
பிரகாசித்துக் கொண்டிருந்த கண்களும் கத்தியின் முனையைப் போல கூர்மையான, புன்னகை அரும்பிக் கொண்டிருந்த உதடுகளும் அந்த இளம் பெண்ணிடம் இருந்தன. அவனுடைய கால்களுக்கு அருகில் நின்று கொண்டு அவள், "பாபுஜீ, கொஞ்ச நாட்களாகவே காலையில் இருந்து மாலை வரை நான் உங்களை கவனித்துக் கொண்டு வருகிறேன். உங்களைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டாகிறது'' என்றாள்.
"ஏன்? இந்தப் பகுதியில் இருக்கும் மிருகக் காட்சி சாலை இல்லையே என்று தோன்றுகிறதா?'' -நந்த கிஷோர் சிரித்துக்கொண்டே கேட்டான்.
"மிருகக் காட்சி சாலையைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பமெதுவும் எனக்கு இல்லை'' -அவள் சொன்னாள்: "கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட வேண்டிய உயிரினங்கள் அனைத்தும் வெளியில் அல்லவா இருக்கின்றன? அதனால் நான் உண்மையான மனிதர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.''
"சரி... யாரையாவது பார்த்தாயா?''
"இதோ... இங்கே ஒரு மனிதரைப் பார்த்தேன்'' -நந்த கிஷோரை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு அவள் சொன்னாள்.
"நீ என்னிடம் என்ன நல்ல குணங்களைப் பார்த்துவிட்டாய்?'' -சிரித்துக் கொண்டே நந்தகிஷோர் கேட்டான்.
"யானைச் சங்கிலியைப் போன்ற தங்க மாலைகளையும் ரத்தினத்தால் ஆன மோதிரங்களையும் அணிந்திருக்கும் பெரிய பெரிய தொழிலதிபர்களெல்லாம் உங்களைச் சுற்றிச் சுற்றி வலம் வருவதை நான் பார்த்தேன். வர்த்தகத்தைப் பற்றி எதுவுமே தெரியாத அவர்களுக்கு மிகவும் எளிதாக ஏமாற்றக்கூடிய ஒரு அப்பாவி வங்காளி கிடைத்திருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய வலையில் விழக்கூடிய ஒரு அப்பாவியான பிராணியாக நீங்கள் இருப்பீர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாவதை நான் பார்த்தேன். உண்மையாகச் சொல்லப் போனால், அவர்கள் உங்களுடைய வலையில் விழுந்த செயல்தான் நடந்தது. அவர்களுக்கு அது எதுவும் புரியவில்லை. ஆனால், எனக்குப் புரிந்துவிட்டது.''
அவள் கூறியதைக் கேட்டதும், நந்தகிஷோர் திகைத்துப் போய்விட்டான். யாரோ ஒரு இளம் பெண்! ஆனால்,வெறும் ஒரு முட்டாள்தனமான இளம் பெண் அல்ல அவள்!
"என்னைப் பற்றி நான் எதுவுமே கூறவில்லை.'' அவள் சொன்னாள்: "நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். எங்களுடைய பகுதியில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு ஜோதிடர் இருக்கிறார். ஒருநாள் என்னுடைய பெயர் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் புகழ் பெறும் என்று என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து அவர் சொன்னார். என்னுடைய பிறந்த நட்சத்திரம் சாத்தானின் குணத்தைக் கொண்டதாக இருக்கிறதாம்.''
"உண்மையாகத்தான் இருக்கும்!'' -நந்த கிஷோர் வியப்புடன் சொன்னான்: "சாத்தானேதான்!''
"தெரிந்துகொள்ளுங்கள், பாபுஜீ... இந்த உலகத்திலேயே மிகவும் முக்கியமானது சாத்தானின் தோற்றம்'' -அவள் சொன்னாள்: "சில மனிதர்கள் சாத்தானைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். ஆனால், அவன் உண்மையிலேயே வரவேற்கப்படக்கூடியவனே. ஆனால், நம்முடைய கடவுள் இருக்கிறாரே! சாட்சாத் போலாநாத். அவர் எல்லா நேரங்களிலும் உறக்கத்திலேயே இருக்கிறார். இந்த உலகத்தைச் சரியான பாதையில் நடத்திக்கொண்டு செல்ல அவரால் முடியவில்லை. நம்முடைய ஆட்சியாளர்கள் இந்த உலகத்தை எந்த வகையில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். ஏதாவது தெய்வத்தன்மையான சக்தியால் அல்ல- அதற்கு மாறாக, பிசாசுத்தனமான சக்தியால் அவர்கள் உலகத்தை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய குணத்தின்படி நடக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் அந்த வகையில் நின்று கொண்டிருக்க முடிகிறது. தங்களுடைய வார்த்தைகளில் இருந்து விலகிச் சென்றால், பிசாசுகள் அவர்களின் காதுகளைப் பிடித்து வெளியே தள்ளிவிடும்.''
நந்த கிஷோர் முற்றிலும் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவள் கூறிக்கொண்டேயிருந்தாள்: "பாபு, நான் கூறுவது எதையும் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், உங்களுக்கு பிசாசின் அருள் இருக்கிறது. அதனால், உங்களுக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. எத்தனையோ ஆண்களை நான் கவர்ந்திருக்கிறேன். ஆனால், அதே மாதிரி என்னை தோல்வியடையச் செய்யக்கூடிய ஒரு ஆணை நான் பார்த்திருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதீர்கள், பாபு. அப்படிச் செய்தால் அதனால் உண்டாகும் இழப்பு உங்களுக்குத்தான்.''
"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' -நந்த கிஷோர் சிரித்துக்கொண்டே கேட்டான்.
"என்னுடைய பாட்டி கடன் தொல்லை தாங்க முடியாமல், வீட்டை விற்கப் போகிறாள். நீங்கள் அந்தக் கடனைக் கொடுத்து முடிக்க வேண்டும்.''
"அவர்களுக்கு எவ்வளவு ரூபாய் கடனாக இருக்கிறது?''
"ஏழாயிரம் ரூபாய்.''
உறுதியாக முடிவு செய்துவிட்டதைப் போல வெளிப்பட்ட அவளுடைய தேவையைக் கேட்டதும், நந்த கிஷோருக்கு ஆச்சரியம்தான் உண்டானது. அவன் சொன்னான்: "சரி... நான் அதைக் கொடுத்து முடிக்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு?''
"பிறகு... நான் எந்தச் சமயத்திலும் உங்களை விட்டுப் போக மாட்டேன்.''
"நீ என்ன செய்வாய்?''
"என்னைத் தவிர, வேறு யாரும் உங்களை ஏமாற்றவில்லை என்பதை உறுதிப்படுத்துவேன்.''
நந்த கிஷோர் மீண்டும் சிரித்தான். "சரி... அதற்கும் சம்மதிக்கிறேன். இனிமேல் இந்த மோதிரத்தை உன்னுடைய விரலில் அணிந்து கொள்.''
தன்னுடைய மனம் என்ற உரைகல்லைப் பயன்படுத்தி அவன் விலை மதிப்புள்ள ஒரு உலோகத்தைக் கண்டு பிடித்திருக்கிறான். நிரந்தரமான செயல் வேகம் அந்த இளம் பெண்ணிடம் பளிச்சிடுவதை அவன் பார்த்தான். தன்னுடைய திறமையைப் பற்றி அவள் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டவளாக இருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொண்டான். வயதான அந்தப் பாட்டிக்கு ஏழாயிரம் ரூபாய் அளிப்பதற்கு நந்த கிஷோருக்கு எந்தவொரு தயக்கமும் தோன்றவில்லை.
அந்த இளம்பெண்ணின் பெயர் சோஹினி. ஒரு வட இந்திய இளம் பெண்ணிடம் இருக்கக் கூடிய எல்லாவிதமான வசீகரமும் திறமையும் அவளிடம் இருந்தன. இரக்கம் கொண்ட இதயங்களின் சந்தையில் விலை பேசி விளையாடுவதற்கு அவளுக்கு நேரம் இல்லாமலிருந்தது.
நந்த கிஷோர் அவளைச் சந்தித்தது, வளர்த்துக் கொண்டு வந்தது ஆகியவற்றிற்கான சூழ்நிலை மிகவும் புனிதமானதாகவோ தனிமை நிறைந்ததாகவோ இல்லை. ஆனால் பிடிவாத குணம் கொண்டவனாகவும் யாருக்கும் வளைந்து கொடுக்கக் கூடியவனாகவும் இல்லாத அந்த மனிதன் சமூகத்தின் வழி முறைகளுக்கோ சட்டங்களுக்கோ அடிபணிந்ததே இல்லை. அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டானா என்று நண்பர்கள் அவனிடம் கேட்டார்கள். "அளவுக்கு மேலே திருமணம் செய்யவில்லை.'' -அவன் சொன்னான்: "சகித்துக் கொள்வதற்கு ஒரு எல்லை வைத்திருக்கிறேன்.'' தன்னுடைய விருப்பங்களுக்கேற்றபடி அவன் அவளை வழி நடத்திச் செல்ல முயற்சிப்பதைப் பார்த்து ஆட்கள் சிரித்தார்கள்."என்ன... அவளை ஒரு பேராசிரியராக ஆக்கும் நோக்கம் இருக்கிறதா?" என்று ஆட்கள் கேட்டதற்கு, "இல்லை...
July 6, 2017
March 8, 2016
October 27, 2012
February 17, 2016
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook