Lekha Books

A+ A A-

காதல் - Page 2

rasikkathane azhagu-kadhal

நடைமுறையில் அப்படி இல்லையே?! சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக காதலித்தவரை விட்டு வேறு நபரை / வேறு பெண்ணை மணந்து வாழும் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு அருமையான அடிப்படையை  வைத்து சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பே அமரர் டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் 'கல்யாண பரிசு' எனும் திரைப்படம் இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும்  அபிநய ஸரஸ்வதி திருமதி. சரோஜாதேவி அவர்கள் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கதாநாயகன், தான் உயிருக்குயிராகக் காதலித்த பெண்ணின் (கதாநாயகியின்) அக்காவை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. இவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் கதாநாயகனின்  மனைவியும், கதாநாயகியின் சகோதரியுமான விஜயகுமாரி இறந்துவிடுகிறார். சராசரி கதைகளில் மனைவி இறந்தபின் கதாநாயகன் காதலித்த பெண்ணையே, கதாநாயகன் மறுமணம்  செய்து கொள்வது போல திரைக்கதையை இயக்குனர்கள் அமைத்திருப் பார்கள்.

ஆனால் இயக்குனர் ஸ்ரீதர், இயல்பான ஒரு முடிவை.... வாழ்க்கையின் யதார்த்தமான ஒரு திருப்பத்தை அமைத்து மிக அருமையாக இயக்கியிருந்தார்.  கதாநாயகி, வேறு நபரை திருமணம் செய்து கொள்வதுதான் இத்திரைப்படத்தின் வித்தியாசமான திருப்பம். 'கல்யாணபரிசு' படம் வெளிவந்த காலத்தில் 'காதல்' என்பதே மிகப்பெரிய விஷயம், தப்பான விஷயம் என்பது போன்ற மனப்பான்மை நிலவிவந்தது. காதல் தோல்வியடைந்த பெண், வேறொரு ஆடவனை மணப்பது என்பது அந்தப் பெண்ணுக்கு குற்றமனப்பான்மையை உருவாக்குவதாய் இருந்தது.

'கல்யாணபரிசு' படம்  வந்த பிறகு, 'இது வாழ்வின் யதார்த்தம், இயல்பானது' என்கிற நடைமுறை உண்மைகளைப் புரிந்து கொண்ட இளம் பெண்கள், குற்ற உணர்வில் இருந்து  விடுபட்டார்கள்.

 வாழ்வியல் உண்மைகளை தன் திரைக்கதையில் திறம்பட அமைத்து, ஒரு திரைப்படமாக அல்ல, ஒரு திரைக்காவியமாய் அளித்தார் இயக்குனர் ஸ்ரீதர். 'கல்யாணபரிசு' திரைப்படத்தின் கதாநயாகியாக  தங்களைக் கண்ட பெண்கள், தங்களை உணர்ந்த பெண்கள் பலர்.

எனவே இந்த வெள்ளித்திரைப்படம், இருபத்தைந்து வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்பே தன் கதையிலும், திரைக்கதையிலும் புதுமையையும், புரட்சியையும் செய்து காட்டியவர் இயக்குனர் ஸ்ரீதர்.

'காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி...

காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்...'

எனும் இந்தப் பாடல் 'கல்யாணப் பரிசு' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலாகும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக காதலித்தவனை மணம் முடிக்க இயலாமல் வேறு நபரை திருமணம் செய்து கொண்டபின் அவள் எத்தனை உண்மையாக தன் கணவனை நேசித்தாள் என்பதையும், அந்த நிலையிலும் தன் பழைய காதல், தனக்கு தீங்கு இழைத்து விடுமோ என்று அஞ்சுவதைப் பற்றியும் மிகமிக அழகாக 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தினார் இயக்குனர் ஸ்ரீதர்.

தான் காதலித்த பெண் நன்றாக வாழவேண்டும் என்று மிக உண்மையாக நினைத்து, அவளுக்காக. அவளது கணவனின் உயிரை மீட்க பாடுபட்ட 'டாக்டர்' கதாபாத்திரத்தை ஒரு கவிதை போல படைத்திருந்தார் ஸ்ரீதர். அந்த கண்ணியமான காதலன் கதாபாத்திரம் அகில இந்திய ரீதியில் பாராட்டுகள் பெற்றது. 'எங்கிருந்தாலும் வாழ்க....... உன் இதயம் அமைதியில் வாழ்க......' என்ற பாடல் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தில் இடம் பெற்ற மிக அருமையான பாடல்!

காதலித்த பெண், யாரை மணந்தாலும், எங்கே இருந்தாலும் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கம் உள்ளவனின் காதல்தான் உண்மையான காதல் என்பதை 'எங்கிருந்தாலும் வாழ்க....... உன் இதயம் அமைதியில் வாழ்க......' என்ற எளிமையான, அருமையான வரிகளில் ரத்தினச் சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். அந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னர் மெட்டமைத்த திறமையும் ஒருங்கிணைந்து, ஒரு புதுமையான காதல் பாடலை அளித்தன.

இன்றைய திரைப்பட ரசிகர்கள் மனதிலும் ரீங்காரமிடுகிறது இந்தப் பாடல். பெண் மட்டுமல்ல.... ஒரு ஆண்மகன் கூட காதலுக்காகவும், காதலிக்காகவும் மிக நேர்மையாக பாடுபட முடியும், அதன் மூலம் காதலை கௌரவிக்க முடியும் என்று எடுத்துக்காட்டிய படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் டைரக்டர் ஸ்ரீதர்.

காதலை மையமாக வைத்துத்தான் ஏராளமான திரைப்படங்கள் தயாராகின்றன. 'பாபி' எனும் ஹிந்தி திரைப்படம், காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படம்! இளமை ததும்ப எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படமும் அகில இந்தியப் புகழ் பெற்றது. 'பாபி' பார்க்காதவன் 'பாவி' என்பது போன்ற மனோபாவத்தை உருவாக்கிய திரைப்படம் இது.

காதல் பற்றிய அநேக விஷயங்கள், காதலிக்கும் ஜோடிகள், காதல் தோல்விகள், வெற்றிபெற்ற காதல்கள் இவையாவும் நாம் வாழ்க்கையில் சந்திப்பவை. கேள்விப்படுபவை. வாழ்க்கையில் வரும் இவையே திரைப்படங்களிலும் காட்சிகளாகவும், கதை களாகவும் காட்டப்படுகின்றன.

மரணம் அடைந்துவிட்ட தன் காதலியை உயிரோடு இருக்கிறாள் என்று கற்பனை செய்து கொண்டு அந்த கற்பனை உலகை நிஜம் என்று நம்பி வாழும் ஒரு இளம் காதலன் பற்றிய திரைப்படம் 'காதலில் விழுந்தேன்' எனும் திரைப்படம். இதில் கதாநாயகனாக நடித்த நடிகர் நகுலும்,  காதலியாக நடித்த நடிகை சுனைனாவும் தங்கள் இளமை ததும்பும் தோற்றத்துடனும், திறமை மின்னும் நடிப்பாற்றலுடனும் நடித்து அப்படத்தின் இயக்குனரின் கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்களை வெகு அருமையாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் பாணி வேறு விதமாக காதலை சொல்லியது. இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் பாணி வேறு விதமாக 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்கிற படத்தில் காதல் பற்றி சொல்லியது. மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள இயக்குனர்களின் கோணத்தில் இந்த காதல்தான் எத்தனை விதமான பரிமாணங்களைக் கூறுகிறது!

காதலில் ஏகப்பட்ட உணர்வுகள் சங்கமிக்கின்றன. அன்பு, ஆசை, பாசம், பரிதவிப்பு, ஏக்கம், ஏகாந்தம், ஊடல், கூடல், சண்டை, சச்சரவு, சமாதானம், கனவு, களவு, காமம், சுயநலம், தியாகம் போன்ற பலவித உணர்வுகளின் சங்கமம் காதல்! இவற்றில் மிக முக்கியமான உணர்வு தியாகம்! சிலர், காதலுக்காகவும், காதலனுக்காகவும் / காதலிக்காகவும் தன்னை பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவரையும் தியாகம் செய்கிறார்கள். பலர், தங்கள் காதலையே பெற்றோருக்காக தியாகம் செய்கிறார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel