Lekha Books

A+ A A-

குஞ்ஞம்மாவும் நண்பர்களும் - Page 17

kunjamavum nanbargalum

ஆண் ஒருவன் வந்து நுழையக்கூடிய வீட்டில் சாயங்கால நேரத்தில் விளக்கு வைக்காமல் இருக்கலாமா?

குடிசையை அடைந்தபோது, மாலை நேரம் மயங்கிவிட்டிருந்தது. அவள் பாத்திரங்களையும் துடைப்பத்தையும் தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, ஓலையால் ஆன கதவைத் திறந்தாள். அப்போது உள்ளேயிருந்து ஒரு ஓசை! குஞ்ஞம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள்.

"யார் அது?'' - அவள் பதறுகிற குரலில் கேட்டாள். பதில் இல்லை. அவளுடைய இதயத்திற்குள் இடிச்சத்தமும் மின்னல்களும் கடந்து சென்றன. பலவித எண்ணங்கள். மனிதனா? சைத்தானா? இந்த அளவிற்கு இருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் சைத்தான்கள் வெளியேறி வருமா? அப்படியில்லையென்றால் மனிதர்களா? அதுதான் அவளை அதிகமாக பயமுறுத்தியது. இரும்பு மனிதன் சோயுண்ணியின் உருவம் குஞ்ஞம்மாவின் இதயத்திற்குள் ஒருமுறை வேகமாகக் கடந்து சென்றது.

"யார் அது என்று கேட்டேன்ல?'' - மீண்டும் கேட்டாள். ஒரு நிமிடம் காத்திருந்தாள். பதில் இல்லை. குஞ்ஞம்மாவிற்கு பயம் அதிகமானது. அத்துடன் அவளுடைய நாக்கு அசைய ஆரம்பித்தது.

"சாயங்கால நேரத்தில் குடிசையில் யாரும் இல்லாத வேளையில், குடிசைக்குள் வந்து ஒளிஞ்சு இருக்குறது எந்த நாணம் இல்லாதவன் என்று கேட்கிறேன்...!''

ஒரு நிமிடம் எதிர்பார்த்தாள். அசைவு இல்லை.

"நாக்கு செத்துப் போச்சா? எந்த அறிவு கெட்டவனாக இருந்தாலும் சரி... இந்த கட்டிலைப் பார்த்து ஆசைப்பட வேண்டாம். என் கையில் துடைப்பம் இருக்கு. ம்... நல்லா சிந்திச்சுப் பார்க்கணும்.''

அவள் துடைப்பத்தை எடுத்து ஆயுதமாகத் தூக்கிப் பிடித்தாள். பள்ளத்தில் மறைந்திருக்கும் ஒரு போர்வீரனின் எச்சரிக்கையுடன் நின்றாள். அப்போது வீட்டின் உள்ளேயிருந்து ஓசை மேலும் ஒருமுறை கேட்டது. குஞ்ஞம்மா துடைப்பத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றவாறு மீண்டும் சொன்னாள்:

"அங்கே மறைந்து இருக்க வேண்டாம்... வேண்டாம்... இன்னைக்கு மானம் போறதுக்கான வழி... கோபம் வந்தால் நான் ரெண்டும் கெட்டவள். நான் கேட்க வேண்டிய பெயரையெல்லாம் கேட்டவள். ஞாபகத்தில் இருக்கட்டும்!''

குஞ்ஞம்மா காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு பார்த்தாள். ஏதாவது பதில் வருகிறதா? அவளுடைய மூளை மிகவும் வேகமான செயல்பட்டது. என்ன வழி? மூச்சுகூட விடாமல் துடைப்பத்தைப் பிடித்திருந்தாள். குடிசைக்குள் நுழைந்தவுடன் பிடித்துவிடலாம் என்று அவள் நினைத்தாள். அதுவரை உள்ளேயே இருக்கட்டும். ஆனால், உள்ளே சென்ற பிறகுதான் விளக்கைப் பற்ற வைக்க வேண்டும். அப்போது அவள் மீண்டும் கூறிப் பார்த்தாள்.

"இங்கே இருக்கும் ஆம்பளை வெளியில்தான் நின்று கொண்டிருக்கிறார். நான் ஒருமுறை கத்தினால், பிறகு இங்கே குத்தும் கொலையும்தான் நடக்கும். தேவையில்லாமல் ரத்தத்தைச் சிந்த வைக்க வேண்டாம் என்று நினைத்து சொல்றேன். ம்... வெளியே வா...''

குடிசைக்குள்ளிருந்து ஒரு பெரபெர சத்தம் கேட்டது. தன்னுடைய திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை குஞ்ஞம்மா புரிந்து கொண்டாள். அவள் தொடர்ந்து சொன்னாள்: "அந்த ஓலைகளை அகற்ற வேண்டாம். நேர் வழியிலேயே போகலாம். இப்போ ஒண்ணும் செய்ய மாட்டேன். இனி யாராவது குடிசைக்குள் நுழைந்து நாணம் கெட்டு ஒளிஞ்சிருந்தால்... அவ்வளவுதான்...''

பிறகு எந்தவொரு அசைவும் உண்டாகவில்லை. குஞ்ஞம்மா பலவற்றையும் சொல்லி பார்த்தாள். கெட்ட வார்த்தைகளைக்கூட கூறிப் பார்த்தாள். பிரயோஜனமில்லை. அவளுடைய திட்டுதல் அதிகமாகி உச்சநிலையை அடைந்தபோது, பக்கத்து வீட்டில் இருக்கும் உண்ணுலிக் கிழவி நடுங்கும் கையில் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு வந்து கேட்டாள்:

"என்னடி குஞ்ஞம்மா, நீ யாரை இப்படித் திட்டிக்கொண்டு இருக்கே?''

"பாருங்க... குடிசைக்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறதை...''

"என்ன?'' - கிழவி விளக்குடன் உள்ளே நுழைந்தாள். கிழவிகளுக்கு சைத்தானைப் பார்த்து பயம் இல்லையே! நெற்றியில் கையை வைத்துக் கொண்டு, விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொண்டு கிழவி சுற்றிலும் பார்த்துவிட்டுச் சொன்னாள்: "அடியே இங்கு மனித வாடையே இல்லை!''

குஞ்ஞம்மாவும் உள்ளே நுழைந்து அலசிப் பார்த்தாள். குடிசை வெறுமனே கிடந்தது. சட்டிகள் அடுக்கி வைக்கப்பட்ட மாதிரியே இருந்தன. பரணுக்குக் கேடு எதுவும் இல்லை. நீர் இருந்த பாத்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே இருந்தது. சுருட்டி வைக்கப்பட்ட பாய் மூலையிலேயே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. குஞ்ஞம்மா அந்த பாய் சுருளைச் சற்று தட்டிவிட்டுப் பார்த்தாள். அதற்கு உள்ளே மனிதன் இல்லை! "என்ன கதை?'' என்ற அர்த்தத்தில் உண்ணுலிக் கிழவியும் குஞ்ஞம்மாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அப்படி நிற்கும்போது மீண்டும் பெர பெர என்ற சத்தம்! அதிர்ந்து போனார்கள். இடப் பக்கத்தில் இருந்த ஓலையால் ஆன சுவர் அசைந்தது. விளக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு பார்த்தார்கள். வெளுத்து தடித்த அழகான ஒரு பூனை அங்கே நின்று கொண்டிருந்தது.

"அது ஒரு பூனை. தெரியுதா?'' - கிழவி சொன்னதும், குஞ்ஞம்மாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. "நீ ஒரு முட்டாள்'' என்று கூறியவாறு கிழவி வெளியே போக ஆரம்பித்தாள்.

"நான் இந்த விளக்கைக் கொஞ்சம் பற்ற வைத்துக் கொள்ளட்டுமா?'' - குஞ்ஞம்மா மண்ணெண்ணெய் விளக்கை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே தொடர்ந்து சொன்னாள்: "உண்ணுலி அம்மா, இங்கே நான் சொன்னதையெல்லாம் கேட்டீங்களா?''

"யாரோ புலம்புகிறார்கள் என்று நினைத்தேன்.''

"நான் அந்த அளவிற்கு எதுவும் சொல்லல... அப்படித்தானே?''

"இல்ல.''

கிழவி வெளியேறினாள். குஞ்ஞம்மா விளக்கை எடுத்து அந்தப் பூனையைப் பார்த்தாள். நல்ல அழகான பூனை. ஆனால், அதை அங்கு குடியேற விட்டால் பிரச்சினையாகிவிடும். சட்டி பானை எதையும் விட்டு வைக்காது. அதனால் அவள் அதை வெளியே போடுவதற்காக தூக்கினாள். எனினும், வயிற்றில் கையை வைத்தபோது ஏதோ கனமாக தெரிந்தது. கீழே வைத்துவிட்டு, சோதித்துப் பார்த்தாள். அது கர்ப்பமாக இருந்தது. ஒரு நிமிடம் குஞ்ஞம்மா அந்த பூனையையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஒரு உயிருக்குள் பிறக்கும் உயிர்கள். தன்னுடைய வயிற்றை ஒருமுறை கடைக்கண்களால் பார்த்துப் பெருமூச்சு விட்டவாறு, மூடி வைத்திருந்த பானையைத் திறந்து, கஞ்சியில் இருந்து சோற்றை அதன் முன்னால் எடுத்து வைத்துவிட்டு சொன்னாள்: "சாப்பிடு மகளே... பாவம்!''

பூனை ஆர்வத்துடன் அதைச் சாப்பிட்டது. அவள் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். சாப்பிடும்போது, அதன் வயிற்றிலிருந்து சில அசைவுகள் கேட்டன.

அப்படி நின்று கொண்டிருக்கும்போது வாசலில் உரலை எடுத்து தரையில் குத்துவதைப் போல சத்தங்கள் கேட்டன. குஞ்ஞம்மாவின் முகம் மலர்ந்தது. சாத்தப்பன் வந்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தெரியும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

டைகர்

டைகர்

March 9, 2012

அக்கா

அக்கா

November 10, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel