Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி குட் ரோட் - Page 2

The Good Road

நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கிறது லாரி. நேரம் இப்போது இருட்டி விட்டது. பையனைக் காணோம் என்று காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டு விட்டதால், சாலையில் வரும் ஒவ்வொரு வாகனத்தையும் டார்ச் விளக்கு அடித்து சோதிக்கிறார்கள் போலீஸ்காரர்கள். வரிசையாக வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அந்த வரிசையில் பாப்புவின் லாரியும் நிற்கிறது. ஒவ்வொரு வாகனத்தையும் சோதித்துக் கொண்டே வருகிறார் போலீஸ்காரர். பாப்புவின் வண்டிக்குள்ளும் டார்ச் அடித்துப் பார்க்கப்படுகிறது. பாப்புவும், க்ளீனரும் மட்டும் இருக்கிறார்கள். சிறுவன் ஆதித்யா? அவன் தானே மேலே இருந்த மறைவிடத்தில் ஏறி பதுங்கி, படுத்துக் கொள்கிறான். இருட்டில் போலீஸ்காரருக்கு அவனைத் தெரியவில்லை. சோதனை முடிகிறது. லாரி கிளம்ப அனுமதி கிடைக்கிறது. லாரி கிளம்புகிறது.

பையன் இறங்கி கீழே வருகிறான். இப்போது சிறுவன் மீது பாப்புவிற்கு அளவற்ற அன்பும், பாசமும் உண்டாகிறது. லாரிக்குத் தேவையான சான்றிதழ்கள் முறைப்படி கையில் இல்லை என்பது ஒரு பக்கம்... யாரென்று தெரியாத ஒரு சிறுவனை அருகில் உட்கார வைத்துக் கொண்டு வரும் செயல் இன்னொரு பக்கம்... சிறுவனை கடத்திக் கொண்டு வருவதாக நினைத்து வழக்கு போட்டு விட்டால்? மிகப் பெரிய ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றி விட்டதற்காக சிறுவன் ஆதித்யாவைப் பெருமையுடன் பார்க்கிறான் பாப்பு.

நீண்ட தூரம் கடுமையான வெயிலுக்கு மத்தியில் பயணம் செய்ததாலும், இருட்டிலும் பல கிலோ மீட்டர்கள் பயணித்ததாலும், பையன் மிகவும் களைத்துப் போய் காணப்படுகிறான்.  அவன் அணிந்திருந்த சட்டை வியர்வையாலும், சாலையிலிருந்து வந்த தூசியாலும் மிகவும் அழுக்கடைந்து காணப்படுகிறது. அவனைச் சட்டையைக் கழற்றச் சொன்ன பாப்பு, லாரியிலிருந்து ஒரு பழைய பனியனை எடுத்து அவனிடம் தருகிறான். அதுவும் அழுக்கு பனியன்தான். இப்படிப்பட்ட.... பார்க்க சகிக்காத ஒரு பனியனை வாழ்க்கையிலேயே பார்த்திராத ஆதித்யா, வாங்கி அணிந்து கொள்கிறான். அவனையே வாஞ்சையுடன் பார்க்கிறான் பாப்பு. இதுவரை அவனைப் பிடிக்காமலிருந்த க்ளீனர் இளைஞனுக்குக் கூட அவனை மிகவும் பிடித்து விடுகிறது.

இதற்கிடையில் லாரியின் டயர் பங்க்சர் ஆகி விடுகிறது. வேறொரு டயர் மாட்டப்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் சிறுவன் ஆதித்யா `ஹம் இந்துஸ்தானி' என்ற பாடலை மிகவும் அருமையாக பாடுகிறான்.  பள்ளியில் அவன் பாட கற்ற பாடல் அது. அவனுடைய பாடலில் உற்சாகமடைந்த பாப்பு லாரியைக் கிளப்புகிறான். மீண்டும் பயணம் தொடர்கிறது.

அந்த நள்ளிரவு வேளையில் லாரி ஒரு இடத்தில் ஓரமாக நிறுத்தப்படுகிறது. அங்கு உணவு சாப்பிடுவதற்காக லாரியிலிருந்து கீழே இறங்குகிறான் பாப்பு. அவனுடன் க்ளீனர் இளைஞனும், ஆதித்யாவும். அவர்களுடன்  சேர்ந்து, ஆடிக்  கொண்டிருக்கும் பழைய பெஞ்சில் அமர்ந்து, அந்தச் சிறிய சாலையோர உணவு கடையில் சாப்பிடுகிறான் ஆதித்யா. இப்படியொரு புதிய அனுபவம் அவனுக்கு இதற்கு முன்பு கிடைத்ததே இல்லையே! 

ஆதித்யாவின் தந்தை டேவிட்டும், உடன் வந்த கான்ஸ்டபிளும் டூ வீலரை நிறுத்துகிறார்கள். அங்கு நின்று கொண்டிருப்பவர்களிடமும், அமர்ந்து கொண்டிருப்பவர்களிடமும் சிறுவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். அதற்குச் சற்று தள்ளி இருக்கும் இடத்தில்தான்  ஆதித்யா அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருக்கிறான். ஆனால், அவர்கள் அவனைப் பார்க்கவில்லை. அவன் அவர்களைப் பார்க்கவில்லை. பாப்புவும், க்ளீனரும், சிறுவன் ஆதித்யாவும் லாரியில் ஏற, லாரி புறப்படுகிறது. மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் பயணம். இது எதுவுமே தெரியாமல், `பையன் அங்கு எங்காவது இருப்பானா?' என்று நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதைபதைப்புடன் தேடிக் கொண்டிருக்கிறான் டேவிட்.

நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனின் வாசலிலேயே எவ்வளவு நேரம்தான் காருக்கு அருகில் கிரண் அமர்ந்திருக்க முடியும்? தானும் தேடினால் என்ன என்று அவள் நினைக்கிறாள். அப்போதுதான் அவளுக்கே தெரிய வருகிறது- நெடுஞ்சாலை  இல்லாமல் வேறொரு பாதையும் இருக்கிறது என்று. ஒருவேளை... தன் மகனை யாராவது அந்த வழியில் அழைத்துக் கொண்டு வந்து விட்டால்...? காரை எடுக்கிறாள். அவளே அமர்ந்து காரை ஓட்டுகிறாள்.

கிட்டத்தட்ட ஒரு பாலைவனப் பகுதி. அதில் தன் காரைச் செலுத்துகிறாள் கிரண். சுற்றிலும் இருட்டு. ஆள் அரவமே இல்லை. அந்த இருட்டு வேளையில் அந்த வெட்ட வெளியில் அவளுடைய கார் மட்டும் விரைந்து கொண்டிருக்கிறது. பாதை என்று எதுவுமே இல்லை. சுற்றிலும் மணல். அந்த மணலில் கார் ஓட்டுவதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. முடிந்த வரைக்கும் அவள் ஓட்டுகிறாள். ஒரு இடத்தில் மணலுக்குள் கார் மாட்டிக் கொள்கிறது. அதற்கு மேல் வண்டி நகரவில்லை. காரின் டயர் மணலில் சிக்கி, சுழல்கிறது. அவ்வளவுதான். ஆடிப்போய் அந்த நள்ளிரவு வேளையில் இதற்கு முன்பு பார்த்தே இராத பாலை வனப் பகுதியில், தன்னந்தனியாக ஒரு பெண்- காருடன் !

நிமிடங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழியாக Kutch பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சிலர் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள்- பல வர்ண உடைகள் அணிந்து. கொஞ்சம், கொஞ்சமாக அந்த கூட்டம்  நெருங்கி வருகிறது. அவர்களுடன் கழுதை இழுக்கும் வண்டியும் (இந்த காட்சி அப்படியே நமக்கு ஈரான் நாட்டு படத்தைப் பார்க்கும் ஒரு உணர்வை உண்டாக்குகிறது. சரியாக கூறுவதாக இருந்தால்-`காந்தஹார்' என்ற ஈரானியப் படம். அதில் இதே போல ஒரு திருமணக் குழுவினர் வருவார்கள் - வண்ண வண்ண ஆடைகள் அணிந்து.) மணலில் சிக்கிக் கிடக்கும் காரையும், மயங்கிய நிலையில் இருக்கும் கிரணையும் பார்க்கிறார்கள் அவர்கள். உதவிக்கு அவர்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால், கிரணின் நிலைமை என்னவாக ஆகியிருக்கும்?  

தந்தை ஒரு பக்கம்... தாய் இன்னொரு பக்கம்... இவை எதுவுமே தெரியாமல் அவர்களின் செல்ல மகன் ஆதித்யா லாரியில் பயணம். இப்போதும் சோதனைகள் நிற்கவில்லை. பாதையெங்கும் போலீஸ்காரர்கள் ஜீப்புடன் நிற்கிறார்கள். ஒரு இடத்தில் போலீஸ் ஜீப் ஒன்று நிற்க, அதைப் பார்த்து பயந்து போன பாப்பு, நெடுஞ்சாலையை விட்டு ஓரமாக லாரியைத் திருப்பி விடுகிறான். 

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version