Lekha Books

A+ A A-

உன்னதமான உறவுகள் - Page 2

rasikkathane azhagu-unnathamana-uravugal

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் அன்புடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். கணவனுக்கு ஒரு மூத்த சகோதரி. அவள் வெளியூரிலிருந்து அவ்வப்போது தன் தம்பி வீட்டிற்கு வருவார். தம்பி மீது பாசம் என்றால் பாசம் அப்படியொரு இமாலயப்பாசம். தம்பிக்கும் அக்கா என்றால் உயிர். அக்கா, தன் இருப்பிடம் தேடி வந்து விட்டால் சந்தோஷத்தில், தலைகால் புரியாமல் நடந்து கொள்வார். தம்பியின் இந்தப் பாசத்தை நல்லவிதமாக பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை அந்த அக்காவிற்கு. 

தம்பியின் மனைவி நல்ல நிறமாகவும், அழகாகவும் இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட அக்கா, தம்பியின் மனைவியைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தன் தம்பியிடம் கோள் மூட்ட ஆரம்பித்தார். அக்கா மீதுள்ள அந்தப் பாசம், தம்பியின் கண்களை மறைத்தது. எனவே மனம் மாறினார். தடுமாறினார். தடம் புரண்டார். அக்காவின் பேச்சை அப்படியே கேட்டுக் கொண்டார். மனைவி மீது மனக்கசப்பு கொண்டார். தேவை இல்லாமல் மனைவியிடம் எரிச்சல் பட்டார். அதைப் பார்த்து உள்ளுக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன் சுயரூபம் வெளிப்பட்டு விடாமல் கவனமாக நடந்து கொண்டார் அந்த அக்கா.

அவளது இடையூறு காரணமாக தம்பதிகளுக்கு இடையே இடையறாத சச்சரவு ஏற்பட்டது. தனிமை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கணவரிடம் கெஞ்சினாள் மனைவி. "மத்தவங்க முன்னாடி என்னை அவமானப் படுத்தாதீங்க" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். "என் அக்கா உனக்கு மத்தவங்க என்றாகிவிட்டதா?" என்று மேலும் கடுமையாக பேசினார் கணவர். தன் முயற்சியில் தோல்வி கண்ட அந்தப் பெண்மணி மனதளவில் அயர்ச்சி அடைந்தாள். 'ஊரிலிருந்து வந்திருக்கும் நாத்தனார் எப்போது கிளம்புவார்' என்று எதிர் பார்க்கும் அளவு நொந்து போனாள்.

அந்த அக்காவோ, மெள்ள மெள்ள தம்பியின் மகள்கள் பற்றியும் மூட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். கல்லூரியில் படிக்கும் மகள்கள் பற்றி, யோசித்து யோசித்து குற்றம் கூறி பற்றவைத்தார். 'ஐ பாட்' (I Pod) எனும் கருவியில் பாட்டு கேட்டால் தப்பு, இரவில் கம்ப்யூட்டர் பார்த்தால் தப்பு, விடுமுறை நாட்களில் பகல் நேரம் 'ராசாத்தி' எனும் இரவு உடை அணிந்தால் தப்பு, உரக்க சிரித்தால் தப்பு என்று தப்பாமல் அனைத்தையும் தம்பியிடம் குறை கூறி அந்தப் பெண்கள் மீதும் கோபப்பட வைத்தார் தம்பியை.

அக்காவிற்கும் இரண்டு மகள்கள், ஒரு மகன். அதிர்ஷ்டவசமாக மூவருமே திருமணமாகி வெளி நாட்டில் குடியேறி இருந்தனர். இதை அவர்கள் சார்பாக 'அதிர்ஷ்டம்' என்பதா, தம்பியின் குடும்பம் சார்பாக 'துரதிர்ஷ்டம்' என்பதா என்று புரியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. மெனக்கெட்டு ஊரில் இருந்து தம்பி வீட்டிற்கு வந்து தன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பியின் குடும்பத்தில் கலகமூட்டுவதை பொழுது போக்காக அமைத்துக் கொண்டாள்அந்த அக்கா. அவரது கணவர் இவரைத் தேடுவதும் இல்லை. 'வெளியூர் சென்று இத்தனை காலம் தங்கிவிட்டாளே! என்று கவலைப்படுவதும் இல்லை. எனவே அக்காவின் கொடுங்கோல் ஆட்சி, தம்பியின் குடும்பத்தின் நிம்மதியை அழித்தது. குடும்பத்தினரின் மனங்களை அலைக் கழித்தது. இது பற்றியெல்லாம் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இயலாத அளவு அக்கா தம்பியின் கண்மூடித்தனமான பாசம் தன் வேலையைக் காட்டியது.

தம்பி, அலுவலகத்திலிருந்து வந்ததும் அவருக்கு அவரது மனைவியை பணிவிடை செய்ய விடமாட்டார். தானே காப்பி போட்டுக் கொடுப்பார். சமையல் செய்வதில் திறமைசாலியான அவருக்கு, நாக்குக்கு அடிமையான தம்பியின் உணவு ரஸனை பெருமளவில் உதவி செய்தது. எனவே 'இன்னிக்குஉனக்கு என்ன தம்பி வச்சுக் கொடுக்கட்டும்?' என்று கேட்டு கேட்டு சமைத்துப் போடுவார். அக்கா கேட்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், அசைவவகைகள் வாங்கிப்போடுவதற்குள் தம்பியின் மனைவிக்கு விழி பிதுங்கும். காரணம், விலைவாசி ஏற்றம். பட்ஜெட்டிற்குள் கட்டுப்பாடாக குடும்பம் நடத்தி வந்த அந்தப் பெண், கட்டுக்கடங்காத செலவு குறித்து கலங்குவாள். கணவரிடம் முறையிடவும் பயம். வேறு வழியின்றிபொருளாதாரப் பிரச்சனை பற்றி பேசினால் 'அக்கா கேட்பதை வாங்கிப் போடு. பணம் போதலைன்னா என்னைக் கேள்' என்று கூறிவிடுவார் கணவர். 

தம்பியும், அவரது மனைவியும் மனதளவில் ஒற்றுமையாக இல்லை, அதற்கு காரணம் தான்தான் என்று அறிந்தும், அறியாதது போல் தன் அடாவடியான நடவடிக்கைகளை அன்றாடம் நடத்திக் கொண்டிருந்தாள் அந்த அக்கா. ஒரு வழியாக அவர் ஊருக்குக் கிளம்பிப் போகும் அன்று தம்பியின் மனைவியும், மகள்களும் 'யப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவர்.

அக்கா இருக்கும் வரை கணவன் - மனைவிக்குள் ஏற்படும், அந்த அக்கா ஏற்படுத்திய மனஸ்தாபங்கள், அவர் ஊருக்குப் போன பிறகும் சில நாட்கள் தொடரும். அந்த கோபதாபங்கள் தீர்ந்து பழையபடி கணவன், நல்லபடியாக மாறிக் கொண்டிருக்கும் பொழுது 'திடுதிப்' என்று மீண்டும் வந்து நிற்பாள் அக்கா. பிறகென்ன?! வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான். ஏதோ தன்னால் முடிந்த கைங்கர்யம் என்று அக்காக்காரியின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. அன்பான தம்பதிகளின் அந்நியோன்யத்தை அழித்தன. தம்பியின் மகள்களது மனதில் அப்பாவின் மேல் ஒரு மனக்கசப்பும், வெறுப்பும் சேர்ந்து மெல்ல ஒரு இரும்புத்திரை உருவாகியது.

குடும்பத்தின் அமைதி பறி போனது. உடன் பிறந்தோர் மீது பாசம் கொள்ளலாம். ஆனால் அந்த பாசம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்துப் பார்க்கும் தன்மையை மறக்கும் விதமாக இருக்கக்கூடாது. மனைவி என்பவளும் தன் அன்பை மதித்து வந்தவள் என்பதை மறந்து விடக்கூடாது. தன் பிள்ளைகளின் சந்தோஷமும் முக்கியம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அந்த மனப்பான்மை இல்லாதபடியால் அந்தக் குடும்பத்தின் நிம்மதியும், அமைதியும் குலைந்து போனதை கண்கூடாக கண்டவள் நான்.

சில குடும்பங்களில் இதே விஷயம் தலை கீழாக நடப்பதுண்டு. அதாவது தன் கணவனை கைக்குள் போட்டுக் கொண்ட மனைவி அவனது உடன் பிறப்புகளை அண்ட விடாமல் செய்வதுண்டு. தான், தன் கணவன், தன் குழந்தைகள் மட்டுமே குடும்பம் என்று நினைப்பாள், மதிப்புக்கொடுப்பாள். அன்பு செலுத்துவாள். கணவனது அம்மா, அப்பா, தங்கை, தம்பி அக்கா, யாரையுமே தன் கணவனிடம் பேசக்கூட  இயாலதபடிக்கு ஒரு வியூகம் அமைத்து விடுவாள் அந்த மனைவி.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel