
"ஏ சுபி, ஒரு விஷயம் சொல்லணும்ன்னு நினைச்சேன். பிறந்த வீட்டுக்குப் போன மீனா மாமி வந்துட்டா. வழக்கம் போல காபிப் பொடியும், சீனியும் இரவல் வாங்கிட்டுப் போயிருக்கா..."
"இந்த மீனா மாமிக்கு இரவல் மாமின்னு பேர் வைச்சுடலாம். அடிக்கடி வந்து காபிப் பொடியும், சீனியும் கேட்டு வாங்கிட்டுப் போறாங்க. பாவம் அத்தை மீனா மாமி ரொம்ப வெகுளி..."
"அடடே உன் கூட பேசிக்கிட்டே இருந்ததுல மேகலாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போணும்ங்கறதையே மறந்துட்டேன்."
"அக்காவுக்கு என்ன ஆச்சு?"
"ஜுரமா இருக்கு. தலைவலிக்குதாம்."
"நான் கூட்டிட்டுப் போறேன் அத்தை. நீங்க வீட்ல இருங்க..."
"சரிம்மா" பதில் கூறிய கமலம், இரவு உணவு தயாரிப்பதற்காக சமையலறைக்குச் சென்றாள்.
மேகலாவின் அறைக்குள் வேகமாகச் சென்றாள் சுபிட்சா. அங்கே, கட்டிலில் படுத்திருந்த மேகலாவின் நிலையைப் பார்த்த சுபிட்சா அலறினாள்.
கண்கள் பாதி அளவு திறந்திருக்க, தலை ஒரு பக்கமாய் சாய்ந்திருக்க, கால்கள் இரண்டும் பரப்பி இருக்க மேகலா படுத்துக் கிடந்த கோலத்தைப் பார்த்து அலறிய சுபிட்சாவின் இதயம் அதிர்ந்தது. இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து, ஒருக்களித்துப் படுப்பதுதான் மேகலாவின் வழக்கம். புடவை அணிந்திருந்தாலும், சுடிதார் அணிந்திருந்தாலும், நைட்டி அணிந்திருந்தாலும் ஒரு அங்குலம் கூட விலகி விடாமல் கவனமாக படுத்துத் தூங்கும் மேகலா... இப்படி இரண்டு கால்களையும் பரப்பி, உடுத்தி இருக்கும் புடவை முழங்கால் வரை விலகிக்கிடப்பதைப் பார்த்த சுபிட்சா, மிகுந்த பயத்துடன் மேகலாவின் அருகே சென்றாள். அவளது புடவையை பாதம் வரை இழுத்து மூடினாள். மேகலாவின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தாள். சுவாஸம் சீராக இருப்பதைப் பார்த்து நிம்மதி அடைந்தாள். மேகலாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். அந்த ஸ்பரிசத்திலும் மேகலா கண் விழிக்கவில்லை.
'இந்த அளவுக்கு ஆழ்ந்து தூங்கவே மாட்டாளே'... சிந்தித்தபடியே மேகலாவின் தோளைத் தொட்டு உலுக்கினாள் சுபிட்சா.
''அக்கா... அக்கா...''
பயத்திலும், பதற்றத்திலும் சற்று வேகமாகவே உலுக்கியதால் கண் விழித்தாள் மேகலா.
''அக்கா... அக்கா... என்னக்கா... ஏன் இப்படித் தூங்கறே?...''
''ம்... ம்..." என்று முனகிய மேகலா, மறுபடியும் தூங்க ஆரம்பித்தாள்.
மறுபடியும் அவளை உலுக்க ஆரம்பித்தாள். சுபிட்சா இவ்விதம் மேகலாவை உலுக்குவதைக் கண்ட கமலம் பதறினாள்.
''ஏம்மா சுபிட்சா... உடம்பு சரியில்லாம அசந்து தூங்கிக்கிட்டிருக்கிற மேகலாவை ஏன் இப்பிடி முரட்டுத்தனமா எழுப்பறே...? தொந்தரவு பண்ற ?...''
''என்னதான் உடம்பு சரி இல்லைன்னாலும் இந்த அளவுக்கு அசந்து அக்கா தூங்கினதே இல்லை அத்தை. அதனாலதான்.''
''அதுக்காக இப்படியா எழுப்புவாங்க? சொல்லப் போனா... அவ இப்படித் தூங்கறது நல்லதுக்குத்தான். நல்ல தூக்கம் தூங்கி எழுந்துட்டாள்ன்னா தலைவலி, அசதி எல்லாம் போய் ஃப்ரெஷ்ஷா ஆயிடுவா. அவளைத் தொந்தரவு பண்ணாதே. நல்லா தூங்கட்டும்...''
''எனக்கென்னமோ பயம்மா இருக்கு அத்தை...''
''பயம்மா? நல்ல பொண்ணும்மா நீ... வா... அவளே தூக்கம் கலைஞ்சு எழுந்து வர்ற வரைக்கும் நாம எழுப்ப வேண்டாம். வா சுபிட்சா... சொல்றேன்ல...''
''சரி அத்தை...''
இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
மறுநாள் காலை.
மேகலாவின் அருகில் படுத்திருந்த சுபிட்சா, பக்கத்தில் படுத்திருந்த மேகலாவைக் காணாமல் வேகமாக எழுந்தாள். ஏற்கெனவே எழுந்து, குளித்து முடித்து அறைக்குள் வந்து கொண்டிருந்த மேகலாவைப் பார்த்து, பயம் தெளிந்து புன்னகை புரிந்தாள் சுபிட்சா.
''என்னக்கா இவ்வளவு சீக்கிரமா எழுந்து குளிச்சுட்டே…?''
''சீக்கிரமா? மணியைப் பாரு...''
''அடடே... மணி எட்டா? இவ்வளவு நேரமா தூங்கி இருக்கேன்?...'' சுபிட்சா பரபரப்பானாள்.
''ஐய்யய்யோ... அத்தை பாவம். சமையலறையில தனியா வேலை செஞ்சுட்டிருப்பாங்களே...'' மேகலா கவலைப்பட்டாள்.
''நம்ம அம்மா இருந்திருந்தா நம்பளை எழுப்பி வேலை வாங்குவாங்களா? அதுபோல அத்தையும் நாம தூங்கிக்கிட்டிருந்தா எழுப்பவே மாட்டாங்கள்ல? நாமளா போய் உதவி செஞ்சாத்தான். அம்மாவுக்கு சரிசமமா அத்தை கிடைக்க நாம குடுத்து வச்சிருக்கணும். சரி சரி. நீ போய் அத்தைக்குக் கூடமாட ஏதாவது செஞ்சு குடு.''
''அது சரி... நேத்து என்ன? உனக்கு அப்படி ஒரு தூக்கம்?''
''ஆபீஸ்ல இருந்து வர்ற வழியில தலைவலி அதிகமா இருந்துச்சு. ஒரு மருந்துக் கடையில மாத்திரை வாங்கிப் போட்டேன். அவன் என்ன மாத்திரை குடுத்தானோ... அப்படி அசந்து தூங்கியிருக்கேன்."
''இதுக்குத்தான் சொல்றது... ஆஸ்பத்திரிக்குப் போகாம டாக்டரைக் கேக்காம எந்த மாத்திரையும் வாங்கிச் சாப்பிடாதேன்னு...''
''ஆஸ்பிட்டல் போய் டாக்டர் கொடுத்த மாத்திரையைத்தான் மேகலா சாப்பிட்டா... என்னமோ மருந்துக் கடைன்னு குழப்பறே...''
திடீரென்று அங்கு வந்த பிரகாஷ் துடுக்காகவும், நக்கலாகவும் கேட்க, மேகலா, இதயம் அதிர்ந்தாள்.
''என்ன பிரகாஷ் மச்சான்?... நேத்து அக்கா தான் அசந்து தூங்கினாள்ன்னு பார்த்தா... உங்களுக்கு இன்னும் தூக்கம் கலையலை போலிருக்கு?...''
''நான் தூங்கினாலும் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். எனக்குத் தெரியும்ன்னு சிலருக்குத் தெரியாது..." மீண்டும் பொடி வைத்து மறைமுகமாகப் பேசினான் பிரகாஷ்.
''அய்யோ... கடவுளே... காலங்காத்தால இந்தக் கடிமன்னனை கடலுக்குள்ள தள்ளிவிடணும் போல இருக்கு...''
''சுபி... நீ போய் அத்தையைப் பாரு. சமையலறையில அத்தை கஷ்டப்பட்டுக்கிட்டிருப்பாங்க...'' மேகலா கூறியதும் நைட்டியோடு கட்டிலை விட்டு இறங்கினாள் சுபிட்சா.
''ஆமா... இவ போய் 'தினந்தோறும் வாங்குவேன் இதயம்' பாடிக்கிட்டே ஜோதிகா மாதிரி டான்ஸ் ஆடப்போறாளாக்கும்?'' பிரகாஷ் கிண்டல் பண்ணினான்.
பிரகாஷிற்கு 'வெவ்வவே' என்று பழிப்பு காண்பித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சுபிட்சா.
பிரகாஷிடம் தனியாக மாட்டிக் கொண்ட மேகலா, அறையை விட்டு வெளியேற முயற்சித்தாள். அறை வாசலுக்குக் குறுக்காக கையை வைத்து வழி மறித்துக் கொண்ட பிரகாஷ் கேட்டான்.
''என்ன ஆச்சு உனக்கு? ஏன் வில்லனைக் கண்ட கதாநாயகி மாதிரி என்னைப் பார்த்து பதுங்கறே... ஒதுங்கறே…?''
''நீ எனக்கு வில்லனும் இல்லை... நான் உன்னோட கதாநாயகியும் இல்லை...''
''என்னம்மா... என்ன கதாநாயகி... என்ன வில்லன்?'' தற்செயலாக அங்கே வந்த மூர்த்தி, மேகலாவிடம் கேட்டார்.
''அ... அ... அது... வந்துப்பா... பிரகாஷ் மச்சான் ஏதோ தமிழ்ப்பட சி.டி.யைப் பார்த்துட்டு..."
"அவன் எங்கம்மா தமிழ்ப்பட சி.டி.யைப் பார்த்திருக்கப் போறான்? ஏதாவது புராணப் படத்தைப் பார்த்து கன்னத்துல போட்டுக்கிட்டு இருந்திருப்பான்... சரி... சரி... பிரகாஷ்! இன்னிக்கு காலேஜ்ல இருந்து திரும்பி வர்றப்ப என்னோட கண்ணாடியை ரிப்பேருக்குக் குடுத்திருந்தேன். அதை வாங்கிட்டு வந்துடு..."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook