Lekha Books

A+ A A-

மரணத்தின் நிழலில்... - Page 6

maranaththin-nizhalil

நான்தான் கூறினேனே நீண்ட காலமாகவே நான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன் என்று. மற்ற நான்கு உண்ணாவிரதத்திற்கும் இந்த ஐந்தாவது உண்ணாவிரத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு. நான்கு உண்ணாவிரதத்திற்கும் பின்னால் ஒரு குறிக்கோள் இருந்தது. நிச்சயம் உண்ண முடியாது என்ற பிடிவாதமும் இருந்தது. இதற்குப் பின்னால் ஒன்றுமே கிடையாது. உண்ணாவிரதத்திற்காக உண்ணாவிரதம்.  அதுவும் சரியாக இல்லை. ஒவ்வொரு நாளும் அரை பாட்டில் பால் பருகுவேன்.

பல நேரங்களில் கொஞ்சம் தேநீரும் அருந்துவேன். மொத்தத்தில் பேய் பிடித்தமாதிரி தோன்றும். சாப்பிடுவது குறித்து நான் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாது என்று பிடிவாதம் பிடித்தேன். இருந்தாலும் உணவு குறித்து எண்ணாமல் இல்லை. அப்போது பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கும். என்ன செய்வது? சிறு பூச்சியாகவோ புழுவாகவோ மீனாகவோ மிருகமாகவோ பறவையாகவோ நானிருந்தால்... ஆமாம் ஒரு பறவையாக நானிருந்தால்- ஆனால் நான் மனிதனாகி விட்டேனே! மனிதப்பிறவி என்பது எவ்வளவு பெரிய கொடை என்று நினைக்க வேண்டும் அல்லவா? உயர்ந்த பிறவி அது என்று கருத வேண்டும் அல்லவா? அது கிடக்கட்டும்.

சில நாட்களாக நான் ஒரு பெரிய புதினம் எழுதிக் கொண்டிருந்தேன். எழுதிக் கொண்டிருந்தேன் என்றால் எழுதி முடித்துவிட்டேன் என்று அர்த்தம். நான் அதைச் சிறியதாக ஆக்கிக் கொண்டிருந்தேன். பெரிதாக அல்ல. சிறியதாக ஆக்குவது என்றால்... மீண்டும் அதை எழுதிக் கொண்டிருந்தேன். நான்கு மணி வரை எழுதுவேன். அப்போது குஞ்ஞம்மா அரை பாட்டில் பாலுடன் வருவாள். சாதாரண நிகழ்ச்சி என்றாலும் பெண் சம்பந்தப்பட்டதாயிற்றே! அதற்குப் பிறகு ரசனையான நிமிடங்கள்தாம்.

என்னிடம் பல விஷயங்களை அவள் பேச வேண்டும்- பூனை குட்டி போட்டது, மது அருந்திய பட்டாளக்காரர்கள், பெண்களைப் பட்டப்பகலில் அத்துமீறி ஆக்கிரமித்தது, அதற்குப் பிறகு அரிசி கிடைக்காமல் போனது. எல்லாம் சொல்லி முடித்த பிறகு கேட்பாள், நான் கொடுக்க வேண்டிய பணத்தை ஏன் இன்னும் தரவில்லை என்று. அவள் அப்படிக் கேட்கிறபோது நான் வாயே திறப்பதில்லை. அவள் பறவைக் குஞ்சைப்போல் சிலிர்ப்பாள். எல்லாவற்றையும் மறந்து பிரச்சினை சில நேரங்களில் பெரிதாகிவிடும்.

"காசு தா... காசு தா."

நான் கூறுவேன்:

"ஏண்டி.. உண்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லியிருக்கேன்ல..."

அவள் கேட்பாள்:

"என்னை அடிச்சு கொல்றதுக்கா?"

நான் சொல்வேன்:

"ஆமாம்.. உன் அப்பா உன்னோட அம்மாவை அடிச்சு கொன்னுருக்காரா?"

குஞ்ஞம்மா பதில் கூறுவாள்:

"அப்பா அம்மாவை அடிப்பாரு. அப்போ அம்மா சொல்லுவாங்க. கடவுள் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருப்பாருன்னு."

"அப்போ உங்கப்பா என்ன சொல்லுவாரு?"

"அய்யோ." குஞ்ஞம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "காசு தா. காசு வாங்கிட்டு வரச்சொல்லி அப்பாதான் அனுப்பினாரு."

"சரிடா கண்ணு. நீ இப்போ போ. நாளைக்கு தர்றேன்."

"நாளைக்கு வந்தா இதையேதான் சொல்லுவே நீ. இப்போ போ. நாளைக்குத் தர்றேன்னு."

நான் கூறுவேன்:

"என் சின்னு.. நாளைக்கு கட்டாயம் தருவேன்."

குஞ்ஞம்மாவுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவள் விறைத்துக் கொண்டு கூறுவாள்:

"எம் பேரு குஞ்ஞம்மா... சின்னு இல்லே."

நான் கூறுவேன்:

"மறந்துபோச்சுடா கண்ணு."

"ஒவ்வொரு நாளும் மறந்திடு."

"இனி மறக்கவே மாட்டேன். குஞ்ஞம்மா... குஞ்ஞம்மா... குஞ்ஞம்மா... இனி மறக்க மாட்டேன். போதுமா?"

குஞ்ஞம்மா கேட்டாள்:

"அது என்ன சின்னு?"

ஒரு பழைய சின்னு இடையில் வருவது எப்போதும் நல்லதுதான். குஞ்ஞம்மாவுக்கும் எனக்கும் இடையில் எந்தச் சின்னு வந்து நின்றாலும் குஞ்ஞம்மா அதை விரும்ப மாட்டாள்.

நான் கூறுவேன்:

"நாளைக்குச் சொல்றேன்."

"இன்னைக்கே சொன்னால் என்ன! அவளோட கையில வளையல் கழண்டிருமா என்ன?"

நான் கம்பீரமான குரலில் கூறுவேன்:

"நீ அவள் என்று சின்னுவைக் கூப்பிடுறதே தப்பு."

"பிறகு என்ன மகாராணின்னு கூப்பிடணுமா?"

நான் அசையாமல் இருப்பேன்.

குஞ்ஞம்மா அழுவது மாதிரியான குரலில் கூறுவாள்:

"காசு தா..."

நான் சொல்வேன்:

"உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி இருக்கேன்ல..."

"நாளைக்கு இருந்து நான் பால் கொண்டு வரலைன்னா..."

"ரொம்ப நல்லதாப் போச்சு. பிறகு வேறென்ன விசேஷங்கள்?"

குஞ்ஞம்மா ஒன்றுமே கூறாமல் கோபத்துடன் சென்றாள். நான் சர்க்கரை இடாத பால் குடித்தேன். பிடிக்கவில்லை. சர்க்கரை இல்லாததால் "நாட்டிலே சர்க்கரை எங்கே?" என்று ஒரு முறையோ இரண்டு முறையோ கூக்குரல் இடலாம். இல்லாவிட்டால் குஞ்ஞம்மா கேட்பது மாதிரி "போருக்கு எதற்குச் சர்க்கரை" என்றும் கேட்கலாம். என்ன இருந்தாலும் சர்க்கரை போடாத பாலைக் குடித்துவிட்டு நான் வெளியே கிளம்புவேன். பெரிய வேலை ஒன்றும் இல்லை... வெறுமனே நடக்கத்தான்.

கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆள் நடமாட்டம்கூட அதிகமில்லை. இருப்பவர்களில் அதிகம் பேர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். அதற்குப் பிறகு பிச்சைக்காரர்கள். ஆட்கள் குடியிருக்காத வீடுகளுக்கு முன்பு அவர்கள் தங்கத் தொடங்கி இருக்கிறார்கள். எல்லா வீடுகளிலும் போர்டு தொங்குகிறது- "வாடகைக்குக் கொடுக்கப்படும்." யாருக்கு? நான் ஒவ்வொரு வீட்டின் முன்புறம் நின்று சந்தேகத்தோடு பார்ப்பேன். நகரம் முழுக்க ஒரே மயான அமைதி. பூங்காக்களிலும் இதே நிலைதான். அங்கு எதிர்பார்ப்பு உண்டு. மலர்ந்து கிடக்கிற பெஞ்சுகளும்... பூங்காவில் ஆண்களைவிட பெண்களே அதிகம். மாலை மயங்கிய பிறகும்கூட அவர்கள் பூங்காவை விட்டு நகர்வதில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. பட்டாளக்காரர்கள் மாலை வரும்போது பூங்காவைத் தேடி வருவார்கள். அப்போது வானொலியில் பாடல் ஆரம்பிக்கும். பிறகு பெருமூச்சுகள்.. முனகல்கள்...

ஹோ.. என்னால் முடியாது. நாக்கு வறண்டுபோய் விட்டது. கேட்டீர்களா? உடலில் ஒரு சோர்வு. இருந்தாலும் இதை எழுதி முடித்தே தீருவேன். முடியுமா? மாலை மேலும் கொஞ்சம் மறையத் தொடங்கியதும் நான் மீண்டும் இந்த அறையைத் தேடி வருவேன். மின்விளக்கின் ஸ்விட்சை அழுத்துவேன். ஒளி நிரம்பிய அறையில் பிரகாசம் பரப்புகிற விளக்குகள். கீழே, இந்தச் சாய்வு நாற்காலியில் நான் அமர்வேன். அதற்குப் பிறகு ஒரு பீடியை எடுத்துப் புகைத்துப் புதிய ஒரு கதையை எழுத ஆரம்பிப்பேன். எழுதுவதற்கு முன்பு சிந்திப்பேன். இன்னைக்கு ஒரு நாளாவது சாப்பிட்டா...!

இது இப்போது என் விருப்பம் மட்டுமா? நான் சொன்னேனே! மனிதர்கள் வசிக்காத வீடுகளின் முன்பு, கடைத்திண்ணைகளில், ரெயில்வே ஸ்டேஷனில், பூங்காவின் திறந்தவெளியில்- அங்கெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பசியுடன், வெளிறிப்போய், காய்ந்த சருகாய் ஆதரவே இல்லாமல் ஆண்களும் பெண்களும் கிடக்கிறார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

ஞாபகம்

May 29, 2014

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel