
மீண்டும் பாபு நாற்காலியில் வந்து உட்கார்ந்தான். விளக்கு வெளிச்சத்தை அதிகமாக்கினான். தன்னைச் சுற்றிலும் அமைதியாக நின்று கொண்டிருந்த புத்தக அலமாரிகளை இன்னொரு முறை பார்த்த அவன் ஒரு டைரியைக் கையில் எடுத்தான். தன் தவறான குற்றச் செயல்களின் ஆரம்ப நாட்களில் எழுதப்பட்ட தாள்களைப் புரட்டினான்:
"1990 ஆகஸ்ட் 6. அனஸ்டேஸ்யாவிடம் நான் சொன்னேன்: "நானொரு சிறிய குற்றவாளியாக ஆகப்போறேன். இப்படித்தான் நான் ஆகணும்ன்றதுக்கான விதை முன்பே விதைக்கப்பட்டாச்சு." அணுகுண்டு, பிராத்தனைக்கு வெளியே இருப்பது என்று சொன்னாள் அனஸ்டேஸ்யா. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்து இன்றோடு நாற்பத்து ஆறு வருடங்கள் ஆகின்றன. இதை நான் அவளிடம் சொன்னேன். வரலாற்றை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன? ஒவ்வொரு கணத்திலும் அதை நாம் ஞாபகத்தில் கொண்டு வந்தே ஆகவேண்டியிருக்கிறது. ஆனால், பலரும் அதை மறந்து போகிறார்கள். வெடிகுண்டு வெடித்த இடத்தில் கொஞ்ச நஞ்சம் மீதியிருந்ததில் ஒரு சர்ச்சின் வாசலும், அதில் இருந்த சிலுவையும் அடங்கியிருந்தது. இதையும் நான் அனஸ்டேஸ்யாவிடம் சொன்னேன். இதில் ஏதாவது அர்த்தத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று அனஸ்டேஸ்யாவிடம் நான் கேட்டிருக்கலாம். ஆனால், கேட்கவில்லை!"
பாபு அடுத்த நாள் எழுதியிருந்த விஷயத்திற்குப் போனான்:
"1990 ஆகஸ்ட் 7. முதல் முறையாக நேற்று இரவு நான் ஒரு இன்பக் கனவு கண்டேன். எங்களின் பேரி மரத்தின் கீழே இருக்கிற கிளையில் அமர்ந்திருந்த ஒரு அழகான பெண் பேரிக்காயைத் தின்றவாறு காலாட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் என்னைக் கை காட்டி அழைத்தாள். நான் அவள் அருகில் போய் நின்றேன். அவளின் ஒரு கால் என் தலை முடிமேல் பட்டு என் உடலெங்கும் இன்ப அதிர்வை உண்டாக்கிக் கொண்டிருந்தது. தன் கையிலிருந்த பேரிக்காயைக் கடித்து, ஒரு துண்டை எடுத்து என் வாயில் அவள் வைத்தாள். நான் வாயைத் திறக்கவில்லை. என்ன நினைத்தாளோ, ஒரு காலால் என் முகத்தில் ஓங்கி மிதித்தாள். அடுத்த நிமிடம் உரக்க சத்தமிட்டவாறே என் தோள்கள் வழியே தன் இரண்டு கால்களையும் என் முதுகுப் பக்கம் தொங்குமாறு செய்து என்னை இறுக கட்டிப்பிடித்தாள். என் கழுத்தில் அவள் மிகவும் பலமாகப் பிடித்திருந்தாள். அவளின் பறந்துகொண்டிருந்த புடவையை உயர்த்தி, அதைக்கொண்டு என் தலையை மூடினாள். அவள் அடுத்த நிமிடம் அலறினாள். அப்போது அவளின் அடிவயிறு குலுங்கியது. அவளின் அடிவயிறுக்கு காப்பிப் பூவின் மணம் இருந்தது. என்னை ஏதோ நனைத்ததுபோல் உணர்ந்தேன். அவ்வளவுதான் - திடுக்கிட்டு எழுந்தேன். எனக்கு வெட்கமாகவும், பயமாகவும் இருந்தது. என்னால் சரியாக மூச்சுவிட முடியவில்லை. மூச்சு அடைப்பது போல் இருந்தது. அதற்குப்பிறகு என்னால் உறங்க முடியவில்லை. இன்று அதிகாலையில் நான் படுக்கையை விட்டு எழுந்ததும், கட்டியிருந்த வேஷ்டியையும், போர்த்தியிருந்த போர்வையையும் நீரில் அலசி காயப் போட்டேன். உடம்புக்கு சோப்பு போட்டு நன்றாகக் குளித்தேன். எல்லாம் முடிந்ததும், தேங்காய் வெட்டுவதற்காக நாங்கள் பயன்படுத்தும் பெரிய அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து அந்த பேரிக்காய் மரத்தின் கிளையை வெட்டிக் கீழே போட்டேன். "நீ ஏன்டா அந்தக் கிளையை தேவை இல்லாம வெட்டுறே?" என் தாய் கேட்டாள். "அது ஏற்கெனவே காய்ஞ்சுபோய் இருந்துச்சு அம்மா. அதனாலதான்..." நான் சொன்னேன். வெட்டிப் போட்ட கிளையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மூக்கில் விரல் வைத்தவாறு என் தாய் சொன்னாள்: "உனக்கு பைத்தியம் கியித்தியம் பிடிச்சுப் போச்சாடா பாபு?"
பாபு டைரியை மூடினான். விளக்கை அணைத்தான். ஒரு மூலையில் போய் நின்று ஜன்னல் வழியே நிலா வெளிச்சத்தைப் பார்த்தவாறு இப்படி பிரார்த்தனை செய்தான்: "என் தெய்வமே... உன்னோட சின்ன குற்றவாளி நான். நீ எனக்கு அணுகுண்டோட சூட்சுமத்தைத் தர்ற வரை எனக்கு பைத்தியம் கிடையாது. அதுவரை நான் என் மனசாட்சிப்படி நடப்பேன்..."
அவன் எழுந்து அலமாரிகளுக்கு மத்தியில் தடவித் தடவிப் போய் தன் படுக்கையறைக்குள் நுழைந்தான்.
எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது, பாபு டைரியில் இப்படி எழுதி இருந்தான்:
"வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய கருத்து என்னவென்றால் - வெறுமனே அதை மரணத்தில் கொண்டுபோய் விட்டுவிடக் கூடாது என்பதுதான். மரணத்தைத் தவிர, இன்னும் எவ்வளவு விஷயங்கள் இந்த எல்லையற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகத்தில் இருக்கின்றன! இத்தனை வருடங்கள் ஆகியும் வாழ்க்கையால் இந்த உண்மையை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? சிலர் சொல்வார்கள் பரிணாமம் என்று. பரிணாமத்தின் வாசல்தான் மரணம்! நீண்ட காலமாக நடக்கும் பரிணாமத்தால் எனக்கும் உங்களுக்கும் என்ன லாபம்? கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு ஜுராஸிக் சதுப்பு நிலங்களில் ஊர்ந்து நடந்த ஒரு ஜந்து நான் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னை நகத்தை வைத்துக் கீறிவிட்டு குட்டி டினோஸர் குதித்துப் பாயும்போது, பத்து கோடி வருடங்களுக்குப் பிறகு நான் மனிதனாவேன் என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நம்மைப் போன்றவர்களுக்கு தேவைப்பட்டால் பத்து வருடங்களிலேகூட இந்தப் பரிணமாம் சாத்தியமாகலாம்!"
கொள்ளையடிப்பதுதான் தன்னுடைய பாதை என்பதைத் தேர்ந்தெடுத்தபோது, பாபு இந்த டைரிக் குறிப்பை எடுத்துப் பார்த்தான். அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: "சாதாரண ஒரு லைப்ரரி ப்யூன் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டுமென்றால் அவனுக்கு முதலில் தேவை குறுகிய கால பரிணாமம். அதற்குத் தேவை பணம். காரணம்- குறுகிய கால அளவில் அவன் வாழ்க்கையில் பரிணாம வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால் அதற்கு கட்டாயம் தேவை ஒன்று என்றால்- அது நிச்சயம் பணம் மட்டுமே. ஆன்மிகப் பாதைகள் இருக்கலாம். அவை என்னை மட்டுமே காப்பாற்ற முடியும். ஆனால், பணம்? என்னையும் என்னைச் சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றும். பத்து கோடி வருடங்கள் ஒரு நல்ல பாயசம் குடிப்பதற்காகக் காத்துக் கிடக்கும் அவல நிலையிலிருந்து நிச்சயம் அது எல்லாரையும் காப்பாற்றும். ஏன் என் நாட்டிற்கும் மட்டும் பரிணமா வளர்ச்சியில் ஒரு இடமே இல்லாமல் போய்விட்டது? என்ன காரணத்தால் ஒவ்வொரு பெரிய பரிணாம வளர்ச்சியும் இங்கு நடக்காமல் உலகத்தில் வேறு எங்கோ நடக்கிறது? இங்கு பணம் உண்டாக்கப்படுவதில்லை. ஆனால், அபகரிக்கப்படுகிறது! இங்குள்ள எல்லாருமே இருக்கும் பரிணாம வளர்ச்சியிலேயே திருப்தியடைந்து விடுகின்றனர். விஞ்ஞானமும் செல்வமும் பரிணாமத்தின் வானவில்லை உலகத்தின் வேறு எங்கோ உண்டாக்கிவிட்டிருக்கின்றன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook