங்கள் நடை, உடைகளை மாத்திக்கறாங்க. இது பொதுவான மனித இயல்பு. அதே ஆண், ஒரு பொண்ணு, தன்னை ஏறெடுத்துப் பார்க்கலைன்னு தெரிஞ்சதும் அவளுக்குப் பிடிச்சமான வேற ட்ரஸ், வேற கலர்னு மாத்திக்கறான்.
“அவ பார்க்கறது உடையை மட்டும் இல்லை. உடைக்குப் பின்னால மறைஞ்சிருக்கற உள்ளத்தையும் சேர்த்துத்தான் பார்க்கறா. ஒரு பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சுட்டா, ஆரம்ப காலத்துல அவளுக்காக உங்களை மாத்திக்கறீங்க. அந்தப் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னோ, எந்த மாதிரியான உணர்வு இருக்குன்னோ புரிஞ்சுக்காமலே அவ பின்னாடி சுத்தறது, அவளைக் காதலிக்கறதா சொல்றது.... இதெல்லாம்தான் நடக்குது.
“அவ மனசுல நாம இருக்கமான்னு எந்த ஆணுமே யோசிக்கறதில்லை. அந்தப் பொண்ணு தன்னை விரும்பாட்டாலும் 'அவளை அடைஞ்சே தீருவேன்’னு வீரவசனம் பேசறது... இல்லைன்னா அவளோட மென்மையான மனசை மேலும் மென்மையாகற மாதிரி டைலாக் விடறது.
“அவளோட மனசுல காதல் தோணுதோ இல்லையோ அதைப் பத்தியெல்லாம் ஆண்கள் கவலைப்படறதே இல்லை. எதையாவது சொல்லி, அவ மனசைக் கிள்ளி பலவந்தமா காதலை உண்டாக்கறது எந்த வகையில நியாயம்? சொல்லப்போனா அப்படி பலவந்தமா உருவாகற காதல் உண்மையான காதலே இல்லை. அது வெறும் கருணை மட்டும்தான்.
கருணையை, காதல்னு குழப்பிக்கிட்டு, தன் வாழ்க்கையையே வெறுமையாக்கிக்கறா. உலகத்துல பொண்ணா பிறந்துட்ட ஒவ்வொரு பொண்ணுக்கும் விதம்விதமான கனவுகளும், ஆசைகளும் அடங்கின ஓர் உணர்வு இருக்கு. அந்த உணர்வைக் கொன்னுட்டு அவளை அடையறதுனால அவன் மட்டுமே சந்தோஷமா இருக்கலாம். ஆனா அவ? துக்கம் பொங்கற வாழ்வுதான் மிச்சம்.
“காதலிக்கற பொண்ணு இளகின மனசுக்காரியா இருந்துட்டா போதும். அவளோட புத்தியே மழுங்கிப் போற அளவுக்கு நாடகமாடறதும் நடக்குது. நீ என்னைக் காதலிக்கலைன்னா என்னை நானே குத்திக்குவேன், நீ கிடைக்கலைன்னா நான் செத்துப் போயிடுவேன்னு திரும்பத் திரும்ப சொல்லி அவளை டார்ச்சர் பண்றது..."
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சடாரென நிமிர்ந்து பார்த்தான் வினய்.
"கார்த்திகா... நீ... நீங்க... சொல்றது... நான்... நான்... ப்ரியாட்ட..."
"ஆமா வினய். இவ்வளவு நேரம் நான் பேசினது உங்களையும் சேர்த்துத்தான். ப்ரியா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நீங்க முயற்சி கூட செய்யலை. 'நான் அழகன், அறிவாளி, என்னை அவளும் விரும்பித்தான் ஆகணும்’ங்கற ஆணாதிக்கம் ரொம்ப தப்பானது. பொதுவா ஒரு பொண்ணோட ஆழமான மனசுக்குள்ள இருக்கற எதிர்பார்ப்புகளை புரிஞ்சுக்க முடியலைன்னா விட்டுடணும். எதிர்த்து நின்னு போராடி, அவளை உங்க வலையில மாட்ட வைக்கறது எந்த வகையில நியாயம்?
“மனசார ஒருத்தனை விரும்பி, தன் இதயத்துல இடம் குடுத்துட்டு, மணமேடையில இன்னொருத்தன் பக்கத்துல உட்கார்றது ஒரு பொண்ணுக்கு எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? ஒவ்வொரு பொண்ணோட வாழ்க்கையும், திருமண மேடையிலதான் ஆரம்பமாகுது. ஆனா, ஒருத்தனை காதலிச்சுட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கற நிலைமை ஏற்படும்போது அந்த திருமண மேடையில அவளோட வாழ்க்கை முடிஞ்சுடுது. யந்திரத்தனமான வாழ்க்கைதான் வாழ்வா.”
“தன்னை விரும்பறவனை விட, தான் விரும்பற ஒருத்தனைத்தான் ஒரு பொண்ணு காதலிப்பா. கல்யாணமும் பண்ணிக்கணும்னு ஆசைப்படுவா.”
“ப்ரியாவைப் பார்த்ததும் அவளைக் காதலிச்சீங்க. காதலிச்ச நீங்க அவகிட்டயும் சொன்னீங்க. அவ நாசூக்கா மறுத்தப்ப, அவளை விட்டு விலகாம அவளை உங்க வசப்படுத்தற வழியைத்தான் பார்த்தீங்க. அவளோட இளகின மனசைப் பயன்படுத்தி 'செத்துப் போயிடுவேன்’னு அவளை மிரட்டியிருக்கீங்க. அதனால அவளுக்கு உங்க மேல பரிதாபம் வந்துச்சே தவிர காதல் வரலை. அது மனித இயல்பின் வெளிப்பாடான கருணை மட்டுமே. காதல் இல்லை. தன்னால ஒரு உயிர் போயிடக்கூடாது, ஒரு உயிர் பலியாகறதுக்கு தான் காரணமாகிடக் கூடாதுங்கறதுக்காக மட்டும்தான் அவ, மௌனமா இருந்துட்டா. இதுக்குப் பேர் காதலா?"
"கார்த்திகா.... நீ... நீங்க சொல்றது...."
"அத்தனையும் உண்மை. ப்ரியா உங்களைக் காதலிக்கலை... இது உங்களுக்கும் தெரியும்...."
கார்த்திகாவின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள், வினய்யின் இதயத்தை துளைத்து, அவனை சிந்திக்க வைத்தன. கார்த்திகா கூறிய உண்மைகள் அவனை சுட்டெரித்தன. தன் தவறை உணர்ந்தான். வருந்தினான். திருந்தினான்.
"ஸாரி கார்த்திகா. நீங்க சொன்னதெல்லாம் சரி. நான் செஞ்சதெல்லாம் தப்பு..."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook